மரக்கோணியும் நயினாரும்





நயினார் தன்னுடைய பழைய ரேடியோவைத் தட்டிப் பார்த்தார். தலை கீழாகக் கவிழ்த்துப் பார்த்தார். ம்ஹும்... எதற்கும் அது மசியவில்லை. அந்தக் கருவி கம்மென்றிருந்தது அவருக்குத் தன்னைச் சுற்றிய உலகமே மௌனமாகிவிட்டாற் போலத் தோன்ற, திகைத்துப் போனார்.

நயினாருக்கு வயது எழுபதும் இருக்கலாம், அதற்கு மேலும் இருக்கலாம். நெல்லை விவசாயிகளுக்கே உரித்தான, உழைத்து உழைத்து உரமேறிய உடல். அரையில் ஒரு வேட்டி, மேலே நைந்து பழசாகிப் போன சிவப்புத் துண்டு. ஊருக்கோ இல்லை வேறு விசேஷங்களுக்கோ போகும்போது போட்டுக்கொள்ள இரண்டே இரண்டு சட்டை. அவருடைய ஒரே கெட்ட பழக்கம் ரேடியோ கேட்பதுதான். இது ஒரு கெட்ட பழக்கமா என்று உங்களுக்குத் தோன்றலாம். ஆனாலும் 24 மணி நேரமும் கூடவே வைத்திருந்து அதனுடனே உண்டு உறங்கி வந்தால், அது கெட்ட பழக்கத்தோடு சேர்த்தி என்பது நயினாரின் மனைவி இசக்கியம்மாளின் நினைப்பு.

நயினாருக்கு எது இருக்கோ இல்லையோ, ரேடியோ சத்தம் கண்டிப்பாக வேண்டும். அது நேயர் விருப்பமோ, விவசாய நிகழ்ச்சியோ, இல்லை... உடல் ஆரோக்கியம் சம்பந்தமான நிகழ்ச்சியோ, சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். அது பாட்டுக்கு அது, மனிதர் பாட்டுக்கு தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருப்பார் என்றால் அதுவும் இல்லை.
‘கல்யாண வளையோசை கொண்டு...’ என்று அது பாடும்போது, கூடவே அனுபவித்துப் பாடுவார். ஆனால், பாவம்... குரல் ஒத்துழைக்காது. அது மட்டுமல்ல, அவருக்குப் பாடவும் வராது. அதனால் அவருடைய இந்த நேயர் விருப்ப நேரத்திற்கு வீட்டில் எப்போதும் ஆட்சேபணை. அதனால் சினிமாப் பாட்டு வரும் நேரம் குளக்கரைக்கோ, தோப்புக்கோ சென்று ஆனந்தமாகப் பாடுவார்.
‘எண்டோசல்ஃபான் 200 மில்லி, டிரை குளோரோ பாஸ்பேட் 200 மில்லி’ என்று விவசாய நிகழ்ச்சிகளின்போது கூடவே சொல்லி தன்னுடைய ஞானத்தை வெளிப்படுத்துவார்.
‘‘ஆமா... எல்லாம் தெரிஞ்ச மனுஷன், அப்படியே பயிர் செஞ்ச அஞ்சு ஏக்கரை 500 ஏக்கரா ஆக்கிட்டாரு’’ என்று இசக்கியம்மாள் சொல்வது காதில் விழாதது போல் இருந்து விடுவார். அவளுக்கும்தான் என்ன? பொழுதன்னிக்கும் ரேடியோவோடு குப்பை கொட்ட வேண்டுமானால் எரிச்சல் வராமல் போகுமா?

இப்படி நயினாரின் வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருந்த ரேடியோதான் திடீரென்று ரிப்பேரானது. ‘‘இத்தனை வருஷத்துல ஒரு தடவை கூட ஒரு கரகரப்பு, குரல் கம்முறதுன்னு ஆனதில்லை’’ என்றார், என்னவோ ‘இது வரைக்கும் ஒரு தலைவலி காய்ச்சல்னு மனுஷன் படுத்ததில்ல’ என்கிற அதே தோரணையில்.
அவர் மகனுக்கு எரிச்சலான எரிச்சல். ‘‘சவத்தைத் தள்ளுங்கப்பா. எந்நேரமும் பாட்டு படிச்சுக்கிட்டு. வீட்டுல மனுஷன் பேசுறதுக்கு நேரம் வேண்டாமா? ரிப்பேரானதே நல்லது. போங்க, போயி சோலியப் பாருங்க’’ என்று சொல்லிவிட்டான். அவனுக்கு வியாபாரத்துக்குப் போக வேண்டும்.

போறவன் வாறவனிடம் எல்லாம், ‘‘ஏலே, லேடியோப் பெட்டி ரிப்பேர் பண்ற கடை எங்கருக்கு தெரிமால?’’ என்று கேட்டு துளைத்து எடுத்து விட்டார். ஒருவன் மட்டும், ‘‘நம்ம தெக்குத்தெருல செண்பக நாடார் கடைக்குப் பக்கத்துக்கடை’’ என்று சொல்லி விட்டுப் போனான்.
கிழவர் ரேடியோவைத் தூக்கிக் கொண்டு அங்கே போனார்.

‘‘ஏல, ஐயா... என் லேடியோ பாட மாட்டேங்கு, கொஞ்சம் ரிப்பேர் பண்ணிக் குடுல!’’
‘‘தாத்தா, பேட்டரி மாத்திப் பாத்தீங்களா?’’
‘‘ஒரு வாரத்துக்கு முன்னுக்கதான் புது பேட்ரி போட்டேன் தம்பி!’’
‘‘கொண்டாங்க பாப்போம்’’ என்றவன், இவர் தன்னுடைய பிலிப்ஸ் செட்டைக் கொடுத்ததும் என்னவோ ஒரு நூதன வஸ்துவைப் பார்ப்பது போலப் பார்த்தான்.
‘‘தாத்தா இப்பம்லாம் இந்த மாரி ரேடியோ யாரு கேக்கா? இது பழைய மாடல்... எனக்கு ரிப்பேர் பண்ணத் தெரியாது!’’
கிழவருக்கு சப்பென்றாகி விட்டது.
‘‘என்னடே! இப்படிச் சொல்லுத? நீ ரொம்பக் கெட்டிக்காரன்னு ஊருக்குள்ள பேசிக்கிடுதாங்களே...’’
‘‘அதுக்கில்ல தாத்தா... இது எனக்கு பழக்கமில்லாத செட்டு. ஆனா, சூப்பர் செட்டு. நான் எதுனா கையை வெச்சி ரொம்ப மோசமாயிடுச்சின்னா? அதான் சொல்லுதேன். கடயத்துல பஸ் ஸ்டேண்ட் பக்கத்துல ரமேஷ் ரிப்பேர்க்கடைன்னு ஒண்ணு இருக்கு. என் மச்சான்தான். அவனுக்கு ஒருவேளை தெரிஞ்சிருக்கலாம். நீங்க அங்க கொண்டு போங்க’’ என்று சொல்லி விட்டான்.
‘‘இப்பம் நான் இந்த லேடியோப் பொட்டியத் தூக்கிக்கிட்டு கடயம் போகணுமாக்கும்’’ என்று அலுத்துக் கொண்டாலும் அதையும் செய்தார். அங்குள்ளவனுக்கும் அந்த பழைய ரேடியோவை ரிப்பேர் செய்யத் தெரியவில்லை.
‘‘எதையோ களட்டுனான். இந்தப் பக்கம் ரெண்டு திருப்பு, அந்தப் பக்கம் ரெண்டு திருப்பு. வாயால நாலு மட்டம் ஊதுனான். அம்புட்டுத்தான்... திரும்பி மூடிட்டு எங்கிட்ட 20 ரூவா வாங்கிட்டான் அந்தப் பய. காசு போகுது. ஆனா லேடியோ பாடலியேன்னு கேட்டா, இதுக்கு நான் பொறுப்பில்ல, என்னால ஆனதைச் செஞ்சு பாத்தாச்சுங்கான். அவன் தொறந்து பாத்ததுக்கு சர்வீசு சார்சுங்கான்’’ என்று பேரனிடம் சலித்துக் கொண்டார்.
ரேடியோவை ரிப்பேருக்குக் கொடுப்பதே நயினாருக்கு முழு நேரத் தொழிலானது. ஆழ்வார்குறிச்சி, சிவசைலம், ஏன்... தெங்காசி வரை சென்று பார்த்தாயிற்று. யாருக்கும் அந்த ‘லேடியோப் பெட்டியை’ ரிப்பேர் செய்யத் தெரியவில்லை.

‘‘தாத்தா இப்படி ரேடியோ ரேடியோன்னு பறக்கியே. நம்ம ஊருக்கு அது வாரதுக்கு முன்ன எப்படி இருந்த?’’
நயினார் யோசித்தார். ரேடியோவுக்கு முந்தைய தன் வாழ்க்கைகையை அவருக்கு நினைத்துக்கூடப் பார்க்கத் தெரியவில்லை. ரேடியோ வந்த அந்த தினம்தான் ஞாபகத்திலிருந்தது. ‘‘அறுபது வருஷத்துக்கு முன்னாடியே நம்ம ஊருக்கு லேடியோ வந்திட்டு...’’ என்றார். எங்கோ வெறித்த பார்வையுடன் கை அனிச்சையாக தாடியைத் தடவிக் கொடுத்தது. முகத்தில் ஒளி. அப்படியென்றால் ஏதோ ஒரு பழைய கதை வரப்போகிறது என்று அர்த்தம். பேரன் சம்மணமிட்டு அருகில் வந்து உட்கார்ந்துகொண் டான்.
‘‘நம்ம ஊரு பண்ணையாரு மகன் ராசாமணிதான் முதமுதல்ல நம்ம ஊருக்கு லேடியோவைக் கொண்டு வந்தான். அவன் என் சேக்காளி. அஞ்சாப்பு வரைக்கும் நான் அவன் கூடத்தான் படிச்சேன். லேடியோ கொண்டு வரையில அவன் மதுரையில காலேசுல படிச்சிக்கிட்டு இருந்தான். லீவுக்கு வாரப்ப கொண்டு வந்தான். எங்கிட்ட இருக்கே இந்த மாரி குட்டி லேடியோ அப்பம் கிடையாது. கரண்டுலதான் படிக்கும். பெருசா இருக்கும்...’’ நினைவுகளில் தொலைந்தார் நயினார்.
ஊரு முழுக்க கூடியிருந்தது பண்ணையார் வீட்டின் முன்.
‘‘ஏல தெரியுமா? நம்ம ராசாமணி பாட்டுப் படிக்கற பெட்டி வாங்கிட்டு வந்திருக்கானாம்ல?’’
‘‘பாட்டுப் படிக்கற பெட்டியா... அப்டின்னா?’’
‘‘நீ ஒரு வெவரங்கெட்டவன். ஒரு பொட்டி மாரி இருக்குமாம். அதுல கரண்டு குடுத்துருவாங்களாம். அது பாட்டுக்கு சினிமா பாட்டெல்லாம் படிக்குமாம். பாகவதர் பாட்டு. சாமி பாட்டு, எல்லாம் வருமாம்...’’

‘‘அது எப்படி? சும்மா சொல்லுதாவோ. அப்படி எல்லாம் இருக்கவே முடியாது...’’
‘‘ஏன் பலவேசம்? ஏதாவது மாய மந்திரமா இருக்குமோ? நாம அதைக் கேட்டா நமக்கு எதாவது கெட்டது நடக்குமோ?’’
‘‘சீச்சீ! பேசத பேச்சைப் பாரு... ராசாமணி எங்கிட்ட எல்லாம் சொன்னான்ல! காத்துல பாட்டு கலந்து வருமாம். அதை இழுத்து வெச்சுக்கிட்டு இந்தப் பெட்டி பாடுமாம்...’’
‘‘நயினாரு, நீதான் ராசாமணிக்கு சேக்காளி! நீ சொன்னா சரியாத்தான் இருக்கும். பெட்டி எப்ப வருதாம்?’’
‘‘இன்னைக்கு மதுரையில் இருந்து கொண்டு வரப் போறேன்னு சொன்னான்.’’
அரை மூட்டை சைஸில் ஒரு பெட்டி, அதில் கட்ட செப்புக் கம்பி என்று என்னென்னவொ சாதனங்கள் பண்ணையார் வீட்டில் இறங்க, திறந்த வாய் மூடவில்லை கூட்டம். அவற்றைப் பொருத்த ஆட்கள் வேறு வர, ஊர் திமிலோகப்பட்டது.
‘‘ஏல நயினாரு? பாட்டுப் பாடறவுக இந்த இத்துணூண்டு பொட்டிக்குள்ளயா உக்காந்து பாடுவாக? என்னன்னுதான் கேளேன்?’’
‘‘நீ ஒரு பட்டிக்காடு. நான்தான் அப்பமே சொன்னேனே... காத்துல வருதாம் பாட்டு. அதை இந்த செப்புக் கம்பி மூலமா பிடிச்சு லேடியோக்குள்ள போயி பாட வைப்பாக...’’
அப்போது பண்ணையார் மகன் ராஜாமணி அங்கு வர, ‘‘ஏல ராசாமணி! இதை எவம்ல கண்டுபிடிச்சான். மன்னன்தான். என்ன மூளை பாரேன்!’’
ராஜாமணி ஏதோ பதில் சொன்னான். அது நயினார் காதுகளில் ‘மரக்கோணி’ என்று விழுந்தது.
‘‘பாரேன், எவனோ மரக்கோணின்னு ஒரு வெள்ளைக்காரன் கண்டுபிடிச்சிருக் கான்’’ - நயினார் பேசிக் கொண்டே போக, அமைதியாக இருக்குமாறு எல்லாருக்கும் பொதுவாக சைகை செய்யப்பட்டது. சட்டென்று அமைதியானது அந்த இடம்.

ரேடியோவை ஆன் செய்தார் பண்ணையார். கரகர சத்தங்கள் அடங்கியபிறகு, ‘காற்றினிலே வரும் கீதம்...’ என்று பாடியது ஒரு குரல். அந்தக் குரல் இனிமையில் சொக்கிப் போனார் நயினார்.
‘‘அன்னிக்கு நினைச்சுக்கிட்டேன், நாமளும் சொந்தமா ஒரு லேடியோப் பொட்டி வாங்கணும்னு. கொஞ்சம் துட்டு சேத்து கொஞ்ச வருசம் களிச்சு ராசாமணியையே கூட்டிக்கிட்டுப் போயி இந்த சின்ன லேடியோவை வாங்குனேன். அது என்னடான்னா இப்பம் சதி பண்ணுது’’ என்று அங்கலாய்த்துக் கொண்டார்.
‘நாளாக நாளாக எல்லாம் சரியாகி விடும். தாத்தா டி.விக்கு மாறி விடுவார்’ என்று பேரன் நினைத்தது பொய்க் கணக்கானது. அவருக்கு ரேடியோ இல்லாமல் சோறு, தண்ணீர் இறங்கவில்லை. தானே வாய்க்குள் பாடல்களைப் பாடியபடி, வசனங்களைப் பேசியபடி, ரேடியோவையே பார்த்துக் கொண்டிருந்தார். பேசுவதும் குறைந்து போயிற்று. பேரன் பயந்து போனான் ‘‘தாத்தாவுக்கு பைத்தியம் பிடிச்சுட்டுதோ’’ என்று நினைத்தவன் கைக்கு அடக்கமாக ஒரு எஃப்.எம் ரேடியோ வாங்கினான்.
‘‘தாத்தா நீ வாங்குனதை விட இது சின்னது. இப்ப வந்திருக்கு. சைனா செட். இதுக்கு சின்ன பேட்டரி போட்டா போதும்’’ என்று கொடுத்ததை ஆசையோடு வாங்கிக்கொண்டார் கிழவர். அது பாட்டுக்கு என்னவோ பாடியது. ஆனால் அவருக்கு ஒன்றும் புரியவில்லை. ‘மாக்காயெல்லா மாக்காயெலா’ என்று இழைந்தது.
‘‘ஏல! தமிழ்ப்பாட்டு படிக்கற லேடியோ வாங்குடான்னா சைனா லேடியோ வாங்கி, அது பாரு சைனா பாசையில பாட்டுப் படிக்கி...’’
‘‘ஐயோ தாத்தா, இது தமிழ் பாட்டுதான். கவனமா கேளு!’’
என்ன கேட்டும் அது தமிழ்ப் பாட்டு மாதிரி இல்லை. நயினாருக்கு பிடிப்பு விட்டுப்போய் விட்டது.
‘‘எந்நேரமும் பொம்பளைப் பிள்ளைங்க பேசிக்கிட்டே இருக்காக. அது இல்லேன்னா வௌம்பரம் போடுதான். பாட்டு எங்க போடுதான்? அப்படியே போட்டாலும் நமக்கு வௌங்காத பாசையில போடுதான். பாட்டுன்னா, கணீர்னு வரிகள் மனசுல பதியாண்டாமா?’’ என்று சொல்லி அதைத் தள்ளி வைத்து விட்டார்.
மீண்டும் தனிமைதான், வெறுமைதான்.
அன்று பேரன் வரும்போதே சந்தோஷமாக வந்தான். ‘‘தாத்தா... எழுந்துரு! உனக்கு ஒரு குட் நியூஸ்!’’
‘‘என்னது?’’
‘‘பக்கத்துல கருத்தப்பிள்ளையூருல ஒரு ரேடியோ மெக்கானிக் இருக்காராம். அவருக்கு இந்த ரேடியோவை ரிப்பேர் செய்யத் தெரியுமாம். வா தாத்தா, போயிட்டு வந்திடுவோம்’’ என்றான்.
கண்களில் ஒளி வீசியது பெரியவருக்கு. ‘‘நிஜமாவா?’’ - சந்தேகம் வந்தது.

‘‘ஏண்டா! அது நம்ம ஊரை விடச் சின்னதாச்சே! அங்ஙன எப்படி..?’’
‘‘அவரு வயசாளியாம் தாத்தா. அந்தக் காலத்துல எல்லாம் அவருதான் ரேடியோ ரிப்பேர் பண்ணுவாராம். அம்பாசமுத்திரத்துல கடை வச்சிருந்தாராம். வயசான பிறகு கடையைக் கட்டிட்டு மகனோட இருக்காரு. அவரு பேரன் எங்கூடத்தான் படிக்கான். அவன்தான் சொன்னான்...’’
வாயெல்லாம் பல்லாகக் கிளம்பினார் தாத்தா. அந்த மெக்கானிக் மிகவும் கெட்டிக்காரர். கால் மணி நேரத்தில் ரேடியோவை சரிசெய்து விட்டார். ‘‘இந்தாங்க ஐயா, உங்க ரேடியோ நல்லா பாடும். போட்டுப் பாத்துக்கிடுங்க’’ என்றார்.
உடம்பெல்லாம் காதாக தன்னுடைய கருவியை மெதுவாக இயக்கினார். ‘நினைத்தேன் வந்தாய் நூறு வயது...’ என்று பாடியது கணீர் குரலில். நயினாருக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. மெக்கானிக்கின் கையைப் பிடித்துக் கொண்டு, ‘‘நீருதான் வோய், உண்மையான வேலை தெரிஞ்சவரு. இத்தனை நாள் உம்மட்ட வராம வெறும் பயக கிட்ட போயி மனசு கெட்டேனே. உமக்கு எவ்வளவு வேணும் சொல்லும்? எவ்வளவு குடுத்தாலும் தகும். ஆனா என்னால ஏண்டது’’ என்று நூறு ரூபாய்த்தாளை நீட்டினார் பெரியவர்.
‘‘எனக்கு ஒண்ணும் வேண்டாம்யா! பளய செட்டைக் கொண்டு வந்து குடுத்தீரே! அதைத் தொட்டுப் பாத்தேனே... அதே போதும்யா எனக்கு. நீரு சந்தோசமா பாட்டு கேளும்’’ என்றார்.
‘‘உம்ம பேரையாவது சொல்லும். ஒமக்கு என் வம்சத்துல எல்லாரையும் விட்டு நன்றி சொல்லச் சொல்லுதேன்’’ என்றார் நயினார்.
அவர், ‘‘மார்க்கோனி’’ என்றது, நயினாருக்கு ‘மரக்கோணி’ என்று கேட்டது.