டென்ஷனில் டீ!
வேலைப் பளுவால் ஏற்படும் டென்ஷனை குறைக்க பலருக்கும் முதல் சாய்ஸ் ஒரு கப் டீதான். ஆனால், அந்த டீயே டென்ஷனை உண்டாக்கினால் என்ன செய்வது?
 சமீபமாக தேயிலை உற்பத்தி குறித்து வரும் தகவல்கள் இப்படி டென்ஷனை உண்டாக்கும் ரகங்களே. இதில் முதலாவதாக கடந்த 2024ம் ஆண்டு இந்தியாவின் தேயிலை உற்பத்தி 7.8 சதவீதம் குறைந்துவிட்டதால் சராசரி விலை உயர்ந்திருப்பதாகச் சொல்கிறது ஒரு தகவல்.
இதனால், கென்யாவிலிருந்து தேயிலை இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாகச் சொல்கிறது மற்றொரு செய்தி. இதற்கிடையே ஒரு கப் டீயின் விலை ஒன்று முதல் 2 ரூபாய் உயரக்கூடும் என்கிறது மூன்றாவது தகவல்.
இப்போதே பல டீக்கடைகளில் ஒரு டீயின் விலை பத்து ரூபாயிலிருந்து 12 ஆக உயர்ந்துவிட்டது. உலக அளவில் இந்தியத் தேயிலை அதன் தரம், வித்தியாசமான தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் பிரபலமான ஒன்றாக இருக்கிறது.
தவிர உலகில் சீனாவிற்கு அடுத்தபடியாக தேயிலை உற்பத்தி செய்யும் நாடு இந்தியா. இதேபோல் உலக அளவில் தேயிலை ஏற்றுமதியில் இலங்கையை பின்னுக்குத் தள்ளி இந்தியா மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. முதலிரண்டு இடங்களில் சீனாவும், கென்யாவும் உள்ளன.
அப்படியாக கடந்த 2024ம் ஆண்டு 254.7 மில்லியன் (25 கோடி) கிலோ தேயிலையை ஏற்றுமதி செய்ததாகச் சொல்கின்றன தகவல்கள். இது 2023ம் ஆண்டு 231.69 மில்லியன் (23 கோடி) கிலோவாக இருந்தது.
இந்த அதிகப்படியான ஏற்றுமதிக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஈராக், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு தேயிலையின் தேவை அதிகமாக இருந்ததே காரணமாகும். இதனால் இந்தியாவிற்கு கடந்த 2024ம் ஆண்டு ஏற்றுமதியின் மூலம் 7 ஆயிரத்து 111 கோடி ரூபாய் வருமானம் கிடைத்தது. இது ஒருபுறம் இருக்க இந்தியாவின் தேயிலை உற்பத்தி கடந்த 2023ம் ஆண்டைவிட 2024ம் ஆண்டு 7.8 சதவீதம் சரிந்துள்ளது.
அதாவது கடந்த 2023ம் ஆண்டு 1393.60 மில்லியன் (சுமார் 139 கோடி) கிலோவாக இருந்த தேயிலை உற்பத்தி 2024ம் ஆண்டு 1284.80 மில்லியன் (128 கோடி) கிலோவாகக் குறைந்துள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை தேயிலை உற்பத்தி செய்யும் மாநிலங்களில் அசாம் முதலிடம் வகிக்கிறது. இதன்பிறகு மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் இருக்கின்றன.
கூடவே கர்நாடகா, திரிபுரா, இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், சிக்கிம், நாகலாந்து, மேகாலயா, மிசோரம், பீகார், ஒரிசா உள்ளிட்ட மாநிலங்களில் ஓரளவு தேயிலை பயிரிடப்படுகின்றது.
இந்நிலையில் நாட்டின் உற்பத்தியில் பாதிக்கும் மேலான பங்கைக் கொண்டுள்ள அசாமில் உற்பத்தி வெகுவாகக் குறைந்துள்ளது. இதற்குக் காரணம் காலநிலை மாற்றம். வெப்ப அலைகளாலும், அறுவடைக் காலத்தில் அதிகப்படியான மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தாலும் தேயிலை உற்பத்தி பாதிக்கப்பட்டதாகக் குறிப்பிடுகின்றனர் உற்பத்தியாளர்கள். இதனால் கடந்த 2023ம் ஆண்டைவிட 2024ம் ஆண்டு உற்பத்தி குறைவு என்கின்றனர் அவர்கள். எனவே, ஒரு கிலோ தேயிலையின் சராசரி விலை கடந்த 2024ம் ஆண்டு 198 ரூபாயாக உயர்ந்ததாகவும் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையேதான் உலக அளவில் தேயிலை உற்பத்தியில் முன்னணியில் உள்ள இந்தியா, இறக்குமதியிலும் முன்னணியாக உருவெடுத்துள்ளதாகச் சொல்கின்றன தகவல்கள். கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் கென்யாவிடம் இருந்து 35 லட்சம் கிலோ தேயிலையை இந்தியா இறக்குமதி செய்தது. இதே 2024ம் ஆண்டு காலகட்டத்தில் இந்தியா 1.3 கோடி கிலோ தேயிலையை கென்யாவிடம் இருந்து இறக்குமதி செய்துள்ளது.
இங்குதான் இன்னொரு விஷயத்தையும் கவலையுடன் பகிர்கின்றனர் தேயிலை ஏற்றுமதியாளர்கள். அதாவது கென்யாவிலிருந்து வரும் மலிவான மற்றும் தரம் குறைந்த தேயிலையை இந்திய தேயிலையுடன் கலப்படம் செய்து, இந்திய பிராண்டின் கீழ் ஏற்றுமதி செய்யப்படுவதாகச் சொல்கின்றனர் அவர்கள்.
கடந்த 2024ம் ஆண்டு தேயிலை உற்பத்தி குறைந்துள்ளதைச் சுட்டிக்காட்டும் அவர்கள், இதே 2024ம் ஆண்டு காலத்தில் தேயிலை ஏற்றுமதி 2023ம் ஆண்டைக் காட்டிலும் அதிகரித்துள்ளதாகக் கூறுகின்றனர். இது கென்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தேயிலையாலேயே நடந்ததாகக் கவலை தெரிவிக்கின்றனர்.
இப்படியாகவே கடந்த 2024ம் ஆண்டு இந்தியாவின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. ஆனால், அதிகப்படியான இறக்குமதியும், அவற்றை இந்தியத் தேயிலை என்கிற பிம்பத்துடன் ஏற்றுமதி செய்வதும் எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும்; இந்தியத் தேயிலையின் மதிப்பைக் குறைக்கும்.
தவிர, இது உண்மையான இந்தியத் தேயிலையை விளம்பரப்படுத்தும் ஏற்றுமதியாளர்களுக்கும், இறக்குமதி செய்யப்பட்ட தேயிலையை இந்தியத் தேயிலையென மறு ஏற்றுமதி செய்பவர்களுக்கும் சமமற்ற போட்டியையும் உருவாக்கியுள்ளது என்கின்றனர் வேதனையுடன்.
ஹரிகுகன்
|