அனன்யா திருமணம் அதிர்ச்சி திருப்பங்கள்



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

               எங்கேயும் எப்போதும் ஏதோ ஒரு நடிகையைப் பற்றிய செய்தி பரபரப்புக்குள்ளாகி விடுகிறது. இது ‘எங்கேயும் எப்போதும்’ நாயகி அனன்யாவின் சீன். வழக்கமாக ஒரு நடிகையைப் பற்றிய கிசுகிசுக்களும் பரபரப்புகளும் அவரது திருமணத்துடன் முற்றுப்பெறும். அதிலும் அனன்யாவின் கதை உல்டா புல்டாதான். இதுவரை எந்த சிக்கலிலும் சிக்காமல் இருந்தவர், திருமண நிச்சயதார்த்தத்திலிருந்தே தலைப்புச் செய்தி ஆகியிருக்கிறார்.

அனன்யாவுக்கு பெற்றோரால் பார்க்கப்பட்ட மாப்பிள்ளையாகச் சொல்லப்பட்ட கேரளாவின் திருச்சூர் தொழிலதிபர் ஆஞ்சநேயனுடன் கடந்த பிப்ரவரி 3ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது. செய்தி வெளியான சூட்டிலேயே ஆஞ்சநேயனின் பின்னணியை விசாரிக்கத் தொடங்கிவிட்டன மீடியாக்கள். அடுத்தடுத்து அந்த மாப்பிள்ளை பற்றிய மோசடிச் செய்திகளும் கிளம்பி விட்டன. அவருக்கு ஏற்கனவே திருமணமாகி முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டார்; அல்லது திருமணத்துக்குள் விவாகரத்து செய்யவிருக்கிறார் என்றும், இந்தத் தகவல் தெரிந்ததும் ‘தன் மகளை ஆஞ்சநேயன் ஏமாற்றித் திருமணம் செய்ய முயற்சிக்கிறார்’ என்று அனன்யாவின் அப்பா கோபாலகிருஷ்ணன் போலீஸில் புகார் கொடுத்திருப்பதாகவும், ‘ஆனாலும் ஆஞ்சநேயனைத்தான் திருமணம் செய்துகொள்வேன்’ என்று அனன்யா பிடிவாதம் பிடித்ததால் அவரை வீட்டுச் சிறையில் வைத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

இதையெல்லாம் மறுத்து அனன்யாவின் பேட்டிகள் வெளியானாலும் நெருப்பு, புகை தொடர்பை அறிய கேரளாவில் விசாரித்தோம்...

எல்லா நடிகைகளும் வாங்கிய வரம் (?) போலவே அனன்யாவுக்கும் அவரது அம்மாதான் எல்லாமே. அப்பா கோபாலகிருஷ்ணன் கேரளத்தின் முக்கிய அரசியல் கட்சிப் பிரமுகர் என்பதுடன் ஒரு படமும் தயாரித்திருக்கிறார். அந்தப்படம் தோல்வியடைய, அந்த அடியிலிருந்து குடும்பத்தை மீட்டுக் கொண்டுவரவே அனன்யா நடிப்பில் இறக்கப்பட்டார் என்கிறார்கள். எனவே பெரிய நடிகையாக வளரவேண்டும் என்கிற ஆர்வமெல்லாம் அனன்யாவுக்கு இல்லை. குடும்பப் பிரச்னை தீர்ந்ததும் திருமண வாழ்க்கையில் செட்டிலாகும் ஆசையில் இருந்திருக்கிறார்.

Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazineகொச்சியில் இருக்கும் ஹிமாவல் மஹேஷ்வர பத்ரானந்தா என்ற சாமியார் கேரளாவில் சினிமா சாமியாராக அறியப்பட்டவர். பல நடிகைகள் இவரது பக்தைகளாக இருக்கிறார்கள். சர்ச்சைக்குரிய இந்த சாமியார் பலமுறை பிரச்னைகளில் சிக்கியவர் என்கிறார்கள். தங்கள் குடும்பப் பிரச்னைகள் எப்போது தீரும் என்பதை அறிய அனன்யாவின் அம்மா மகளோடு அவரிடம் போயிருக்கிறார். சாமியாரைப் பார்த்த சில நாட்களில் ‘நாடோடிகள்’ வாய்ப்பு கிடைக்க, அவரது பக்தையாகவே ஆகிவிட்டார் அனன்யா. தன் வீட்டில் அந்த சாமியாரின் படத்தை வைத்து பூஜை செய்யும் அளவுக்கு அனன்யாவின் பக்தி முற்றியது.

அந்த சாமியாரிடம் நெருக்கமாக இருந்தவர்தான் ஆஞ்சநேயன். அனன்யாவின் சொந்த ஊரான திருச்சூர்தான் இவருக்கும் பூர்வீகம். தங்கள் ஊர்க்காரர்கள் என்கிறவகையில் சாமியாரிடம் வரும்போது அனன்யா குடும்பத்துக்கு உதவிகள் செய்து கொடுத்து அறிமுகம் ஆனார்.

ஆஞ்சநேயன் ஜோதிடத்திலும் பரிகார பூஜைகள் செய்வதிலும் வல்லவர். அனன்யா குடும்பத்தின் பிரச்னைகள் தீர அவர் சில பரிகாரங்கள் செய்து கொடுத்திருக்கிறார். அப்படியே குடும்ப நண்பர் ஆனவர், அனன்யாவின் அழகில் மயங்கி அவரைத் திருமணம் செய்துகொள்ளும் ஆசையையும் வெளிப்படுத்தி இருக்கிறார். தான் ஏற்கனவே திருமணமானவன் என்பதையும், கருத்து வேறுபாடு காரணமாக மனைவியைப் பிரிந்து, இப்போது பரஸ்பர ஒப்புதலுடன் விவாகரத்து கேட்டு வழக்கு போட்டிருக்கும் தகவலையும் அனன்யாவிடமும் அவரது அம்மாவிடமும் சொல்லி சென்டிமென்ட் டச் கொடுத்திருக்கிறார்.

தங்கள் குடும்பத்தின்மீது அவர் காட்டும் அக்கறையும், இப்படி வெளிப்படையாகப் பேசியதும் அனன்யாவுக்கு ரொம்பவே பிடித்துப் போயிருக்கிறது. ஆஞ்சநேயனின் முதல் மனைவியை சந்தித்துப் பேசிய அவர், அதன்பிறகே திருமணத்துக்கு சம்மதம் சொல்லியிருக்கிறார். ஆனால் அனன்யாவும் அவரது அம்மாவும் ஆஞ்சநேயனின் ஃபிளாஷ்பேக்கை அப்பா கோபாலகிருஷ்ணனிடம் சொல்லாமல் மறைத்து விட்டிருக்கிறார்கள்.  
  
ஆஞ்சநேயன் பற்றிய தகவல்கள் வெளியானதும், கோபால கிருஷ்ணன் கடுப்பாகி பெரும் பாவூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத் திருக்கிறார். அந்த நேரத்தில் ஒரு கன்னடப் பட ஷூட்டிங்குக்காக அனன்யாவும் அம்மாவும் ஆக்ராவில் இருந்தார்கள். திரும்பி வந்ததும் கோபாலகிருஷ்ணனை அவர்கள் சமாதானப்படுத்தி இருக்கிறார்கள். இதற்கிடையே தன் மீதான புகாரை வாபஸ் வாங்க வேண்டும் என ஆஞ்சநேயன் அனன்யாவிடம் கண்டிப்பாகச் சொல்லியிருக்கிறார். இதைத் தொடர்ந்து புகாரை திரும்பப் பெற்ற கோபாலகிருஷ்ணன், ‘நான் எதுவும் புகாரே போலீஸில் தரவில்லை’ என முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்தார். 
 
எதிர்ப்பது அச்சனே ஆனாலும், அவரைத் தள்ளி நிற்கச்சொல்லிவிட்டு ஆஞ்சநேயனுக்குக் கழுத்தை நீட்டத் தயாராக இருக்கிறாராம் அனன்யா. ‘‘ஆனாலும் ஆஞ்சநேயன் கில்லாடிதான்..!’’ என்று பொருமிக் கொண்டிருக்கிறார்கள் அனன்யாவின் ரசிகர்கள்.

ஆனாலும், ‘‘இந்தத் திருமணம் பிரச்னை இல்லாமல் நடக்குமா என்பது சந்தேகமே’’ என்கிறார்கள் அனன்யா குடும்பத்துக்கு நெருக்கமான சிலர்.

‘‘கடந்த சில மாதங்களாகவே அனன்யா பின்னாலேயே சுற்றிக் கொண்டிருக்கும் ஆஞ்சநேயன், அவரைத் தன் கண்காணிப்பிலேயே வைத்திருக்கிறார். அப்படி ஒன்றும் அவர் பிரமாதமான தொழிலதிபர் கிடையாது. ‘திருமணத்துக்குப் பிறகு அனன்யா தொடர்ந்து நடிப்பார்’ என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கிறார். அனன்யாவின் வருமானத்தின்மீதுதான் அவர் குறியாக இருக்கிறார். அவர்மீதான சில புகார்களை கொச்சி போலீசார் விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். சங்கடம் தரும் பல உண்மைகள் அதில் வெளியாகலாம்’’ என்கிறார்கள் அவர்கள்.
- ஜித்தன்