நேற்று தம்பி நாளை அண்ணன்





‘சகுனி’யில் தம்பி கார்த்தியுடன் ஜோடி சேர்ந்த மகிழ்ச்சியில் இருந்த ப்ரணிதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன். ‘நீதானே என் பொன் வசந்தம்’, ‘யோஹன்: அத்தியாயம் ஒன்று’க்கு பிறகு அவர் இயக்கும் ‘துப்பறியும் ஆனந்த்’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ப்ரணிதாவை நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறார்.

தன்னுடைய சினிமா வாழ்க்கையில் இந்தப் படத்தை முக்கிய படமாக கருதும் ப்ரணிதா, இயக்குநரின் கட்டளைக்கு முன்பே தனக்கு வரும் இரண்டாம் நிலை ஹீரோ படங்களை இடது கையால் தள்ளி விடுகிறார். சம்பளத்தை மீட்டருக்கு மேல் தருகிறோம் என்று தயாரிப்பு தரப்பு துருப்பு சீட்டு இறக்கினாலும் கண்டிப்பாக நோ சொல்லிவிடுகிறார்.



முன்னணி நடிகை அந்தஸ்து தனக்கு கிடைத்திருப்பதாக எண்ணிக் கொள்ளும் ப்ரணிதா, இப்போது சூர்யா நடித்த படங்களையும், கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய படங்களையும் ஒன்று விடாமல் பார்க்கத் தொடங்கியுள்ளாராம். பிழைக்கத் தெரிந்த ப்ரணிதா!
- எஸ்

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘மாற்றான்’ படத்துக்கு தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்தக் கூட்டணியின் முந்தையப் படமான ‘அயன்’ பம்பர் ஹிட் அடித்திருப்பதால், விநியோகஸ்தர்கள் கேள்வி கேட்காமல் இப்படத்துக்கு முதலீடு செய்ய தயாராக இருக்கிறார்கள். இந்நிலையில் ப்ரியாமணி, இரட்டை வேடங்களில் நடித்து வரும் ‘சாருலதா’வின் கதையும், ‘மாற்றானி’ன் ஒன்லைனும் கிட்டத்தட்ட ஒன்றுதான் என ஏதோவொரு புண்ணியவான் கொளுத்தி விட்டுப் போக, இப்போது அந்த விஷயம் தீயாக பற்றி எரிந்து வருகிறது. ‘மாற்றானி’ல் இரண்டு சூர்யாக்கள். இருவருமே ஒட்டிப் பிறந்தவர்கள். ‘சாருலதா’வில் இரண்டு ப்ரியாமணிகள். இருவருமே ஒட்டிப் பிறந்தவர்கள் என கோலிவுட் முழுக்க பேச்சாக இருக்கிறது. படம் பார்க்காமல் இப்படி வதந்திகளை பரப்புவது எந்த விதத்தில் நியாயம்?