உயர்ந்த உள்ளம்



‘’இன்னைக்கு நாம குடும்பத்தோட வெளிய போறதா இருக்கோம். ராத்திரிதான் வருவோம். ஆனாலும், காலங்காத்தால எழுந்து நீ சமைக்க ஆரம்பிச்சிட்டே. வெளியே சாப்பிட்டுக்கலாமே. ஏம்மா கஷ்டப்படுறே?’’ - செல்ல மகள் சுஜி, சிணுங்கலோடு கேட்டாள்.
‘‘வெளியேதான் சாப்பிடப் போறோம்!’’

‘‘அப்புறம் என்ன பண்றே?’’
‘‘வேலை இருக்குடி... நீ கிளம்பு!’’ - துரத்திவிட்டாள் அம்மா.
சுஜி, அன்று முழுக்க குழம்பியபடியே வந்தாள். வீடு திரும்பியவுடன் பார்த்தால், சமையல் மேடையில் சமைத்த பாத்திரங்கள் கழுவிக் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்தன.
‘‘என்னம்மா, சமையல் செய்திருக்கே... ஆனா, எடுத்துட்டு வரல! ஏன்
இப்படி?’’ - கேலியாகக் கேட்ட மகளை நிமிர்ந்து பார்த்தாள் அம்மா.

‘‘வேலைக்காரிக்காகத்தான் சமைச்சேன். பாவம், ரெண்டு வீட்டு வேலையை முடிச்சுட்டு நம்ம வீட்டுக்கு எப்பவும் பசியோட வருவா. நாம ஒரு நாள் வெளில போறதுக்காக அவளை பட்டினி போட வேண்டாம்னுதான் சமைச்சு வச்சுட்டு சாவியையும் பக்கத்து வீட்டில் கொடுத்துட்டு வர்றேன். பழகிட்டா. திருட்டு, புரட்டு கிடையாது. சாப்பிட்டுட்டு வீட்டு வேலையும் முடிச்சுடுவா. நமக்காக உழைக்கிறவளுக்கு இது கூட செய்யக் கூடாதா... சொல்லு?’’
இப்போது அம்மாவைக் கட்டிக்கொள்ளத் தோன்றியது சுஜிக்கு!         

பத்மா சபேசன்