பள்ளிகளில் மகிழ்ச்சிக்கென தனி வகுப்புகள்!



இந்தியத் தலைநகரான தில்லியில் ஆயிரத்து ஐந்நூறு பள்ளிகளில் மகிழ்ச்சிக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. கதை சொல்வது, குடும்ப உறுப்பினர்களில் பிடித்தவர்களைப் பற்றி எழுதுவது உள்ளிட்டவையே மாணவர்களுக்கான பயிற்சிகள். மகிழ்ச்சிக்கென எதற்கு வகுப்பு?
மாணவர்களுக்கு தேர்வு, பணியாளர்களுக்கு வேலை, தொழிலதிபர்களுக்கு பிஸினஸ் என மூளையைத் தின்னும் பட்டியலிடப்பட்ட வேலைகள்தான் பிரச்னை. இதிலிருந்து காக்கவே தில்லி கல்வி இயக்குநரகம் அரசு பள்ளிகளில் மகிழ்ச்சி வகுப்புகளைத் தொடங்கி போட்டித்தேர்வு, உச்ச மதிப்பெண்கள் என மாணவர்களை மன அழுத்தத்திலிருந்து விடுவிக்க முயற்சித்து வருகின்றன.

கல்வி மட்டுமல்ல; கார்ப்பரேட் தொழில்துறையினரும் பணியாளர்களின் மனச்சோர்வைக் குறைத்து கிரியேட்டிவிட்டியை அதிகரிக்க மகிழ்ச்சி வகுப்புகளை ஹேப்பி ஹோ (அ) கார்ப்பரேட் குருக்களின் நிறுவனங்களை அழைத்து வந்து நடத்துகிறார்கள். இந்தியாவில் முதல் மாநிலமாக மத்தியப்பிரதேசமே இந்நட வடிக்கைகளுக்கு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறது. பூடான், அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளிலிருந்து ஆலோசகர்களை அழைத்து வந்து மகிழ்ச்சித் துறையைத் தொடங்கி நிகழ்ச்சிகளை வடிவமைத்து வருகிறது.

இதில் விளையாட்டு, நடனம் உள்ளிட்ட கலாசார நிகழ்வுகளைக் கொண்ட ஒருவார கொண்டாட்டமான ஆனந்த் உற்சவ் குறிப்பிடத்தக்கது. ஆந்திராவும் சும்மாவா? மகிழ்ச்சி கமிஷன் தொடங்கி மகிழ்ச்சி அலைகளை மாநிலமெங்கும் பரப்ப திட்டங்களை வகுத்து வருகிறது.  வளர்ச்சியடைந்த நாடுகளான டென்மார்க், ஸ்வீடன், கிரீன்லாந்து உள்ளிட்ட நார்டிக் நாடுகளில் மகிழ்ச்சி பற்றாக்குறைஅளவு 12.3% உள்ளது என கோபன்ஹேகனிலுள்ள மகிழ்ச்சிக் கழகத்தின் ஆகஸ்ட் மாத ஆய்வறிக்கை கூறுகிறது.

நிஜ நண்பர்களைப் பெற முடியாத பலருக்கும் சமூகவலைத்தளங்கள் கருத்தையொத்த நண்பர்களைப் பெறவும் உலகை அறியும் ஜன்னல்களாகவும்
உள்ளன. 2013ம் ஆண்டிலிருந்து ஐ.நா சபை ஆண்டுதோறும் மார்ச் 20ம் தேதியை மகிழ்ச்சி தினமாக அனுசரிக்கிறது.

இவ்வாண்டிற்கான மகிழ்ச்சிப்பட்டியலில் பங்கேற்ற 156 நாடுகளில் ஃபின்லாந்துக்கு முதலிடம். இந்தியாவின் இடம் 133. “வாழ்வின் வழியாகப் பெற வேண்டிய மகிழ்ச்சி, உலகமயம், மிதமிஞ்சிய நுகர்வினால் அடையவேண்டிய லட்சியமாகிவிட்டது வேதனை...” என்கிறார் உளவியலாளரான ஸ்வர்ணிமா பார்கவா.

ரோனி