பேய் பங்களாவில் பாய்ஸ்!



தெலுங்கில் ‘வின்’ என்ற படத்தை இயக்கியவர் எஸ்.வினோத்குமார். இவர் தன்னுடைய அடுத்த படத்தை தெலுங்கில் இயக்காமல் தமிழில் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். படத்தின் பெயர் ‘மகாராணி கோட்டை’. ரிச்சர்ட் இதன் நாயகன். புதுமுகங்கள் அனி பிரின்ஸ், நீனா குரூப்பா இதன் நாயகிகள். ‘கும்கி’ அஸ்வின், வையாபுரி, வேல்முருகன், பாவா லட்சுமணன், பெஞ்சமின், போண்டாமணி ஆகியோரும் இருக்கிறார்கள்.

அம்பாசங்கர், ராகின்ஜாக், சந்திரசேகர் பாடல்களுக்கு கின்னஸ் சாதனையாளர் யு.கே.முரளி இசையமைக்கிறார். சென்னையி லிருந்து ஐந்து நண்பர்கள் வேலை விஷயமாக கிராமத்துக்குச் செல்கிறார்கள். ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் ஒரு பங்களாவை விலைக்கு வாங்குகிறார்கள். பேய் வாழ்வதாக நினைக்கும் அந்த பங்களாவில் இளைஞர்கள் தங்குகிறார்கள். சில நாட்களில் இளைஞர்களும் பேயை நினைத்து பயப்படுகிறார்கள்.

அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்களால் அதிர்ச்சி அடையும் நண்பர்கள் ஆபத்திலிருந்து எப்படி தப்பித்தார்கள் என்பதை த்ரில்லர் கலந்த நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறார்களாம். செந்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தில் வில்லனாக நடித்திருக்கிறாராம்.

-எஸ்