சகலகலா சரஸ்வதி



1. சகலகலா சரஸ்வதி

சிருஷ்டித் தொழிலை நடத்துபவர் பிரம்மா. ஞான சக்தி அல்லது அறிவு சக்தி இல்லாவிட்டால் சிருஷ்டித் தொழிலை நடத்த முடியாது. அதனால்தான் அறிவு சக்தியை பிரம்மா தன் மனைவியாக ஏற்றார் என்றும் ‘சாரதா’ என்ற பெயரும் அந்த அறிவு சக்திக்கு உண்டு என்றும் சாமவேதம் கூறுகிறது. சரஸ்வதி ரகஸ்யோபநிஷத்தில் சரஸ்வதி, வேதாந்தங்களின் தத்துவ சொரூபிணியாகவும், நாம ரூப பேதங்களுடன் உலகில் காட்சியளிப்பவளாகவும், பிரம்மத்தின் அத்வைத சக்தியாகவும், ‘க்ஞப்தி’ மாத்திர ஸ்வரூபியாகவும், பிரம்ம சொரூபிணியாகவும் விளங்குகிறாள்.

 நாத ரூபமானதால் வாணீ; சகலகலா நிலையமானதால் பாரதி; வாக்காக விளங்குவதால் வாங்மயீ; அக்ஷர ஸ்வரூபமாக உள்ளதால் பீஜாக்ஷர ஸ்வரூபிணி; மந்திர தந்திர யந்திரமாகத் திகழ்வதால் ஸ்ரீ வாக்பவகூட சதுர்வேத ஸ்வரூபிணி என்று கலைமகள் அழைக்கப்படுகிறாள். பிரம்மாண்ட புராணத்தில் தேவியின் மூச்சிலிருந்து வேதங்களும், அவளுடைய தொண்டையிலிருந்து மீமாம்ஸாவும், நாக்கிலிருந்து 64 கலைகளும், தோளிலிருந்து காமகலையும், உடம்பின் இதர உறுப்புகளிலிருந்து இதர தந்திர சாஸ்திரங்களும் வெளிப்பட்டன என்று கூறப்பட்டுள்ளது. மூன்று கூடங்களில் வாக்பவ கூடத்தின் அதிதேவதை ‘சரஸ்வதி’. வாமகேஸ்வர தந்திரம் வாக்தேவிதான் ஞானசக்தி என்கிறது.

2. நீல சரஸ்வதி - தாரா

பத்து விதமான வித்யா தேவதைகளில் ஒருவளான தாரா சரஸ்வதி அம்சமே. தாராவில் ஐந்து விதங்கள் உண்டு. நீல சரஸ்வதி, உக்ர தாரா, சகல தாரா, சித்ர தாரா என்று நீல சரஸ்வதி அல்லது தாரிணி பேசும் சக்தியை அளிப்பவள். எல்லா மொழியின் ரூபமாக இருப்பவள் என்று நீல சரஸ்வதி புகழப்படுகிறாள். அதாவது அங்கம், வங்கம், அருணம், கலிங்கம், கௌசிகம், காம்போஜம், கொங்கணம், கோசலம், சாவகம், சிங்களம், சிந்து, சீனம், சோனகம், திராவிடம், துளுவம், பப்பரம், மகதம், மராடம் என மொழிகளை பதினெட்டாக வகுத்திருக்கிறார்கள்.

மேலும், தாரணம் என்றால் கடத்துவிப்பது, தாண்டுவிப்பது என்று பொருள். சம்ஸார சாகரத்தை தாண்டுவிப்பவள் தாரிணி. பிரணவம் தாரக மந்திரம் எனப்படும். அந்த ஓங்காரமே தாராவின் மந்திரம் என்பதிலிருந்து இவள் மகிமையை உணரலாம். இவளது உபாசனைக்கான தீட்சை தர பெண்களே உரிமை பெற்றிருக்கிறார்கள். தங்கள் குழந்தைகள் பிறந்து மூன்று நாட்களுக்குள் அதன் வாயில் தேனைக் கொண்டு நீல சரஸ்வதி மந்திரத்தை எழுதிய தாய்மார்கள் பலர் காஷ்மீரத்தில் முன்காலத்தில் இருந்தனர். அங்கு பாண்டித்யம் மிக அதிகமாக விளங்கி காஷ்மீரி பண்டிட் என்ற ஒரு வகுப்பினர் சிறப்புடன் திகழ்ந்ததற்கு இதுவே காரணம் என்று சொல்லப்படுகிறது.

3. பாலா - சரஸ்வதி

ஸ்ரீ வித்யையில் கணபதி மந்திர உபதேசத்திற்கு அடுத்ததாகக் கருதப்படும் பாலா உபதேசம் சரஸ்வதியின் சொரூபம்தான். பாலா தேவி கையில் ஜப மாலையும் புஸ்தகமும் கொண்டிருப்பவள். இவள் உருவத்தை பராசக்தி மாலை,
செங்கதிராற்றிசை பத்தையும் செம்மை செய் செவ்வுருவும் அங்கைகள் நான்கில் வரதாபய மணியக்கவடம் துங்க நற்புத்தகம் தாங்கிய செந்தாரணியும் பங்கய ஆசனப் பாலைக் கமலை பராசக்தியே திருவாரூர் கமலாம்பாள் பாலை உருவமே.
 
4. ‘மாநிஷாத’ என்னும் அஹிம்ஸா சரஸ்வதி

இந்த சரஸ்வதியே வால்மீகியின் வாக்கில் குடி கொண்டதால்தான் ராமாயண காவியம் இவ்வுலகிற்கு கிடைத்தது. இரு பறவைகள். ஆணும் பெண்ணும் கூடிக் குலாவிக் கொண்டிருக்கும்போது ஒரு வேடன் ஆண் பறவையை அம்பினால் கொன்று விட்டான். பெண் பறவை துடிதுடித்துக் கதறியது. இதைக் கண்ட வால்மீகி மகரிஷி வாக்கிலிருந்து அவரை அறியாமலேயே ஒரு ஸ்லோகம் வெளிவந்தது.

‘‘மாநிஷாத ப்ரதிஷ்டாம் த்வம் அகம்:
சாச்வதீ:         
ஸமா:
யத் கிரௌஞ்ச மீது நாத் ஏகம் அவதீ: காம  மோஹிதம்

(மையலால் மயக்கமுற்ற க்ரௌஞ்சப் பறவைகளின் ஜோடியில் ஒன்றை வதைத்தனை அல்லவா? ஏ வேடனே! நீ நீடித்த ஆண்டுகள் வாழ்வு பெற்றிருக்க மாட்டாய்.)
இவ்வாறு தன் வாக்கிலிருந்து வெளிப்பட்டதைக் கண்டு மகரிஷியே ஆச்சரிய மடைந்தார். ‘‘என் உள்ளத்தில் தோன்றிய சோகமல்லவா இந்த ஸ்லோகமாக வெளிவந்தது’’ என்று எண்ணினார். ரிஷி முன் பிரம்மா தோன்றி ‘‘நான் போகும்படி சொல்லியே ‘மாநிஷாத்’ என்னும் அஹிம்ஸை சரஸ்வதி உம் வாக்கில் அவதரித்திருக்கிறாள். அந்த அஹிம்ஸா தர்மமே உலகெங்கும் மேம்பாடு அடைய ராம விருத்தாந்தத்தை அருளும்’’ என்று கூறி ஆசீர்வதித்தார்.

5. நித்யா சரஸ்வதி

வேதம் அநாதிகாலமாக நம் நாட்டில் உள்ளது. அது காலத்திற்கு அப்பாற்பட்டது. ‘நித்யா சரஸ்வதி’ என்று வேதத்திற்குப் பெயர். இக்கருத்தை கம்பர் கிஷ்கிந்தா காண்டத்தில் ராமர் அனுமனைப் பாராட்டும் படலத்தில் தெரிவிக்கிறார்.

தாட்படாக்கமல மன்ன தடங்கணான் தம்பிக்கம்மா
கீட்படாநின்ற நீத்தம் சிளர்படாதாகி என்றும்
நாட்படா மறைகளாலும் நவைபடா ஞானத்தாலும்
கோட்படாப் பதமே ஜய குரங்குருக் கொண்ட தென்றான்.

நாட்படா அதாவது கால அளவுக்கு உட்படாதது என்றும், என்றைக்கும் உள்ள அழியாதது என்று வேதத்தைப்பற்றி இங்கே கம்பர் கூறுகிறார்.

6. வாக்வாதினி - சரஸ்வதி

சக்தியின் பல வடிவங்களில் வித்தைக்கு அதிபதியான வாக்வாதினியும் ஒருவள். இவள் வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாள். எழுதுகோலும், புத்தகமும் ஏந்தியிருப்பாள். தலையில் இளம்பிறை. உலக வாழ்வின் அச்சத்தைப் போக்குபவள்.
தியான ஸ்லோகம்

அமல கமல ஸம்ஸ்தா லேகினி புஸ்தகோத்யத்   கரயுகல சரோஜா
குந்த மந்தார கௌர த்ருச சத்ர கண்ட லோல்லா சிகரோடீர
பீடா பவது பவ பயானாம் பங்கினீ பாரதீ ந:

7. அட்சர சுந்தரி

அம்பிகையே வாக்கு ரூபமாக இருப்பவள். அம்பாள் உருவம் முழுவதும் அட்சரங்கள். நம் உடம்பிலெல்லாம் நாற்றமுள்ள வஸ்துக்களே நிரம்பியுள்ளன. இந்த ஆசாபாசங்களுக்குள் அறிவு என்ற மணி ஒன்று சுடர்விட்டுப் பிரகாசிக்கிறது. இந்த அட்சர ரூபமான அட்சர சுந்தரியை ஆராதித்தால் எல்லா தேவதைகளையும் ஆராதித்ததாகும் என்பது சரஸ்வதி  உபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது. ‘ஸத்’ என்பது உண்மையான வஸ்து. ‘சித்’ என்பது அறிவான பொருள். ஸத் ஈஸ்வர ஸ்வரூபம். அதை அறிவதற்கு அறிவு வேண்டும். அது அம்பிகையின் சொரூபம். இந்த 51 எழுத்துக்களில் க்ஷ தவிர 50 எழுத்துக்களே எல்லாம் என்கிறார் திருமூலர்.

ஐம்பதெழுத்தே அனைத்தும் வேதங்களும்
ஐம்பதெழுத்தே அனைத்தாகமங்களும்
ஐம்பதெழுத்தையுமாவறிந்த பின்
ஐம்பது எழுத்து போய் ஐந்தெழுத்தாகுமே.
50 எழுத்துக்கள் - ‘க’ வர்க்கம் 5, ‘ச’ வர்க்கம் 5, ‘ட’ வர்க்கம் 5, ‘த’ வர்க்கம் 5, ‘ப’ வர்க்கம் 5, யரல வ 4, மெய்யெழுத்து 34, அ முதலிய உயிர் எழுத்துக்கள் 16, ஆக 50.
ஐந்தெழுத்து - பஞ்சாக்ஷரம்.

8. அட்ச மாலை


ஜபத்திற்கு உகந்தது அட்ச மாலை. ‘அ’ காரம் முதல் ‘க்ஷ’ காரம் வரை 51  மாத்ருகைகளைக் கொண்டதால் அட்சமாலை எனப்படும். அ முதல் ள வரை, ள முதல் அ வரை எண்ணினால் 100 எண்ணிக்கையாகும். இந்த மாலைக்கு க்ஷ காரம் மேரு பவழம் மேருவாகக் கட்டப்பட்டிருக்கும். ப்ரவாளம்தான் பவழமாகி விட்டது. (தெலுங்கில் ‘பகடாலு’, கன்னடத்தில் ‘ஹவள’) ஜபிக்கும்போது, மாலையை உருட்டும்போது மேருவைத் தாண்டி போகக் கூடாது. அப்படியே திருப்பி உருட்டிப் போக வேண்டும். இத்தகைய அட்ச மாலையோடு சேர்ந்த ஜபம் செய்வது க்ஷிப்ரபல தாயகம் எனப்படும். ஸ்ரீ பாலா இந்த அட்ச மாலையை கையில் கொண்டிருக்கிறாள். அவளது தியான ஸ்லோகத்தில் வரும் ‘வித்ருத ஜப படீகா’ இந்த அட்ச மாலையைத்தான் குறிப்பிடுகிறது. இதன் அர்த்தம் கையிலேந்திய ஜபத்திற்கான அட்ச மாலையை உடையவள் என்று பொருள்.