கவிதைக்காரர்கள் வீதி



மரணக் குறிப்புகள்



சர்க்கரையில்
மறைந்திருந்தது மரணம்.
தேநீரில்
எறும்பின் பிணம்.

ஒரு சவத்தை அலங்கரித்தன
ஓராயிரம் விரல்கொய்த
மலர்ப் பிணங்கள்.

சலவைக் கற்களால் ஆன
ஆடம்பரமான கல்லறைகளுக்கு
மலர்வளையங்கள்
மட்டுமே வரும்.
எளிமையான புதைகுழிகளிலோ
பூச்செடிகள்
பூத்துக் குலுங்கும்.

மூங்கிலே உன்னை வெட்டி
புல்லாங்குழல் செய்வதா
உன்
சாவிலே இசையைக் கண்டு
சங்கீதம் என்பதா?

காலத்தின் உதடுகளால்
கவ்வப்பட்ட உடல் கோப்பையில்
சொட்டுச் சொட்டாக
உறிஞ்சப்படுகிறது உயிர்.
கோப்பை காலியாகும்பொழுது
அதில்
மரணம் நிரம்பியிருக்கும்.
அண்ணாமலை