மலச்சிக்கலில் தொடங்குகிறது மலக்குடல் புற்றுநோய்



மலக்குடல் புற்றுநோய்க்கு அமெரிக்கா போன்ற மேலை நாட்டினர் அதிகம் பாதிக்கப்படுபவர்களாக இருந்தாலும், நம் நாட்டு மக்களிடத்திலும் இந்தப்போக்கு சமீபகாலமாக அதிகரித்து வருவதாகப் பல்வேறு புள்ளி விபரங்கள் கூறுகின்றன. லேப்ரோஸ்கோப்பிக் மற்றும் பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை நிபுணர் மோகன் ராவிடம் இதுபற்றிக் கேட்டோம்...

மலக்குடல் புற்றுநோய் என்றால் என்ன?

‘‘பெருங்குடல் (Colon) மற்றும் மலக்குடலில் (Rectum) தோன்றும் புற்றுநோய் கட்டிகளே மலக்குடல் புற்றுநோயாகும். ஆசன வாய் பகுதிக்கு சற்று உள்ளே இருப்பதுதான் மலக்குடல். ஆங்கிலத்தில் இதனை Rectum என்று குறிப்பிடுவார்கள். பெருங்குடலின் இறுதிப்பகுதி என்றாலும் குடல் புற்றுநோய் தாக்கப்படுவது இப்பகுதியில்தான். இங்குள்ள சிறிய அடர்த்தியான நரம்புத்தசை செல்கள் Adenomatous polyps என்று அழைக்கப்படுகிறது. இவற்றில் வெடிப்பு ஏற்பட்டே புற்றுநோயாக மாறுகிறது.’’

இதன் அறிகுறிகள் என்ன?

‘‘வயிற்றுவலி, ரத்தத்துடன் கூடிய மலம், ஆசனவாயில் ரத்தக்கசிவு, பசியின்மை, திடீரென்று உடல் எடை குறைதல் போன்றவற்றோடு சிலருக்கு வயிற்றுப்போக்கும் ஏற்படும். இவையெல்லாம் மலக்குடலில் புற்றுநோய்க்கட்டியின் அளவுக்கு ஏற்றவாறு மாறுபடலாம். நீண்ட நாட்களாக மலச்சிக்கல் இருப்பதும் மலக்குடல் புற்றுநோயின் ஓர் அறிகுறிதான்.

எனவே, மலச்சிக்கல்தானே என்று அலட்சியமாக இருக்கக் கூடாது. மேலே சொன்னவற்றில் எந்த அறிகுறியாவது 4 வாரங்களுக்கு மேல் நீடித்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.’’

மலச்சிக்கல் எப்படி மலக்குடல் புற்றுநோய்க்குக் காரணமாக அமைகிறது?

‘‘போதிய தண்ணீர் குடிக்காமல் இருப்பது, நார்ச்சத்து உணவுகள் எடுத்துக் கொள்ளாமல் இருப்பது, ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது போன்ற காரணங்களால் மலச்சிக்கல் ஏற்படுகிறது. இந்த நாள்பட்ட மலச்சிக்கல் ஒரு கட்டத்தில் மூலநோயில் கொண்டு போய்விட்டுவிடும்.

மலத்துடன் ரத்தம் வெளியேறுவதற்கு மூலம்தான் காரணம் என நினைத்து பலர் அலட்சியப்படுத்தி விடுகின்றனர். அவ்வாறு அலட்சியமாக இருக்கும் காலகட்டத்தில் புற்றுநோய் கட்டி வேகமாக வளர்ந்து மலக்குடலை அடைத்து மற்ற இடங்களுக்கு பரவ நாமே இடம் கொடுத்துவிடுகிறோம்.

அதனால், நாள்பட்ட மலச்சிக்கலையும், மூல நோயையும் உடனடியாக கவனிப்பது அவசியம்.’’மலக்குடல் புற்றுநோய்க்கான
காரணங்கள் என்ன?

‘‘புகை, மதுப்பழக்கம், ரெட் மீட், பதப்படுத்தப்பட்ட உணவுகளை அளவுக்கதிகமாக உண்பது, உடல்பருமன் மற்றும் பரம்பரைத்தன்மை போன்றவை மலக்குடல் புற்றுநோய்க்கான காரணங்களாக இருக்கின்றன. இதில் சமீபமாக உடற்பயிற்சியற்ற வாழ்க்கை முறையும் முக்கியப் பங்கை எடுத்துக்
கொண்டுள்ளது.

உணவுக்கும், மலக்குடல் புற்றுநோய்க்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை ஆய்வுகள் நிரூபித்துள்ளன. எனவே, மலச்சிக்கலைத் தவிர்க்க கார்போஹைட்ரேட், கொழுப்பு மிகுந்த உணவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும். நார்ச்சத்து மிக்க உணவுகளை எடுத்துக் கொண்டு உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதும் முக்கியம். இன்று ஆசனவாய் அழுத்த நோய்க்கு மிக அதிகமானோர் பாதிக்கப்படுவதற்கு மன அழுத்தமும் காரணமாக இருக்கிறது.’’

மலக்குடல் புற்றுநோயைக் கண்டறிய உதவும் சோதனை முறைகள்…

‘‘ஆரம்ப கட்டமாக ரத்த பரிசோதனை செய்யப்படும். இரண்டாவதாக, மலத்தில் கண்ணுக்குத் தெரியாமல் ரத்தம் வெளியேறுகிறதா என்பதைக் கண்டறிய மலப்பரிசோதனை செய்யப்படும். மூன்றாவதாக, குடல் சார்ந்த பிரச்னைகள் முழுவதையும் தெரிந்துகொள்ள அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனும், குடலில் உள்ள கட்டிகள்,  அடைப்பு போன்றவற்றைக் கண்டறிய CT ஸ்கேனும், ஆசன வாயின் அழுத்த நோயை அறியும் பரிசோதனையாக Rectal Manometry பரிசோதனை செய்யப்படும்.

இறுதியாக ஆசனவாய் வழியாக ட்யூப் செலுத்தி மலக் குடலில் புற்றுநோய் கட்டிகள் இருக்கிறதா என கண்டறிய மலக்குடல் நோக்கி(Colonoscopy test) பரிசோதனையில் செல் திசுக்களை எடுத்து பயாப்ஸி டெஸ்ட் மூலம் புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்படும்.

சிகிச்சைகள்...

‘‘புற்றுநோய் தாக்கத்தின் நிலையினை கருத்தில் கொண்டு சிகிச்சைகள் வேறுபடும். ஆரம்ப நிலையில், லேப்ராஸ்கோப்பி சிகிச்சை முறையில் கட்டியை இடுப்பு எலும்புக்குள் இருந்தாலும் எளிதாகச் சென்று முழுவதுமாக எடுத்துவிடலாம். குடலை வெளியே கொண்டு வந்து வைப்பதற்கான வாய்ப்பும் லேப்ராஸ்கோப்பி சிகிச்சை முறையில் மிகவும் குறைவு.

அரிதாக சில நேரங்களில் முற்றிய புற்றுநோய்க்கு மலக்குடலை வெளியே வைக்க வேண்டியிருக்கும். எல்லா மலக்குடல் புற்று நோய்க்கும் குடலை வெளியே வைக்க வேண்டியிருக்காது. சிலருக்கு மலக்குடலில் புற்றுநோய் பாதித்த பகுதியை Partial coloctomy அறுவை சிகிச்சை மூலம் எடுத்துவிட்டு நன்றாக இருக்கும் பகுதியை இணைத்துவிடுவோம்.

கட்டி மற்ற இடங்களுக்கு பரவியிருந்தால் கதிரியக்கம் மற்றும் கீமோதெரபி எனப்படும் ஊசி மருந்துகள் மூலம் கட்டியின் அளவை குறையச் செய்ய முடியும். இப்படி ஒவ்வொரு நிலையிலும் அதற்குத் தகுந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியும் பட்சத்தில் அறுவை சிகிச்சை செய்து கட்டியை முழுவதும் அகற்றிவிடுவது நல்லது.’’

- என்.ஹரிஹரன்