நான் உங்கள் ரசிகன்



மனோபாலா

விவேக்கின் மகன் பிரசன்னா மரணம், சொந்தக் குடும்பத்துத் துயரம் போல நெஞ்சைப் பிசையுது. விவேக்குக்கு இளையராஜா பாட்டுன்னா உயிர். வீட்டில் அவர் ராஜா பாட்டைக் கேட்கக் கேட்க... பிரசன்னாவுக்கும் இசை ஆர்வம் வந்து பியானோ கத்துக்கிட்டான்.

நல்லா வாசிப்பான். மகனை இசைஞானி முன்னாடி கீபோர்ட் வாசிக்க வச்சி, அவர் வாயால பாராட்டும் ஆசீர்வாதமும் வாங்கணும்னு விவேக் ரொம்ப நாளா சொல்லிக்கிட்டிருப்பார். அது நிறைவேறாமலேயே போயிடுச்சு. சமீபத்துலதான் விவேக் ரொம்பவும் நேசிச்ச அப்துல் கலாம் இறந்தார். அதற்குள்ளே பேரிடியாய்... மகனின் இறப்பு!

வாழ்க்கையில பல பேரோட துக்கங்களைப் பார்க்கும்போதுதான் புரியுது... ஒரு சாதாரண மேட்டருக்காக நான் தற்கொலை முடிவெடுத்தது எத்தனை பைத்தியக்காரத்தனம்னு!

‘காலமகள் கண் திறப்பாள் சின்னய்யா... நாம் கண்கலங்கி கவலைப்பட்டு என்னய்யா...’னு ஒரு கண்ணதாசன் பாட்டு. தற்கொலை எண்ணத்தோட போறவங்களைத் தடுத்து நிறுத்துற என்னவோ ஒரு மருந்து - மந்திரம் கண்ணதாசன் வரிகள்ல இருக்கு. அதுதான் என்னையும் தடுத்துச்சு. அந்தப் பாட்டு இல்லைன்னா இன்னிக்கு நான் இல்லை!

‘திருச்சியில வெக்காளியம்மன் கோயிலுக்குப் போ. உங்க அம்மாவுக்கு எப்படி லெட்டர் எழுதுவியோ, அப்படி உன் கஷ்டத்தை எல்லாம் எழுதி அதை சூலத்துல கட்டிட்டு வந்துடு. எல்லா கஷ்டமும் விலகும்’னு ஒருத்தர் சொன்னார். உடனே திருச்சிக்குக் கிளம்பிப் போய், லெட்டர் எழுதிக் கட்டிட்டு சென்னை வந்தேன்.

இங்கே வந்து பாண்டி பஜார்ல இறங்கும்போது என்கிட்ட இருந்தது ஒரு ரூபா பத்து பைசா. பாண்டி பஜார்ல ஒரு கையேந்தி பவன்ல ஒரே ஒரு தோசை வாங்கி தட்டு நிறைய சாம்பார் வச்சி சாப்பிட்டேன். ‘‘டைரக்டரே...’’னு ஒரு குரல்... ரொம்ப நாள் கழிச்சு என்னை ஒருத்தர் ‘டைரக்டர்’னு சொல்லக் கேட்டதும் கண் கலங்கிட்டேன். கூப்பிட்டவர் கதாசிரியர் கலைமணி.

‘‘உங்கள ரொம்ப நாளா தேடிக்கிட்டிருக்கேன். சாப்பாட்டுக்கு என்ன பண்றீங்க?”னு கேட்டுட்டு, எனக்கு சாப்பாடும் வாங்கிக் கொடுத்து, கையில ஐம்பது ரூபாயும் கொடுத்தார். ‘‘நாளைக்கு ஆபீஸுக்கு வாங்க. நாம ஒரு படம் பண்ணலாம். நீங்கதான் டைரக்டர்’’னு அவர் சொல்ல, சந்தோஷமாகிட்டேன்.

மறுநாள் அவர் ஆபீஸுக்கு நடந்தே போயிட்டேன். அங்கே கலைமணியோட பார்ட்னர்ஸ் இருந்தாங்க. பழைய விஷயங்கள் பேசி மகிழ்ந்துட்டு, அப்படியே பட விவகாரத்துக்கு வந்தோம். ‘‘படத்தோட பெயர் ‘முதல் வசந்தம்’. நீங்கதான் டைரக்ட் பண்றீங்க. இப்போ நேரா எல்லையம்மன் கோயில் போய், ஒரு பேப்பர்ல ‘முதல் வசந்தம்’னு டைட்டிலை எழுதி அம்மன் முன்னாடி வச்சிட்டு, நாளைக்கு  நம்ம ஆபீஸுக்கு வந்துடுங்க’’னு கலைமணி சொன்னார்.

சொன்னபடியே செஞ்சுட்டு மறுநாள் ஆபீஸுக்குப் போனேன். எல்லாரும் ‘உம்’னு இருந்தாங்க. ‘நேத்தெல்லாம் நல்லா பேசுனாங்களே’னு யோசிக்கறேன். அதுக்குள்ள அந்த பார்ட்னர்ஸ் மூணு பேரும் ‘‘டீ குடிச்சிட்டு வர்றோம்’’னு நாசூக்கா வெளியே போறாங்க. கலைமணி என்னைக் கூப்பிட்டு, ‘‘டைரக்டரே! நீங்க தப்பா எடுத்துக்காதீங்க. எங்க பார்ட்னர்ஸுக்கு நீங்க டைரக்ட் பண்றது பிடிக்கலை.

மணிவண்ணன்தான் டைரக்ட் பண்ணணும்னு பிடிவாதமா இருக்காங்க’’னு சொல்ல, எனக்கு சங்கடமாகிடுச்சு. என் கோபமெல்லாம் எல்லையம்மன் மேல திரும்பிடுச்சு. எல்லையம்மன் கோயிலுக்குப் போய் கொஞ்ச நேரம் அழுதேன்.

ரெண்டு நாள் கழிச்சு, ‘‘கலைமணி உங்களைக் கூட்டிட்டு வரச் சொன்னார்”னு ஒரு பையன் வந்து கூப்பிடுறான். போனேன். அங்கே கலைமணி கூட என் அசிஸ்டென்ட் பெருமாளும் இருந்தார். எனக்கு அப்போதான் தெரியுது, கலைமணியோட தம்பிதான் பெருமாள்னு!

‘‘அவங்க ஓகே பண்ணலைன்னா என்ன டைரக்டரே! நாம படம் பண்ணலாம். படத்துக்குப் பேரு ‘பிள்ளை நிலா’!’’னு சொன்னார் கலைமணி. ‘‘நான் ஏற்கனவே படம் பண்ணி தோத்தவன். நான் கேட்டா யார் கால்ஷீட் குடுப்பாங்க?’’னு ஆரம்பத்தில் தயங்கினேன். அது, மோகன் கொடி கட்டிப் பறந்த நேரம்.

ஆரம்பத்துல மோகன் பெங்களூருவுல இருந்தபடி பாலுமகேந்திராவோட கன்னடப் படம் பண்ணிட்டு, சென்னையில சான்ஸ் தேடி  வந்தப்போ அவரை பாரதிராஜாகிட்ட அறிமுகப்படுத்த நான் அலைஞ்சிருக்கேன். அதான் எனக்கும் மோகனுக்கும் உள்ள நட்பு. அந்த ஒரு சின்ன நட்புல மோகனை போய்ப் பார்த்தேன். ‘‘உனக்கு ஒருத்தர் வாய்ப்பு தர்றேன்னு சொன்னா, கண்டிப்பா நான் கால்ஷீட் தர்றேன்... வா!’’னு அவர் கார்லேயே என்னை கலைமணி வீட்டுக்கு அழைச்சிட்டுப் போனார் மோகன்.

‘‘டேட் ரொம்ப டைட்டா இருக்கு. பத்து நாள் தொடர்ந்து சாயங்காலம் 6 மணியில இருந்து நைட் கால்ஷீட் தர்றேன். பகல் கால்ஷீட் எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்’’னு  மோகன் சொல்லிட்டார். அவர் கொடுத்த பத்து நாட்களுக்கு ஏத்த மாதிரி மற்ற நடிகர்களைப் பிடிச்சேன். நளினி அப்போ பிஸி ஹீரோயின். அவங்களும் பிஸி ஷெட்யூலுக்கு இடையில நடிச்சுக் கொடுத்தாங்க.

 ராதிகாவும் அப்படியே. படத்துல ஒரு கார் வரும். அந்த காருக்கு 666னு நம்பர் வச்சிருந்தேன். ஆளில்லாம அது தானா ஓடுற சீன் நிறைய இருக்கும். அதுக்காகவே கீழே படுத்துக்கிட்டு டிரைவ் பண்ற மாதிரி இன்னொரு ஸ்டியரிங்கை கீழே பொருத்தியிருந்தோம். டேக்குக்கு முன்னாடி, அதை கீழே படுத்துட்டு ஓட்டிப் பார்த்தா சரியாதான் ஓடும். ஆனா, டேக்ல நேரா கேமராவை இடிக்க வரும். நான், கேமராமேன் அசோக்குமார் எல்லாரும் கீழே உருண்டு தெறிச்சு ஓடினது மறக்க முடியாத அனுபவம்.

ஓவர் நைட்ல என்னை தூக்கி நிறுத்திச்சு ‘பிள்ளை நிலா’. சொல்லப் போனா, கோடம்பாக்கத்துல ஹாரர் ஃபிலிம் டிரெண்டை அது துவக்கி வச்சது... இன்னிக்கு வரை கொடி கட்டிப் பறக்குது. அந்தப் படத்துலதான் பேபி ஷாலினி அறிமுகம். ஆனா, ‘ஓசை’னு ஒரு படம் முன்னாடி ரிலீஸ் ஆகிட்டதால இது ரெண்டாவது படமாகிடுச்சு. ‘பிள்ளை நிலா’வுல அந்தக் குழந்தை, மோகனோட அம்மாவைக் கொல்ற மாதிரி ஒரு சீன் உண்டு.

அது எடுக்கறதுக்கு முதல் நாள்... மோகனோட அம்மா நிஜமாகவே இறந்துட்டாங்கனு நியூஸ்! பதறிட்டோம். பெங்களூரு போய் அம்மாவோட இறுதிச்சடங்கை எல்லாம் முடிச்சிட்டு திரும்பினேன். மறுநாள் மோகனுடைய கால்ஷீட் இருந்தது. அவர் வரமாட்டார்னு நினைச்சிருந்தேன்.

ஆனா, அவரால பட வேலைகள் தடைபடக் கூடாதுனு மறுநாளே வந்துட்டார். முதல் ஷாட்டே இறந்துபோன அம்மா படத்துக்கு முன்னாடி அழுற சீன்... யதார்த்தமா அந்த சீன் அமைஞ்சது. மோகனோட அந்த உழைப்பு, அர்ப்பணிப்பினால்தான் என்னாலும் இன்னிக்கு இவ்வளவு தூரம் நிக்க முடியுது. மோகனுக்கும் கலைமணிக்கும் நான் ரொம்பவே நன்றிக்கடன் பட்டிருக்கேன்.

படம் முழுக்க முடிச்சிட்டு ஃபிலிமை செக் பண்ணினா, வெறும் நாலு அடிதான் மிச்சம் இருந்துச்சு. விடியக்காலை நாலு மணிக்கு ஒளிர்ற நிலாவை அந்த மிச்சம் இருக்கற ஃபிலிம்ல ஷூட் பண்ணினேன். அந்த நிலா பிரமாதமா வந்துச்சு. படத்துக்கே அதான் மிரட்டலா அமைஞ்சது. அந்த நிலாவுக்கே தனியா இசையமைச்சுக் கொடுத்தார் இளையராஜா.

‘தி ஓமன்’ படத்துக்கு இசையமைச்ச ஜெரி கோல்டுஸ்மித் இசை மாதிரி வரணும்னு விரும்பி, இளையராஜாகிட்ட சொல்ல, அதைவிட பல மடங்கு மிரட்டலான இசையைக் கொடுத்தார் அவர். அந்தப் படத்தோட ரீரெக்கார்டிங்  ட்ராக் எக்கோ கம்பெனியால தனி கேசட்டாவே வெளியிடப்பட்டது.

அதுக்குப் பிறகு அவர் எந்தப் படத்துக்கும் ரீரெக்கார்டிங்கை கேசட்டா போடலை. எனக்கு அது ஒரு பெருமை!அடுத்ததா ஒரு முழுநேர காமெடி படம் பண்ண விரும்பினேன். ஆனா, அது என்னாச்சு தெரியுமா? சொல்றேன்!தற்கொலை எண்ணத்தோட போறவங்களை தடுத்து  நிறுத்துற என்னவோ ஒரு மருந்து - மந்திரம் கண்ணதாசன் வரிகள்ல இருக்கு.  அதுதான் என்னையும் தடுத்துச்சு.

(ரசிக்கலாம்...)

தொகுப்பு: மை.பாரதிராஜா
படங்கள் உதவி: ஞானம்