கோடையில் குளிர்ந்த நீர் அருந்தலாமா?



ஒருவர் உயிர் வாழ உணவு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு உடலுக்கு தண்ணீரும் இன்றியமையாததாகும். உடலில் தேவையான அளவு தண்ணீர் இருந்தால், பல நோய்கள் வராமல் தடுக்கலாம். 
அதிலும் கோடை காலத்தில் நாவறட்சி ஏற்படாமல், தினமும் தண்ணீர் குடித்துவந்தால், நோயின்றி வாழலாம்.தற்போது கோடைகாலம் தொடங்கிவிட்டதால் பலரும் வெயிலின் தாக்கத்தை குறைத்துக்கொள்ள வெளியே சென்று வந்ததும் குளிர்ந்த நீரை அருந்துகின்றனர். ஆனால் அவ்வாறு செய்வது நம் ஆரோக்கியத்துடன்  நாமே விளையாடுவது போன்றது.

 ஏனென்றால், வெப்பமான சூழலில் இருந்துவிட்டு வந்ததும் உடனே குளிர்ந்த நீரைக் குடிப்பது நம் உடலின் சமநிலையை மாற்றும். இது செரிமானத்தை கடுமையாக பாதிக்கும். குளிந்த நீர் அருந்துவதால் ஏற்படும் பிற பக்க விளைவுகள் பற்றி இந்த பதிவில் காணலாம். 

குளிர்ச்சியான தண்ணீரை அடிக்கடி பருகுவதால் தொண்டைப்புண், மூக்கடைப்பு மற்றும் தொண்டையில் அழற்சி போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும்.உணவு உண்ட பின் குளிர்ந்த நீரைக் குடித்தால், உணவு உடல் வழியாக செல்லும் போது உணவு மிகவும் கடினமாகிறது. இதன் காரணமாக குடல்கள் சுருங்கி அசிடிட்டி பிரச்சனை ஆரம்பிக்கிறது.

குளிர்ந்த நீரை அதிகமாக குடித்தால், அது செரிமான அமைப்பை பாதிக்கும். உணவை ஜீரணிப்பதில் சிரமம் ஏற்படலாம். மேலும், மலச்சிக்கலுடன், வயிற்றுவலி, குமட்டல், வாய்வு போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம்.

குளிர்ந்தநீரை அதிகமாக குடிப்பதால் மூளை உறைந்து போகும். குளிர்ந்த நீர் முதுகெலும்பின் பல உணர்திறன் நரம்புகளை குளிர்விக்கிறது. இங்கிருந்துதான் உடனடியாக மூளைக்கு செய்தி அனுப்பப்படுகிறது. இதன் காரணமாக தலைவலி தொடங்குகிறது. இதனால் சைனஸ் ஏற்படும் அபாயமும் உள்ளது.

குளிர்ந்த நீரைக் குடிப்பதால் இதயத் துடிப்பு குறையும் அபாயம் உள்ளது. இது வேகஸ் நரம்பை பாதிக்கிறது. தண்ணீரின் வெப்பநிலை குறைவாக இருப்பதால், வேகஸ் நரம்பு பாதிக்கப்பட்டு இதயத் துடிப்பு குறைகிறது. இதனால் இதயநோய் ஏற்படலாம்.

அதிக அளவு குளிர்ந்த நீரைக் குடிப்பதால், உடலில் உள்ள கொழுப்பு எரிக்கப்படாமல், கொழுப்பு கடினமாகிறது. இதன் காரணமாக எடை அதிகரிக்கலாம். எனவே, உடல் பருமன் பிரச்சனையை தவிர்க்க வேண்டுமானால், குளிர்ந்த நீரைக் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

குளிர்ந்த நீர் அருந்தும்போது அது ரத்த நாளங்களைச் சுருக்கி, அதன் மூலம் செரிமானம் மற்றும் ஊட்டச்சத்து உறிஞ்சுதலை பாதிக்க வாய்ப்புள்ளது. அதுமட்டுமில்லாமல் சுவாசக்குழாயில் அதிகப்படியான சளி உருவாவதற்கு காரணமாக இருக்கிறது. இதனால் உடலில் நோய்த் தொற்றுகள் ஏற்படுத்துகிறது. எனவே முடிந்தளவில் அதிகளவு குளிர்ந்த நீர் அருந்துவதை தவிர்த்துவிடுவது நல்லது.

- ரிஷி