ஐஸ்க்ரீம் பிரச்னைக்கு தீர்வு என்ன?!
கவர் ஸ்டோரி
ஐஸ்க்ரீம் சாப்பிட விரும்புகிறவர்களுக்கும், அதைத் தவிர்க்க முடியாது என்று அடம்பிடிக்கும் குழந்தைகளுக்குமான சில மாற்று வழிகள் இவை. முயற்சியுங்கள்...
* ஐஸ்க்ரீம் சாப்பிட்ட உடனே உடலில் ஒருவித மந்தத்தன்மை ஏற்படும். இதனால் உணவில் நாட்டம் ஏற்படாது. மேலும் செரிமான பிரச்னைகளும் ஏற்படும். எனவே, சாப்பிட்ட பிறகு சிறிது நேரம் கழித்தே ஐஸ்க்ரீம் சாப்பிட வேண்டும்.
* வெனிலா, ஸ்ட்ராபெர்ரி, சாக்லெட், பட்டர் போன்றவற்றைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஐஸ்க்ரீம்கள் சுகாதாரமான முறையில், தரமானதாக இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியம்.
* கல்லீரலில் கொழுப்பு இருப்பவர்கள் ஐஸ்க்ரீம் போன்ற சர்க்கரை அதிகமுள்ள பொருள்கள் மற்றும் நார்ச்சத்து நீக்கப்பட்ட பொருள்களை எடுத்துக்கொள்ளக் கூடாது. இதனால் அவர்களுக்கு கல்லீரலில் மேலும் கொழுப்பு படிவதற்கு வாய்ப்பு இருப்பதால் ஐஸ்க்ரீம் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. சளி மற்றும் ஆஸ்துமா போன்ற நுரையீரல் சார்ந்த பிரச்னை உடையவர்களும் ஐஸ்க்ரீம் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.
* நிறமூட்டப்பட்ட ஐஸ்க்ரீம்களைத் தவிர்க்க வேண்டும். இதன் மூலம் நிறமூட்டிகளால் ஏற்படுகிற உடல்நல பிரச்னைகள் வருவதைத் தடுக்கலாம்.
* ஐஸ்க்ரீமை வாங்கிய உடனே சாப்பிடுவது நல்லது. ஏனெனில், ஐஸ்க்ரீம் எளிதில் உருகாமல் இருக்க Sodium benzoate அதிகம் சேர்க்கப்படுகிறது. எனவே, ஒரு குறிப்பிட்ட தட்பவெப்பநிலையில் தயாரித்து வைத்திருப்பார்கள்.
அதை வீட்டுக்கு வாங்கி வந்து சாதாரணமான குளிர்சாதன பெட்டியில் வைத்து சாப்பிட்டால் அதன் தன்மையில் நிறைய மாற்றம் ஏற்பட்டு கெட்டுப்போகத் தொடங்கிவிடும். கிருமிகள் தொற்று ஏற்படுவதற்கும் அதிகம் வாய்ப்புள்ளது. எனவே சரியான முறையில் பாதுகாத்துவைத்து உரிய நேரத்துக்குள் சாப்பிடுவதே சரியானது.
*ஐஸ்க்ரீம் வாங்கி நீண்ட நாட்கள் வைத்து சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
*ஊட்டச்சத்துள்ள சிறுதானிய ஐஸ்க்ரீம் மத்திய உணவுத் தொழில் அமைச்சகத்தின்கீழ் இயங்கிவரும் ஆராய்ச்சி நிறுவனமான இந்திய உணவுப்பதன தொழில் நுட்பக் கழகம் தஞ்சாவூரில் இயங்கி வருகிறது.
இக்கழகம் தொழில்முனைவோர் மற்றும் நுகர்வோரின் தேவைகளைக் கருத்தில் கொண்டு உணவுப் பதப்படுத்துதல் துறையில் பல்வேறு தொழில்நுட்பங்களையும் உணவுத் தயாரிப்புகளையும் உருவாக்கி வருகிறது. தற்போது இக்கழகம் பால் இல்லாமல் சிறுதானியத்தால் ஆன ஊட்டச்சத்து நிறைந்த ஐஸ்க்ரீமை தயாரித்துள்ளது.
இதில் மூளை வளர்ச்சிக்குத் தேவையான ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் செறிவூட்டப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. சுவையைக் கருத்தில் கொண்டு பல தானியங்களின் கலவையில் இந்த ஐஸ்க்ரீம் தயாரிக்கப்பட்டு உள்ளதாகவும், அதற்கு நார்ச்சத்தினை அதிகரிக்கும் வகையில் பலாப்பழத்தினால் ஆன கோன்களை உருவாக்கும் முயற்சியில் இக்கழகம் ஈடுபட்டுள்ளது.
ஊட்டச்சத்து நிறைந்த இந்த சிறுதானிய ஐஸ்க்ரீம், சமீபத்தில் டெல்லியில் நடந்த உலக உணவு மாநாட்டில் மத்திய உணவுத் தொழில் அமைச்சக அமைச்சரால் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சிறுதானிய ஐஸ்க்ரீமுக்கான காப்புரிமையை இந்திய தொழில்நுட்பக் கழகத்திடமிருந்து பெற்று வெளிச் சந்தைக்குக் கொண்டு வரும்போது, ஊட்டச்சத்து நிறைந்த ஐஸ்க்ரீம் குழந்தைகளுக்குக் கிடைப்பதோடு, சிறுதானியம் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கும் உதவியாக இருக்கும். வீட்டிலேயே ஐஸ்க்ரீம் தயாரித்து சாப்பிடுவது நல்லது. இதன் மூலம் நோயுண்டாக்கும் வேதிப் பொருட்களின் அபாயங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
பால் - அரை லிட்டர், சர்க்கரை - 200 கிராம், முட்டை - 2, வெனிலா எசன்ஸ் - 2 டீஸ்பூன், ஃப்ரெஷ் க்ரீம் - 1 டீஸ்பூன், நட்ஸ் - 50 கிராம்.
தயாரிக்கும் முறை
பாலுடன் சர்க்கரை சேர்த்து நன்றாக காய்ச்சிக் கொள்ளவும். முட்டையை Egg beater-ல் போட்டு நன்றாக அடித்துக்கொள்ளவும். இதை பாலுடன் சேர்த்து தீயை குறைத்து, திக்கான பதம் வரும்வரை அடுப்பில் வைத்து, பிறகு கீழே இறக்கி ஆறவிடவும். இந்தக் கலவையை திரும்ப முட்டை பீட்டரில் போட்டு நன்றாக அடித்துக் கொள்ளவும்.
இத்துடன் வெனிலா எசன்ஸ், நட்ஸ் மற்றும் பிரெஷ்ப்ரூட்ஸ் சேர்த்து மீண்டும் அடித்து கலக்கி சிறிய பாத்திரங்களில் ஊற்றிக் கொள்ள வேண்டும். இந்தக் கரைசலை குளிர்சாதன பெட்டியில் வைத்து சிறிது நேரம் கழித்து எடுத்தால் சுவையான, தரமான ஐஸ்க்ரீம் ரெடி.
தொகுப்பு : எம்.வசந்தி
|