ஷெங்னான் ஷிடாய்!
மணப் பெண்ணைத் தேடும் சீன ஆண்கள்
நம்மூரில் 90ஸ் கிட்ஸுக்கு பெண்கள் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது என்றால் சீன ஆண்களுக்கு மணப்பெண் கிடைப்பதே டிரம்பின் வரி விதிப்பு அட்ராசிடியை விட அதிகமாக இருக்கிறது என அலுத்துக் கொள்கிறார்கள் அந்நாட்டு இளைஞர்கள்.உண்மையில் இது இந்தியாவின் 90ஸ் கிட்ஸ் மற்றும் சீன இளைஞர்களின் சிக்கல் மட்டுமல்ல... உலகத்தின் உச்சபட்ச பிரச்னை.
 என்ன விஷயம்?
உலகம் முழுக்க மக்கள் தொகை பிரச்னை கடந்த சில வருடங்களுக்கு முன் வரை அதிகமாக இருந்தது. மக்கள் தொகை வேகமாக உயர்கிறது என்று புகார்கள் வைக்கப்பட்டன. ஆனால், இப்போது திடீரென மக்கள் தொகை குறைவு ஏற்பட்டுள்ளதாக புகார்கள் வைக்கப்படுகின்றன.  சீனாவில் கூட இரண்டு குழந்தை முறை கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது.சீனாவில் இனி மக்கள் மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்வதற்கான அதிகாரபூர்வ அனுமதியை அளித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. 
இதுவரை அங்கு இரண்டு குழந்தைகள் மட்டும் பெற்றுக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது இந்த விதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மக்கள் தொகை கட்டுப்பாடு அந்த நாட்டின் மனித வள பலத்தை குறைத்தது. அந்த நாட்டிற்கே இது எதிராக திரும்பத் தொடங்கியது. ஆம். அங்கு வயதானவர்கள் அதிகமானார்கள். ஆனால், இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்தது.
ஜப்பான் போல சீனாவும் கொஞ்சம் கொஞ்சமாக இளைஞர்கள் குறைந்து தள்ளாடும் நிலைக்குச் சென்றது. இதையடுத்து சீனா புதிய குடும்பக் கட்டுப்பாட்டு விதிகளைக் கொண்டு வந்தது. அதேபோல் ரஷ்யாவும் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். 10 குழந்தைகளை பெற்றுக்கொண்டால் கடைசிக் குழந்தைக்கு 14 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
ஆம். மக்கள் தொகை வேகமாகக் குறைவது தற்போது பல நாடுகளுக்கு பிரச்னை ஆகியுள்ளது. எலான் மஸ்க் இதே பிரச்னையை சுட்டிக்காட்டி உள்ளார்.
ரைட். சீன இளைஞர்களின் ஏக்கத்துக்கு என்ன காரணம்?
சீனாவின் ஒரு குழந்தை கொள்கை 1979ம் ஆண்டு தொடங்கி பல வருடங்களாக நடைமுறையில் இருந்தது. அதன் விளைவுகள்தான் இப்போதும் உணரப்படுகின்றன.2015ல் அது ரத்து செய்யப்பட்டு கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது அங்கே பெண் குழந்தைகள் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.
ஆனால், ஒரு குழந்தை கொள்கையின் போது பல ஆண்டுகளாக அதிக எண்ணிக்கையிலான ஆண் குழந்தைகள் பிறந்துவிட்டார்கள். அப்பொழுது - அக்காலத்தில் - பெரிதாக பெண் குழந்தைகள் பிறக்கவில்லை. அந்த ஆண் குழந்தைகள் அனைவரும் இப்போது வளர்ந்து திருமண வயதுக்கு வந்து நிற்கிறார்கள்.ஆனால், அவர்களுக்கு மணம்முடிக்க பெண்களே இல்லாத சூழல் உள்ளது. 35 மில்லியனுக்கும் அதிகமான ஆண்கள் இதனால் திருமணம் செய்து கொள்ள பெண்கள் இல்லாத சூழல் உருவாகியுள்ளது. இவர்கள் சீன மொழியில் ‘ஷெங்னான் ஷிடாய்’ என்று அழைக்கப்படுகிறார்கள். அதாவது ‘மீதம் உள்ள ஆண்கள்’ என்று அழைக்கப்படுகிறார்கள்.
இவர்கள் தினமும் நாடு முழுக்க மணப்பெண்களை சல்லடையிட்டுத் தேடுகிறார்கள். ஆனால், அவர்களின் நாட்டில் ஒருவரைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. அடுத்த 20 வருடங்களில் அங்கே ஒரு பெண்ணைக் கண்டுபிடிக்க முடியாத காரணத்தால் திருமணமாகாமல் இருக்கும் சீன ஆண்களின் எண்ணிக்கை 50 மில்லியனாக உயர வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
இதைப் பயன்படுத்தி பல பெண்கள் விவாகரத்து செய்து அதிக பணம் பெற்று இரண்டாவது திருமணம் செய்வது அதிகரித்து வருகிறதாம். பெண்களை திருமணம் செய்ய பல கோடிகளை கொடுக்கும் வழக்கம் இன்று ஏற்பட்டுள்ளதாம். இரு ஒருபுறமிருக்க மறுபுறம் விரக்தியில் பல சீன ஆண்கள் திருமணம் செய்துகொள்ள வெளிநாடுகளுக்குச் செல்வதும் அதிகரித்து வருகிறதாம்.
அந்த வகையில் ஏராளமான சீன ஆண்கள் ரஷ்யா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் போன்ற வெளிநாடுகளிலும் மணப்பெண்களை காசு கொடுத்து வாங்குவதாக புகார்கள் வைக்கப்படுகின்றன.
ஜான்சி
|