மகத்தான வாழ்வருளும் மச்சாவதார பெருமாள்



வைகுண்டத்தை இருப்பிடமாகக் கொண்டிருக்கும் பரம்பொருளான திருமால், பூலோகத்தைக் காப்பதற்காக பல சமயங்களில் பல்வேறு அவதாரங்களை எடுத்தார். அந்த வகையில் அவர் எடுத்த முதல் அவதாரம் மச்சாவதாரம். மச்சம் என்றால் மீன் என்று பொருள். இந்த அவதாரத்தில் வேதங்களை அபகரித்துக் கொண்டு போய் கடலில் ஒளித்து வைத்திருந்த சோமுகாசுரனைக் கொன்று அழித்தார்.  அது என்ன புராணம்?

சத்திய/க்ருத யுகத்தில் பிரஜாபதி என்றழைக்கப்படும் பிரம்மன் ஆழ்ந்த உறக்கத்தின் அறிகுறியாக சற்றே வாய் திறந்தபோது அவர் வாயிலிருந்து நான்கு வேதங்களும் வெளியே தோன்றின. அப்போது அங்கு வந்த சோமுகாசுரன் என்ற குதிரை முகம் கொண்ட அரக்கன் (இதனாலேயே இவன் ஹயக்ரீவன் என்றும் அழைக்கப்பட்டான்) தன் யோக சித்தியினால், அந்த வேதங்களைத் திருடிக் கொண்டு கடலுக்குள் புகுந்து, அவற்றை ஒளித்து மறைத்துவிட்டான். பிரம்மன் இந்த நிகழ்வை அறியாமல் ஆழ்ந்து தூங்கிவிட்டார்.

பிறகு விழித்தெழுந்தபோது வேதங்கள் களவாடப்பட்டதை அறிந்தார். அவ்வாறு வேதங்கள் தன்வசம் இல்லையென்றால், அவரால் படைப்புத் (சிருஷ்டி) தொழிலை செய்ய முடியாது. உலகத்தில் அறம் ஒழுங்காக நிறைவேற வேதத்தின் துணை மிக மிக அவசியம். அதேசமயம், பிரம்மன் உறங்கும்போதுதான் பிரளயம் ஏற்படும் என்பது நியதி. உலகின் எல்லாக் கடல்களும் பொங்கியெழுந்து ஆழிப்பேரலைகளால் உலகம் முழுவதும் தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டு விடும். அதன்படியே இம்முறையும் மகாப்பிரளயம் ஏற்பட்டு மூன்று உலகங்களும் கடல்நீரில் மூழ்கின.

இந்தப் பிரளயம் ஏற்படுவதற்கு ஏழு நாட்களுக்கு முன் ஒரு நிகழ்வு நடந்தது. ஸ்ரீமந் நாராயணன் எடுத்த மச்சாவதார காலத்தில் சத்யவிரதன் என்ற பெயருடைய ராஜரிஷி இருந்தான். அவன் நாராயணன் மீது அளவிலா பக்தி கொண்டவன். அந்த ஹரிபக்தன், உணவு எதுவும் அருந்தாமல் தண்ணீரை மட்டும் உட்கொண்டு கடுமையான நோன்பு ஒன்றை நோற்று வந்தான். இப்போது நடக்கும் கல்பத்தில் மனுவாக விளங்கும் வைவஸ்வரன் இவனே. அந்தக் காலத்தில் அவன் திராவிடத் திருநாட்டின் தேசாதிபதியாக இருந்தான்.

அவன் ஒருநாள் கிருதமாலா என்ற ஆற்றங்கரையில் அமர்ந்து தன் மூதாதையர்களுக்கு நீத்தார் கடன் நிறைவேற்றும் வகையாக தண்ணீர் இறைத்து அர்க்யம் கொடுத்துக் கொண்டு இருந்தான். அப்படி அர்க்யம் செய்யும் பொழுது இரு கைகளிலும் தண்ணீரைக் குவித்து எடுத்தான். அந்த கைக்குள் தேங்கிய நீரில் ஒரு மீன்குஞ்சு அழகுற நீந்திக் கொண்டிருப்பதைப் பார்த்தான். பேரழகுமிக்க அந்த மீன் அவனிடம் பேசியது: ‘‘ஹே ராஜனே, என்னை மீண்டும் தண்ணீருக்குள் தள்ளிவிடாதீர்கள். குட்டி மீனான என்னைப் பெரிய மீன்கள் விழுங்கி விடும். அச்சம் மிகக் கொண்ட என்னை நீங்கள்தான் காக்கவேண்டும்,” என்றது.

இதைக் கேட்டு அதற்காக வருந்திய சத்யவிரதன் அந்த மச்சத்தின் வேண்டுகோளை நிறைவேற்ற நினைத்தான். தான் உடன் எடுத்து வந்திருந்த கமண்டலத்திற்குள் அந்த மீனைப் போட்டான். தன் ஆஸ்ரமத்திற்கு எடுத்துப் போனான். அன்று இரவே அந்த மச்சம் கிடுகிடுவென்று வளர்ந்து, கமண்டலம் முழுவதும் பரவியது. அதோடு, ‘‘அரசே இந்த இடம் எனக்கு வசிக்கப் போதாது,” என்று தன் நிலைமையையும் சொன்னது மச்சம்.

சத்யவிரதன் மீனைக் கமண்டலத்தில் இருந்து எடுத்து நீர் நிறைந்த வேறு ஒரு பாத்திரத்தில் போட்டான். ‘இந்தப் பாத்திரமும் எனக்கு வசிக்கப் போதவில்லையே’ என்று திரும்பவும் கெஞ்சியது. மன்னவன் உடனே மீனை அங்கிருந்து எடுத்துப்போய் ஒரு குளத்தில் விட்டான். அது வெகு சீக்கிரமாக வளர்ந்து அந்தக் குளத்தை நீக்கமற அடைத்து நின்றது. அடுத்து அந்த மீனை ஆழமானதும் விரிந்து பரந்ததுமான மடுக்களிலும், ஏரிகளிலும் போட்டான். அந்த ஒவ்வொரு பகுதிகளிலும் அது பெரிதாக வளர்ந்து எந்த நீர்நிலையும் தனக்கு வாழப் போதுமான இடமாக அமையவில்லை என்று சொன்னது. அந்த அளவுக்கு அது பெரிதாகிக்கொண்டே வந்தது.

கடைசியாக அதைக் கடலில் கொண்டு போட்டபோது அந்த மச்சம், ‘‘ராஜரிஷியே! இந்தப் பெரிய கடலில் திமிங்கலம் போன்ற பெரிய ஜந்துக்களின் நடமாட்டம் இருக்கிறது. ஆகவே என்னை நீ இங்கே விட்டு விட்டுப் போய் விடாதே,” என்று அலறியது. உடனே சத்யவிரதன் அந்த மீன் யார் என்பதைப் புரிந்துகொண்டான். உடனே அந்த மீனைக் கரம் கூப்பித் தொழுது, ‘‘பரம்பொருளே! ஒரு சாதாரண மீனாகத் தாங்கள் என்னிடம் வந்து அன்னை மயங்க வைக்கும் மாயம் என்ன என்று என்னால் தெரிந்து கொள்ள முடியவில்லையே?

இப்படி  என்னை விடாமல், தொடர்ந்து பிடித்து வைத்துக் கொண்டிருப்பதன் காரணம் என்ன? நீர் வளர வளர நிச்சயம் ஸ்ரீஹரியேதான் தாங்கள் என்பதை உணர்ந்து கொண்டேன். ஆகவே பெருமானாகிய தாங்கள் இந்த உருவத்தோடு இங்கு வந்த காரணத்தைத் தங்கள் தொண்டனாகிய எனக்குத் தெரிவிக்கும்படி பிரார்த்திக்கிறேன்,” எனக்கூறி மச்சாவதார மூர்த்தியை வீழ்ந்து வணங்கிக் கேட்டான்.

மச்சம் பதில் சொன்னது: ‘‘ராஜரிஷியே! இன்றிலிருந்து ஏழாம் நாள் அன்று இந்த பூமியும், விண்ணும், அதற்கிடைப்பட்ட வெளியும், பொங்கி எழுந்து வரும் கடலுக்கு இரையாகப் போகின்றன. உலகங்கள் அழியும் நாள் வந்து விட்டது. அஞ்சாதே! நான் உனக்கு ஒரு பெரிய தோணியை அனுப்பி வைக்கின்றேன். நீ அந்தத் தோணியில் சமஸ்த ஔஷதிகளையும் (மூலிகைகள்), பற்பல வித்துகளையும் ஏற்றிக்கொண்டு சப்த ரிஷிகளுடன் சர்வபலம் கொண்டவனாக அந்தகாரமான சமுத்திரத்தில் மகா தீரனாக சஞ்சரிக்கப் போகிறாய்.

பெருங்காற்றால் அலைக்கழிக்கப்பட இருக்கும் அந்தத் தோணி கவிழ்ந்து விடாமல் இருக்க அதை எனது கொம்பில் சேர்த்துக் கட்டிவிடு. அப்படிக் கட்டினால் நான் பிரம்மதேவனுடைய இராப்பொழுது தீரும்வரை அந்த ஓடத்தோடு சஞ்சரித்துக் கொண்டு இருப்பேன். அப்போது சப்தரிஷிகளும் ஒளிமயமாக இருந்து உனக்கு வழிகாட்டுவார்கள். என் உடல் அப்போது திமிங்கலம் போலக் காணப்படும். அந்தப் படகை என் கொம்பில் கட்டச் சொன்னேன் அல்லவா? அப்படிக் கட்டுவதற்கு உரிய கயிறு, வாசுகி என்ற பாம்பு என்பதை மறந்துவிடாதே. அந்த பாம்பை எனது செதிலில் கட்டிவிடு. அதற்கப்புறம் நீ எனது பெருமையைத் தெரிந்து கொள்வாய். உனக்கு சர்வமங்களமும் உண்டாகும்” என்றார்.

தர்ப்பாசனத்தில் அமர்ந்தபடி சத்யவிரதன், உலகை அழிக்கப்போகும் பிரளயத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தான். ஏழாம் நாள், ஆகாயம் அந்தகாரத்தில் மூழ்கியது. பெருமழை பெய்த வண்ணம் இருந்தது. கடல் கரைபுரண்டு வந்தது. பூமி இருக்கும் அடையாளமே தெரியவில்லை. எங்கும் ஒரே தண்ணீர்க்காடு. அந்தப் பொங்கும் நீர்ச்சுழிகளின் ஊடே பரந்தாமன் தங்கத் திமிங்கலத் தோற்றத்துடன் காணப்பட்டார். தகதகவென்று ஜ்வலித்த அவர் உடம்பில் கொம்பு போல் ஒன்று நீண்டு இருந்தது.

அப்போது சத்யவிரதன் சப்தரிஷிகளுடன் மூலிகை விதைகள் சகிதம் ஏறி வந்த ஓடத்தை பகவான் கூறியபடி அவரைத் தியானம் செய்தபடியே, அந்தத் தங்கத் திமிங்கிலக் கொம்பில் கட்டினான். அந்த அபூர்வ மச்சம் இவர்கள் ஏறிய படகைப் பற்றி இழுத்துக் கொண்டு வெள்ளத்தின் மத்தியில் வெகு அநாயசமாக அலைந்து கொண்டிருந்தது.

அந்த சமயம் பரந்தாமன் ராஜரிஷி சத்யவிரதனுக்கு மச்சாவதார புராணத்தை உபதேசம் செய்தார். பிரம்மதேவன் நித்திரை காலம் முடிந்தது. உலகத்தை கவ்வி இருந்த அந்தகாரம் விலகி ஊடே ஊடே ஒளிப் படலங்கள் விரிசலிட்டன. ஓயாது பெய்த மழையும் நின்றது. பல்கிய, உலகில் பொங்கிப் பெருகிய தண்ணீர் வடிய ஆரம்பித்தது. மச்சமூர்த்தி ஓடத்தைக் கரை சேர்த்தார். சத்யவிரதன் அந்நேரம் பிரம்மனைக் குறித்து பிரார்த்தனை செய்தான். நித்திரையிலிருந்து மீண்ட பிரம்மதேவன் அவன் முன்பு பிரத்யட்சம் ஆனார்.

 மீண்டும் அவர் தம் சிருஷ்டியைத் தொடங்க நினைத்தபோதுதான் வேதங்கள் மறைந்த விவரம் அவருக்குத் தெரிந்தது. பிரம்மதேவர் ஸ்ரீஹரியை நோக்கி தியானம் செய்தார். அதுசமயம் மச்சமூர்த்தியாக இருந்த பகவான் வேதங்களை ஹயக்கிரீவன் ஒளித்து வைத்திருப்பதை அறிந்து வெள்ளத்திற்குள் புகுந்து போனார்.

 ஹயக்கிரீவனைக் கண்டு அவனுடன் போர் புரிந்தார். வேதங்களை மீண்டும் பிரம்மதேவரிடம் கொடுத்தார்; மறுபடியும் சிருஷ்டியைத் தொடங்கும்படி சொன்னார். வேதங்கள் இருந்தாலன்றிப் பிரும்ம சிருஷ்டி இயங்காது. உலகத்தில் அறம் ஒழுங்காக நிறைவேற வேதத்தின் துணை அவசியம். எனவே ஹயக்ரீவனால் திருடி மறைக்கப்பட்ட வேதங்களை மீட்பதற்காக பரந்தாமன் மீனாக அவதரித்தான்.

இந்த மச்சாவதார மூர்த்தியைப் பிரார்த்தனை செய்பவர்களுக்கும், அவர் சரித்திரத்தைப் பயபக்தியோடு சிந்தித்து அவரைத் தியானம் செய்பவர்களுக்கும் சகல சம்பத்தும் ஞான யோகமும் உண்டாகும்.ஆழ்வாராதிகள் மச்சாவதார மூர்த்தியை தம் பாசுரங்களில் பாடிப் பரவியுள்ளனர். ஆழ்வார் பெருமக்கள் முதல் அவதாரமான, மச்சாவதாரத்தை அனுபவித்துப் போற்றி அருளிச் செய்து நம்மையும்  நல்வழிப் படுத்துகின்றனர் என்று நாம் மகிழலாம்.

- ப.பரத்குமார்