மன அழுத்தமா... விரால் மீன் பிஸ்கெட் சாப்பிடுங்க!





நெத்திலி மீன் வறுவல், சுறாமீன் புட்டு, அயிரை மீன் குழம்பு, வஞ்சிரம் மீன் வறுவல், எறா மீன் தொக்கு சாப்பிட்டிருப்பீர்கள்... விரால் மீன் பிஸ்கெட்..? விரைவில் அதையும் நீங்கள் ருசிக்கலாம். சத்தும், சுவையும் நிறைந்த இந்த மீன் பிஸ்கெட்டை திருநெல்வேலி புனித சேவியர் கல்லூரியின் நீர்வள உயிரின ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையம் தயாரித்திருக்கிறது. விரைவில் விற்பனைக்கும் வரப்போகிறது.  

நன்னீர் மீனான விரால், பிறவற்றை விட மிகவும் சத்து நிறைந்தது. உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ ஆசிட், ஃபேட்டி ஆசிட் நிறைந்தது. உலகம் முழுவதும் அழியும் அச்சுறுத்தல் உள்ள உயிரினங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ள இம்மீன் உற்பத்தியை அதிகப்படுத்தும் நடவடிக்கையில் நீர்வள உயிரின ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையம் ஈடுபட்டுள்ளது.



‘‘விரால் மீனோட ஒவ்வொரு அங்கமும் மருந்து. இதிலிருந்து எடுக்கப்படுற மருந்துகள் முடக்குவாதம், நாள்பட்ட புண்கள், தேமல் போன்ற நோய்களுக்கு மருந்தா பயன்படுது. மன அழுத்தம் போன்ற பிரச்னைகளுக்கு இந்த மீனை சாப்பிட்டா நல்லதுன்னு நிரூபணமாகியிருக்கு. நிறைய புரோட்டின், கார்போஹைட்ரேட் இருக்கு. கொழுப்பு கம்மி. மலேசியா, சிங்கப்பூர் நாடுகள்ல இந்த மீன்ல இருந்து ‘சிரப்’ எடுத்து, சிசேரியன் ஆன பெண்களுக்குக் கொடுக்கிறாங்க. ‘ஸ்டேட் ஃபிஷ்’னு சொல்ற அளவுக்கு ஆந்திராவில இது பயன்பாட்டில் இருக்கு. ஆனா தமிழக மக்களுக்கு இதோட அருமை தெரியலே. ரொம்பக் குறைவாவே இங்கே வளர்க்கிறாங்க. அதை ஊக்கப்படுத்துற நோக்கத்திலதான் மதிப்பூட்டப்பட்ட பொருட்களை தயாரிக்கிற முயற்சியில இறங்குனோம். விரால் மீன் ஊறுகாய்க்கு நல்ல வரவேற்பு. இட்லிப்பொடி சோதனை நிலையில இருக்கு. பிஸ்கெட்டும் மற்ற பிராண்டட் பிஸ்கட்களை விட நல்லா வந்திருக்கு. ஸ்வீட், மசாலான்னு ரெண்டு வெரைட்டி செஞ்சிருக்கோம். முள், மீன் வாடை எதுவும் இருக்காது. மற்ற குக்கீஸ்களைப் போலவே இருக்கும். 3 வாரம் வரை கெடாது’’ என்கிறார் இம்மையத்தின் ரிசர்ச் அசோஸியேட் ஜெயஷீலா.
மீன் பிஸ்கெட் எடு... கொண்டாடு!
- வெ.நீலகண்டன்
படங்கள்: ராஜசேகர்


விரால் வளர்த்தால் கைநிறைய காசு!




‘‘மீன் வளர்ப்புக்கு ஏக்கர் கணக்கில் குளமும், பெரிய அளவில் நீர்வளமும் வேண்டும் என்று பலர் நினைக்கிறார்கள். ஒரு சென்ட் அளவுக்கு குளமும், அதை நிரப்பும் அளவுக்கு நீரும் இருந்தால் போதும். கைநிறைய லாபம் பார்க்கலாம். விரால் மீன் கிலோ 500 ரூபாய் வரை விற்கிறது. தமிழகத்தில் தேவை அதிகரித்து வரும் நிலையில் உற்பத்தி மிகவும் குறைவாகவே இருக்கிறது. எனவே, விவசாயிகள் மட்டுமின்றி பொதுமக்களும் வீட்டுக்குப் பின்புறம் உள்ள காலி நிலத்தில் குளம் வெட்டி விரால் மீன் வளர்க்கலாம். அதற்கான பயிற்சியை திருநெல்வேலியில் உள்ள நீர்வள உயிரின ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையம் வழங்குகிறது’’ என்கிறார் அம்மையத்தின் இயக்குனர் ஹனீபா. தொடர்பு எண்: 0462-2560670.