வருத்தப்படும் வாலிபர் சங்கம்!





‘ஜுரத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்’ கட்டுரை சரியான நேரத்தில், சரியாகச் சொல்லப்பட்ட அறிவுரை! சாதாரண ஜுரம்தானே என்று நமக்கு நாமே டாக்டராவதாய் நினைத்து எமனாகிவிடக் கூடாதல்லவா?
- எம்.பர்வீன் பாத்திமா, சென்னை-91.

செவ்வாய் கிரகம் சென்றிருக்கும் ‘மங்கள்யான்’ பற்றி அரிதான செய்திகளைத் தந்ததற்கு பாராட்டுக்கள்!
- இரா.வளையாபதி, கரூர்.

அட தேவுடா... ஆந்திரப் பேரழகி ஸ்ரீதிவ்யா முத்தக் காட்சியில் நடிக்க மாட்டாரா? ‘வருத்தப்படாத வாலிபர் சங்க’ உறுப்பினரான நான், இந்தச் செய்தியைப் படித்ததும் வருத்தத்தில் ஆழ்ந்துவிட்டேன்!
- எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

ஷீரடி பாபாவின் புனித சரிதத்தில், ‘மகான்களின் வாக்கு, மந்திர வாக்கு’ என்பதை சாயி பாபா, ராபர்ட் என்ற அந்நிய நாட்டினர் நிகழ்வுகள் மூலம் வெளிப்படுத்தியது மெய் சிலிர்க்க வைத்தது!
- பிரபா லிங்கேஷ், மேலகிருஷ்ணன்புதூர்.

‘சக்(ª)சஸ் ஃபுல்’ சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், ஒவ்வொரு போட்டிக்கும் எப்படித் தயாராக வேண்டும் என்பதற்கு கொடுத்த டிப்ஸ் இப்போதைய இளம் வீரர்களுக்கு ஒரு மெகா டானிக்!
- சி.கொ.தி.முருகேசன், குன்னத்தூர்.

ஹன்சிகா, ஆண்ட்ரியா, லட்சுமி ராய் அம்மணிகளெல்லாம் சுந்தர்.சியுடன் ஜோடி கட்டி நடிக்கிறாங்களா? தமிழ் ஹீரோக்கள் மட்டுமல்லய்யா... நாங்களும் சுந்தர் மீது பொறாமையாத்தான் இருக்கோம்.
- எம்.மணிகண்டன், கோவை.

‘அழகுராஜா’ படத்தில், ‘நீ அழகு ராஜா’ என்று சொல்லும்படி இருந்தது சந்தானத்தின் கரீனா சோப்ரா காஸ்ட்யூம்.
- என்.தண்டாயுதபாணி, வேலூர்.

எதிர்மறை வாக்குகளைப் பதிவு செய்யும் நடைமுறையை தேர்தல் கமிஷன் எந்தவித சமரசத்திற்கும் இடம் கொடுக்காமல் கொண்டுவந்துவிட்டாலே நாட்டிற்கு சுபிட்சமான ஒளிக்கீற்று கிடைத்துவிடும்!
- கவியகம் காஜூஸ், கோவை.

யானைத் தோழன் மார்க் காலமாகி விட்டதற்காக ரிவால்டோ என்ற யானை படும் துயரம் மனதை நெகிழச் செய்தது. மனிதனுக்கும் வன விலங்குகளுக்குமான இந்த உணர்வுபூர்வ பந்தம் வாழ்க!
- ஆர்.சிவராஜன், திருச்சி.

இந்தியா முழுவதும் 7000 இளைஞர்களை ஒருங்கிணைத்து ஏழை மாணவர்களுக்கு உதவி வரும் கார்த்தீபன், வெறும் சாஃப்ட்வேர் இளைஞர் அல்ல... இந்தியாவின் ஆணிவேர்!
- மனோகர் சென்னை-18.

‘தமிழகத்தில் பெரியாருக்கும் முன்னோடியாக பலர் சமூக சீர்
திருத்த கருத்துகளை விதைத்தனர்’ என்ற வரலாற்றைத் தேடி ஆய்வு நடத்தும் வீ.அரசுவின் அரிய பணியைப் போற்ற வேண்டும்.
- எஸ்.பிரசன்னகுமார், வேலூர்.