கவிதை வனம்



நிலா கால்பந்து

தேங்கிய நீரில்
தெரியும் நிலவை
உதைத்து
விளையாடுகின்றன
குழந்தைகள்
இலைகளின்
நுனியில் தொங்கியபடி
அதை எட்டிப்
பார்க்கிறது மழை.

- ஜா.பிரவீன்

சுவர்

ஊர் நடுவுல உள்ள
செவுத்தாலதான்
எப்போதும் பிரச்னை
இந்த வளவுமில்லாம
அந்த வளவுமில்லாம இருந்ததால்
சுண்ணாம்பே காணாத அதில்
போன வருஷம்
இந்த வளவுப்
பையன் பேரையும்
அந்த வளவுப்
பொண்ணு பேரையும்
எழுதி ஆர்ட்டின் போட்டு
அம்பு விட்டுட்டாங்க யாரோ
நாலஞ்சு தல உருண்டு
ஊரே எழவுக்காடா ஆச்சு
அந்தப் பஞ்சாயத்துலதான்
அவுங்க ரெண்டு பேரும்
நேர்ல பார்த்துக்கிட்டாங்க
சிரிச்சிக்கிட்டாங்க.

- தோழன் பிரபா