டூர் போறீங்களா?



உலக நாடுகளில் காற்று மாசுபாடு மிக முக்கிய பிரச்னையாக மாறிவருகிறது. குறிப்பாக தில்லி, மும்பை போன்ற நகரங்களில் காற்று மாசுபாடு மிக மோசமான நிலையில் உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனால் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். சுவாசப் பிரச்னை போன்ற தீவிர உடல் பாதிப்புகள் தாக்குகின்றன.
வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை, பொருட்கள் எரிப்பு, தொழிற்சாலைகள் உள்பட பல்வேறு காரணங்களால் காற்று மாசு ஏற்படுகிறது என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம்.அதனால் நாம் இருக்கும் பகுதியிலும் நம்மைச் சுற்றியுள்ள பகுதியிலும் காற்றின் தரம் குறித்து அறிந்து கொள்வது அவசியமாகிறது.

உடனே மாநகரங்களுக்கு நாங்கள் டூர் செல்லவில்லை... மலைப்பகுதிகள் அல்லது இயற்கையான வாழிடங்களுக்குதான் செல்கிறோம்... எங்களுக்கு எதற்கு காற்று மாசு குறித்த விவரம்... என அலட்சியமாக இருக்க வேண்டாம்.எந்த இடத்துக்கு செல்வதாக இருந்தாலும் அந்த இடத்திலுள்ள காற்றின் மாசு அளவை அறிவது அவசியம்.ரைட். எப்படி அறிவது..? நாம் டூர் செல்லும் பகுதியில் காற்று மாசு இருக்கிறது என்பதை எப்படி நாம் தெரிந்து கொள்வது..? நாம் செல்லும் ஊரிலுள்ள ஒருவரையும் நமக்குத் தெரியாதே... எப்படி, யாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விவரங்களை கேட்பது..?

நல்ல வினாக்கள்தான். இதற்கான விடை சிம்பிள். யாரையும் செல்போனில் தொடர்பு கொண்டு எதையும் கேட்க வேண்டாம். மாறாக செல்போனை வைத்துக் கொண்டு நிலவரத்தை அறியலாம்!தலையைச் சுற்றுகிறதா? ஜாங்கிரி பிழியவில்லை. செல்போன் வழியாக யாரையும் தொடர்பு கொள்ள வேண்டியதில்லை. மாறாக செல்போன் இன்டர்நெட் கனெக்‌ஷன் வழியாக கூகுள் மேப்ஸ் செயலி மூலம் எளிதாக அறிந்து கொள்ளலாம்.

முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் கூகுள் மேப்ஸ் செயலியை ஓபன் செய்து கொள்ளுங்கள்.அடுத்து உங்கள் ஸ்மார்ட்போனில் லொகேஷன் ஆன் செய்து கொள்ளுங்கள்.
லொகேஷன் ஆன் செய்தால் நீங்கள் இருக்கும் இடத்தை செயலியே கண்டறிந்து கொள்ளும். அல்லது வேறு இடத்திற்கு காற்றின் தரம் பற்றி பார்க்க வேண்டும் என்றால் search barல் குறிப்பிட்டு தேடவும்.இப்போது வலப்புறத்தில் உள்ள Layers ஐகானை கிளிக் செய்யவும்.அதில் Air Quality என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.அவ்வளவுதான்! இப்போது நீங்கள் குறிப்பிட்ட பகுதியின் காற்றின் தரம் குறித்து தகவல் கிடைக்கும்.

காம்ஸ் பாப்பா