நிகழ்ச்சி



இரவு நேரம்...

பளபளக்கும் பட்டுப்புடவை, கழுத்து, கை, காதெல்லாம் சரம்சரமாக தங்க நகைகளோடு நடுரோட்டில் நடந்து போனாள் அந்த இளம் பெண். தூரத்தில் ஊர்ந்து கொண்டிருந்த காரினுள் இருந்த கேமரா அவளையே கண்காணித்துக் கொண்டிருந்தது. இரவில் நகரின் ஒதுக்குப்புறத்தில் இவ்வளவு நகைகளுடன் ஒரு இளம்பெண் நடந்து போனால் என்ன நடக்கும் என்பதைக் கண்டறிய ஏபிசி சேனலின் கிரியேட்டிவ் டீம் தயாரிக்கும் வித்தியாசமான நிகழ்ச்சி அது.

அவ்வப்போது எதிர்ப்பட்ட சிலர் அவளை விசித்திரமாய் பார்த்தபடி கடந்து போனார்கள். ஒரு சந்தில் அந்தப் பெண் திரும்பியவுடன். ஆஜானுபாகுவான ஒருவன் சடாரென்று பாய்ந்து வந்து எதிரில் நின்றான். அவன் கையில் கத்தி. ‘‘சத்தம் போடாம நகைகளைக் கழட்டிக் கொடு... இல்லே குத்திடுவேன்...’’ என்றான்.அவள் ‘வீல்’ அலறினாள்.

அவ்வளவுதான் ஏபிசி சேனலின் பாதுகாப்புப்படை மின்னலாய்ப் பாய்ந்து அவனை அமுக்கியது.
‘‘அவரை அடிக்காதீங்க! தனியா போற பொண்ணுகிட்ட கத்தியைக் காட்டி மிரட்டினா என்ன நடக்கும்னு பார்க்கறதுக்காக எக்ஸ்ஒய்இஸட் சேனல் தயாரிக்கிற நிகழ்ச்சி இது...’’ எனக் கத்தியபடி நான்கு பேர் பக்கத்து சந்திலிருந்து ஓடி வந்தார்கள் கேமராவோடு!

சுபாகர்