#Metoo



செல்போன் அதிர்ந்ததுமே புரிந்தது. ராதாதான். ‘‘சொல்லும்மா...’’‘‘நீதான்பா சொல்லணும்...’’ குரல் ஒடுங்கியிருந்தது. எதிர்பார்த்ததுதான். தவிப்பை கட்டுப்படுத்த கீழ் உதட்டை கடித்துக் கொண்டிருப்பாள். ரத்தம் பூக்காமல் இருக்க வேண்டும். நிச்சயம் மொட்டை மாடியின் ஓரத்தில் கைப்பிடி சுவரை பிடித்தபடிதான் நின்று கொண்டிருப்பாள். தன் அறையிலிருந்து இப்படி பேச வாய்ப்பில்லை. துவளும் கால்களுக்கு பிடிப்புத் தர எந்தக் காலையாவது அழுத்தமாக ஊன்றியிருப்பாள். மறு கால் குழைந்து நெகிழ்ந்திருக்கும். சுருட்டை முடி பறக்க, தென்னங்கீற்றை ஊடுருவும் அதிகாலை சூரியனை வெறித்துக் கொண்டிருப்பாள்.

செல்போனை ஏந்தி யிருப்பது வலது கையா இடது கையா? அது ஊன்றி நிற்கும் காலைப் பொறுத்தது. ஆனால், கைப்பேசி இல்லாத கை நிச்சயம் இடுப்பை பிடித்துக் கொண்டிருக்கும். வலித்தது. தனக்குள் சுருங்கும் வழக்கம் அனுவுக்கு இல்லை. தப்பு. அனுராதாவை எந்தக் காரணம் கொண்டும் ‘அனு’ என சுருக்கக் கூடாது. குண்டு கண்களை அகலமாக விரித்து நொடியில் எரித்து விடுவாள். தாங்க முடியாது. ‘‘லைன்லதானப்பா இருக்க..?’’ ‘பா?’ ஆமாம். ‘பா’ என்றுதான் அழைக்கிறாள். உடலும் மனமும் ஒருசேர அதிர்ந்தது. இன்னும் எத்தனை நேரம் தாக்குப் பிடிக்க முடியுமென்று தெரியவில்லை.

‘‘என்னிக்கி உன் அழைப்பை கட் பண்ணியிருக்கேன் சொல்லு..?’’ ‘‘க்ருஷ் ப்ளீஸ்...’’ மவுனமாக இருந்தேன். ‘‘என்ன முடிவுபா எடுத்திருக்க..?’’ ‘‘...’’ ‘‘உன்னதாம்பா மலைபோல நம்பியிருக்கேன். என் வாழ்க்கையே உன் முடிவுலதான் இருக்கு...’’ சுலபமாக பாரத்தை இறக்கிவிட்டாள். சுமக்கத்தான் முடியவில்லை.‘‘அனு... அனு...’’ யாரோ அழைக்கும் குரல் மங்கலாகக் கேட்டது. ‘‘க்ருஷ்... அம்மா வர்றாங்க.  அப்புறம் கூப்பிடறேன்...’’ ஒலியும், ஒளியும் மெல்ல மெல்ல அணையும் தருணத்தை செல்ஃபோனில் தரிசித்துக் கொண்டிருந்தேன்.

இதேபோன்ற மொபைல்தான் அவளிடமும் இருக்கிறது. ராயப்பேட்டை அஜந்தா ஹோட்டலுக்கு எதிரிலிருந்த கடையில் ஒரே நேரத்தில் இருவருமாக வாங்கியது. கிரெடிட் கார்டில் தேய்த்தது நான்தான். ‘‘எதுக்காக எனக்கு இப்ப போன் வாங்கித் தர்ற?’’ கடை வாசலில் புருவத்தை உயர்த்தியபடி கேட்ட ராதாவின் உருவம் இப்போதும் நினைவில் இருக்கிறது. ‘‘நல்ல ஆஃபர்... சான்ஸை மிஸ் பண்ண விரும்பலை...’’ ‘‘எந்த சான்ஸ்?’’ நீல ஜீன்சுக்கு மேல் அணிந்திருந்த ப்ரவுன் ஜிப்பாவின் கைகளை மடித்தபடியே கேட்டாள். கேள்வி புரிந்தது. ‘‘புரியல...’’ என்றேன்.

‘‘என்னை இம்ப்ரஸ் பண்றியா?’’ ‘‘அனு...’’ ‘‘கால் மீ அனுராதா ஆர் ராதா...’’ ‘‘ஓ.கே. தப்பா பேசாத ராதா...’’ ‘‘என்னது... நான் கேட்டது தப்பா?’’ தலையைச் சிலிப்பியபடி சிரித்தாள். கண்களில் சீற்றம் தெறித்தது. காதுடன் ஒட்டி யிருந்த வெள்ளை நிற ஸ்டட் அதிர்ந்தது. ‘‘அப்ப சரியான விடையை நீ சொல்லேன்...’’ ‘‘உன்னோட போன் ரொம்ப பழசா இருக்கு...’’ ‘‘ம்ஹும்...’’ ‘‘டிஸ்ப்ளே சரியா இல்ல...’’ ‘‘ம்ஹும்...’’ ‘‘அதனால வாங்கிக் கொடுத்தேன்...’’ ‘‘நான் கேட்டனா?’’ ‘‘என்ன இப்படி கேள்வி மேல கேள்வி கேட்கற?

ஒரு ஃபிரெண்டுக்கு வாங்கிக் கொடுத்தேன். தட்ஸ் ஆல்...’’ ‘‘ஃபிரெண்ட்?’’ ஜிப்பாவின் காலரைக் கடித்தபடி தன்னை அடக்கினாள். ‘‘அப்ப மதனுக்கு வாங்கிக் கொடுக்க வேண்டியது தானே? அவன் போன் இதைவிட கண்றாவியா இருக்கு...’’ என்று தன் பழைய மொபைலை என் முகத்துக்கு நேராக தூக்கிப்பிடித்தாள். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் நின்று கவனிக்க ஆரம்பித்தார்கள். திருவான்மியூர் செல்லும் பேருந்தின் ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்தவர்கள் எட்டிப் பார்த்தார்கள். ‘‘எல்லாரும் பார்க்கிறாங்க ராதா...’’ ‘‘இதை நான் யூஸ் பண்ணினா ஆபீஸே என்னை கேவலமா பார்க்கும். பரவாயில்லையா?’’

ஒரே அலுவலகம். பக்கத்து பக்கத்து இருக்கை. ஒரே மாதிரி யான செல்போனை, அதுவும் ஒரே நேரத்தில் பயன்படுத்த ஆரம்பித்தால் பேச்சு எழும் என்று பயப்படுகிறாளா? ‘‘ரெண்டு பேரும் தனித்தனியா வாங்கினதா சொல்லலாம்...’’ ‘‘அது மத்தவங்களுக்கான பதில். நான் கேட்டது அதில்லை...’’ பற்களைக் கடித்தாள். விட்டால் சட்டையைப் பிடித்து உலுக்குவாள் போலிருந்தது. ‘‘இப்ப உனக்கு என்ன வேணும்?’’ ‘‘எதுக்காக எனக்கு மொபைல் வாங்கிக் கொடுத்த?’’ ‘‘தப்புத்தான். வேணும்னா பணத்தைக் கொடுத்துடு...’’ ‘‘என்கிட்ட அவ்வளவு பணமில்லனு உனக்குத் தெரியும்...’’

‘‘அதனாலதான் வாங்கிக் கொடுத்தேன்...’’ சட்டென்று வெளிப்பட்ட பதிலை சிரமப்பட்டு மென்று விழுங்கினேன். ‘‘ஏன் பேசாம இருக்க?’’ ‘‘லுக் ராதா... என் மனசுல தப்பான எந்த எண்ணமும் இல்ல. விருப்பம் இருந்தா யூஸ் பண்ணு...’’ ‘‘இல்லைனா?’’ ‘‘தூக்கிப் போடு... அதான் ஏற்கனவே இப்படிச் செய்திருக்கோமே...’’ என்று முகத்தைத் திருப்பிக் கொண்டேன். ‘‘சரியான லூசு... வண்டியை எடு...’’ என்று அதட்டினாள். இருவரின் கண் முன்னாலும் ஒரே காட்சிதான் விரிந்தது. அது கடந்த தீபாவளி அன்று நடந்தது. நோன்பு, சனி, ஞாயிறு என அடுத்தடுத்து விடுமுறை வந்ததால் தீபாவளிக்கு முந்தைய நாள் இடுப்பு ஒடியும் அளவுக்கு வேலை.

ஒருவழியாக அனைத்தையும் முடித்தபோது மணி இரவு பத்து. இருவருக்குமே அகோரப் பசி. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலை ஒட்டியிருந்த சரவணபவனில் டிபன் சாப்பிட்டுவிட்டு புறப்பட்ட போது ஸ்வீட் வாங்கலாம் என்று தோன்றியது. ராதாவுக்குப் பிடித்த மைசூர்பாகு. விரும்பிச் சாப்பிடுவாள். அவளுக்கு மட்டும் பேக் செய்யச் சொன்னால் புரட்டி எடுத்து விடுவாள். எனவே இருவர் வீட்டுக்கும் தனித்தனியாக வாங்கினேன். நல்லவேளை குதர்க்கமாக எதுவும் சொல்லவில்லை. பைக்கை ஸ்டார்ட் செய்தேன். ஒரு பக்கமாக ஏறி அமர்ந்தாள். இரு பக்கம் கால் போட்டு அமர்வது அப்போது அவள் அகராதியிலேயே கிடையாது.

கே.கே.நகரை நோக்கி வண்டியைத் திருப்பினேன்.‘‘எங்க போற?’’ ‘‘உன்னை டிராப் பண்ண...’’ ‘‘வேண்டாம்... மடிப்பாக்கத்துல என்னை இறக்கிடு...’’ ‘‘என்னது..?’’ ‘‘ச்சூ. சொன்னதை செய். கேசவ் எனக்காக காத்திருக்கான்...’’ ‘‘இந்த நேரத்துலயா?’’ ‘‘ஏன் பத்தரைதானே ஆகுது? அவன் கூட பேசிட்டு கிளம்பறேன். அவன் என்னை டிராப் பண்ணிடுவான்...’’ ‘‘வீட்ல தேட மாட்டாங்களா?’’ ‘‘நைட் ஷிப்ட் தொடருதுனு சொல்லிட்டேன்...’’ காரணமில்லாமல் கோபம் வந்தது. அதை பைக்கில் காட்டினேன். ‘‘பார்த்து... பார்த்து... கேசவ் என்னை பார்க்கிறப்ப நான் முழுசா இருக்கணும்...’’ சிரித்தபடி சொன்னாள்.

அவளது சுருட்டை முடி காற்றில் பறந்து முகத்தை மூடியது. ஒதுக்கினேன். போக்குவரத்தைக் கடந்து வேளச்சேரியை அடைந்தபோது வண்டியை நிறுத்தச் சொன்னாள். ‘‘இதுக்கு மேல ஆட்டோல போயிக்கறேன்...’’ சலனமில்லாமல் அவளைப் பார்த்தேன். பிடிவாதமாக பார்வையை எதிர்கொண்டாள். பெருமூச்சுடன் வண்டியின் பாக்சை திறந்து ஸ்வீட் பாக்சை எடுத்தேன். ‘‘இப்ப வேண்டாம்...’’ ‘‘பின்ன?’’ ‘‘நாளைக்கு வீட்ல வந்து கொடு...’’ ‘‘அம்மாவோட வெளில போறேன்...’’ ‘‘எங்க, பொண்ணு பார்க்கவா?’’ சிரிப்பு வந்தது. ‘‘இல்ல.

காஞ்சிபுரம் கோயிலுக்கு...’’ ‘‘சரி, அப்ப நாளை மறுநாள் வீட்டுக்கு வா...’’ ‘‘ஏன் இப்ப இதை வாங்கிட்டு போனா என்ன?’’ ‘‘கேசவ்க்கு பிடிக்காது...’’ பற்றிக்கொண்டு வந்தது. ‘‘அதனாலதான் இங்கயே இறங்கினியா?’’ ‘‘உனக்கு பதில் சொல்லணும்னு அவசியமில்லை...’’ ‘‘ரைட். இப்ப இந்த ஸ்வீட்டை வாங்கிப்பியா மாட்டியா?’’ ‘‘பைத்தியமா உனக்கு? அதான் நாளை மறுநாள் கொடுனு சொல்றேன்ல...’’கோபம் வந்தது. அவளுக்கும், எனக்குமாக வாங்கிய இரு ஸ்வீட் பாக்சையும் வீசி எறிந்தேன். ‘தொப்’ என்று அவைசாக்கடையில் போய் விழுந்தன.

‘‘க்ருஷ்...’’ அவள் அழைக்க அழைக்க திரும்பிப் பார்க்காமல் பைக்கில் பறந்தேன். அந்த நினைவுகளை எப்போது அசை போட்டாலும் மனம் நடுங்கும். அன்றும் அதிர்ந்தது. ‘‘இத்துப்போன ரீலுல ஃப்ளாஷ்பேக் ஓட்டி முட்டிசுட்டியா?’’ செல்போன் பாக்சை தன் ஹேண்ட்பேக்கில் வைத்தபடியே கேட்டாள். கண்ணோரம் அவள் சிரிப்பது அப்பட்டமாகத் தெரிந்தது. ‘‘அதே விஷுவலை நானும் பார்த்து முடிச்சிட்டேன். இப்ப திருப்திதானே?’’ ‘‘ராட்சஸி... இதுக்கு நீ பேசாம நான் கொடுத்ததும் செல்போனை வாங்கியிருக்கலாமே...’’ ‘‘எதுக்கு? அநாவசியமான கற்பனைக்கு வழி வகுக்கவா?’’

‘‘நாக்குக்கு பதிலா சாட்டைதான் இருக்கு... எப்படி விளாசற..?’’ ‘‘சந்தோஷம். காயத்துக்கு மருந்து போட கூப்பிடாத...’’ என்றபடி ஏறி அமர்ந்தாள். ம்ஹும். ஒரு பக்கமாக அல்ல. இரு பக்கமும் கால்களைப் போட்டு என் முதுகைப் பிடித்தபடி அமர்ந்தாள். இப்படி அவள் அமரக் காரணம் ரேகாதான். அனுரேகா. ராதாவின் அக்கா. இருவருக்கும் ஒரு வயதுதான் வித்தியாசம். ஹோம் எக்ஸிபிஷன் நடப்பதாக அறிந்ததை அடுத்து ஒருமுறை நந்தம்பாக்கம் டிரேட் சென்டருக்கு சென்றிருந்தோம். சொந்த வீடு வாங்கும் கனவு பொங்கி வழிந்த நேரம் அது.

கேசவனின் பைக்கில் ராதா அமர, ரேகா என் வண்டியில் ஏறினாள். சொல்லப் போனால் ரேகா முதன் முதலில் என் வண்டியில் ஏறியது அப்போதுதான். ஒரு பக்கமாக அமர்வாள் என்று எதிர்பார்க்க, இரண்டு பக்கமும் கால்களைப் போட்டு அமர்ந்தாள். என்னைவிட ராதாவுக்குத்தான் இதில் வியப்பு அதிகம். ‘‘ரேகா அப்படி உட்காருவான்னு நினைச்சுக்கூடப் பார்க்கல... ஆனா, சந்தோஷமா இருக்கு...’’ என்றபடி மறுநாள் முதல் ராதாவும் என் வண்டியில் அமரும்போது இரு பக்கமும் கால்களைப் போட்டு அமர ஆரம்பித்தாள். சொந்த வீடு வாங்கும் கனவு கடைசியில் எனக்கு குரோம்பேட்டையில்தான் நிறைவேறியது.

கேசவன், மடிப்பாக்கத்தில் வீடு வாங்கினான். ‘‘அதான் நீயும் கேசவனும் வீடு வாங்கிட்டீங்கல்ல... அதுபோதும்...’’ என ராதா கண்ணடித்தாள். இந்த வாக்கியத்தை இடம் சுட்டி எப்படி பொருள் கொள்வது என்று தெரியாமல் எப்போதும்போல் அன்றும் விழித்தேன். சந்தேகத்தை வாய்விட்டு கேட்கவும் முடியாது. வார்த்தைகளால் சுளுக்கெடுத்து விடுவாள். அலுவலகத்துக்கு வந்து தன் நாற்காலியில் அமர்ந்ததும் என்னைப் போலவே பழைய செல்போனில் இருந்த சிம்கார்டை எடுத்து புதிய போனில் செருகினாள். சார்ஜ் ஏற்றினாள். அலுவலகத்தில் இருந்தவர்கள் எங்கள் இருவரின் கைகளிலும் இருந்த கைப்பேசியை மாறிப் மாறிப் பார்த்தார்கள்.

புருவத்தை உயர்த்தினார்கள். நமுட்டுச் சிரிப்பு சிரித்தார்கள். இன்டர்காம் ஒலித்தது. ராதாதான். ‘‘இப்ப சந்தோஷமா? இதுக்குத்தான ஆசைப்பட்ட..? முட்டாள்...’’ என்று குதறியபோதும் புதிய செல்போனைத்தான் அதன் பிறகு பயன்படுத்தினாள். கேசவன் முன்னால் என்ன செய்வாள் என்று ஏனோ மனம் பரபரத்தது. அதற்கான விடையும் மறுநாளே கிடைத்தது. பழைய மகாபலிபுரம் சாலையில் இருக்கும் சாப்ட்வேர் நிறுவனத்தில் கேசவன் பணிபுரிகிறான். பொது நண்பர்கள் மூலமாக பொதுவாக ராதாவுக்குப் பழக்கமாகி அவள் மூலமாக எனக்கு அறிமுகமானவன்.

தன் அக்கா பையனின் பிறந்தநாள் விழாவுக்கு அழைத்திருந்தான். என்னையல்ல. ராதாவை. ஆனால், எனக்கும் அழைப்பு இருப்பதாகச் சொல்லி வலுக்கட்டாயமாகக் கூட்டிச் சென்றாள். இருவரின் கைகளிலும் ஒரே மாதிரியாக இருந்த போனைப் பார்த்த கேசவனின் கண்கள் சுருங்கின.‘‘கேசவ்கிட்ட என்ன சொன்னே?’’ திரும்பும்போது கேட்டேன். ‘‘என்ன விஷயமா?’’ ‘‘செல்போன் விஷயமா...’’‘‘அது கேசவுக்கு நான் சொன்ன பதில். அதை தெரிஞ்சுகிட்டு நீ என்ன பண்ணப் போறே?’’ குண்டுக் கண்களை இன்னும் குண்டாக விரித்தாள்.

இந்த குண்டுக் கண்கள்தான் என்னை ஈர்த்ததா அல்லது எந்த கண்டிஷனர் ஷாம்பூவுக்கும் அடங்காமல் புஸ் என்று எந்நேரமும் பறந்துகொண்டிருக்கும் சுருட்டை முடியா? தெரியவில்லை. ஆனால், ஐந்தரை அடி உயரத்தில் ஜீன்ஸ் அணிந்தால் சணல் கயிற்றால் இறுக்கிக் கட்டிய மூட்டை போன்ற உடல்வாகும், சுடிதார் அணிந்தால் சற்றே தளர்வாகத் தெரியக் கூடிய தோற்றமுமாக முதல் பார்வையிலேயே ராதா முழுவதுமாக வசீகரித்தது உண்மை. டிரெய்னிங் முடித்திருந்த அவளை எனது டீமில்தான் இணைத்தார்கள்.‘‘உங்க டீம் லீடர்... கிருஷ்ணன்...’’ என்று எச்.ஆர். அறிமுகப்படுத்தியபோது தயக்கமின்றி ‘‘ஹலோ க்ருஷ்...’’ என்றாள்.

கிட்டத்தட்ட பன்னிரண்டு வயது மூத்தவன். ‘‘சார்...’’ என்ற அழைப்பைத்தான் எதிர்பார்த்தேன். ஒருவேளை முதல் சந்திப்பிலேயே பெயர் சொல்லிக் கூப்பிட்டதுகூட சிநேகத்தை வளர்த்திருக்கலாம். காரணம் தெரியாதபோதும் நட்பு வளர்ந்தது உண்மை. பேருந்து அல்லது ஷேர் ஆட்டோவில் பிதுங்கி வருபவளைப் பார்க்க பாவமாக இருந்தது. ‘‘டூ வீலர் வாங்கிக்கலாமே?’’ ‘‘இப்போதைக்கு சாத்தியமில்ல...’’ என்றவளை அதன் பிறகு துருவவில்லை.

வீட்டில் சம்பாதிக்கும் ஒரே ஜீவன். அம்மாவுக்கு உடம்பு முடியவில்லை. அக்கா டிகிரி முடித்துவிட்டு வீட்டைப் பார்த்துக் கொள்கிறாள். தம்பி அப்போதுதான் ப்ளஸ் டூ. சம்பளமும் அவ்வளவு ஒன்றும் அதிகமில்லை. எனவே இயல்பாகவே ராதாவுக்கு டிரைவர் ஆனேன். அலுவலகத்தில் மற்ற ஆண்களின் பைக்கில் அவள் ஏறிப் பார்த்ததில்லை. நான் அல்லது கேசவன். இருவரைத் தவிர வேறு சாரதி அவளுக்கில்லை. எங்கு போவதென்றாலும் பெரும்பாலும் என்னைத்தான் அழைப்பாள்.
அப்படித்தான் ஒரு ஞாயிற்றுக்கிழமை செல்லில் கூப்பிட்டாள்.  

(அடுத்த இதழில் முடியும்)

60 வயது சமந்தா!

இப்படித்தான் தெலுங்கில் பேச்சு அடிபடுகிறது. கொரியன் படம் ஒன்றை சட்டப்படி பாண்ட் பேப்பரில் கையெழுத்திட்டு தமிழ் - தெலுங்கில் ரீமேக் செய்யப் போவதாகவும், மணிரத்னத்தின் சீடர் நந்தினி ரெட்டி அதை இயக்கப் போவதாகவும், இப்படத்தில் சமந்தா 60 வயதுப் பெண்மணியாக (பாட்டி?!) நடிக்கப் போவதாகவும் சொல்கிறார்கள்.

ஃபேன்டசி கீர்த்தி!

அட்றாசக்க! ஏழு கடல் ஏழு மலை தாண்டி கூண்டுக்குள் இருக்கும் கிளியின் உடம்பில் மந்திரவாதியின் உயிர் இருப்பதான கதைகளை எல்லாம் சிறுவயதில் படித்திருப்போம் இல்லையா..? இந்த லைனில் தயாராகும் படம் ஒன்றில் கீர்த்தி சுரேஷ் ராஜகுமாரியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்!

யெஸ்...

அப்பாடா! நாட்டில் பெரிய பிரச்னை ஒன்று தீர்ந்திருக்கிறது. இந்தி நடிகர் ரன்பீர் கபூரும் நடிகை ஆலியா பட்டும் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார்களாம். இதையே லிவிங் டுகெதர் என்றும் சொல்லலாம். இதை சமீபத்தில் டாக் ஷோ ஒன்றில் ஆலியா பட்டே ஒப்புக் கொண்டிருக்கிறார்! ஆக, இனி மாதம் மும்மாரி பொழியும். ஓகேவா?!

அனுஷ்காவின் காதல்!

அனுஷ்காவும் ‘பாகுபலி’ ஹீரோ பிரபாஸும் காதலிக்கிறார்கள்... ஆனால், பிரபாஸின் பெரியப்பாவும் தெலுங்கு நடிகருமான கிருஷ்ணம் ராஜு இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை என்பது ஓல்ட் நியூஸ். லேட்டஸ்ட் தகவல் பிரபாஸின் பிறந்தநாள் அன்று அவருக்கு டிசைனர் வாட்ச் ஒன்றை அனுஷ்கா பரிசளித்திருக்கிறார் என்பது. இச்சம்பவம் நடந்தது கிருஷ்ணம் ராஜு தயாரிக்கும் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் என்பது ஹைலைட்!

- கே.என்.சிவராமன்