கவிதைக்காரர்கள் வீதி



மழை  நாளும் மாடி வீடும்!

மழை ஒழுகும் வீடு
மல்லிகை உதிர்ந்த முற்றம்
கைக்கெட்டிய தூரத்தில்
நீரள்ளும் கிணறு
தொண்டை வீங்கக் கத்தும்
தவளையின் சப்தம்
மண்வாசத்தோடு வீசும் காற்று
‘மழையில் ஆடாதே’
என்று கத்தும் அம்மா

வேலை முடிந்து தொப்பலாக
நனைந்தபடி திரும்பும் அப்பா
புயல் கரை கடந்ததாய்
பொய் சொல்லும் வானொலி
டமடமவென இடிக்கும் வானம்
இருள் அடையும் பொழுது
கறுத்துச் சூழும் மேகம்
ஓரக்கண்ணால் முகம் பார்த்து
கத்தும் காகம்

இங்கொன்றும் அங்கொன்றுமாய்
கிரீச்சிடும் சிட்டுக்குருவிகள்
காற்றில் கிளையாட
இலை சொட்டும் மழை தேங்கிய நீர்
பசியில் பரபரக்கும் வயிறு
பள்ளிக்குப் போக வேண்டியிருக்குமோ
இருக்காதோ எனும் படபடப்பு

மழையொழுகும் வீட்டினுள் நிரம்பிய
பாத்திரத்திலிருந்து எழும்
கூரையின் வாசம்
மண் கிளறி மழையோடு
நுகர்ந்த மண்வாசமென
எல்லாவற்றோடும் விடாது
ஒட்டிக்கொண்டிருந்தது மனசு.

மனதை என்ன செய்வேன்?
அடுக்குமாடிக் கட்டிடத்தின்
மேலமர்ந்துகொண்டு
மறக்க முயற்சித்துக்கொண்டிருக்கிறேன்...

வித்யாசாகர்