சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சூரியனும் சந்திரனும் தரும் யோகங்கள்



கிரகங்கள் தரும் யோகங்கள்

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

ஓவியம்: மணியம் செல்வன்

நீங்கள் சிம்ம லக்னத்தில் பிறந்தவரா? உங்களின் வாழ்வை மேம்படுத்தவே இந்தப் பகுதி!

பிதுர்க்காரகனும் ஆத்மகாரகனுமான சூரியன், மாதுர்காரகனான சந்திரனோடு சேரும்போது, ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு அமைதி உண்டாகும். ஒளிரும் கிரகங்கள் ஒன்று சேரும்போது ஒன்றுக்குள் ஒன்று மோதிக்கொள்வதும், மோதல் முடிந்து ஒன்றுக்குள் ஒன்று ஐக்கியமாகி விடுவதும் இயல்பு. இந்த சேர்க்கையுள்ளவர்களின் இறுதிக் காலம், பற்றற்ற வாழ்வை நோக்கியதாக இருக்கும். வாழ்க்கை முழுக்க பணத்திற்குப் பின்னால் ஓடி ஓடித் தேடிச் சேர்த்தபின், ‘அச்சடிக்கப்பட்ட காகிதங்களுக்கு அடிமையாகி விட்டோமே’ என்ற ஆதங்கம் தொக்கி நிற்கும்.



இவர்களின் பிரச்னையே, மனம் ஒத்துழைக்கும்போது உடல் ஒத்துழைக்காமல் போவதுதான்! நாலாவிதத்திலும் யோசனைகள் பொங்குவதால்,  எதைச் செய்யலாம் என்பதில் தடுமாற்றம் எழத்தான் செய்யும். சில நேரங்களில் அதிகம் பேசத் தோன்றும்; பல நேரங்களில் வெட்டிப் பேச்சு எதற்கென்று மௌனித்துக் கிடக்கத் தோன்றும்.  இவர்களுக்குள் ‘அறிவியலா, ஆன்மிகமா’ என்கிற பட்டிமன்றம் நடந்து கொண்டே இருக்கும்.

‘எல்லாமே என் தலையெழுத்து’ என்று தட்டிக் கழிக்காமல், தலையெழுத்தை மாற்றுவதற்கு இவர்கள் முயற்சிப்பார்கள். இந்த சேர்க்கையிலுள்ளவர்கள் மாந்த்ரீகம், மருத்துவம்,  வர்மக் கலை, ஜோதிடம் மற்றும் அரசியல் துறையில் பிரகாசிப்பார்கள். பெற்றோரின் அரவணைப்பு இவர்கள் எதிர்பார்க்கும் நேரத்தில் கிடைக்காமல் போகும். சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஜாதகத்தில் எந்தெந்த இடங்களில் சூரியனும் சந்திரனும் இணைந்து அமர்ந்திருந்தால் என்னென்ன யோகங்கள் கிடைக்கும் என்பதை இனி பார்க்கலாம்...

சிம்மத்தில் சந்திரனும் சூரியனும் சேரும்போது சூரியனின் ஆதிக்கமே மேலோங்கியிருக்கும். லக்னாதிபதியான சூரியனோடு பகைவனான சந்திரன் இங்கு சேர்ந்திருக்கிறார். இவர்களின் எண்ணமும் சிந்தனையும் உயர்ந்த அளவில்தான் இருக்கும். ஆனால், மனம் ஆசைப்படுவதை உடலின் ஒத்துழைப்போடு செயலாக்கும் விஷயத்தில் தோல்வி காண்பார்கள். சிலர் வெறுமனே உழைத்துக் கொண்டிருப்பார்களே தவிர, எல்லோரையும் கவரும்படியான வேலையாக அது இருக்காது. ‘‘இவ்ளோ தூரம் வேலை செய்யறோம். எதுக்கும் பிரயோஜனமில்லாம போகுது’’ என்று புலம்பும்படி ஆகும். 

இரண்டாம் இடமான கன்னி ராசியில் சூரியனும் சந்திரனும் இணைந்தால் மற்றவர்களுடன் பேசும்போது ஜாக்கிரதையாக வார்த்தைகளை விடவேண்டும். அதேபோல கண்களில் சிறு பிரச்னை தெரிந்தாலும் உடனே மருத்துவர்களை அணுக வேண்டும். திடீரென்று பண வரவும், சட்டென்று செலவுமாக ஏற்ற இறக்கம் இருக்கும். தேவையற்றவருக்கு தேவையில்லாத நேரத்தில் உதவிகள் செய்வார்கள். பேச்சில் கோபம் தெறித்தபடி இருக்கும். எல்லோருக்கும் நல்லவராக நடந்துகொள்ள முயற்சிப்பார்கள்.

இவர்களுக்கு திடீரென்று சொத்து சேர்க்கை ஏற்படும். மரபார்ந்த கலைகளையும் கல்வியையும் பயில்வார்கள். தான் சார்ந்திருக்கும் இனத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வார்கள். அனைத்து விதமான போக விஷயங்களிலும் ஈடுபடுவார்கள். மூன்றாம் இடமான துலாம் ராசியில் சூரியன் நீசமாகிறார். எனவே சந்திரனின் ஆதிக்கம் ஓங்கும். இருந்தாலும் இந்த சேர்க்கையிலேயே மிகவும் சிறப்பான பலன்களைத் தருவது இந்த இடமே ஆகும்.

முயற்சியைக் கைவிடாமல் உழைத்துக் கொண்டே இருப்பார்கள். கற்றுக் கொள்ளும் ஆர்வம் மிகுதியாக இருக்கும். இளைய சகோதர, சகோதரி வகையில் எப்போதும் நல்ல விஷயங்களே நடக்கும். சிலர் குடும்பத்தோடு சேர்ந்து ஏதேனும் நிறுவனம் நடத்துவார்கள். நல்ல நண்பர்கள் சூழ இருப்பார்கள். காதுகளில் ஏதேனும் பிரச்னை வந்தால் உடனே மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். நான்காம் இடமான விருச்சிக ராசியில் சந்திரன் நீசமாகிறார்; சூரியன் நன்கு வலிமை பெற்று விளங்குகிறார். இவர்கள் அவ்வளவு எளிதில் வீட்டை வாங்க மாட்டார்கள். சொந்த வீடு நகரத்தின் முக்கிய இடத்தில்தான் இருக்க வேண்டுமென்று திட்டமிட்டு வாங்குவார்கள்.

அரசாங்க அலுவலகங்கள், தலைவர்களின் சிலைகள் போன்ற இடங்களின் அருகே வீடு அமையும். இவர்களின் வீடு ஊரின் கிழக்குப் பகுதியில் இருந்தால் அதிர்ஷ்டத்தை அளிக்கும். அவ்வப்போது தாயாருக்கு ஏதேனும் உடம்பு படுத்தியபடி இருக்கும். இவர்கள் வாகனத்தில் கவனமாகச் செல்ல வேண்டும். சொந்த பந்தங்கள் விலகினாலும், இவர்கள் இழுத்துப் பிடித்து உறவு பாராட்டுவார்கள். வாசனைத் திரவியங்களை வாங்கிக் குவிப்பார்கள்.

ஐந்தாம் இடமான தனுசு ராசியில் இவ்விரு கிரகங்களும் இணைவது நல்லதல்ல. ஏனெனில், இரு பகை கிரகங்களும் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்தால், அந்த இடத்தையே பலவீனமாக்குவார்கள். பெண்களாக இருந்தால் கர்ப்பப்பை கோளாறு, அடிக்கடி கருச்சிதைவு என ஏற்படும். குலதெய்வத்தை அவ்வப்போது சென்று தரிசிக்க வேண்டும். வயிற்றில் ஏதேனும் சிறியதாக பிரச்னை தென்பட்டாலும் மருத்துவரைப் பார்ப்பது நல்லது. மூதாதையர்களை தெய்வம் போல வணங்குவார்கள்.

அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையை வியந்தபடி இருப்பார்கள். தாய் மாமன் உறவில் அவ்வப்போது உரசலும் பிரிவுப்போக்கும் இருந்துகொண்டே இருக்கும். ஆனால், மத்திம வயதிற்குப் பிறகு யாரிடமேனும் சென்று மந்திர உபதேசங்கள் பெற்று ஜபித்தபடி இருப்பார்கள். ஆறாம் இடமான மகர ராசியில் சூரியனும், சந்திரனும் மறைவது மிகவும் சிறப்பான அம்சமாகும். மூன்றாம் இடத்திற்கு அடுத்தபடியாக பல நன்மைகளைத் தரக்கூடிய இடமாக இது அமையும். இவர்கள் கடன் என்றாலே காத தூரம் ஓடுபவர்களாக இருப்பார்கள்.

உடம்பை வஜ்ஜிரமாகப் பேணுவார்கள். எதைச் சாப்பிட வேண்டும், எதைச் சாப்பிடக் கூடாது என்று திட்டமிட்டு எடுத்துக் கொள்வார்கள். வெளிநாட்டு வாசம் மிகவும் பிடிக்கும். இவர்களுக்கு எதிரிகளே இல்லை என்று சொல்லி விடலாம். அவ்வளவு தூரம் விட்டுக் கொடுத்து வாழ்வார்கள். பூர்வீக சொத்துக்களை எப்பாடுபட்டாவது காப்பாற்றி வைப்பார்கள். ஏழாம் இடமான கும்ப ராசி களத்திர ஸ்தானம்.

இங்கு சூரியனும் சந்திரனும் மிகப் பெரிய குழப்பத்தை ஏற்படுத்துவார்கள். மிகக் கவனமாக ஜாதகங்களைப் பார்த்து திருமணத்தை நடத்த வேண்டும். இல்லையெனில் திருப்தியற்ற வாழ்க்கையை வாழ்வார்கள். ஏதேனும் ஒரு பிரச்னை இருந்தபடி இருக்கும். அதேசமயம் வக்கிர எண்ணங்களைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், சந்திரனை சூரியனும், சனியினுடைய ஆதிக்கம் மிகுந்துள்ள கும்ப ராசியின் அந்த ஸ்தானமும் குழப்பி வைப்பார்கள். அதனால், எந்தப் பிரச்னை வந்தாலும் அதிலிருந்து மீள்வதற்கு அடிக்கடி அமைதியான கோயில்களுக்குச் சென்று வரவேண்டும். இவர்களில் பெரும்பாலானோருக்கு அந்நிய தேசத்தில் வசிப்பது அதிக நன்மையைத் தரும்.

மீனத்தில் சூரியனும் சந்திரனும் எட்டாம் இடமாக அமர்ந்து மறைவதும் நல்லதற்கல்ல.  திடீர் பயணங்கள் வந்தபடி இருக்கும். பயணங்களிலேயே பாதி வாழ்க்கை போகும். எங்கு சென்றாலும் அலைந்து திரிந்துதான் ஒரு காரியத்தை முடிப்பார்கள். முன்னோர்களின் சொத்துக்கள் கிடைப்பதில் எப்போதும் இழுபறி நிலவும். ஒருவரிடம் கைகட்டி சம்பாதிப்பதை அறவே வெறுப்பார்கள். எல்லாரிடமும் எல்லா விஷயத்தையும் சொல்லிக் கொண்டே இருக்கக் கூடாது.

அதனால் கௌரவக் குறைவான சம்பவங்கள் ஏற்படும். இரவு நேரங்களில் சுயமாக வெகுதூரமெல்லாம் வண்டியை ஓட்டக் கூடாது. மர்ம ஸ்தானங்களில் ஏதேனும் நோய்கள் வந்து நீங்கும். இவர்கள் கடுமையாகப் பேசுவதைக் குறைத்துக் கொண்டால் எல்லோரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். ஒன்பதாம் இடமான மேஷத்தில் சூரியன் உச்சமானாலும், சந்திரனோடு சேர்ந்திருப்பதால் வாழ்க்கையில் இயல்பாகக் கிடைக்கவேண்டிய பாக்கியங்கள் யாவும் தாமதப்பட்டும், தடைபட்டும்தான் கிடைக்கும்.

எப்போதும் தந்தைக்கும் இவர்களுக்கும் ஏதேனும் பிரச்னை வந்தபடி இருக்கும். தந்தையின் தொழிலை ஏற்று நடத்தினாலும் இவர்கள் தந்தையின் வழியில் அல்லாது வேறுவிதமாக தொழிலை நடத்துவார்கள். சிறு சிறு விஷயங்களுக்கெல்லாம் கௌரவம் பார்ப்பார்கள். அடிக்கடி ஞானிகளின் ஜீவசமாதியை நோக்கி ஓடியபடி இருப்பார்கள். நிறைய தர்ம காரியங்களில் ஈடுபாடு காட்டுவார்கள். தோள் பகுதி மற்றும் தொடைகளில் சிறிய பிரச்னை வந்தாலும் உடனே மருத்துவரிடம் காட்டுங்கள்.

தான் எது செய்தாலும் அது தனிச் சிறப்புடன் திகழ வேண்டுமென்பதில் மிகுந்த அக்கறை காட்டுவார்கள். பத்தாம் இடமான ரிஷபத்தில் இவ்விரு கிரகங்கள் அமர்ந்திருப்பதால் அதிகாரமும், ஆளுமைத்தன்மையும் நிறைந்த இடத்தில் வேலை கிடைக்கும். அடிபணிந்து வேலை பார்ப்பதை விட சும்மா இருப்பதே மேல் என்று எண்ணுவார்கள். எலக்ட்ரிகல், கெமிக்கல், பெட்ரோல் பங்க், அமைச்சரின் உதவியாளர், செங்கல் சூளை வைப்பவர், பலசரக்குக் கடை, டாக்டர் என்றெல்லாம் வெவ்வேறு துறைகளில் சாதிப்பார்கள்.

இவர்களில் பெரும்பாலோர் ஆர்க்கிடெக்ட், ஓவியத் துறை போன்றவற்றில் முன்னுக்கு வருவதற்கும் வாய்ப்புண்டு. அரசாங்க வேலைக்குத்தான் பெரும்பாலும் முயற்சிப்பார்கள்.  எவ்வளவு பெரிய தவறையும் மன்னிக்கும் குணம் கொண்டிருப்பார்கள். விவசாயத்தில் சிலர் நிறைய சம்பாதிப்பார்கள். பதினோராம் இடமான மிதுனத்தில் சூரியனும் சந்திரனும் இணைந்தால், மூத்த சகோதரர்கள் அனுசரணையாக இருப்பார்கள். கிடைத்த செல்வத்தை மிகச் சரியான முறையில் சேமித்து வைத்துக் கொள்வார்கள்.

முத்துக்கள் மற்றும் தங்க ஆபரணங்கள் நிறைய வாங்குவார்கள். சங்கீதத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு அருமையான கலைஞராக வருவார்கள். பூமியால் மிகப்பெரிய அளவில் விருத்தி ஏற்படும். அடிக்கடி வெளிநாடுகளுக்குச் சென்று வருவார்கள். ஒன்றுக்கு இரண்டாக வியாபாரம் செய்து தொழிலைப் பெருக்கியபடி இருப்பார்கள். பன்னிரெண்டாம் இடமான கடகத்தில் சூரியனும் சந்திரனும் இருந்தால்  இல்லறத் துறவியாகத்தான் விளங்குவார்கள். எப்போதும் ஏதேனும் ஒரு கஷ்டம் வந்தபடி இருக்கும்.

வருமானம் போதாமல் தவிப்பார்கள். ஆத்மகாரகன் பன்னிரண்டில் இருப்பதால் ஆன்மிகத்தில் மிக மிக ஈடுபாட்டோடு இருப்பார்கள். காடு, மலை என்று எங்கேனும் சஞ்சரித்தபடி இருப்பார்கள்.  தனக்கென்று எதையும் வைத்துக் கொள்ளாமல் தானமாக நிறையக் கொடுத்து விடுவார்கள். சூரியனும் சந்திரனும் ஒன்று சேரும்போது  ஜாதகத்தில் பெருமளவில் நற்பலன்கள் கிட்டாது, ஆனாலும், எதிர்மறைப் பலன்களைக் கட்டுக்குள் நிறுத்தவும், நேர்மறைப் பலன்கள் கிட்டவும் ஆலயங்களுக்குச் செல்வது நிச்சயம் உதவும்.

அப்படிப்பட்ட ஒரு ஆலயமே திருச்சக்திமுற்றம் ஆகும். இத்தலத்தில் லிங்கத் திருமேனியிலுள்ள ஈசனை அம்பாள் தழுவிக் கொண்டிருக்கிறார். இந்தத் தழுவலுக்கு ஈசன் குழைந்தும் காட்சியளிக்கிறார். எனவே, இங்குள்ள ஈசனின் திருப்பெயரே தழுவக் குழைந்த நாதர் என்பதாகும். அம்மனின் திருப்பெயர் பெரியநாயகி. இத்தலம் கும்பகோணத்தை அடுத்த பட்டீஸ்வரத்திற்கு அருகேயுள்ளது.

(கிரகங்கள் சுழலும்...)