சகுனியின் தாயம்



துரிதமாக செயல்பட்டவள் தேன்மொழிதான். அடிப்படையில் அவள் மருத்துவராக இருந்ததால் உடனே ராகவேந்திர ராவ் அருகில் சென்றாள். நாடியை பிடித்துப் பார்க்க அவர் கைகளைத் தொட்டவள் அதிர்ந்தாள். உடல் நெருப்பாகக் கொதித்தது. ‘‘சம் திங் ராங்...’’ அவள் உதடுகள் நடுக்கத்துடன் வார்த்தைகளை உதிர்த்தன.

என்ன தவறு என்பது கதவுக்கு அருகில் நின்றபடி அவரை பார்த்துக் கொண்டிருந்த ரங்கராஜனுக்குப் புரிந்தது. நொடிக்கும் குறைவான நேரத்தில் பாய்ந்து அவர் அருகில் சென்றான். அது காய்ச்சல் இல்லை. உதடுகள் கறுத்துப் போயிருந்தன. மரணத்தை எந்த விநாடியும் தழுவலாம் என்ற நிலையில் இருந்தார்.

தேன்மொழியை தள்ளி விட்டு அவர் இமைகளை உயர்த்திப் பார்த்தான். அவன் சந்தேகப்பட்டது சரிதான். அதன்பிறகு அவன் தாமதிக்கவில்லை. மின்னல் வேகத்தில் மாடிப்படிகளில் இறங்கினான். சமையலறைக்கு சென்றான். உப்புத் தண்ணீரை கலந்து எடுத்து வந்தான். கட்டிலில் அமர்ந்தவன், அவர் தலையை எடுத்து தன் மடியில் வைத்துக் கொண்டான். உப்புநீரை குடிக்கக் கொடுத்தான். அவர் அதை விழுங்கவில்லை; விழுங்க முடியவில்லை. அதற்குள் நரம்புகள் மீது பாதிப்பு தொடங்கிவிட்டது. பற்கள் கிட்டித்துப் போய் உப்புத் தண்ணீர் உள்ளே போகவில்லை.

அவரை அப்படியே கட்டிலில் போட்டுவிட்டு எழுந்தான். நேராக அந்த அறையில் இருந்த பாத்ரூமுக்கு சென்றான். பாத் டப்பில் நீரை நிரப்பினான். மீண்டும் அறைக்கு வந்தவன் தேன்மொழியை காணாமல் திகைத்தான். கண்களை சுழலவிட்டவன் தொலைபேசிக்கு அருகில் அவள் நிற்பதை கவனித்தான். புரிந்தது. சட்டென்று தாவி தொடர்பைத் துண்டித்தான்.
‘‘ரங்கராஜன்... என்ன இது? ஆஸ்பிடலுக்கு போன் பண்ண வேண்டாமா?’’

‘‘வேண்டாம். கொஞ்ச நேரம் அமைதியா இருங்க...’’ - ரிஸீவரை வைத்தவன், ராகவேந்திர ராவ் அருகில் வந்தான். அவரது வேஷ்டி, சட்டையை மளமளவென்று கழற்றி வீசி எறிந்தான். உள்ளாடை எதுவும் அவர் அணிந்திருக்கவில்லை. வயதின் அடையாளங்கள் உடலெங்கும் பூத்திருந்தன.  ஒரு கையை முழங்காலுக்குக் கீழேயும், இன்னொரு கையை கழுத்துக்குக் கீழேயும் கொடுத்து, சிறுகுழந்தையைத் தூக்குவது போல் தூக்கினான். எதுவும் புரியாமல் தேன்மொழியும் பதற்றத்துடன் அவனைப் பின்தொடர்ந்தாள்.

நேராக குளியலறைக்குச் சென்றவன், நீர் நிரம்பியிருந்த பாத்டப்பில் அவரை இறக்கினான். முகத்தோடு சேர்த்து அவர் உடல் முழுவதையும் தண்ணீருக்குள் அமுக்கினான்.
‘‘வாட் இஸ் திஸ்..?’’ தேன்மொழி அலறினாள்.‘‘ஷட் அப். ரூம்ல இருக்கிற உப்புநீரைக் கொண்டு வாங்க...’’
‘‘ரங்கராஜன்...’’

‘‘சொன்னதைச் செய்ங்க...’’ கத்தினான்.வேறு வழியின்றி தேன்மொழி கொண்டு வந்தாள். பாத் டப்பில் மூழ்கிய ராகவேந்திர ராவின் உடலில் இரண்டு விநாடிகளுக்குப் பிறகு சலனம் ஏற்பட்டது. மூக்கில் தண்ணீர் புகுந்ததால் தன்னையும் அறியாமல் வாயைத் திறந்தார். இதற்காகவே காத்திருந்தது போல் பாத்திரத்தில் இருந்த உப்புநீரை அவர் வாயில் ஊற்றினான். அதன் ருசியைப் பார்த்துவிட்டு, சுயநினைவு இல்லாத நிலையிலும் அதைக் குடிக்க மறுத்தார். மறுபடியும் பாத் டப்பில் முக்கினான். வாயைத் திறந்தார். கொஞ்சம் உப்புநீரை அவருக்குப் புகட்டினான். ஒரு வாய் போனதுமே மீண்டும் குடிக்க மறுத்தார். திரும்பவும் அவரை நீரில் அமுக்கினான்.

செய்வதறியாமல் இதை எல்லாம் தேன்மொழி பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால், முன்பு இருந்த பதற்றம் அவளிடம் இப்போது இல்லை. ராகவேந்திர ராவை குணப்படுத்தவே ரங்கராஜன் இப்படியெல்லாம் செய்கிறான் என்பது புரிந்தது. அதனாலேயே சந்தேகமும் வந்தது.

உண்மையில் அவன் யார்? இந்த சிகிச்சை முறையை எங்கிருந்து கற்றான்? கேட்பதற்கு இது நேரமில்லை. ஆனால், ராகவேந்திர ராவ் பிழைத்து எழுந்ததும் கண்டிப்பாக இதை அவனிடம் கேட்டே ஆக வேண்டும். இந்த முடிவுக்கு வந்ததும், ரங்கராஜனை தொந்தரவு செய்யாமல் அவன் செய்வதை மட்டும் தள்ளி நின்று கவனிக்க ஆரம்பித்தாள்.

முக்குவதும், ஊற்றுவதுமாக உப்புநீரை முழுவதும் குடிக்கச் செய்த பிறகு அவரை தரையில் நிற்க வைத்தான். கீரைத்தண்டாக துவண்டு அவர் சரிந்தார். இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு, அவர் வயிற்றை கைகளால் அழுத்திக் கொண்டே கழுத்து வரை மேல்நோக்கிக் கொண்டு வந்தான். வயிற்றில் இருந்ததை வெளியேற்ற முயற்சித்தான். கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்களுக்கு பிறகு அவன் முயற்சி பலித்தது. அவர் மெதுவாக தேறத் தொடங்கினார்.

ஆனால் -சற்றும் எதிர்பார்க்காத விளைவு ஏற்பட்டது. மூச்சுக்குழாயில் ஏதோ அடைத்துக் கொண்டதால் அவருக்கு விக்கல் எடுத்தது. சிறிது நேரத்தில் மூச்சும் நின்றுவிட்டது.
அவரை அப்படியே தரையில் போட்டுவிட்டு மறுபடியும் சமையலறைக்கு ஓடினான். கேஸ் சிலிண்டரை பற்ற வைத்து நீரை சுட வைத்தான். புதிய பிளேடை அதில் போட்டான்.
பின்னாலேயே வந்த தேன்மொழியை இதைப் பார்த்து அதிர்ந்தாள். ‘‘என்ன செய்யப் போறீங்க?’’

‘‘ட்ரெகியாடமி...’’
‘‘என்னது?’’ அலறினாள். ‘‘இந்த ஆபரேஷனை வீட்ல பண்ணக் கூடாது. ஆஸ்பிடல்ல தான் செய்யணும்...’’
‘‘அதுக்கு இப்ப நேரம் இல்லை...’’

‘‘முட்டாள்தனமா பேசாதீங்க. இங்க எந்த உபகரணமும் இல்லை...’’
‘‘பிளேடு போதும்...’’
‘‘ரங்கராஜன்...’’

‘‘பேச நேரமில்லை. அந்த கப்போர்டுல ஊசியும், நூலும் இருக்கு...’’ சொன்னவன் சிம்மில் கொதித்த பாத்திரத்தை இறக்கினான். இன்னொரு பாத்திரத்தில் நீரை நிரப்பி பர்னர் மீது வைத்தான். ‘‘இதுக்குள்ள ஊசியைப் போடுங்க. நல்லா கொதிச்சதும் கொண்டு வாங்க...’’

பதிலுக்கு காத்திராமல் இறக்கிய சுடுநீரை எடுத்துக் கொண்டு மாடிக்கு சென்றான். அந்தப் பாத்திரத்தில் மிதந்த பிளேடை பார்த்ததும் தேன்மொழிக்கு திக்கென்றிருந்தது. எதுவும் விவாதிக்காமல் அவன் சொன்னபடி கப்போர்டை திறந்தாள். பேப்பரில் சுற்றப்பட்ட புதிய ஊசி அங்கிருந்தது. இது எப்படி ரங்கராஜனுக்குத் தெரியும் என்ற கேள்வியை தற்காலிகமாக ஒதுக்கிவிட்டு, அவன் சொன்ன
படியே அதை வெந்நீரில் போட்டாள். கொதித்ததும் கேஸை அணைத்துவிட்டு பாத்திரத்துடன் மடமடவென்று மாடிக்கு வந்தாள்.

அங்கு ராகவேந்திர ராவின் நிலை மோசமாகியிருந்தது. மூச்சுக் குழாய்க்குள் காற்று நுழைய முடியாததால் அவர் உடலில் மறுபடியும் சலனம் அடங்கிவிட்டது. இன்னும் சில நொடிகள் தாமதித்தால் கூட அவர் பிழைக்கமாட்டார். பாத்திரத்துடன் அறைக்குள் நுழைந்த தேன்மொழிக்கு இது நன்றாகவே புரிந்தது.

அவளது வருகைக்காகவே காத்திருந்த ரங்கராஜன், தாமதிக்காமல் பிளேடை அவர் கழுத்தில் வைத்து நேராகக் கீறினான். ரத்தம் பொங்கியது. சரியாக பதினைந்து நொடிகளில் அவர் தொண்டைக்குழாயில் அடைத்துக் கொண்டிருந்த அடைப்பை நீக்கிவிட்டு, பொங்கி வந்த ரத்தத்தை கையால் அழுத்திப் பிடித்தான். ‘‘தேன்மொழி... சீக்கிரம்...’’ கத்தினான். புரிந்து கொண்டதற்கு அறிகுறியாக மடமடவென்று அவள் தையல் போட்டாள்.

வேலை முடிந்ததும் அவரை அசங்காமல் படுக்க வைத்தான். ‘‘இனி உயிருக்கு ஆபத்தில்லை...’’ - அவன் குரலில் நிம்மதி வழிந்தது. ‘‘நீங்க டாக்டரா?’’ அவனை நேருக்கு நேர் பார்த்தபடி தேன்மொழி கேட்டாள்.‘‘இல்லை...’’ ‘‘பொய். நான் நம்பமாட்டேன். வெறும் பிளேடை வைச்சு ட்ரெகியாடமி பண்ணின ஆளை இப்பத்தான் பார்க்கறேன். அனுபவம் வாய்ந்த டாக்டர்ஸே இப்படி ரிஸ்க் எடுக்க மாட்டாங்க...’’ ‘‘அதில்லை தேன்மொழி...’’

‘‘சொல்ல விரும்பலைனா வற்புறுத்த மாட்டேன்...’’ நேராக தொலைபேசியின் அருகில் சென்றாள். ‘‘இதுக்கு மேல நம்மால ராகவேந்திர ராவுக்கு சிகிச்சை தர முடியாது. பக்கத்துல இருக்கிற ஆஸ்பிடலுக்கு போன் பண்ணறேன்...’’‘‘ஒரு நிமிஷம்...’’

‘‘தெரியும். அட்ரஸ் மட்டும்தான் சொல்லுவேன்...’’ சொன்னபடியே தன் பெயரை அவள் குறிப்பிடவில்லை. ரிஸீவரை வைத்துவிட்டு அவன் பக்கம் திரும்பினாள். அவள் கண்களில் தொற்றி நின்ற கேள்வி அவனைத் தாக்கியது. சங்கடத்துடன் நெளிந்தவன், ‘‘நாலு வருஷம் மெடிக்கல் படிச்சேன். ஆனா, முடிக்கலை...’’ என்றான்.
அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது. ‘‘ஏன்?’’

‘‘சொல்றேன்...’’ என்று சொன்ன ரங்கராஜன் அந்த அறையை அலசத் தொடங்கினான். அங்கிருந்த மேஜை டிராயர்களை திறந்தான். கட்டிலின் அந்தப் பக்கம் இருந்த தலையணையை உயர்த்தினான். அவன் தேடி வந்த ஃபைல் அங்கிருந்தது. அதை எடுத்துக் கொண்டான்.

‘‘உங்களோட எல்லா கேள்விகளுக்கும் இன்னும் ஒரு மணி நேரத்துல பதில் கிடைச்சுடும். இப்ப வாங்க. ஆம்புலன்ஸ் வர்றதுக்குள்ள நாம கிளம்பியாகணும்...’’
‘‘இந்த ஃபைல்ல என்ன இருக்கு?’’
‘‘தலைமுடி பத்தின விவரங்கள்...’’
‘‘புரியலை...’’

‘‘ரெட் மார்கெட்டோட முக்கியமான இன்னொரு சரக்கு, தலைமுடிகள். திருப்பதில பக்தர்கள் காணிக்கையா செலுத்தற முடிகள் எங்க போகுது... எவ்வளவுக்கு விக்குது... அதை வாங்கி என்ன பண்ணறாங்க... இதெல்லாமே இதுல இருக்கு...’’
‘‘இதை கலெக்ட் பண்ணத்தான் இங்க வந்தோமா?’’
‘‘ஆமா...’’

அதன் பிறகு இருவரும் எதுவும் பேசவில்லை. வீட்டை விட்டு வெளியே வந்தார்கள். அவர்கள் இருவரும் எந்தப் பக்கம் செல்கிறார்கள் என்பதை தெருமுனையில் நின்றிருந்த ஒரு கார் கவனித்துக் கொண்டிருந்தது. அந்தக் காருக்குள் இருந்த மனிதன் திருப்தியுடன் சிகரெட்டைப் பற்ற வைத்தான். அவன் என்ன நடக்க வேண்டுமென்று நினைத்தானோ அதுவேதான் இப்போது நடந்திருக்கிறது. புகையை வெளியேற்றியபடி டிரைவருக்கு சைகை செய்தான். கார்
கிளம்பியது.

அந்த மனிதன் வேறு யாருமல்ல. ஸ்காட் வில்லியம்ஸ்தான்.
ஸ்பைடர் மேன் வெளியே வந்தான். கைகளை முன்னும் பின்னுமாக அசைத்தான். மார்பை விரிவுபடுத்தினான். பத்து முறை பஸ்கி எடுத்தான். குதித்தான். கை, கால்களை உதறினான். அதன் பிறகே ஹாரி பார்ட்டரை நோக்கி திரும்பினான்.
‘‘மகேஷ் இப்ப எங்க இருக்கான்?’’

‘‘மைதானத்துல...’’ சொன்னதுடன் நிற்காமல் ஹாரி பார்ட்டர் தன் ஆள்காட்டி விரலால் இடத்தையும் சுட்டிக் காட்டினான்.
‘‘வளைவுக்கு அந்தப் பக்கமா?’’
‘‘ஆமா...’’

‘‘முதல்ல அனிமா வித்தையைத்தானே கத்துக்கப் போறான்?’’
‘‘யெஸ்...’’
‘‘எப்படி கத்துக்கறான்னு பார்க்கறேன்...’’

முணுமுணுத்த ஸ்பைடர் மேன், தன் வலது உள்ளங்கையை மடக்கினான். குகையின் சுவரை நோக்கி அதை திருப்பினான். மணிக்கட்டில் இருந்து புறப்பட்ட சிலந்தி வலை, பச்சக் என்று பாறையில் ஒட்டிக் கொண்டது. விழுது போல் சிலந்தியை பிடித்துத் தொங்கியபடி அந்தப் பக்கம் சென்றான். பாறையோடு பாறையாக ஒன்றினான். அங்கிருந்தபடி மைதானத்தை துல்லியமாக பார்க்க முடிந்தது. வேதாளமும், மகேஷும் பத்தடி இடைவெளியில் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு மேலே நூறடி உயரத்தில் கூரையைப் போல் பாறைகள் மூடியிருந்தன.

ஸ்பைடர் மேன் இருந்த இடத்துக்கும் மைதானத்தின் தொடக்கத்துக்கும் ஐந்தடி தொலைவுதான் இருந்தது.  பல்லியைப் போல் நகர்ந்து மைதானம் தொடங்கும் இடத்துக்கு வந்தான். அதன் பிறகு சிறிதும் அவன் தாமதிக்கவில்லை. தன் இடது உள்ளங்கையை மடக்கினான். மைதானத்தின் மறுகோடிக்கு அதைத் திருப்பினான். மணிக்கட்டில் இருந்து புறப்பட்ட சிலந்தி வலை, சத்தம் எழுப்பாமல் ராக்கெட் போல் சீறி அங்கிருந்த பாறையில் ஒட்டிக் கொண்டது.

சிலந்தியில் ஊர்ந்தபடியே மறுகோடிக்கு சென்றவன், சற்றும் தாமதிக்காமல் தன் வலது உள்ளங்கையை மடக்கினான். மைதானத்தின் இந்தக் கோடிக்கு திருப்பினான். முன்பு போலவே மணிக்கட்டில் இருந்து புறப்பட்ட வலை, உடும்பைப் போல் எதிர்பக்கம் இருந்த பாறையை கவ்வி நின்றது. அதைப் பிடித்தபடி இம்முறையும் ஊர்ந்தான். இப்படியே இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக சிலந்தி வலையை தரையில் இருந்து ஐம்பதடி உயரத்தில் கூரையைப் போல் உருவாக்கினான். இரும்பு வலை போல் சிலந்தி வலை ஒன்று தங்கள் தலைக்கு மேலே உருவாகி வருவதை வேதாளமும் சரி, மகேஷும் சரி, கவனிக்கவேயில்லை...

விழிப்புக்கும், உறக்கத்துக்குமான இடைவெளி கணப்பொழுதுதான். புலன்கள் அடங்குவதையும், சீறி எழுவதையும் ஒருபோதும் காலத்தின் அளவுகோலால் அளக்க முடியாது. கணங்களின் விளையாட்டில் யுகங்களே மாறும்போது இளமாறனின் அப்போதைய நிலை மட்டும் மாறாமலா இருக்கும்? யவன ராணியை தன் தோளில் சுமந்தபடி சுரங்கப் பாதையில் நிதானமாக நடந்தவன், சட்டென்று நின்றான். காரணம், அவன் செவிக்கருகில் ஒலித்த குரல்தான்.

‘‘அசையாதே. பிணமாவாய்...’’
குரலுக்குரியவர் யாரென்று அவனுக்கு நன்றாகவே தெரியும். யாழின் கீதத்தை இதற்கு முன்பும் கேட்டவனல்லவா அவன்? எனவே கிளிஞ்சலுடன் விளையாடும் பரதவர்ச் சிறுவன் போல் புன்னகையுடன் நின்றான். குறுவாளின் நுனி தன் கழுத்தில் ஊன்றி நிற்பதை அவன் பொருட்படுத்தவே இல்லை...

‘‘போலி டாக்டர் வழக்குல கைதான நீங்க, வேற ஏதாவது சொல்ல விரும்புறீங்களா..?’’
‘‘உங்க முகம் டல்லா இருக்கு... எதுக்கும் சுகர் செக் பண்ணுங்க எஜமான்..!’’

‘‘அந்த டாக்டரை ஏன் கைது பண்றாங்க..?’’
‘‘வருமானத்துக்கு அதிகமா ஆபரேஷன் பண்ணி, நோயாளிகள் எண்ணிக்கையைக் குறைச்சிட்டாராம்!’’

‘‘தலைவரே... தூக்கத்துல மகளிரணித் தலைவி பேரைச் சொல்லி முனகறீங்க!’’
‘‘அது தூக்கத்துல இல்ல... ஏக்கத்துல முனகினது!’’
- அம்பை தேவா, சென்னை-116.

(தொடரும்)

கே.என்.சிவராமன்