ஃபார்முலா 2 கார் பந்தயத்தில் வென்ற முதல் இந்தியர்!



பொதுவாக கார் பந்தயங்களில் மேற்கத்திய நாட்டவர்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். கார் ரேஸ் சாம்பியன்களின் பெயர்களைத் தேடினால் ஐரோப்பியர்கள் அல்லது அமெரிக்கர்களின் பெயர்கள்தான் வரும். சமீப நாட்களாகத்தான் இந்தியர்களின் பெயர்களும் வெற்றிப் பட்டியலில் இடம் பிடிக்கிறது. 
சில நாட்களுக்கு முன்பு ஃபார்முலா 2 கார் பந்தயத்தில் வெற்றி பெற்று வரலாறு படைத்திருக்கிறார் குஷ் மைனி. ஃபார்முலா 2வில் வெற்றி பெற்ற முதல் இந்தியரும் இவரே. அவருக்கு நாலாப்பக்கமிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
யார் இந்த குஷ் மைனி?

பெங்களூருவைச் சேர்ந்த ஒரு வசதியான ரேஸிங் குடும்பத்தில் பிறந்தவர், குஷ் மைனி. இவருடைய தந்தை கவுதம், தொண்ணூறுகளில் நடந்த நேஷனல் ரேஸிங் சாம்பியன்ஷிப் கார் பந்தயங்களில் கலந்துகொண்டவர். குஷ் மைனியின் அண்ணன் அர்ஜுன் மைனியும் புரபஷனல் ரேஸராக வலம் வருகிறார். இவருடைய மாமாவான சேட்டன் மைனி தான், இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் காரான ‘ரேவா’வை வடிவமைத்தவர்.

அண்ணனும், அப்பாவும் பந்தயங்களில் கார் ஓட்டுவதைப் பார்த்து வளர்ந்த குஷ் மைனிக்கு இயல்பாகவே கார் ஓட்டுவதன் மீது காதல் பிறந்துவிட்டது. ஏழு வயதிலேயே கார்ட் ரேஸிங்கில் கலந்துகொள்ள ஆரம்பித்துவிட்டார். மோட்டார் ஸ்போர்ட்ஸில் சாதிக்க விரும்புபவர்கள் பயிற்சியை ஏழு வயதிலிருந்தே தொடங்க வேண்டும் என்று சொல்வார்கள். குஷ் மைனியின் கார் பந்தயங்களுக்கு அவரது குடும்பம் முழு ஆதரவையும் தந்தது அவருக்குப் பக்க பலமாக இருந்தது.

‘‘என்னுடைய சிறு வயதில் இந்தியன் நேஷனல் சிங்கிள் சீட்டர் சாம்பியன்ஷிப் போட்டியில் அப்பா கார் ஓட்டுவதை நேரில் பார்ப்பேன். கார்களுக்கு நடுவில்தான் எனது குழந்தைப்பருவம் இருந்தது. கார்களுடனேயே வளர்ந்ததால் ரேஸர் ஆக வேண்டும் என்ற விருப்பம் இயல்பாகவே எனக்குள் வந்துவிட்டது...’’ என்கிற குஷ் மைனி, பத்து வயது வரைக்குமே ரேஸிங் என்பதை ஒரு வேடிக்கையான விளையாட்டாகத்தான் நினைத்திருக்கிறார்.

பிறகுதான் அது உயிரைப் பணயம் வைத்து விளையாடும் ஒரு சாகசம் என்பது அவருக்குத் தெரிய வந்திருக்கிறது. கடந்த 2011ல் இந்தியன் நேஷனல் கார்ட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில் கலந்துகொண்டு 6 சுற்றுகளிலும் வெற்றிபெற்றார். 

அப்போது குஷ் மைனியின் வயது 11. அடுத்த வருடம் ஜூனியர் அளவில் நடந்த கார்ட் ரேஸிங்கில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். அதற்குப் பிறகு ஐரோப்பியன் கார்ட்டிங் சர்க்கியூட்டில் தனது திறமையை நிருபிக்க, குஷ் மைனியின் புகழ் மேற்கத்திய உலகிலும் பரவத் தொடங்கியது.

அந்த நாட்களில் இந்தியாவை விட, ஐரோப்பாவில்தான் குஷ் மைனியின் பெயர் பிரபலம். 2014ம் வருடம் நடந்த வேர்ல்டு கார்ட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டு, நான்காம் இடத்தைப் பிடித்தார். இளம் இந்திய கார் பந்தய வீரர் ஒருவர் வேர்ல்டு கார்ட்டிங் சாம்பியன்ஷிப்பில் நான்காம் இடத்தைப் பிடித்தது இதுவே முதல்முறை. 2015ம் வருடம் குஷ் மைனிக்கு சிறப்பாக அமைந்தது. 

‘ட்ரோபியோ ஆண்ட்ரியா மார்கட்டி’ போட்டியில் முதல் இடம், ‘கோல்டன் கப்’பில் இரண்டாம் இடம், ‘சாம்பியன்ஸ் கிளப்’பில் நான்காம் இடம், ‘ஐரோப்பியன் சாம்பியன்ஷிப்’பில் ஒன்பதாவது இடம் என்று கார் பந்தய உலகில் தனக்கான ஓர் இடத்தை 15 வயதிலேயே பிடித்துவிட்டார் குஷ் மைனி.

பதினாறு வயதிலேயே ‘இத்தாலியன் ஃபார்முலா 4 சாம்பியன்ஷிப்’ போட்டியில் ‘பிவிஎம் ரேஸிங்’ அணியின் சார்பாக கலந்துகொண்டார் குஷ். 2016ல் நடந்த ஆறு பந்தயங்களிலேயே புள்ளிகளைப் பெற ஆரம்பித்து விட்டார். 

‘வல்லேலுங்கா சர்க்கியூட்’டில் நடந்த போட்டியில் மூன்றாம் இடத்தைப் பிடித்தார். அடுத்து 2017ல் ‘ஜென்சர் மோட்டார்ஸ்போர்ட்’ அணியில் இணைந்து, மீண்டும் ‘இத்தாலியன் ஃபார்முலா 4’ பந்தயங்களிலே போட்டியிட்டார். இந்த வருடத்தில் நிறைய போட்டிகளில் வெற்றிபெற்று, எட்டாவது இடத்தைப் பிடித்தார்.

2018ல் ‘லனான் ரேஸிங்’ அணியுடன் இணைந்து, ‘பிரிட்டிஷ் ஃபார்முலா 3 சாம்பியன்ஷிப்’பில் பங்கேற்றார். இந்த ஃபார்முலா 3 போட்டிகள் குஷ் மைனிக்கு சவலாக இருந்தன.
2018ல் நடந்த போட்டிகளில் 300க்கும் மேலான புள்ளிகளைக் கைப்பற்றி, மூன்றாம் இடத்தைப் பிடித்தார் குஷ். இதற்குப் பிறகு, 2019ல் ‘ஃபார்முலா ரெனால்ட் யூரோ’ கோப்பைக்காக களமிறங்கினார். 102 புள்ளிகளுடன் 6ம் இடத்தைப் பிடித்தார்.

கொரோனா வந்தது. குஷ் மைனியின் திட்டங்கள் திசை திரும்பின. ஆம்; மீண்டும் பிரிட்டிஷ் ஃபார்முலா 3 பந்தயங்களில் களமிறங்கினார். இந்தமுறை ‘ஹெடெக் கிராண்ட் பிரிக்ஸ்’ அணியுடன் இணைந்து போட்டியிட்டார். 

மூன்று போட்டிகளில் வென்று, இரண்டாம் இடத்தை தன்வசமாக்கினார். அடுத்து, 2021ம் வருடம் ‘மும்பை ஃபால்கன்ஸ்’ அணியின் சார்பாக, ‘ஃபார்முலா 3 ஆசியன் சாம்பியன்ஷிப்’ போட்டியில் பங்கேற்றார். ஆரம்பத்தில் அவருக்கு வெற்றி பெறுவது கடினமாக இருந்தது. கடைசி 9 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு, 7 புள்ளிகளைப் பெற்றார்.

2022ல் ‘எஃப்ஐஏ ஃபார்முலா 3 சாம்பியன்ஷிப்’  போட்டியில் பங்கேற்றார். இதில் 31 புள்ளிகளுடன், 14-வது இடத்தைத்தான் அவரால் பிடிக்க முடிந்தது. 2023ம் வருடத்திலிருந்தே ‘ஃபார்முலா 2’ பந்தயங்களில் களமிறங்க ஆரம்பித்துவிட்டார், குஷ். ஆனால், அந்த வருடத்தில் அவரால் பெரிதாக சாதிக்க முடியவில்லை. 

பல போட்டிகளில் கலந்துகொண்டாலும், 62 புள்ளிகளுடன் 11வது இடத்தைத்தான் பிடித்தார். 2024ம் வருடம் ‘இன்விக்டா ரேஸிங்’ அணியின் சார்பாக ஃபார்முலா 2 கார் பந்தயங்களில் கலந்துகொண்டார். இதில் ஸ்பிரின்ட் பிரிவில் 13வது இடத்தைப் பிடித்தார். 2025ம் வருடத்தில் ‘டாம்ஸ்’ அணியுடன் இணைந்து ஃபார்முலா 2 கார் பந்தயங்களில் கலந்துகொண்டார்.

சமீபத்தில் மொனாக்கோவில் நடந்த ஃபார்முலா 2 கார் பந்தயத்தின் ஸ்பிரின்ட் பிரிவில் போட்டியிட்டு, சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார். இதன் மூலம் ஃபார்முலா 2 வில் வெற்றிபெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் தன்வசமாக்கிவிட்டார் குஷ். 

இரண்டு முறை ஃபார்முலா ஒன் கார் பந்தயங்களில் சாம்பியன் பட்டம் வென்ற மிகா ஹக்கினென்தான் குஷ் மைனியின் வழிகாட்டி. இப்போது ஃபார்முலா ஒன்னில் ரிசர்வ் டிரைவராகவும் களமிறங்குகிறார் குஷ். ஃபார்முலா ஒன் பந்தயங்களிலும் குஷ் மைனி சாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது அவரது வயது ஜஸ்ட் 24தான்!

த.சக்திவேல்