வருகிறது தானியங்கி கார்கள்!



வாகன ஓட்டுநர்களின் கவனக்குறைவால் உலகில் நடைபெறும் விபத்துகளின் எண்ணிக்கை 12.5 லட்சம்! போர், கொலை நிகழ்வுகளில் இறப்பவர்களின் எண்ணிக்கையை விட இது அதிகம் என்கிறது ‘ஃபோர்ப்ஸ்’ இதழ். விழிப்புணர்வு ஏற்படுத்தி உயிரிழப்பு களைக் குறைக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளை விட இதற்கு தீர்வுகளைத் தேடும் டெக் நிறுவனங்களின் லட்சிய வேகம் அதிகம். அப்படிப்பட்ட ஐடியாக்களில் ஒன்றுதான் தானியங்கி கார்கள்!

கேமராக்கள், சென்சார் மற்றும் ஏஐ (செயற்கை நுண்ணறிவு) மூலமாக தானியங்கி கார்களை இயக்கும் சோதனைகளை மைக்ரோசாஃப்ட், ஆப்பிள், கூகுள், பைடு, உபேர், டொயோட்டோ ஆகிய முன்னணி நிறுவனங்களோடு பல்வேறு சிறு,குறு நிறுவனங்களும் கைகோர்த்து பல்லாண்டுகளாக உழைத்து வருகின்றன. முன்னேயுள்ள கார், சாலையைக் கடக்கும் பாதசாரிகள், சிக்னல் என அனைத்தையும் தானியங்கி கார்களி லுள்ள சென்சார்கள் கண்காணித்து இயங்குவதால் எதிர்காலத்தில் விபத்துகளின் எண்ணிக்கை குறைவது உறுதி. டிஜிட்டல் ட்ரைவர் என்பதால் போக்கு வரத்து விதிகளை உடனே அமுல்படுத்த முடியும் என்பதோடு டாக்சி வாடகையும் குறையும்.

சீன டெக் நிறுவனமான பைடுடன் இணைந்து பிளாக்பெர்ரியும், டொயேட்டா உபேருடன் இணைந்தும், போஸ்ச் டெய்ம்லருடன் இணைந்தும் தானியங்கி வாகனங்களை வணிகமயப்படுத்தும் சோதனைகளை நடத்தி வருகின்றன. ஆதார் கார்டு எப்படி ஒருவரின் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தையும் ஒன்றிணைத்து அரசு ஆவணமாக மாற்றியதோ அப்படி இணையத்துடன் இணைக்கப்பட்டதாகவே நம் அன்றாடப் பணிகள் அனைத்தும் - உணவு, பணி, போக்குவரத்து, பொழுதுபோக்கு - அமையப்போகின்றன. தொழில்நுட்பத்தின் சர்வாதிகாரம் என நாம் புலம்பினாலும் 2030ம் ஆண்டில் உலகெங்கும் 15% தானியங்கி கார்கள் ஓடத் தொடங்கியிருக்கும் என்கிறது ஆலோசனை நிறுவனமான மெக்கின்சி.           

- ச.அன்பரசு