அவன் அவள் unlimited



பிரியம் நீடிக்க ப்ரியங்க யோகம்

பணம், அதிகாரம் இவை போன்ற பாலியல் மருந்து வேறெதுவும் இல்லை!
- ஃபெலிக்ஸ் டெனிஸ்

தம்பதிகளிடையே எழும் பாலியல் பிரச்னைகள் அனைத்துக்கும் முதல் காரணம் அறியாமைதான்’’ என்கிறது அமெரிக்க சைக்கியாட்ரிக் பப்ளிஷிங்கின் டெக்ஸ்ட் புக். ஆனானப்பட்ட அமெரிக்காவிலேயே இந்த கதியென்றால்...

ஃபிகர் வெட்டுவது, ஆளை வெட்டுவது ஆகிய இரண்டையுமே ஆண்மை என்று சொல்லிக்கொள்ளும் நம்ம நாட்டில்..?செக்ஸ் பற்றிய விவாதங்களும் விவரங்களும் இங்கு குறைவு. ஆனால் விளம்பரம் அதிகம். அதனால்தான், ‘நீண்ட நேர இன்பம்’ என்பதே நம்மூரில் கெட்ட வார்த்தையாகிவிட்டது. உண்மையில் இது பெரும் ஆராய்ச்சிக்குரியது.

ஆண்மைக் குறைபாட்டில் பல வகை உண்டு. அதில் மிகமிக அரிதான ஒரு பிரச்னை, delayed ejaculation. சுருக்கமாக, டி.இ! உலகில் 4 முதல் 6 சதவீதம் பேருக்கு இது இருந்தால் அதிகம். இது என்ன குறைபாடு தெரியுமா? தாம்பத்ய உறவின்போது ஆணின் உச்சநிலை, தாமதமாக... மிகமிகத் தாமதமாக ஏற்படுவது!

‘இது என்னங்க பிரச்னை? நல்ல விஷயம்தானே’ என்பார்கள் இதைப் படிக்கிற ஆண்கள். காரணம், உலகில் பெரும்பாலான ஆண்களின் பேரவா, தங்களின் உச்சநிலையைத் தாமதப்படுத்துவது தான். ஆண்களின் ஆவலில் நியாயம் உண்டு. உண்மையில், ஓர் ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே தாம்பத்ய உறவு தொடங்கிய நொடி... அந்த ஆண் உச்சநிலையை அடைந்து தன் விந்தை வெளிப்படுத்தும் நொடி...

இந்த இரண்டுக்கும் இடையில் இருக்கும் கால அவகாசத்தைத்தான் நாம் ‘செக்ஸ்’ என்றழைக்கிறோம். இந்தக் கால அவகாசம் குறுகியதாக இருந்தால்... அதாவது, உறவு தொடங்கிய சில விநாடிகளில் ஆண் உச்சநிலையை அடைந்துவிட்டான் என்றால், அது சீரியஸான தாம்பத்யப் பிரச்னை. Premature ejaculation என்பார்கள் அதை. அந்தப் பிரச்னைக்கு நேர் மாறானதுதான் இந்த  தாமத உச்சம்!

‘‘சம்மந்தப்பட்ட ஆணும் அவரின் பார்ட்னரும் சந்தோஷமாக ஏற்கும் வரை இந்தத் தாமதம் வரம்தான். ஆனால், ஆண் உடலளவில் களைப்படைந்த பின்பும், அவன் துணையும் பொறுமை
யிழந்த பின்பும் உச்சநிலை இதோ அதோ எனப் போக்குக் காட்டிக்கொண்டிருந்தால்..? அப்போது தான் இது பிரச்னையாகிறது’’ என்கிறார் நியூயார்க்கைச் சேர்ந்த உளவியல் பேராசிரியர் மைக்கேல் பெரல்மென். சரி, இந்த தாமத உச்சநிலைக்கு உளவியல் காரணம் என்ன?

1. கர்ப்பம் நேர்ந்துவிடுமோ என்ற பயம்
2. தகாத நோய்கள் வருமோ என்ற பயம்
3. செக்ஸை பாவ காரியமாய்ப் பார்க்கும் பாரம்பரிய மனநிலை
4. யாரிடமாவது அகப்பட்டு விடுவோமோ என்ற பயம்
இந்த நான்கின் அடித்தளமும் பயம்தான். கள்ள உறவில் இந்த பயங்கள் சகஜம்... ஸோ, ‘நேரமும்’ அதிகம்!

பயத்தால் ஆணின் உச்சநிலை தாமதமாகிறது என்றால், அதுவே பலான மருந்தாகிவிடாதா? உலகில் பெரும்பாலான ஆண்கள், தங்களுக்கு உச்சநிலை சீக்கிரமே நடந்துவிடுவதாகத்தான் நினைக்கிறார்கள். இதனால்தான் இன்டர்நேஷனல் வயாகரா முதற்கொண்டு இந்திய துரியன் பழம் வரை கச்சிதமாய் கல்லா கட்டுகின்றன. ‘மராத்தான் செக்ஸ்’ என்ற விளம்பர வாக்கியத்தோடு இணையத்திலும் இந்த பிசினஸ் கொடிகட்டிப் பறக்கிறது. ‘அதெல்லாம் எதுக்கு சார்...

கட்டில்ல கொஞ்சம் பயப்படுங்க... இப்படிப்பட்ட மாத்திரைகளே தேவையில்லை!’ என அவர்களிடம் பிரிஸ்கிரிப்ஷன் தரலாமா?‘‘கண்டிப்பாகத் தரலாம்!’’ என்கிறார் அரசு யோகா மற்றும் நேச்சுரோபதி மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் மணவாளன்.‘‘செக்ஸின்போது ஆண் ரொம்பவும் பெண் மீது மோகித்திருப்பது சீக்கிரமே அவனை உச்சமடையச் செய்யும்.

பயம் என்பது அந்த மோகத்தைச் சற்று குறைக்கிறது. மனதை திசை திருப்புகிறது. உடல் இன்பத்தில் ஈடுபட்டிருந்தாலும் மனம் முழுமையாக ஈடுபடாததால் உச்சம் தாமதமாகிறது. ஆக, பயம்தான் வேண்டும் என்பதில்லை. செக்ஸின்போது ஆண் தன் மனதை வேறெதிலாவது திருப்ப முயன்றால் நிச்சயம் உச்சத்தைத் தாமதப்படுத்தலாம். மாத்திரைகள் ஏதும் இல்லாமலே, பக்க விளைவுகள் இன்றி, தமக்குத் தாமே ஒருவர் செய்துகொள்ளும் உளவியல் மருத்துவம் இது.

உறவின்போது வேறெதையாவது நினைத்தால், செக்ஸே தடைபடும் என்று சிலர் பயப்படுவார்கள். நிச்சயம் அப்படி நடக்காது. உறவின்போது பாயும் ரத்தத்தின் வேகமும் விறைப்பும் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு நடக்கும் ஓர் ஒத்திசைவு. அதை இந்த உளவியல் பாதிக்காது!’’ என்கிறார் அவர்.

கிட்டத்தட்ட இது மாதிரி யான - உயிரணு வெளிப்படாத - ‘நீண்ட உறவு’ பற்றி திருமூலரே பரியங்க யோகத்தில் குறிப்பிட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். இந்த அடிப்படையில் பார்த்தால், பெண் வேட்கையை மட்டுப்படுத்தி மனத்தைக் கட்டுப்படுத்துவதும் கூட ஒருவகை ஆண்மை மருத்துவம்தான்! பெண் என்றாலே ஜொள் விட்டு வழியும் குணம், ‘பர்ஃபார்மென்ஸை’ பாதிக்கும் என்பதால்தான் பெரும்பாலான பெண்கள் உள்ளுணர்வாலேயே அதை வெறுக்கிறார்களோ என்னவோ.

 பெண்ணை ரொம்பவும் ஆராதிக்காமல் ஜென்டிலாக நடந்துகொள்வதே இங்கே நிரந்தர ஹீரோயிசம். புராணங்களில் ராமன் என்ற கேரக்டர் இப்படிப்பட்ட ஜென்டில்மேன்தான். மிதிலைப் பெண்கள் அவனை எப்படியெல்லாம் காதலித்தார்கள் என்பதை மாய்ந்து மாய்ந்து எழுதுகிறார் கம்பர்.

அவர்கள் பக்கம் மனம் சாயாமல் இருந்ததே ராமனின் ஆண்மைத் திறமாகப் போற்றப்படுகிறது. திருவள்ளுவர் கூட, ‘பிறன்மனை நோக்கா பேராண்மை’ என்கிறார். ‘எல்லா பெண்ணையும் விரும்புவதுதான் ஆண்மை’ எனும் இக்கால நடைமுறைக்கு அந்தக் குறள், மருத்துவ ரீதியிலான மறுப்புரை!

பெண் வேட்கையைத் தணிப்பது உறவின் ‘நேரத்தை’ நீட்டிக்கும் என்றால்... முன்பொரு முறை பெண் வேட்கையைத் தணிக்கும் மருந்துகளைப் பட்டியலிட்டிருந்தோமே... அதை நினைவுபடுத்திப் பாருங்கள். மருக்கொழுந்து, கற்பூரம் போன்ற ஆன்மிக அயிட்டங்களும் அந்த லிஸ்ட்டில் இருந்ததே!

அப்படியானால், கோயிலுக்குப் போய் தலையில் மருக்கொழுந்தும் உடலில் கற்பூர வாசனையுமாக தலைவி வந்தால், தலைவன் கவனத்தை கஷ்டப்பட்டுத் திருப்ப வேண்டியதில்லையே! அந்த மணமே அவன் மூடை மாற்றி ‘நேரத்தை’ நீட்டித்துவிடுமே!

செக்ஸுக்காக நம் முன்னோர்கள் இவ்வளவு ப்ளான் செய்தார்களா தெரியவில்லை. ஆனால், இவ்வளவு ப்ளான் செய்திருக்கலாம் எனும் அனுமான த்தில் நிச்சயம் நியாயம் உள்ளது.
அது சரி, ராமன் மாதிரியான ஜென்டில் கேரக்டரை பெண்கள் விரும்பினார்கள் என்றால் கிருஷ்ணன் கதை என்ன? உண்மையில் பெண்களுக்குப் பிடித்த ஆண், ராமனா? கிருஷ்ணனா?
‘கட்டில்ல கொஞ்சம் பயப்படுங்க... பலான மாத்திரையே தேவையில்லை!’ என பிரிஸ்கிரிப்ஷன் தரலாமா? தரலாம்!

மன மருந்து... உடல் மருந்து!

இந்தக் கருத்தின்படி, பாலியல் மருந்துகளையே ‘மன மருந்து’, ‘உடல் மருந்து’ என இருவேறாகப் பிரிக்கலாம். பெண்ணைப் பார்த்தால் ஆசை வருவதற்காகத் தரப்படுகிறவை ‘மன மருந்துகள்’.

உச்சநிலையைத் தாமதப்படுத்துவதற்காகத் தரப்படுகிறவை ‘உடல் மருந்துகள்’. பெண் வேட்கையை அதிகரிக்கும் மன மருந்துகள் அனைத்துமே செக்ஸ் அவகாசத்தைக் குறைத்துவிடும் என்பதும் பெண் வேட்கையைத் தணிக்கும் அனைத்தும் நேரத்தை நீட்டித்து இல்லறத்தை இனிக்க வைக்கும் என்பதுமே அடிப்படை ஃபார்முலா.

இந்த ஃபார்முலா நமக்குத் தெரிகிறதோ இல்லையோ... அயல் நாடுகளில் அயராமல் பார்ட்டி பண்ணும் விஷமக்கார இளைஞர்களுக்குத் தெரிகிறது. எனவேதான் பெண் வேட்கையை அதிகரிக்கும் எக்ஸ்டஸி (MDMAPhen ethylamine) எனும் போதைப் பொருளையும் அதே அளவு வயாகராவையும் கலந்து ‘செக்ஸ்டஸி’ எனும் பெயரில் பார்ட்டி டிரக் தயாரிக்கிறார்களாம் அவர்கள். அதாவது மன மருந்து - உடல் மருந்து காம்பினேஷன்!

ப்ரொடியூஸர் என்னதான் செக்ஸ் டாக்டரா இருந்தாலும் இப்படியா படம் எடுப்பார்?
நாலு மணி நேரமாச்சு... இன்னும் க்ளைமேக்ஸே வரலை!

தேடுவோம்...

கோகுலவாச நவநீதன்