பனை விதைச்சவன் பாத்துட்டு சாவான்!



இயற்கை 360°

‘‘பனை விதைச்சவன் பாத்துட்டு சாவான்..!” இது, கிராமங்களில் பேசப்படும் வழக்குமொழிகளுள் ஒன்று! பனையை விதைத்தவன் எதைப் பார்த்துவிட்டு மடிவான் என்பதைத் தெரிந்துகொள்ள, இன்றைய இயற்கை 360 டிகிரியில், பனையுடன் ஒரு பயணம் மேற்கொள்வோம் வாருங்கள்!

கோடைக்காலத்தில், நம் அனைவரின் விருப்பத் தேர்வாக இருக்கின்ற நுங்கைத் தரும் பனை மரம் தோன்றிய இடம் இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியா. பனையின் தாவரப்பெயர் Borassus flabellifer. இதில் Borassus எனும் கிரேக்கச் சொல், தோல் போன்ற பனம் பழத்தையும், flabellifer என்பது விசிறி போன்ற பனைஇலைகளையும் குறிப்பது.

கோடை வெயிலின் நீர் வறட்சியைப் போக்கி, ஆரோக்கியத்தை அள்ளித்தரும் பனை மரத்தின் இளம் பழமான நுங்கை நொங்கு, தாட்டி நுங்கு, தாட் கோலா, ஈரோலு என்று பலவாறு அழைப்பதைப் போன்று, Palmyra palm, Wine palm, Toddy palm, Ice Apple, Ice palm என ஆங்கிலத்திலும் பல்வேறு பெயர்களில் அழைக்கின்றனர். 

அதிக நீர்த்தன்மையோடு வழுவழுப்பாய், அதேசமயம் இனிப்பும், லேசான துவர்ப்பும் சேர்ந்த தனிச்சுவை கொண்ட நுங்கு, பனையின் முற்றாத இளம்பழமாகும். குறிப்பாக தேங்காயில் உள்ள இளநீர் போலவே, விதையாகும் பனம்பழத்தின் எண்டோஸ்பர்ம்(endosperm) நுங்கு எனப்படுகிறது.

அளவில் சிறிய நுங்கு அதிக நார்ச்சத்து, அதிக நீர்த்தன்மை, அதிகக் கலோரி, அதிக அளவில் வைட்டமின் ஏ, சி, ஈ மற்றும் அதிகப்படியான கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், காப்பர் உள்ளிட்ட அத்தியாவசிய கனிமங்கள், இவற்றுடன் லைசின், அஸ்பார்டிக்  அமிலம், ஃபினைல் அலனின் உள்ளிட்ட அத்தியாவசிய அமினோ அமிலங்கள் என அனைத்தையும் கொண்டது. 

மேலும், அழற்சி எதிர்ப்புப் பண்புகளான டானின்கள்(Tannins), சப்போனின்கள் (Saponins), குளுக்கோசைட்கள் (Glucosides), போரஸ்ஸோ-சைட்கள் (Borassosides), ஆன்த்தோ-
சயனின்கள் (Anthocyanins), ஃபளாபெல்லி-ஃபெரின் (flabelliferin) உள்ளிட்ட தாவரச்சத்துகள் நுங்கின் மருத்துவ குணங்களுக்குக் காரணமாகின்றன.

இவ்வளவு சத்துகள் நிறைந்த இந்த இளம் பனம் பழங்களை (Palymrah Fruit Pulp) உட்கொண்டவுடன், உடலுக்குக் குளிர்ச்சியை தந்து, இதில் உள்ள கலோரி மற்றும் பிற சத்துகள் உடற் சோர்வை நீக்கி, ஆரோக்கிய பலன்களையும் அள்ளித் தருகின்றன. நுங்கின் காம்ப்ளக்ஸ் கார்போ ஹைட்ரேட்டுகள், சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி, கொழுப்பை மட்டுப்படுத்தி, உடல்
எடையை குறைக்கும் தன்மை கொண்டவை என்றால், அவற்றின் நார்ச்சத்தும் கனிமங்களும் வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல் ஆகிய இரண்டிலும் பலனளிக்கின்றன. 

மேலும் அழற்சி எதிர்ப்பு பண்பும் நிறைந்திருப்பதால் வயிற்று அழற்சி, கல்லீரல் நோய்கள், மலச்சிக்கல், சிறுநீர்த் தொற்று, பால்வினை நோய்களையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவுவதுடன், கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் தலைச்சுற்றல், வாந்தி, மயக்கத்தையும் கட்டுப்படுத்துகிறது.

நுங்கில் உள்ள ஆன்த்தோ-சயனின்கள் (Anthocyanins), செல்களின் வீக்கத்தைக் குறைத்து, தொற்றுநோய் எதிர்ப்பை உருவாக்கி, மார்பகப் புற்றுநோய் மற்றும் தோல் புற்றுநோய்களில் செல் வளர்ச்சியைத் தடுக்க உதவுவதாய் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

நுங்கின் பட்டையை வெளிப்புறமாக பயன்படுத்தும் போது, சரும எரிச்சலைத் தணித்து, காயங்களை குணப்படுத்தி, வியர்க்குரு, பருக்கள், சிரங்கு, அரிப்பு, சூட்டுக் கொப்பளங்கள், தழும்புகள், கோடைகால அம்மை நோய்களுக்கும் பயனளிப்பதுடன், முடி உதிர்தலையும் பெருமளவு தடுப்பதால், மருத்துவ குணங்கள் நிறைந்த, ஆயுளை அதிகரிக்கும் சிரஞ்சீவி (Chirayu) என்றே அறியப்படுகிறது.

நுங்கு மட்டுமன்றி, பனையிலிருந்து கிடைக்கப்பெறும் பதநீர், பனைவெல்லம், கருப்பட்டி, பனங்கற்கண்டு, பனங்கிழங்கு, பனஞ்சோறு என அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்தவைதான். நுங்கை பாயசம், கீர், ஃபுட்டிங், ஐஸ்கிரீம், ஜெல்லி, ஜாம், வைன், சாஸ், யோகர்ட் என உணவாகத் தயாரித்தும் உண்ணலாம். 

நுங்கில் தயாராகும் பனிபனாட்டு, பனை பணியாரம், வாட்டலப்பம் போன்றவை இலங்கையின் தொன்மையான சிற்றுண்டிகள். மலிவாகக் கிடைக்கும் பாமாயில் பனையிலிருந்து தயாராவது அல்ல...

செம்பனை எனப்படும் ஆப்பிரிக்க எலியிஸ் மரத்திலிருந்து என்பதையும் நாம் இங்கே நினைவில் கொள்ளவேண்டும்.நுங்கு மிகக் குறுகிய நேரத்திற்குள் நீர்த்துப்போகும் தன்மை கொண்டது என்பதால், சீவியதும் நுங்கை உடனே உட்கொள்ள வேண்டும். 

அல்லது குளிர்சாதனப் பெட்டியில் வைத்தும் உண்ணலாம். அதிக அளவில் நுங்கை உட்கொண்டாலும், அழுகிய நுங்கினை உண்டாலும் அஜீரணம், வாந்தி, ஒவ்வாமை, வயிற்றுப்போக்கு, காய்ச்சலை ஏற்படுத்தும்.

‘அனைத்திலும் ஆரோக்கியம் அனைவருக்கும் ஆரோக்கியம்’ எனும் சொலவடையோடு, ஆரோக்கியத்தைத் தாண்டி, மரம், ஓலை, மரப்பட்டை, வேர், குருத்து, பாலை, பூக்கள், பன்னாடை, கிழங்கு என ஒவ்வொரு பாகத்திலும் பல்வேறு நன்மைகளை இது கொண்டுள்ளது. ஏறத்தாழ 801 பயன்பாடுகளுடன், உலகில் இவ்வளவு பயன்பாடுகளைக் கொண்ட ஒரே மரம் பனைமரம் என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே தொன்மையான இந்த பனை மரத்தை தமிழக அரசின் மரமாக நாம் கொண்டாடுகிறோம்.

கேட்டதையெல்லாம் தருகின்ற ‘கற்பக விருட்சம்’ எனத் தமிழ் இலக்கியங்கள் பனை மரத்தைக் கொண்டாடுவதுடன், சங்ககால நூல்களான தொல்காப்பியம், சிலப்பதிகாரம், திருக்குறள் போன்றவற்றில் பனையின் சிறப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன. 

தமிழர்களின் வாழ்வோடும், மொழியோடும் நெருங்கியத் தொடர்புடையது பனை மரம் என்பதற்குச் சான்றாக, பனையோலைச் சுவடிகள் மூலமாகவே பல்வேறு இலக்கியங்கள் நமக்கு கிடைக்கப் பெற்றன என்பதை நாம் இங்கு மறுப்பதற்கில்லை. பனை மரத்தின் சிறப்புகளையும் பயன்பாடுகளையும், ‘தாலவிலாசம்’, ‘பனை எழுபது’ ஆகிய இரு பழந்தமிழ் நூல்கள் முழுமையாக எடுத்துக் கூறுகின்றன.

இயற்கையில் தானாய் முளைக்கும் தன்மை கொண்டது பனை என்றாலும், விதை வழியாகவே விதைக்கப்படுகின்றன. வெப்ப மண்டலப் பகுதிகளிலும், மணல் வெளிகளிலும் வளரக்கூடிய பனை, வளர்ந்து முதிர்ச்சியடைய குறைந்தது 15 ஆண்டுகள் எடுக்கும். ஆண் பனை, பெண் பனை என இருவகையாகக் காணப்படும் பனையில், பருவப்பனை எனும் பெண் மரம்தான் காய்க்கும். 

அலகுப் பனை எனும் ஆண் பனை பூத்து, பெண் பனை மரம் காய்க்க உதவுகிறது. குறைந்தது 30-40 மீட்டர் உயரம் வரை வளரும் பனையின் உச்சியில் விசிறி அமைப்பில் உள்ள இலைகளுக்கிடையே பூக்களும், இளம் பனம் பழமும் கொத்துக் கொத்தாக காய்க்கின்றன. காய்ப்புக்கு வந்தபின், 150 ஆண்டுகள் தொடர்ந்து பலனளிக்கும் என்பது இதன் கூடுதல் சிறப்பு.

மண் அரிப்பைத் தடுத்து, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த உதவும் மரங்களுள் பனை முதன்மையானது என்பதால்தான் குளங்களைச் சுற்றிலும் பனை மரங்களை நமது முன்னோர்கள் வளர்த்தார்கள் என்பதையும் நம்மால் உணரமுடிகிறது. 

நமது இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் இந்தப் பனை மரங்கள் பரவிக் காணப்பட்டாலும், பெருவாரியான மரங்கள் தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில்தான் அதிகம் காணப்படுகிறது. தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சேலம், சென்னை, செங்கற்பட்டு, சிவகங்கை மாவட்டங்களில் பனை மரங்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன.

இந்தியா தவிர இலங்கை, இந்தோனேசியா, தாய்லாந்து, சீனா, வியட்நாம், பாகிஸ்தான், மொரீசியஸ் போன்ற ஆசிய நாடுகளிலும், காங்கோ உள்ளிட்ட மேற்கு ஆப்பிரிக்க நாடுகளிலும் பனை அதிகமாக விளைவிக்கப்படுகிறது. வங்கதேசத்தில், கருப்பு நிறத்தில் அல்லாமல் சிவப்பு நிறத்தில் பனங்காய்கள் காணப்படுகின்றன. இலங்கையில் பனை மரத்தை வெட்டுவது தண்டனைக்குரிய குற்றமாய் கருதப்படுகிறது.

மக்கள் தொகை அதிகரிப்பு, விவசாய நில ஆக்கிரமிப்பு, பனை குறித்த போதிய விழிப்புணர்வு இன்மை போன்றவை பனையின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்துவிட்டது என்பதே வேதனையான உண்மை.‘பனை விதைச்சவன் பாத்துட்டு சாவான்...’ என்ற சொலவடையின் அர்த்தமே, ‘பனையை விதைப்பவன் அதனுடைய நற்பலனால் தன்னுடைய சந்ததியர் வளமாக வாழ்வதை பார்த்துவிட்டு சாவான்’ என்பதாகும்!பனை உயர நாடு உயரும்..!ஆதலினால்...பனை மரம் காப்போம்... நலமனைத்தும் பெறுவோம்..!!

வாசகர் பகுதி

இன்வெர்ட்டர் பராமரிப்பு!

* இன்வெர்ட்டரையும், அதன் பேட்டரியையும் சரியான முறையில் பராமரித்தால் மட்டுமே இன்வெர்ட்டரின் ஆயுள் நீடிப்பதோடு, அது
சிறப்பாகவும் இயங்கும்.

* இன்வெர்ட்டர் பேட்டரி வைக்கும் இடத்தில் போதுமான காற்றோட்டம் இருக்க வேண்டும். சூரிய ஒளி படும் இடத்திலோ, சமையலரை வெப்பமான இடத்திலோ இருக்கக் கூடாது. பேட்டரி இயங்கும் போது வெப்பம் அதிகரிக்கும் நிலையில் நேரடியாக வெப்பம் படும் இடத்தில் இருந்தால் அதிகப்படியான நீர் ஆவியாகும்.

* இன்வெர்ட்டர் பேட்டரியை வீட்டில் இருக்கும் மற்ற பொருட்கள் போன்று சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இன்வெட்டர் பேட்டரியின் டெர்மினல்களை பேக்கிங் சோடா கலந்து நீரில் சுத்தம் செய்யலாம். அப்போதுதான் பேட்டரி முழுத்திறனுடன் சார்ஜ் ஆகி மின்வெட்டு நேரத்தில் கை கொடுக்கும்.

* மின்வெட்டு ஏற்படாத காலங்களில் பயன்படுத்தாத போது பேட்டரியை டிஸ் சார்ஜ் செய்து விடலாம். மின்வெட்டு ஏற்படும் போது அது நமக்கு நீண்ட நேரம் மின் வசதியை வழங்க முடியாது. அதனால் இன்வெர்ட்டரை மாதம் ஒரு முறையாவது பயன்படுத்தி பேட்டரியை மீண்டும் சார்ஜ் செய்து வைக்க வேண்டும்.

*பேட்டரியின் ஒவ்வொரு களத்தில் உள்ள நீரின் அளவை சரிபார்த்து தேவைப்படும் நேரத்தில் டிஸ்டில்டு வாட்டர் ஊற்றி வைக்கவும்.

*லாரியில் உள்ள பேட்டரி இருக்கும் பெட்டியில் ‘தினமும் என்னை பார்’ என்ற வாசகம் இருக்கும். நாள்தோறும் பேட்டரியை தவறாமல் பராமரித்தல் என்பதே இதன் அர்த்தம். வீட்டில் இயங்கும் பேட்டரிக்கும் இது பொருந்தும்.

- எஸ்.மாரிமுத்து, சென்னை.