ஆசிய தடகள தங்கங்கள்..!



கடந்த வாரம் தென்கொரியா நாட்டின் குமி நகரில் 26வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கோலாகலமாக நடந்து முடிந்தது. ஐந்து நாட்கள் நடந்த இந்தப்  போட்டியில் இந்தியா 8 தங்கம், 10 வெள்ளி, 6 வெண்கலப் பதக்கங்களுடன் இரண்டாவது இடம் பிடித்தது. இதில் 5 ஆயிரம் மற்றும் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்தார் குல்வீர் சிங். இதேபோல 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் எனும் பலதடை ஓட்டத்தில் அவினாஷ் சேபிள் தங்கம் வென்று அசத்தினார்.

பெண்கள் பிரிவில் நூறு மீட்டர் தடைஓட்டத்தில் ஜோதி யார்ராஜியும், உயரம் தாண்டுதலில் பூஜா சிங்கும், ஹெப்டத்லான் போட்டியில் நந்தினி அகசராவும், 4X400 மீட்டர் பெண்கள் தொடர் ஓட்டத்திலும் தங்கம் கைப்பற்றி மகுடம் சூட்டினர். இத்துடன் 4X400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்திலும் தங்கம் வென்று கவனம் ஈர்த்தனர். இதில் தங்கம் வென்று தனித்துவமாய் திகழும் சிலரின் கிராஃப் இது.  

*குல்வீர் சிங்

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்திலுள்ள சிர்சா என்ற கிராமத்தில் எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் குல்வீர் சிங். கடந்த 2022ல் சீனாவின் ஹாங்சோவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 10 ஆயிரம் மீட்டரில் வெண்கலம் வென்று கவனம் ஈர்த்தவர் இவர்.பின்னர் 2023ல் பாங்காக்கில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 5 ஆயிரம் மீட்டரிலும் வெண்கலம் வென்றார். 

இதுமட்டுமல்ல அவரின் சாதனை. 10 ஆயிரம், 5 ஆயிரம், 3 ஆயிரம் மீட்டர் ஓட்டங்களில் தேசிய சாதனையையும் தன்வசம் வைத்துள்ளார். ஆரம்பத்தில் சிர்சா கிராமத்தில் எல்லோரையும்போல்தான் ராணுவத்தில் சேர்வதற்காக குல்வீர் சிங்கும் ஓடினார். அப்போது விளையாட்டுப் போட்டிகள் பற்றிய விவரங்கள் எதுவுமே அவருக்கு தெரியாது. இந்நிலையில் 2018ம் ஆண்டு ராணுவத்தில் சிப்பாயாக சேர்ந்தார் குல்வீர்.

லடாக்கிலும், அருணாச்சலப் பிரதேசத்தின் சீன எல்லையிலும் பணி செய்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ராணுவத்தில் நடக்கும் இன்டர் யூனிட் கிராஸ் கன்ட்ரி ரேஸ் போட்டிகளைப் பார்த்து ஆர்வமானார். இதில் சிறப்பாக விளையாடினால் பல்வேறு ஊக்கத்தொகைகளும், பதவி உயர்வுகளும் கிடைக்கும் என்பதால் இன்னும் ஆர்வத்துடன் தயாரானார்.

2021ம் ஆண்டு இந்தப் போட்டியில் 10 கிமீ தொலைவை 30 நிமிடம் 58 வினாடிகளில் கடந்தார். போதுமான அனுபவம் இல்லாத ஒருவர் இன்டர் யூனிட் கிராஸ் கன்ட்ரி ரேஸில் வெற்றிபெற்றது பயிற்சியாளர் யூனஸ் கானை கவனிக்க வைத்தது.

அப்படியாக புனேவில் உள்ள ராணுவ விளையாட்டு நிறுவனத்திற்குள் நுழைந்தார் குல்வீர் சிங்.பின்னர் தேசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றார். இதனால், அவர் நினைத்தது போலவே ஹவில்தாராக பதவி உயர்வு பெற்றார். 

தொடர்ந்து ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்றதன் மூலம் நைப் சுபேதார் பதவி உயர்வு வந்து சேர்ந்தது. 

தற்போது தங்கம் வென்றுள்ள குல்வீர் சிங் வரும் செப்டம்பரில் ஜப்பானில் நடக்கவுள்ள உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்காக காத்திருக்கிறார். இருந்தும் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே அவரின் கனவு.

*பூஜா சிங்

இந்த ஆசிய சாம்பியன்ஷிப்பில் 1.89 மீட்டர் உயரம் தாண்டி தங்கம் வென்று அசத்தியுள்ளார் பூஜா சிங். 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் பிரிவில் இந்தியாவிற்குத் தங்கம் கிடைத்துள்ளது.
அதுமட்டுமல்ல. கடந்த 2000ம் ஆண்டு பாபி அலோசியஸிற்குப் பிறகு இந்தப் பிரிவில் தங்கம் வெல்லும் இரண்டாவது இந்தியர் பூஜா என்பது குறிப்பிடத்தக்கது. பதினெட்டு வயதில் இந்தச் சாதனையைப் படைத்திருக்கும் பூஜாவிற்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.  

ஹரியானாவின் ஃபதேஹாபாத் மாவட்டத்திலுள்ள போஸ்டி கிராமத்தில் 2007ம் ஆண்டு பிறந்தவர் பூஜா. இவரின் தந்தை ஹன்ஸ்ராஜ் ஒரு கட்டுமானத் தொழிலாளி.
பூஜாவைப் பற்றி அவர் எந்தக் கனவும் கொண்டிருக்கவில்லை. 

கிராமத்தில் நடந்த ஒரு யோகா நிகழ்வைப் பார்த்து பூஜாவுக்கு யோகா படிக்க ஆசை வந்துள்ளது. அப்படியாக ஹன்ஸ்ராஜ் அருகிலுள்ள பார்தா கிராமத்தில் பயிற்சியாளர் பல்வான் சிங்கிடம் சேர்த்துவிட்டு யோகாவுடன் மற்ற விளையாட்டுகளும் கற்றுத் தரும்படி கேட்டுக் கொண்டுள்ளார். அப்போது பூஜாவிற்குப் பத்து வயது.

பார்தா விளையாட்டு அகடமி அங்கே புகழ்பெற்ற ஒன்று. பார்தா அரசுப் பள்ளியின் வளாகத்திலிருந்து இந்த அகடமி செயல்பட்டு வருகிறது. முன்னாள் 800 மீட்டர் தடகள வீரரான பல்வான் சிங் தேசிய அளவில் தடகளத்திலும், யோகாவிலும், மாநில அளவு பெண்கள் கிரிக்கெட்டிலும் வீரர் - வீராங்கனைகளை உருவாக்கியவர். 

ஆரம்பத்தில் யோகா மட்டுமே கற்றுக்கொண்ட பூஜாவிடம் இன்னும் பல திறமைகள் இருப்பதை உணர்ந்தார் பல்வான் சிங். இந்நிலையில் அவர் உயரம் தாண்டுதலில் பூஜாவைத் தாண்ட வைத்து சோதித்துள்ளார். அதில் பூஜா பாஸாக அங்கிருந்து உயரம் தாண்டுதலில் பயிற்சியளிக்க ஆரம்பித்துள்ளார்.

பிறகு தாலுகா அளவிலும், மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் வெற்றியை தன்வசப்படுத்த ஆரம்பித்தார் பூஜா. அண்டர் 14 பிரிவில் தங்கம் வென்று அசத்தினார். 2022ம் ஆண்டு நடந்த தேசிய ஜூனியர் போட்டியில் தங்கம் வென்று அசத்தியதுடன் 1.76 மீட்டர் தாண்டி புதிய தேசிய சாதனையும் படைத்தார்.

2023ல் உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்ட்டில் நடந்த ஆசிய அண்டர் 18 தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார். பின்னர் தென்கொரியாவில் நடந்த 20வது ஆசியன் அண்டர் 20 தடகள சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்றார்.

தொடர்ந்து டிரினிடாட் அண்ட் டொபாகோவில் நடந்த காமன்வெல்த் யூத் விளையாட்டில் வெண்கலம் வென்றார். இந்நிலையில்தான் தற்போது ஆசிய சாம்பியன்ஷிப்பில் 1.89 மீட்டர் தாண்டி தங்கம் வென்று அசத்தியுள்ளார் பூஜா.

*நந்தினி அகசரா

பெண்கள் ஹெப்டத்லான் போட்டியில் தங்கம் வென்று அசத்தியுள்ளார் நந்தினி அகசரா. 2005ம் ஆண்டு சோமா பிஸ்வாஸும், 2017ம் ஆண்டு ஸ்வப்னா பர்மனும் இதற்குமுன் தங்கம் வென்றிருந்தனர். 

இதனால் ஹெப்டத்லானில் தங்கம் வென்ற மூன்றாவது இந்தியரானார் நந்தினி அகசரா. ஹெப்டத்லான் என்பது ஏழு போட்டிகள் கொண்ட ஒருங்கிணைந்த தடகள நிகழ்வு. இதில் நூறு மீட்டர் தடைதாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், 200 மீட்டர், நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல், 800 மீட்டர் உள்ளிட்ட போட்டிகள் அடங்கும்.

இதில்தான் தெலுங்கானாவின் செகந்தராபாத்தைச் சேர்ந்த நந்தினி அகசரா தங்கம் வென்றுள்ளார். தற்போது 21 வயதான நந்தினி 2022ல் ஹாங்சோவில் நடந்த ஆசிய விளையாட்டு ஹெப்டத்லானில் வெண்கலம் வென்று அசத்தியவர்.நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த நந்தினியின் தந்தை டீ விற்பனை செய்பவர். ஆரம்பத்தில் செக்யூரிட்டியாக பணிசெய்துள்ளார். இந்நிலையில் 2018ல் இருந்துதான் நந்தினியின் ஜர்னி தொடங்கியுள்ளது.

காச்சிபவுலி மைதானத்தில் அவர் பயிற்சியைத் தொடங்கிய போது அவரின் பயிற்சியாளர் ஒருவர் நாகபுரி ரமேஷ் என்கிற பயிற்சியாளரை அறிமுகப்படுத்தியுள்ளார். அங்கிருந்து நந்தினியின் கிராஃப் உயரத் தொடங்கியுள்ளது.2021ம் ஆண்டு பாட்டியாலாவில் நடந்த தேசிய இன்டர் ஸ்டேட் சீனியர் தடகள சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன்பிறகுதான் அவர் சர்வதேச அளவில் பயணிக்க ஆரம்பித்துள்ளார்.

ஹாங்சோவில் அவர் வெண்கலப் பதக்கம் வென்ற போது சக இந்திய வீராங்கனை ஸ்வப்னா பர்மனாலேயே திருநங்கை எனக் குற்றம் சாட்டப்பெற்றார்.

தன்னுடைய ஆசிய விளையாட்டு வெண்கலப் பதக்கத்தை ஒரு திருநங்கையிடம் இழந்ததாக எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டார். பின்னர் அதை டெலிட்டும் செய்தார். இதையெல்லாம் தாண்டிதான் நந்தினி அகசரா சாதித்து வருகிறார்.

*அவினாஷ் சேபிள்

ராணுவத்தில் சுபேதாராக இருக்கும் அவினாஷ் சேபிள், 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். ஏற்கனவே 2022ம் ஆண்டு ஹாங்சோவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றவர். மகாராஷ்டிராவில் உள்ள மந்த்வா கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் அவினாஷ் சேபிள். 

ஆறு வயதிலேயே பஸ் வசதியில்லாத தன்னுடைய கிராமத்தில் இருந்து ஆறு கிமீ தொலைவில் உள்ள பள்ளிக்கு நடந்தே செல்பவர். அப்போதே அவரின் ரன்னிங் தொடங்கிவிட்டது என்கின்றனர் அவரின் நண்பர்கள்.

பிளஸ் டூ முடித்ததும் இந்திய ராணுவத்தில் சேர்ந்துள்ளார். சியாச்சின் பனிப் பகுதியில் வேலை செய்தார். இன்டர் ஆர்மி கிராஸ் கன்ட்ரி ஓட்டத்தில் 2015ல் பங்கேற்க, அங்கிருந்து ஸ்டீபிள்சேஸிற்குள் வந்தார் அவினாஷ்.

2019ம் ஆண்டு பாட்டியாலாவில் நடந்த பெடரேஷன் கோப்பையில் 8 நிமிடம் 28 நொடிகளில் வந்து புதிய தேசிய சாதனை படைத்தார். 2019ம் ஆண்டு தோஹாவில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்றார். 2022ம் ஆண்டு பிர்மிங்ஹாமில் நடந்த காமன்வெல்த் போட்டியிலும் வெள்ளி வென்றார். 

2022ம் ஆண்டு ஹாங்சோவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸில் தங்கத்துடன் 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்திலும் வௌளி வென்று தந்தார். இப்போது குமியில் தங்கம் வென்று இந்தியாவிற்குப் பெருமை தேடித் தந்துள்ளார்.

பேராச்சி கண்ணன்