சண்டைன்னா எங்களுக்கு சர்க்கரைப் பொங்கல்!



தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களாக வலம் வந்து, தமிழ்நாட்டின் ஆட்சியையே பிடித்துவிடலாம் என்கிற அளவுக்கு உச்சநட்சத்திரங்களை உருவாக்கியவர்கள் யார் தெரியுமா?

ஸ்டன்ட் கலைஞர்கள்தான்.நம்மால் சிலாகிக்கப்படும் ஹீரோக்கள் பலரின் ரிஸ்க்கான சண்டைக் காட்சிகளுக்கு டூப் போட்டவர்களாக இவர்கள்தான் இருப்பார்கள். ஹீரோவின் வீரத்தை பறைசாற்றுவதற்காக அவர் சுண்டுவிரலை அசைத்தாலே, முப்பதடி தூரத்துக்குப் பறந்து போய் விழுவதும் இவர்கள்தான்.

இவர்கள் இல்லையேல் ஹீரோக்கள் இல்லை. ரசிகர்களை சுவாரஸ்யப் படுத்தும் ‘டிஷ்யூம்... டிஷ்யூம்...’ இல்லை. அடுத்து வரும் பக்கங்களில் சமகால தமிழ் சினிமாவின் மாவீரர்களைத்தான் பார்க்கப் போகிறோம். அவர்களைப் பற்றி அவர்களே சொல்வார்கள்.

பிரபு சந்திரசேகர்

‘‘எங்க அப்பா சந்திரசேகர் ஒரு ஸ்டன்ட் ஆர்ட்டிஸ்ட்டா முப்பது வருஷம் சினிமாவில் ட்ராவல் பண்ணியிருக்கார். ஸ்டன்ட் யூனியன்ல ‘ஊமை விழிகள்’ சந்திரசேகர்னா எல்லாருக்குமே தெரியும். நான் ஃபைட் மாஸ்டரா வரணும்ங்கறது அப்பாவோட  கனவு.

எலெட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்ல டிப்ளமோ படிச்சு முடிச்சிருக்கேன். எங்க அப்பா எப்பவும் சினிமா பத்தி நிறைய விஷயங்கள் சொல்லிட்டே இருப்பார். டி.வி.யில நான் ஏதாவது ஒரு படத்தை பார்க்கும்போது கூட, ‘அது ரேம்பிங் ஷாட்.... அது மான்டேஜ் ஸாங்’னு சொல்லி எனக்குள் ஒரு ஆசையை விதைச்சிட்டே இருப்பார்.

சூப்பர் சுப்பராயன் மாஸ்டரோடதான் எங்க அப்பா ட்ராவல் ஆனார். அதனால நானும் என்னோட கேரியரை சூப்பர் மாஸ்டரிலிருந்து தொடங்கினேன். என்னோட பதிமூணு வருஷ ஸ்டன்ட் அனுபவத்தில் டூப் ஆர்ட்டிஸ்ட்டாகத்தான் அதிகம் ஒர்க் பண்ணியிருக்கேன். சல்மான், மம்மூட்டி சார், அஜித் சார்னு நிறைய பேருக்கு டூப் போட்டிருக்கேன்.

மம்மூட்டி சார் - அனல் அரசு காம்பினேஷன் படங்கள்ல எல்லாம் நான்தான் டூப். அஜித் சாருக்கு ‘அட்டகாசம்’, ‘ஏகன்’, ‘வீரம்’ல டூப் போட்டிருக்கேன். பொதுவா டூப் ஆட்களுக்கு ரிஸ்க்கான ஃபைட், ஸ்டன்ட், சேஸிங் சீக்குவென்ஸ்ல எல்லாம் சான்ஸ் தரமாட்டாங்க. பைக்ல விழுந்து கால், கை முறிஞ்சிட்டால், அப்புறம் அந்தப் படத்துக்கான ஆல்டர்னேட் டூப் கிடைக்கறது கஷ்டமாகிடும்னு, மாஸ்டர்ங்க வேற ரிஸ்க் எடுக்க வைக்க விட மாட்டாங்க. விஜயன் மாஸ்டரோட பையன் சபரீஷோட ‘பாண்டி ஒலிபெருக்கி நிலையம்’ல நான் வில்லனா நடிச்சிருக்கேன்.

அந்தப் பட ஷூட்டிங்கில் க்ளைமாக்ஸ் சீன் எடுக்கும்போது மேல இருந்து கீழே குதிக்கற சீன் எடுக்கும்போது அது சரியா வரலை. மறுபடியும் மறுபடியும் ராசுமதுரவன் சார் ரீடேக் எடுத்திட்டிருந்தார். ‘அவன் பாவம்ப்பா, எத்தனை டேக்தான் எடுத்துட்டிருப்பீங்க..’னு யூனிட்ல உள்ளவங்க சொன்னாங்க. உடனே நான், எத்தனை டேக்னாலும் கீழே குதிக்க ரெடியா இருக்கேன் சார்.

நான் டூப் ஆர்ட்டிஸ்ட்டா இருக்கும்போது, நான் கீழே குதிக்கும்போதெல்லாம் என் முகம் தெரியக்கூடாது’னு சொல்லி குதிக்க வைப்பாங்க. நீங்க என் முகம் பளிச்சினு தெரிய வைக்க கஷ்டப்படுறீங்க.. நூறு டேக்னாலும் கீழே குதிக்க ரெடியா இருக்கேன் சார்’னு ராசுமதுரவன் சார்கிட்ட சொன்னேன். அவர் நெகிழ்ந்துட்டார். படத்தோட பிரஸ்மீட்லேயும் அதைச் சொல்லி ஆச்சரியப்பட்டார்.

பெப்சி விஜயன், அனல் அரசு, அன்பறிவ், திலீப்னு நிறைய மாஸ்டர்கள்கிட்ட அசிஸ்டென்ட்டாகவும் ஒர்க் பண்ணிட்டேன். 13 வருஷ அனுபவத்தோடு இப்போ கலையரசன் நடிச்ச ‘உரு’ மூலம் மாஸ்டரானேன். அடுத்து தமிழ்ல ரெண்டு, மலையாளத்துல ஒண்ணுன்னு மாஸ்டர் ஒர்க் பண்ணிட்டிருக்கேன்.”

டேஞ்சர் மணி

‘‘சின்ன வயசில இருந்து எனக்கு மியூசிக்லதான் ஆர்வம். ஒரு ட்ரூப்ல கீபோர்டு பிளேயரா இருந்திருக்கேன்.... நான் ஸ்டன்ட் பக்கம் திரும்பினது எதிர்பாராமல் நடந்த விஷயம்.ஒரிஜனல் பெயர் மணிகண்டன். அப்பா பெருமாள், ஸ்டன்ட்மேன். நான் பெரிய ஃபைட் மாஸ்டர் ஆகி, நிறைய அவார்டுகள் வாங்கிக் குவிக்கணும்னு அப்பா விரும்பினார்.

ரணங்களும், வலிகளும் நிறைந்த ஒரு துறையில் ஈடுபட எனக்கு விருப்பமில்ல. அதனால இசையில்தான் எனக்கு ஆர்வம் அதிகமாச்சு. ஆனா, எங்க அப்பாவோட மறைவுக்குப் பிறகு, என்னோட கனவையும், ஆசைகளையும் தூக்கி எறிஞ்சிட்டேன். அவரோட கனவை நிறைவேத்த முடிவு பண்ணினேன். ஒரு ஸ்டன்ட் ஆர்ட்டிஸ்ட்டா என் கேரியரைத் தொடங்கினேன். 50 மாஸ்டர்கள்கிட்ட நான் ஒர்க் பண்ணியிருப்பேன்.

ஸ்கிரீன்ல ஒரு ஃபைட்டரா 450 படங்கள்ல வந்திருப்பேன். உதவி மாஸ்டரா 150 படங்கள் வேலை பார்த்திருக்கேன். ஃபைட்டரா ‘உயிர்’ படத்தில அறிமுகமானேன். மாஸ்டரா ‘பேய்கள் ஜாக்கிரதை’யில் அறிமுகமானாலும் ‘முன்னோடி’கள்ல நல்ல பெயர் கிடைச்சது.

இந்தத் துறையில் ரிஸ்க் அதிகம்னு எல்லாருக்குமே தெரியும். விஷாலோட ‘மலைக்கோட்டை’ படத்துல அவரோட காம்பினேஷன் ஷாட். ஃபைட் சீக்குவென்ஸ்ல சின்ன ஆக்ஸிடென்ட் ஆகிடுச்சு. அதுல விஷால் சாருக்கும் லேசான காயம். யூனிட்ல எல்லாருமே, ‘எவ்வளவு டேஞ்சரான ரிஸ்க்.... யார் அத பண்ணினாங்க?’னு கேட்க, எல்லாருமே என் பெயரை சொன்னாங்க. ஆனா, விஷால் சாருக்கு இந்த விஷயம் தெரியாது. இனிமே டேஞ்சர் ஷாட்ல எல்லாம் நானே ஈடுபட்டு, எனக்கு ஏற்பட்டுள்ள அவப்பெயரை துடைக்கணும்னு நினைச்சேன்.

ஷூட்டிங்ல மத்தவங்க ரிஸ்க் எடுக்க தயங்குற விஷயங்களை தேடிப்போய் முதல் ஆளா பண்ண ஆரம்பிச்சேன். எனக்கு டேஞ்சர் மணினு நல்ல பெயர் கிடைச்சது. சில வருஷங்களுக்குப் பிறகு ‘மதகஜராஜா’ ஷூட்டிங்கின்போது, விஷால் சார்கிட்ட இந்த விஷயத்தை சொன்னேன். அவருக்கு சந்தோஷம். ‘பெரிய ஆளா வாங்க மணி’னு வாழ்த்தினார். நிறைய ஹீரோக்களுக்கு டூப் போட்டிருக்கேன்.

‘லிங்கா’வில் அசிஸ்டென்ட் மாஸ்டரா இருந்த போது, பாராசூட்டை ரஜினி சார் எகிறிப் பிடிக்கற ஷாட் எடுத்திட்டிருந்தாங்க. ரஜினி சாருக்கு டூப் போடக்கூடியவர் அதுக்கு செட் ஆகலை. ‘டேஞ்சர் மணிதான் இருக்கானே’னு திடீர்னு ரஜினி சார் காஸ்ட்யூமை என்கிட்ட குடுத்து டூப் போடச் சொன்னாங்க. சந்தோஷமா இருந்தது.

‘லிங்கா’வில் ஃபைட் சீக்குவென்ஸ் எடுக்கும்போது கீழே குதிக்கும்போது முதுகுத்தண்டுல அடி. ‘வேற ஒருத்தர வச்சு எடுத்துக்கலாம்’னு மாஸ்டர் சொன்னார். ஆனா, வலியை பெருசா நினைக்காம, அதை நானே பண்ணினேன். கிட்டத்தட்ட 9 மொழிகள்ல ஒர்க் பண்ணிட்டேன். இப்போ மாஸ்டரா 19 படங்கள் பண்ணிட்டேன். அப்பா கனவுல பாதியை நிறைவேத்திட்டேன். எனக்கு ஒரு அவார்டு கிடைச்சா, என் லட்சிய டார்கெட்டை அடைஞ்சிடுவேன்.’’

விமல் ராம்போ

‘‘பூர்வீகம் தஞ்சாவூர். நான் சின்ன வயசில இருந்து சென்னைல தான் இருக்கேன். எங்க தாத்தா, மாமா ரெண்டு பேருமே ஃபைட் மாஸ்டர்ஸ்தான். நான் ஸ்கூல் படிக்கும்போதே, ஜைஜான்டிக்கா இருப்பேன். போலீஸ் ஆகணும்னு ஆசைப்பட்டேன். அதுக்கான முயற்சியில இருக்கும்போது, எங்க மாமா ராம்போ ராஜ்குமாரோட ஷூட்டிங் பார்க்கப் போனேன். அங்கே அவர் ஃபைட் சீன் முடிச்சதும், ஹீரோல இருந்து சுத்தி நின்ன அத்தனைபேரும் பாராட்டுனாங்க. அதைப் பார்த்ததும் எனக்கும் இந்தத் துறை மேல ஆசை வந்தது. ஆனாலும் அதை வெளிக்காட்டிக்காமல் போலீஸ்காரனாக உடலை தயார் படுத்துற வேலையில இருந்தேன்.

அப்போதான் எங்க மாமா சொன்னார், ‘ஃபைட்டரும் நல்ல ஃபீல்டுதான். நீ இதுல இறங்கிப் பாரு.... பிடிக்கலைன்னா நீ இஷ்டப்பட்டது மாதிரியே போலீஸா போ’னு அட்வைஸ் பண்ணினார். ராஜசேகர் மாஸ்டர், கனல்கண்ணன் மாஸ்டர்னு நிறைய மாஸ்டர்கள்கிட்ட ஒர்க் பண்ணினேன். இந்தத் துறை மீது ஆர்வம் அதிகமாச்சு. ஸ்டன்ட்மேனா முந்நூறு படங்கள் கடந்திருப்பேன். ‘பேராண்மை’யில ஜெயம்ரவி, ‘ஆயிரத்தில் ஒருவன்’ல கார்த்தி, பார்த்திபன்னு டூப் போட்டேன்.

ஆனா, வில்லன்களுக்குத்தான் அதிகம் டூப் போட வச்சாங்க. நான் ஃபைட்டரா இருக்கும்போது ஜான், ஞானம், வேல்னு மூணு நண்பர்கள் என்னை என்கரேஜ் பண்ணிட்டே இருப்பாங்க. எனக்கு ஒரு ஆபத்துனா, அவங்க வந்து தாங்கிப் பிடிப்பாங்க. இப்போநான் மாஸ்டர் ஆனதும் அவங்கள என் அசிஸ்டென்ட்டாக கூடவே வச்சிருக்கேன். அசிஸ்டென்ட் மாஸ்டரா மூணு வருஷம் ஒர்க் பண்ணியிருக்கேன். அந்த அனுபவத்தோட தெலுங்குல மாஸ்டரானேன். ‘டிமான்டி காலனி’ அஜய்ஞானமுத்து தமிழ்ல என்னை மாஸ்டரா அறிமுகப்படுத்தினார். ‘யாவனும் தீயவன்’, ‘பீச்சாங்கை’னு என்னோட ட்ராவல் நல்லபடியா போயிட்டிருக்குது சார்.’’

ஸ்டன்னர் சாம்

‘‘சாஃப்ட்வேர் துறையில சாதிக்கணும்னு மல்டி மீடியாவில் டிப்ளமோ முடிச்சேன். எங்க அப்பா தம்புராஜ் ஃபைட்டர். அண்ணன் மைக்கேல்ராஜ் ஃபைட் மாஸ்டர். அதனால நானும் உடம்பை கச்சிதமா வச்சுக்க ஜிம்னாஸ்டிக் கத்துக்கப் போனேன். அப்படித்தான் எனக்கு இந்தத் துறை மீது ஆர்வம் வந்தது. அப்படியே சிலம்பம், ஹார்ஸ் ரைடிங்னு ஒரு புரொஃபஷனல் ஃபைட்டருக்கு தேவையான அத்தனை விஷயத்தையும் கத்துக்கிட்டு ஃபைட்டரா களம் இறங்கினேன்.

பீட்டர் ஹெயின் மாஸ்டரோட அசிஸ்டென்ட் நான். பதினான்கு வருஷம் ஃபைட்டரா இருந்திருக்கேன். பீட்டர் மாஸ்டர்கிட்ட ஒர்க் பண்ணும் போது அவரோட ஹீரோக்கள் பலருக்கும் டூப் போட்டிருக்கேன். விஜய் சாரோட பல படங்களல நான் டூப் போட்டிருக்கேன். ‘திருமலை’, ‘தலைவா’, ‘ஜில்லா’னு அவரோட ஒர்க் பண்ணிணதில் அவர் மனசில நானும் இடம்பிடிச்சிட்டேன்.

உயிருக்கு ஆபத்தான ஒரு சீன்ல ஹீரோவே நடிச்சா, அப்புறம் அவருக்கு எதாவது ஆச்சுனா, படப்பிடிப்பு பாதிக்கும், படமும் பாதிக்கும் என்பதால் மாஸ்டர்களே அந்த ஷாட்ல டூப் பயன்படுத்திக்கலாம்னு எங்கள டூப் போட வைப்பாங்க. ‘சிவாஜி’, ‘எந்திரன்2’ல அசிஸ்டென்ட்டா ஒர்க் பண்ணியிருக்கேன். ‘சிவாஜி’ படத்தோட எடிட் ஷூட் முடிச்சிட்டு  நைட்ல வீடு திரும்பும் போது ஆக்ஸிடென்ட் ஆச்சு. பயங்கரமா பாதிக்கப்பட்டேன். ஒன்றரை வருஷமா ஆஸ்பத்திரியே கதின்னு இருந்தேன்.

‘சாம் இனி அவ்ளோதான்.... முடிஞ்சு போச்சு....’னு என் காது படவே சொன்னாங்க. ரஜினி சாரே என்னைப் பத்தி கேள்விப்பட்டு, என்னைக் கூப்பிட்டு அனுப்பினார். எனக்கு செயின் பரிசளிச்சு, நம்பிக்கை கொடுத்தார். கடவுள் அருளால மறுபடி யும் உடல்நலமாகி மீண்டு வந்தேன். ஒரு தடவை பெரிய ஆக்ஸிடென்ட் ஆனதாலோ என்னவோ உயிர்மீதான பயம் போச்சு. மறுபடியும் ஃபைட்டரா ஆனேன். ‘அலெக்ஸ் பாண்டியன்’ல டிரெயின் ஷாட்ல 200 அடிக்கு மேல குதிக்கற சீன். கார்த்தி சாருக்கு டூப் போட்டிருந்தேன். அவரே, ‘சார் வேண்டாம் சாம்.... ரிஸ்க் எடுக்காதீங்க’னு சொன்னார்.

ஆனாலும் ரிஸ்க் எடுத்தேன். நான் டூப் போட்டால் பைக், ஹார்ஸ் எதுனாலும் எல்லாத்துலேயும் ஸ்கோர் பண்ணுவேன். இறங்கி வேலை பார்ப்பேன். தெலுங்குப் படத்துக்காக லடாக் போயிருந்தேன். ஆக்ஸிஜன் குறைவான பகுதி அது. கார் அப்படியே மணல்ல கவிழுற சீன். அதை பண்ணினேன். நிறைய பாராட்டு. வருங்கால இயக்குநர் நண்பர் மாதவன் தான், ‘ஸ்டன்னர்’னு எனக்கு அடைமொழி கொடுத்தார். சினி மேனேஜர் சுந்தர்ராஜன் சார்தான் ‘உனக்கு அப்புறம் வந்தவங்க கூட மாஸ்டர் ஆகிட்டாங்க.

கண்டிப்பா நீ மாஸ்டராகணும்’னு சொல்லி ‘இறுதிச்சுற்று’ வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார். மாஸ்டரா அறிமுகமான முதல் படம் அது.  தமிழ், தெலுங்கு, இந்தினு எல்லாத்திலும் ஒர்க் பண்ணினேன். பாராட்டுகளும், விருதுகளும் குவிஞ்சது. 22 படங்கள் பண்ணிட்டேன். இப்போ ‘நெஞ்சம் மறப்பதில்லை’ல ஒர்க் பண்ணியிருக்கேன்.”

தினேஷ் சுப்பராயன்

‘‘ஆக்‌சுவலா என்னோட அண்ணன், ‘ஆரண்ய காண்டம்’ல கோ-டைரக்டராகவும், நான் உதவி இயக்குநராகவும் ஒர்க் பண்ணினோம். டைரக்‌ஷனை தள்ளி வச்சுட்டு, திலீப் அண்ணன் மாஸ்டரானதும் நானும் ஃபைட்டரா ஆகிட்டேன். ஃபைட்டரா இருந்தபோது நிறைய விஷயங்களைக் கத்துக்கிட்டேன். ‘ஐ’ல ஒர்க் பண்ணும்போது ஒரு சின்ன ஆக்ஸிடென்ட். ஆஸ்பிட்டல் போனால், ‘ஃபைட்டர்களுக்கு இன்ஸூரன்ஸ் க்ளைம் பண்ண முடியாது. அப்புறம் ஏன் சார் இவ்வளவு ரிஸ்க் எடுக்குறீங்க?’னு கேட்டாங்க.

எங்க வீட்ல உள்ளவங்க ‘நீ இனிமே டைரக்‌ஷன்ல கவனம் செலுத்து’னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. ஆனா, அதையெல்லாம் காதுல வாங்கிக்காமல் தொழில் மீது கவனம் செலுத்தினேன். சமீபத்தில் கூட கவுண்டமணி, செந்தில் ரெண்டு பேரோட படங்கள்லேயும் ஒர்க் பண்ணினேன். ரெண்டுபேருமே அப்பா, அண்ணனோட ஒர்க் பண்ணினவங்க. ‘அடுத்த தலைமுறையோடவும் ஒர்க் பண்றேன்ப்பா.... நல்லா இரு’னு கவுண்டமணி அண்ணன் சந்தோஷப்பட்டார். ‘8 தோட்டாக்கள்’ கணேஷும் நானும் நண்பர்கள். அவரோட ஷார்ட் ஃபிலிம்லேயும் ஒர்க் பண்ணியிருக்கேன்.

அதன்பிறகு அண்ணனோட ‘தெறி’, ‘கொம்பன்’னு ஒர்க் பண்றப்போதான், ‘நீ மாஸ்டராகிடு’னு சொல்லி தனியா பண்றதுக்கான தன்னம்பிக்கையைக் குடுத்தார். மலையாளத்தில் துல்கர் சல்மான் கெஸ்ட் ரோல் பண்ணின ‘பறவா’ மூலம் மாஸ்டரானேன். அடுத்தும் அங்கே தான். கீதுமோகன்தாஸ் இயக்கத்தில் நிவின்பாலி நடிக்கும் ‘மூத்தோன்’லேயும் ஸ்டன்ட்ஸ் பண்ணியிருக்கேன். நான் மாஸ்டரானதில் அப்பாவுக்கும் ரொம்ப சந்தோஷம். பொதுவா அவர் யாருக்கும் அட்வைஸ் பண்ண மாட்டார்.

‘உன் வாழ்க்கையை நீ பாத்துக்கோ’னு சிம்பிளா ஒன்லைனா சொல்லுவார். அதிலேயே ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும். ஆனா அண்ணன் அப்படியில்ல. ‘ஆர்ட்டிஸ்ட்டுகள் சௌகரியமா இருந்தால்தான் நாம சௌகரியமா இருக்க முடியும். ஸோ, அவங்க பாதுகாப்பு ரொம்ப முக்கியம்ப்பா’னு அட்வைஸ் பண்ணினார். அந்த உண்மையை நானும் உணர்ந்திருக்கேன்.’’

- மை.பாரதிராஜா