ஸ்லோ டிராவல்



சுற்றுலா என்றாலே இரண்டு, மூன்று நாட்களில் ஊரைச் சுற்றிப்பார்த்துவிட்டு, பேக் அப் செய்யக்கூடிய பலரைத்தான் நாம் பார்த்திருப்போம் அல்லது கேள்விப்பட்டிருப்போம். அது கோவா என்றாலும் சரி, டார்ஜிலிங் என்றாலும் சரி. குறிப்பிட்ட சில நாட்களிலேயே சுற்றுலா முடிந்துவிடும். ஆனால், ஆசியாவில் உள்ள சில இடங்கள் பல நாட்கள் தங்கிப் பார்த்து, ரசிக்கக்கூடிய அனுபவத்தை தருவதாக ஒரு டிராவல் டிஜிட்டல் தளம் சொல்கிறது.

 சமீபத்தில் ‘அகோடா’ எனும் டிஜிட்டல் டிராவல் தளம், ஆசிய அளவில் ஓர் ஆய்வை மேற்கொண்டது. ஆசியாவில் சுற்றுலாப்பயணம் மேற்கொள்ளும் சுற்றுலாப்பயணிகள் நீண்ட நாட்கள் தங்கிப் பார்க்கக்கூடிய இடங்கள் எவை என்பதுதான் அந்த ஆய்வு.  இந்த நீண்ட நாள் பயணத்துக்கு அது ‘ஸ்லோ டிராவல்’ என்றும் பெயரிட்டிருந்தது. 
ஒரு சுற்றுலா தளத்துக்கு செல்லும் மக்கள் ஆற, அமர்ந்து அந்த இடங்களை ஆழ , அகலமாக பார்த்து ரசிக்கக்கூடிய அனுபவத்துக்குத்தான் ‘ஸ்லோ டிராவல்’ என்று பெயரிட்டிருந்தது. அப்படி ஆசியாவில் 9 இடங்களைப் பட்டியலிட்ட அந்த தளம் சென்னையையும்  தவிர்க்க முடியாத இடங்களில் ஒன்றாக குறிப்பிட்டிருப்பது தமிழகத்துக்கு பெருமையைச் சேர்த்திருக்கிறது. சரி, வேறு எந்தெந்த நாடுகளில், என்னென்ன இடங்களை அது குறிப்பிட்டிருக்கிறது என்பதையும் பார்ப்போம்.

தாய்லாந்தின் ரயோங் (Rayaong), இந்தோனேசியாவின் கலகொவா (Kalegowa), தென் கொரியாவின் சியோல் (Seoul), ஜப்பானின் டோக்கியோ (Tokyo), வியட்னாமின் நா டிராங்க் (Nha Trang), பிலிப்பைன்ஸின் பொரலே தீவு (Boralay Island), தாய்லாந்தின் தாய்பேய் (Taipei), மலேசியாவின் கோலாலம்பூர் (Kuala Lumpur), மற்றும் இந்தியாவில் சென்னை ஆகிய இடங்கள்தான் அவை.

இந்த 9  இடங்களிலும் நீண்ட நாட்கள் தங்கி பார்க்கக்கூடிய அளவுக்குப் பல விஷயங்கள் இருப்பதால்தான்அவற்றை அந்த ஆய்வு தளம் ‘ஸ்லோ டிராவல்’ என்று பெயர் சூட்டி  பெருமிதம் கொள்கிறது. 

இதில் இடம்பெற்றிருக்கும் ஒவ்வொரு இடமும் பல்வேறு காரணங்களுக்காக ஒரு ஆழமான சுற்றுலா அனுபத்தைத் தருவதாக அந்தத் தளம் சொல்கிறது. ஒருவேளை கோயிலாக இருக்கலாம்; கடற்கரையாக இருக்கலாம். இப்படி இந்த தளம் பட்டியலிடும் இடங்களில் என்ன ஸ்பெஷல் என்பதையும் அந்த தளம் சொல்கிறது.

 ரயோங்கில் பீச் மற்றும் அதில் இருந்து கிடைக்கும் ஃபிரஷான கடல் உணவு, கலகொவாவில் நெல்வயல், கட்டடக் கலை மற்றும் அன்பான வரவேற்பு, சியோலில் டீ ஹவுஸ்கள் மற்றும் பூந்தோட்டங்கள், டோக்கியோவில் உணவு ஜாயிண்டுகள், நா டிராங்கில் பீச், டவர்கள் மற்றும் களிமண் குளியல், பொரலேயில் பீச் மற்றும் சூரிய அஸ்தமனம், தாய்பேயில் சாலை உணவுகள் மற்றும் பாரம்பரியமான கிராமங்கள், கோலாலம்பூரில் கட்டடக் கலை மற்றும் உயர் ரக உணவுகள், சென்னையில் கடற்கரை, பாரம்பரிய இடங்கள், கலாச்சார நிகழ்வுகள், கோவில்கள் மற்றும் கலை தொடர்பான கேலரிகள்.

 சென்னையைப் பொருத்தளவில் இந்தத் தளம் கூடுதலாக சில விஷயங்களையும் சொல்கிறது. சென்னையில் மயிலாப்பூர் கோவில்கள் பிரபலம் என்றால் ஈ.சி.ஆரில் தொடங்கும் கடற்கரையானது பாண்டிச்சேரி வரையும் நீண்டு கடலூர் வரை செல்வதால் இந்த கடற்கரைகளும் சுற்றுலாப் பயணிகளிடையே மிகப் பிரபலமாக இருப்பதாகச் சொல்கிறது அந்தத் தளம். அத்துடன் நீண்ட நாட்கள் தங்குதலுக்கான ஈர்ப்பை பாண்டிச்சேரியும், மாமல்லபுரம் கல் சிற்பங்களும் கொண்டுவருவதாகச் சொல்கிறது அந்தத் தளம்.

சென்னையைப் போலவே மும்பையும், பெங்களூரும் ஆசிய சுற்றுலாப் பயணிகளிடையே நீண்ட நாட்களுக்கான பயண இடங்களாக மாறிவரும் சூழ்நிலையில் தமிழ்நாட்டில் சென்னை இப்படி ஸ்லோ டிராவலுக்கான அனுபவமாக மாறியிருப்பது சென்னைவாசிகளுக்குப் பெருமையான விஷயம்தான்.

டி.ரஞ்சித்