‘‘நானும் எத்தனை நாளைக்குத்தான் நல்லவனாவே நடிக்கிறது..?’’ இது தன் 50வது படமான ‘மங்காத்தா’வில் அஜித் பேசும் வசனம். பஞ்ச் டயலாக்காக இல்லாமல், இதை அவர் சினிமாவில் ஏற்கும் கேரக்டர்களைப் பற்றிச் சொல்லும் தன்னிலை விளக்கமாகக்கூடக் கொள்ளலாம்.
‘‘சொல்லப்போனால் அதுவும் உண்மைதான்...’’ என்கிறார் படத்தின் இயக்குநரான வெங்கட்பிரபு. காரணம், வழக்கமான தன் படங்களைப் போல் இல்லாமல் இதில் நெகட்டிவ் கேரக்டரை விரும்பி ஏற்றிருக்கிறார் அஜித். ‘வாலி’யில் இரண்டில் ஒன்றாக அவர் இப்படி வில்லத்தனத்துடன் வந்திருக்கிறார் என்றாலும், முழுக்க நெகட்டிவ்வான பாதையிலேயே அஜித் பயணித்திருக்கும் இந்தப்பட வேடம் அவரது நடிப்புப் பாதையில் நிச்சயமாக ஓர் மைல்கல்தான். அப்படி ஒரு கேரக்டரில் அஜித்தை நடிக்க வைக்க நேர்ந்ததைப் பற்றிப் பேசினார் வெங்கட்பிரபு.
‘‘இந்தக்கதையை நான் அஜித்தை நினைச்சு எழுதவேயில்லை. சொல்லப்போனா அவர் இதுக்குள்ள வந்ததே தற்செயல்தான். வழக்கமா என்னோட பசங்களுக்காகத்தான் இந்த ஸ்கிரிப்ட்டை எழுதினேன். இந்தப்படத்தை கிளவுட் நைனுக்காக நான் டைரக்ட் பண்ணப்போறது தெரிஞ்சதும், எனக்கு வாழ்த்து தெரிவிக்க போன் பண்ணார் அஜித். அப்படித் தொடர்ந்த பேச்சில திடீர்னு, ‘பிரபு, எனக்காக அடுத்து ஒரு ஸ்கிரிப்ட் பண்ணு. முழுக்கக் கெட்டவனா நான் வந்தாலும் பரவாயில்லை.
வழக்கமா நடிச்சு அலுத்துப்போச்சு..!’ என்றார்.
என் மனசில திடீர்னு ஒரு யோசனை டாலடிச்சது. அவர்கிட்ட தயங்கித் தயங்கி, ‘அண்ணே... இந்த ஸ்கிரிப்ட்டே அப்படிப்பட்டதுதான். இதுல அஞ்சு முக்கிய கேரக்டர்ஸ். அதுல நாலுபேர் கெட்டவங்க. அஞ்சாவது கேரக்டர் ரொம்பக் கெட்டவன்’னு சொன்னேன். ‘சூப்பர்... அதுல நானே நடிக்கிறேன்...’னார். அப்படி அவர் போன்லயே ஒத்துக்கிட்ட படம்தான் இது. பிறகு ஷூட்டிங் போறதுக்கு சிலநாள் முந்திதான் நான் அவருக்கு முழு ஸ்கிரிப்ட்டே சொன்னேன். அந்த இன்ஸ்பிரேஷன்ல அவருக்காக எழுதப்பட்ட வசனம்தான் மேலே வர்றது. அவர் எப்படிக் கடைசியா படத்துக்குள்ள வந்தாரோ, அதையும்கூட ஒரு வசனமா வச்சிருக்கேன். எல்லாமே கதைக்கும் பொருந்தி வந்தது ஆச்சரியம்.
ஒரு உச்ச நடிகர் தன்னோட 50வது படம்னு வரும்போது, இப்படி நெகட்டிவான கேரக்டர் பண்றதுக்கு அசாத்தியத் துணிச்சல் வேணும். அது அஜித்கிட்ட மட்டும்தான் இருக்கு. இதுவரை பார்க்காத அஜித்தா இதுல இருப்பார். முக்கியமா வெள்ளை முடியோட வர்ற அவரோட லுக். ஹாலிவுட் ஹீரோக்களுக்கு மட்டுமே சாத்தியமாகியிருக்க கெட் அப் அது. இந்த கெட் அப்பை வாசுகி பாஸ்கரோட டிஸ்கஷன்ல முடிவு பண்ணி அவர்கிட்ட சொன்னப்ப, தடையேதும் சொல்லாம அப்படியே வந்து நின்னார். இதுவும் கூட அவரால மட்டுமே முடிகிற அசாத்தியத் துணிச்சல்னுதான் சொல்வேன்.
அப்படி இன்வால்வ் ஆனவர் படம் முழுக்க எங்களோட ஜாலியா டிராவல் பண்ணியிருக்கார். படத்துக்குள்ளே அவரோட கூட்டாளிகளா வர்ற நாலு பசங்க கூட அப்படியே ஜெல்லாகி அவர் அடிச்ச லூட்டிகளுக்கு அளவேயில்லை. அதுல பிரேம்ஜி அவரோட செல்லமாவே ஆயிட்டான். பிரியாணி செஞ்சு போட்ட கதையெல்லாம் கூட நிறைய பேசியிருக்கமே..?
அதென்னமோ எனக்கும் கிரிக்கெட்டுக்கும் ரொம்ப ராசியாயிடுச்சு. முதல் படம் ‘சென்னை 28’ல பசங்களோட ஏரியா கிரிக்கெட் மேட்ச்சை கதையா சொல்லி யிருந்தேன். ‘சரோஜா’வில கிரிக்கெட் மேட்ச் பார்க்கப் போனவங்க கதையைச் சொன்னேன். இதுலயும் கிரிக்கெட் வருது. இது இன்னொரு ஏரியா. இதுல யாரும் கிரிக்கெட் விளையாடலை. அதுக்குப் பின்னாலிருக்க சூது விளையாட்டுகள் இருக்கு. அஜித்தை வச்சுப் படம் பண்றது என்னோட கனவா இருக்க, படத்துக்குள்ள அவருக்கு ஒரு கனவுத்திட்டம் இருக்கு. அதுதான் 500 கோடி ரூபாய் கனவு. பரபரன்னு போற திரைக்கதைக்குள்ள அவரோட ஃபேவரிட்டான பைக் ரேஸ் ஒண்ணை அற்புதமா செய்திருக்கார். அது ரசிகர்களுக்கு பெரிய ட்ரீட்டா இருக்கும்.
அவரோட த்ரிஷா அழகான ஜோடியாயிருக்காங்க. அவங்களோட வாழ்க்கையும் அஜித்தோட கேரக்டரால எப்படி திசை மாறுதுன்னு ஒரு டிராக் இருக்கு. த்ரிஷாவோட அழகுப் பட்டியல் முடியலை. ஆன்ட்ரியா, அஞ்சலி, லக்ஷ்மி ராய்னு தொடருது.
இதுக்கெல்லாம் மகுடம் வச்சது போல போலீஸ் ஆபீசரா வர்ற அர்ஜுன் இன்ப அதிர்ச்சி கொடுப்பார். இன்னொரு ஹீரோ படத்தில நடிக்க ஒத்துக்கிட்டது அவரோட பெருந்தன்மைன்னா, அவரைத் தன்னோட அன்பில அசத்தி நெகிழ வச்சிட்டார் ‘தல’. எல்லாரும் நெகடிவ்வா வர்ற படத்தில அர்ஜுனோட கேரக்டர் மட்டும் பாஸிட்டிவா வரும். என்னோட கூட்டணியில யுவன் பங்கையும், ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன் பங்கு பற்றியும் கேட்கவே வேணாம்.
இப்படி வித்தியாசமான ஒரு ஆக்ஷன் திரில்லரைப் பார்க்க சில நாட்கள் மட்டுமே பொறுத்திருங்க..!’’
வேணுஜி