அயல்நாட்டுப் பெண்களின் ஆபரணங்கள்



இன்றைய நவீன காலகட்டத்தில் இளம் பெண்களின் நடை உடை பாவனை அனைத்தும் நாளுக்கு நாள் மாற்றமடைந்து  வருகின்றன. இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் புதிதாக அறிமுகமாகும் ஆடை வடிவமைப்புக்களில்  மாத்திரம் பெண்கள் கொண்டிருந்த மோகம், இன்று சகல விதமான அணிகலன்கள் வரையிலும் வியாபித்துள்ளது.  இன்றைய நவீன இந்தியாவின் இளம் பெண்களே மைல்டான நகைகள் அணிவதைதான் அதிகம் விரும்புகின்றனர்  என்றால் வெளிநாட்டு பெண்களைப் பற்றி கேட்கவே வேண்டாம்.வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் அதிகம் நகைகள்  போடுவதை அவ்வளவாக விரும்புவதில்லை. அதிலும் தங்க நகைகளை பெரிதாக அவர்கள் விரும்புவதே இல்லை.

கல்யாணத்தின்போது வைர மோதிரம் அணிகிறார்கள். வைரம் இல்லாத போது பலவிதமான மலிவான,  ஆனால்  தரமான உலோகங்களில் (காப்பர் உட்பட) செய்யப்பட்ட ஆபரணங்களைக் கூட ஃபேஷனாக அணிந்து கொள்கிறார்கள்.  வைர நகைகளுக்கு முதலிடம் கொடுக்கும் அவர்கள் அடுத்ததாக ஒயிட் மெட்டல் மற்றும் பிளாட்டினம் போன்றவற்றிற்கு  அதிகம் முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

பார்ட்டிகளுக்குக் கூட அதிகமாக நகை அணிய மாட்டார்கள். மைல்டாக  அணிந்துதான் இருப்பார்கள். மெல்லியதாக  வைர நெக்லஸ் மற்றும் மெல்லிய வைர ப்ரேஸ்லெட் என்று தான் அணிகிறார்கள்.ஒரு சிலர் ஃபேன்ஸியான  விதவிதமான ப்ரேஸ்லெட் அணிகிறார்கள். சிங்கிள் பேங்கிள்ஸ் அணிகிறார்கள்.காதணிகளுக்குத்தான் அவர்கள் அதிகம்  முக்கியத்துவம் கொடுக்கின்றனர். குட்டி நகைகள் துவங்கி நீளமான நகைகள் வரை அணிகிறார்கள். சிங்கிள் ஸ்டோன்  நகைகள் அணிகிறார்கள். வைரத்தில் ஒற்றைக்கல் வைத்தவை. அதிலும் க்ளோஸ் கட்டிங், ஓபன் கட்டிங் என  இருவகையாக  நகைகளை அணிகின்றனர். ஓப்பன் கட்டிங்கை தான் அதிகம் விரும்புகின்றனர். காரணம் அதில்  பேக்ரவுண்டாக இருக்கும் தங்கம் வெளியே அவ்வளவாக தெரியாது.

காதில் செயற்கை நகைகள் அணிவதையும் வெளிநாட்டு பெண்கள் விரும்புகிறார்கள். அதிலும் லாங் டிராப்ஸ் எனப்படும்  நீளமாக தொங்கும் காதணிகளை அதிகம் விரும்புகிறார்கள். நம் ஊரில் வளையல் மேளா நடப்பது போல அங்கே இந்த  மாதிரி லாங் டிராப்ஸ்க்கென மேளா நடக்கிறது. அதில் வைரம், பிளாட்டினம் முதல் செயற்கை நகைகள் வரை  இருக்கும். அதில் பீட்ஸ்(மணிகள்) மற்றும் கிரிஸ்டல் (பளிங்கு கற்கள் )வைத்தது அவர்களை அதிகம் கவர்கிறது.செயற்கை வைரக்கற்களும் விற்கிறார்கள். அது தங்கத்தை விட விலை அதிகம். ஆனால் வைரத்தை விட விலை  குறைவு. நைட் பார்ட்டிகளுக்கு போட்டுச் செல்லும் போது வைரம் போன்ற ஜொலி ஜொலிப்பைக் கொடுப்பதுதான் இதன்  சிறப்பு. ஃபேஷன் பார்ட்டிகளுக்கு இதை விரும்பி அணிகின்றனர்.

பட்டன்களிலும் ஃபேன்ஸி மற்றும் மெட்டல்கள் பயன்படுத்துவதை விரும்புகிறார்கள்.சில பெண்கள் நீளமான (அதாவது  தொப்புள் வரை நீளமான) மெல்லிய சங்கிலிகளை விரும்பி அணிகின்றனர். முதல் வரிசை கழுத்தை ஒட்டினாற்  போலவும் இரண்டாவது வரிசை வெகு நீளமாகவும் இரட்டையாகவும் அணிகின்றனர். கலர் கலரான செயின்களை  அணிகிறார்கள். அவை நம்மூரில் சின்ன சின்ன மார்க்கெட்டுகளில் கிடைப்பது போல அங்கே எளிதாக கிடைக்கும்.  விதவிதமான வடிவங்களிலும் நிறங்களிலும் கிடைக்கும் அலங்கார ஆபரணங்களை அணிவதில் பெண்கள் அதிக ஆர்வம்  காட்டுவதற்கு முதன்மையான காரணம் அவற்றின் நவீன வடிவமைப்புகள் தான்.

தங்கம், வெள்ளி போன்ற தூய உலோகங்களில் செய்யப்படும் நகைகள் கொண்டிராத பல தனித்துவமான அலங்கார  வடிவமைப்புக்களை நவீன அலங்கார நகைகளில் காணமுடியும். அடுத்தது, தேவைக்கும் வசதிக்கும் ஏற்ற வகையில்  இந்த நகைகளைத் தாராளமாக வாங்கி வைத்துக் கொள்ள முடியும். நாகரிக மாற்றத்துக்கேற்ப தமது தோற்றத்தையும்  மேம்படுத்திக் காட்ட விரும்பும் தற்கால யுவதிகளுக்கு மிகவும் பொருத்தமான அணிகலன்களாக இவை இருப்பதால்  வெளிநாட்டுப் பெண்களும் இதனை விரும்பி அணிகின்றனர்.

இலங்கையின் ‘ரூபி’, ‘சஃபயர்’ ஆகிய ரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட அலங்கார நகைகளை உள்நாட்டவர்களும்  வெளிநாட்டவர்களும் முன்வந்து வாங்கி ரசித்து அணிகின்றனர்.அதிக கனம் இல்லாத நகைகளையே வெளிநாட்டவர்கள்  விரும்புகின்றனர்.சிலர் ஃபேஷனுக்காக உதட்டில் இரண்டு பக்கமும் காது குத்துவது போல் ஸ்நேக் பைட் என ஹோல்  போட்டுக்கொண்டு சிறு வளையங்களையோ, மூக்குத்திப் போன்ற சிறுசிறு அணிகலன்களையோ அணிகின்றனர். ஹிப்பி  என்று அழைக்கப்படுபவர்கள் தொப்புளிலும் இது போன்று ஹோல் போட்டுக்கொண்டு அங்கேயும் நகைகள் அணிந்து  கொள்கின்றனர். ஆனாலும் வெளிநாட்டவர்கள் பெரும்பாலும் நகைகளை விட டாட்டூக்களை பெரிதும் விரும்புகின்றனர்  என்பதே உண்மை.

- சரஸ்வதி ஸ்ரீனிவாசன்