கிரகங்கள் தரும் யோகங்கள் 14



ரிஷப லக்னத்துக்கு சுக்கிரனும் சூரியனும் தரும் யோகங்கள்

ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு, லக்னாதிபதியான சுக்கிரன் தனித்து நின்று தரும் பலன்களைப் பார்த்தோம். சுக்கிரனோடு சூரியன் இணைந்து ஒவ்வொரு ராசியிலும் நிற்கும்போது என்ன யோகங்கள் கிடைக்கும் என பார்க்கலாம்.

சூரியனும் சுக்கிரனும் சேர்க்கை பெறும்போது, அது வித்தியாசமான ரசாயன மாற்றத்தைத் தருகிறது. அறிவியல்ரீதியாகவே சுக்கிரன் கந்தகத்தையும், சூரியன் ஹீலியம் அணுக்களையும் குறிப்பதாகும். வாழ்க்கையில் அதீத பற்றோடும், சுகபோகங்களோடும் வாழச் செய்யும் கிரகமே சுக்கிரனாகும். வாழ்வைத் தாண்டியதொரு சக்தி உண்டு என்று சொல்வதே சூரியனாகும்.

எனவே, இந்த முரண்கள் இணையும்போது அதுவொரு விசித்திரமான பலனையே அளிக்கும். ஒன்று இந்த எல்லை... இல்லையெனில் அந்த எல்லை... இப்படி வாழ்வு முழுவதும் ஊடாட வைக்கும் அமைப்பு இது. இதையும் தாண்டி சூரியனும் சுக்கிரனும் இணையும்போது பிரபலமான யோகத்தை அளிக்கும். ஆனால், சூரியனுடைய வெளிச்சுற்றுக்கு அருகே சுக்கிரன் இல்லாமல் 26 டிகிரிக்கு அப்பால் இருக்க வேண்டும். அப்படியிருந்தால் மிகச் சிறந்த பலன்களை அளித்துவிடும். இல்லையெனில் அஸ்தங்கமும், கிரக யுத்தமும் ஏற்படும்.

இப்போது நாம் ரிஷப லக்னத்தை ஒன்றாம் இடமாகக் கொண்டு ஒவ்வொரு ராசிக்குள்ளும் இவ்விரு கிரகங்கள் நின்றால் என்ன பலனென்று பார்ப்போமா?
ரிஷப லக்னத்திலேயே சுக்கிரனும் சூரியனும் சேர்ந்திருந்தால், எல்லாவற்றிலும் வித்தியாசமான அணுகுமுறையை மேற்கொள்வார்கள். சுகாதிபதியான சூரியனோடு லக்னாதிபதியான சுக்கிரன் இணைந்திருந்தால் மருத்துவத்துறையில் ஈடுபட்டு சாதிப்பார்கள்.

இல்லையெனில் மருந்துகள் தயாரிக்கும் கம்பெனியில் முக்கிய இடத்தில் அமர்வார்கள். தாய் மற்றும் தாய்வழி உறவினர்களால் ஆறுதல் பெறுவார்கள். இவர்கள் உருவமும், பார்வையும், செயல்களும் அப்படியே தாயைக் கொண்டிருப்பதாகக் கூறுவார்கள். வாகனம் தொடர்பான தொழிலான டிராவல்ஸ், ஆட்டோமொபைல் போன்றவற்றில் கொடிகட்டிப் பறப்பார்கள். தெற்றுப்பல், சிங்கப்பல் இருக்கும். ஆன்மிகத்தில் தீவிர ஈடுபாடு காட்டுவார்கள். ஆன்மிகம் கலந்த சேவைக்கே முக்கியத்துவம் தருவார்கள்.

மிதுன ராசியான வாக்கு ஸ்தானத்தில் இவர்கள் இருவரும் நின்றால், பேச்சில் தேன் தடவிப் பேசுவார்கள். சாதுர்யமான பேச்சால் எல்லோரையும் கட்டிப் போடுவார்கள். ஆனால், மாறுகண் அமைப்போடு சிலர் பிறப்பார்கள். பழமையான விஷயங்களையும், பரம்பரையாக வந்த தகவல்களையும் சேர்த்து வைத்துக்கொண்டே இருப்பார்கள். இவர்கள் என்ன படித்தாலும் சரிதான், வரலாற்று ஆய்வில் தனித்த ஆர்வம் கொண்டிருப்பார்கள். பணவரவு நன்றாக இருக்கும்.

ஆனால், சேமிக்க முடியாதபடி ஏதேனும் செலவும் துரத்தியபடி இருக்கும். அவசரத்திற்கென்று எடுத்து வைத்த பணத்திலும் கையை வைத்து விடுவார்கள். பொதுவாகவே, என்ன காரணம் சொன்னாலும் இவர்கள் செலவாளிகள்தான். மழலைப் பருவம் முதல் பள்ளிப் பருவம் வரை திக்கித் திக்கிப் பேசுவார்கள். போகப் போக மிகச் சிறந்த பேச்சாளர்களாகவே வருவார்கள். பதினோரு வயதிலிருந்து நல்லதொரு மாற்றம் வந்தபடியே இருக்கும்.

அடுத்ததாக கடக ராசி என்பது சந்திரனுடைய வீடாகும். இது சூரியனுக்கும், சுக்கிரனுக்கும் பகை வீடாகும். ஆறு விரல், தலையில் இரட்டைச் சுழி என்று தோற்றத்தில் ஒரு வித்தியாசம் காணப்படும். இவர்கள் பற்களில் கவனம் செலுத்தி பாதுகாக்க வேண்டும். வருடத்திற்கு ஒருமுறை கண் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

அதேபோல தாயாருக்கு ஏதேனும் உடல்நிலை பாதிப்பும் இருந்தபடியே இருக்கும். ஆனால் சொந்த பிரச்னைகள், தாயாரின் உடல்நிலை பிரச்னைகளைத் தாண்டி நல்ல படைப்பாளியாக இருப்பார்கள். தான் கண்ட, கேட்ட, உணர்ந்த விஷயங்களை கதை, கட்டுரை, கவிதையாக மாற்றும் திறன் பெற்று விளங்குவார்கள். கலை, சங்கீதத்திற்காக மேடையேறவில்லை என்றாலும் சிறந்த சங்கீத விமர்சகராக இருப்பார்கள். இவர்களின் முக்கிய பிரச்னையே சோம்பேறித்தனம்தான். இதைத் தாண்டிவிட்டால் எளிதாக சாதிக்க முடியும்.

சிம்ம ராசியில் இந்த இரு கிரகங்களும் சேர்ந்திருந்தால் தாயாரை நல்ல இடத்தில் உட்கார வைத்து விடும். சூரியனின் ஆட்சி வீட்டில் சுக்கிரன் வந்து இணையும்போது, தாய்வழி உறவினர்களால் வாழ்வே உன்னதமாகும். தாயார் எவ்வழியோ வாரிசுகளும் அவ்வழியே செல்வார்கள்.

சிலர் தாயாரின் பூர்வீகத்தையே தங்களின் பூர்வீகமாக சொல்லிக் கொள்வார்கள். கல்லூரிப் பேராசிரியர், மருத்துவத்தில் இதய நோய்  சிகிச்சை நிபுணர் என பிரகாசிப்பார்கள். நகரத்தின் மையத்தில் வீடு கட்டி குடியிருக்கும் அளவிற்கு வசதியோடு இருப்பார்கள். பரம்பரையாகவே நகரத்தில் வசிப்பவர்களாகவும் இருப்பார்கள். அரசாங்கத்தில் உயர் பதவி, கலெக்டர் என உயர வாய்ப்புள்ள அமைப்பு இது. 

கன்னி ராசியில் சுக்கிரன் நீசமாக உள்ளார். நீசனான சுக்கிரனோடு சூரியனும் சேர்ந்திருக்கிறார். இந்த அமைப்பு எப்போதும் நிறைய சவால்களைக் கொடுத்துக்கொண்டே இருக்கும். சின்னச் சின்ன மனக் குழப்பங்கள் இருந்து கொண்டேயிருக்கும். அதாவது தேவையில்லாத விஷயங்களுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

மேலும், யார் என்ன பேசினாலும் அவர்களை எதிர்த்தபடியே இருப்பார்கள். கொஞ்சம் கிழிந்ததுபோல உதட்டின் அமைப்பு இருக்கும். மிதமிஞ்சிய எழுத்தாற்றல் கொண்டிருப்பார்கள். கணிதத்தில் பாண்டித்தியத்தோடு இருப்பார்கள். இவர்களின் குழந்தை குறைப் பிரசவத்தில் பிறக்கும் வாய்ப்புகளும் உண்டு.

துலாம் ராசியில் சூரியன் நீசமாகிறார். ஆனால், சுக்கிரன் ஆட்சியில் அமர்கிறார். இவர்கள் இவ்வாறு சேர்ந்திருக்கும்போது எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாததுபோல உணர வைப்பார்கள். தாயார் இருந்தும் அவருக்கு அருகே இருக்க முடியாத வாழ்க்கைச் சூழல் இருக்கும். இவர்கள் விளையாட்டுக்குக் கூட தீய பழக்கங்களை கைக்கொள்ளக் கூடாது. ஏனெனில், நடத்தையைக் குறிக்கும் இடமான நாலாம் வீட்டுக்குரிய சூரியன், ஆறாம் வீட்டிற்கு வந்து மறைகிறார். கூடவே சுக்கிரனும் உடனிருப்பதால் மிதமிஞ்சிய போகங்களை அனுபவிக்க வைத்துவிடுவார். ஒரு சிலர் தாய், தந்தையரை சிறு வயதிலேயே இழந்து விடுவார்கள்.

அல்லது தாய்வழியில் வரும் நெருங்கிய உறவினர்களால் வளர்க்கப்படுவார்கள். காலம் கடந்து, இளமை கடந்து சிலருக்கு வாழ்க்கைத்துணை அமையும். ஆராம்பத்தில் வேலை விஷயங்களில் ஸ்திரத்தன்மை இல்லாதிருந்து 41 வயதிலிருந்து ஏற்றம் கண்டு நல்லதொரு நிலையை அடைவார்கள். இந்த கிரக இணைவு முகத்தில் ஏதேனும் ஒரு வடுவை ஏற்படுத்திவிடும்.

இருப்பதிலேயே விருச்சிகம்தான் இந்த இரு கிரகங்களுக்கும் நட்பு வீடாகும். இது வாழ்க்கைத் துணைவரைப் பற்றிக் கூறும் இடமாகவும் வருவதால், மனைவி வழியில் எல்லாவித செல்வங்களையும் அடைவார்கள். சம வயதுள்ள அல்லது சில மாதங்களே இடைவெளியில் பிறந்த வாழ்க்கைத் துணை அமையும். வீடு, நிலம் என்பது போன்ற விஷயங்களை இவர்கள் மிக எளிதாக அடைவார்கள். ஊருக்கு ஒதுக்குப்புறமாக பண்ணை வீடு போன்ற இடங்களில் வசிக்க விரும்புவார்கள். இன்னும் கேட்டால் ஆடு, மாடு, தோப்பு என கிராமியச் சூழலில் வாழவே ஆசைப்படுவார்கள்.

அடுத்து தனுசு ராசியானது எட்டாம் இடமாக வருகிறது. இதில் சூரியனும் சுக்கிரனும் மறைகிறார்கள். இந்த அமைப்பு, சிறு வயதிலேயே மனரீதியாக பாதிப்புகளை ஏற்படுத்தும். தாய்வழி உறவினர்களால் வஞ்சிக்கப்படுதல், தூஷிக்கப்படுதல் என்றெல்லாம் நிகழும். பூர்வீகத்தை விட்டு வெளியேற வைக்கும்.

பின்னர் போராடி பூர்வீகச் சொத்தைப் பெற வைக்கும். தாயாருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி நேரும் அமைப்பு இதுவாகும். சிலருக்கு மூச்சுப் பிரச்னை, இதயத்தில் வலி இருப்பின் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. ஆனால், பணப் பிரச்னை இல்லாமல் மனப் பிரச்னை வந்தபடி இருக்கும்.

மகர ராசியானது இந்த லக்னத்திற்கு பிதுர் ஸ்தானத்திற்குரியதாக வருகிறது. பாக்கிய ஸ்தானமும் ஆகும். இந்த இடத்திற்கு அதிபதியாக சனி வருகிறது. இங்கு சூரியனோடு சுக்கிரன் வந்து அமர்வதால் உங்களுடைய வாழ்வின் முக்கிய நிகழ்வில் தந்தையார் பங்கெடுத்துக்கொள்ள முடியாத நிலை இருக்கும். தந்தையின் அருமையை மத்திம வயதில் உணர்வார்கள். தந்தையாரை ஜெயிக்க வேண்டுமென்ற எண்ணமே மேலோங்கியிருக்கும். ஆனால், பெற்றோரின் புண்ணிய பலன்கள் உங்களை வந்தடையும். பெரிதாக பயப்பட வேண்டாம்.

கும்பத்தில் இவர்கள் இருவரும் சேர்க்கை பெற்று அமரும்போது திட்டமிட்டு வேலைவாய்ப்பையும், தொழிலையும் அமைத்துக் கொள்வார்கள். அனுபவமில்லாத வயதிலேயே தொழில் தொடங்கி முதல் முயற்சியில் நஷ்டப்பட்டாலும், கவலைப்படாது தொடர்ந்து முன்னேறி விடுவார்கள். ஏனெனில், தொடர் தோல்விகளை இந்த அமைப்பு எப்போதுமே தராது. வெற்றிகளை அதிகம் பார்த்துவிட்டு அவ்வப்போது வரும் தோல்வியால் தன்னம்பிக்கையை இழக்க மாட்டீர்கள். எல்லாவற்றையும் எளிதாக அடைய விரும்பவே மாட்டார்கள். 

ரிஷப லக்னத்திற்கு 11வது இடமாக மீன ராசி வருகிறது. இது குரு பகவானின் இடமாகும். மூத்த சகோதரர்களைக் குறிக்கும் ஸ்தானமும் ஆகும். ஒருக்காலும் அவர்களை விட்டுக் கொடுக்கவே மாட்டார்கள். அவர்களின் எந்தக் கஷ்டமாக இருந்தாலும் உடனிருந்து உதவியபடி இருப்பார்கள். சொந்த ஜாதகத்தில் மூன்றாமிடத்தில் குரு உச்சமாகியிருந்தால் திரைத்துறையில் தனி முத்திரை பதிப்பார்கள். வீட்டிற்குள் இருப்பதை விட வெளியேயுள்ள மர நிழலைத்தான் பெரிதும் விரும்புவார்கள்.

ரிஷப லக்னத்திற்கு பன்னிரெண்டாம் இடமாக மேஷம் அமைந்து அதில் உச்ச சூரியன் மறைகிறது. கூடவே லக்னாதிபதியும் மறைந்து போவதால், என்ன நல்லது செய்தாலும் எதுவும் வெளியில் தெரியாது. இதனாலேயே இவர்கள் புலம்பியபடி இருப்பார்கள். அதனால் இவர்கள் நல்லது செய்தால் உடனே மறந்து விட்டு அடுத்த வேலையை பார்க்கத் தொடங்க வேண்டும். அப்படியிருந்தால் தர்ம ஸ்தாபனங்கள் அமைத்து நிறைய மக்களுக்கு உதவி செய்யும் அமைப்பு உருவாகும். ஆரம்பத்தில் மானுட சேவையே பெரிதென்று பேசுவார்கள்.

பின் வயதில்தான் ஆன்மிகத்தில் முழு ஈடுபாடு காட்டுவார்கள். இருபது வயதுக்குள் பல பேரால் ஏமாற்றப்பட்டும், வீண்பழி சுமத்தப்பட்டும் இருப்பார்கள். இவர்களுக்கு விவரம் தெரிந்த நாள்முதல் தாயார் ஏதேனும் ஒரு உடல்நிலை பிரச்னையால் அவஸ்தைப்பட்டபடி இருப்பார்கள். ஜாதகத்தில் சுக்கிரனும் சூரியனும் இவ்வாறு சேர்ந்திருக்கும்போது, அவை நின்ற ராசிக் கட்டங்களுக்குத் தகுந்தவாறு பலன்கள் வேறுபடும். சிலசமயம் நேர்மறை கதிர்வீச்சுக்கும், சில இடங்களில் எதிர்மறை கதிர்வீச்சுக்கும் ஜாதகர் ஆளாக வேண்டியிருக்கும்.

எனவே, அந்த பாதிப்பிலிருந்து வெளியேறவும், காத்துக் கொள்ளவும் கவசம் போல பயன்படுவதே கோயில்களாகும். எனவே, சூரியனும் சுக்கிரனும் சேர்ந்திருக்கும் இந்த அமைப்பில் பிறந்தோர், மிக நிச்சயமாக சங்கரன்கோவில் தலத்தில் அருளும் சங்கரநாராயணரையும், சங்கர லிங்கத்தையும், கோமதி அம்பிகையையும் தரிசித்து வாருங்கள்.

சங்கரரான சிவபெருமான் பொதுவாகவே வாழ்வை ஒடுக்கிக் கொண்டு செல்வார். இது ஆத்மகாரகனான சூரியனின் ஒரு அம்சமும் பணியுமாகும். ஆனால், நாராயணரோ பரிபாலிக்கக் கூடிய வாழ்வை ஏற்படுத்தக் கூடியவராவார். இது சுக்கிரனின் அம்சமும் பணியுமாகும். இவர்கள் இணையும்போது ஏற்படும் முரண்பாடான அமைப்பால் நிகழும் வித்தியாசமான பலன்களில் உள்ள பாதிப்பை இத்தலத்தை தரிசித்து நீங்கப் பெறலாம்.

(கிரகங்கள் சுழலும்...)

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

ஓவியம்: மணியம் செல்வன்