கல்வியை விற்கிறதா மத்திய அரசு..





அரசுப் பள்ளிகள் அனைத்தையும் இழுத்து மூடிவிட்டு கல்வியை தனியாரின் பாக்கெட்டில் போடாமல் ஓயாது போலிருக்கிறது மத்திய அரசு. அதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைதான் ‘ராஷ்ட்ரிய ஆதர்ஷ் வித்யாலயாÕ. அதாவது, ‘தேசிய மாதிரிப் பள்ளிகள்’. இந்தியா முழுவதும் 2500 தேசிய மாதிரிப் பள்ளிகளைத் தொடங்க இருக்கிறது மத்திய அரசு. தமிழகத்தில் மட்டும் 356 பள்ளிகள்.

நல்ல விஷயம்தானே... இதில் என்ன விபரீதம்?
இந்தப் பள்ளிகள் அனைத்தையும் நிர்வகிக்கப் போவது தனியார் நிர்வாகங்கள். ஏற்கனவே கல்வியை கடைச்சரக்காக மாற்றி விட்டவர்களின் கையில் இப்போது மாதிரிப் பள்ளியும். நுழைவுத்தேர்வு அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை. 40% இடங்கள் அரசுக்கு; 60% இடத்தை நிர்வாகம் விருப்பம் போல ஒதுக்கிக் கொள்ளலாம். கட்டணம்..? சந்தை நிலவரத்துக்கேற்ப (?) விருப்பம் போல வசூலித்துக் கொள்ளலாம்.
இதில் மாநில அரசின் பங்கு?
பள்ளி தொடங்க இடம் கிடைக்கவில்லை என்றால் வாங்கிக் கொடுக்க வேண்டும். மற்றபடி பள்ளி வளாகத்துக்குள் கூட நுழைய முடியாது. மாநில அரசின் எந்த சட்டமும் இவர்களைக் கட்டுப்படுத்தாது. சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின்படி வகுப்புகள் நடக்கும். இதற்கு மத்திய அரசு கணிசமான நிதியுதவிகளை வழங்கும். 10 ஆண்டுகளுக்குப் பிறகு தனியார் நிர்வாகத்திடமே பள்ளி முழுமையாக ஒப்படைக்கப்படும். இதுதான் பிசினஸ் டீல்.

நல்ல கட்டிடங்கள் இல்லாமல், கழிவறை இல்லாமல், ஆசிரியர்கள் இல்லாமல் அரசுப் பள்ளிகள் தள்ளாடிக் கொண்டிருக்கும் நிலையில், சிறிதும் குற்ற உணர்வு இல்லாமல் மக்களின் வரிப்பணத்தை தனியாருக்கு அள்ளிக் கொடுக்கிற மத்திய அரசின் செயல்பாட்டை என்னவென்று சொல்வது..?
‘‘முதலில் ‘மாதிரிப் பள்ளி’ என்ற வார்த்தையே தவறானது. எல்லா குழந்தைகளுக்கும் தரமான கல்வியை வழங்கவேண்டியது அரசின் கடமை. ஒரு பள்ளி மட்டும் மாதிரிப் பள்ளி என்றால், மற்ற பள்ளிகள் தரமற்றவையா? இது பிள்ளைகளுக்கு மிகப்பெரும் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிவிடும். இது இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 14, முன்வைக்கும் சமத்துவ உரிமைக்கு முற்றிலும் எதிரானது. பரவலாக்கப்பட்ட, சமச்சீரான கற்றல் சூழலை உருவாக்குவதற்கான கோரிக்கைகள் எழுந்துவரும் காலகட்டத்தில், கல்வியை வெளிப்படையாகவே விற்பனைப் பொருளாக மாற்றுவது காலச்சக்கரத்தை பின்நோக்கி சுற்றுவதற்கு சமம்.

தனியார் நிர்வாகங்களுக்கு லாப நோக்கம்தான் பிரதானம். மாதிரிப் பள்ளிக்கான நடைமுறைகளைப் படிக்கும்போது ரத்தம் கொதிக்கிறது. சொசைட்டி, கம்பெனி சட்டத்தில் பதிவு செய்த எந்த நிறுவனமும் பள்ளி தொடங்கலாம். ஒரு நிறுவனம் 20 பள்ளிகளை நடத்தலாம். 3 ஏக்கர் நிலம் வேண்டும். நிலம் வாங்குவதில் சிக்கல் வந்தால் மாநில அரசு உதவவேண்டும். ரியல் எஸ்டேட் தரகர் செய்யும் பணியை மட்டும்தான் மாநில அரசு செய்ய வேண்டும். 

5 முதல் 7 கோடி ரூபாய் முதலீட்டுக்கான கியாரண்டி தேவை. ஒரு பள்ளியில் அதிகபட்சம் 2450 மாணவர்களைச் சேர்க்கலாம். இதில் 980 (40%) பேர் அரசு மூலம் நிரப்பப்படுவார்கள். 1470 (60%) இடங்களை நிர்வாகம் விருப்பம் போல ஒதுக்கிக் கொள்ளலாம். ‘மார்க்கெட் அடிப்படையிலான கட்டணம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள். உருளைக்கிழங்கு, தக்காளியைப் போல அப்போதைக்கு சந்தையில் கல்வி என்ன விலை விற்கிறதோ அந்த விலையை மாணவர்களிடம் ‘சட்டப்படி’ வசூலிக்கலாம். அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கான கட்டணத்தை கேந்திரிய வித்யாலயா பள்ளி விதிப்படி (ஆண்டுக்கு ரூ.11 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரை) மத்திய அரசு வழங்கும். இதுதவிர, 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் மாதந்தோறும் 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். ‘இப்படி கட்டணம் செலுத்திப் படித்தால்தான் மாணவர்களுக்கு ஒழுங்கும், பொறுப்பும் வரும்’ என்கிறார்கள். என்றால் அரசுப் பள்ளியில் கட்டணம் செலுத்தாமல் படிக்கும் பிள்ளைகள் ஒழுங்கில்லாதவர்களா..? 
பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் தொழில்பயிற்சி வகுப்புகள், தனிப்பயிற்சி வகுப்புகள் என பள்ளி வளாகத்தை நிர்வாகத்தின் விருப்பம் போல பயன்படுத்திப் பணம் பார்க்கலாம். இதில் அரசு தலையீடு இருக்காது. இதுபோக, ‘நிர்வாக உதவி நிதி’ என்ற பெயரில் ஒவ்வொரு மாணவனுக்கும் அரசு செலுத்தும் கல்விக்கட்டணத்தில் 25% தொகையை கணக்கிட்டு, கூடுதலாக அரசு வழங்கும். இதை எதற்காகவும் நிர்வாகம் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆனால், அரசு ஒதுக்கீட்டிலான 40%த்தில் மட்டுமே இட ஒதுக்கீடு. குழந்தைகள் எண்ணிக்கையில் சரிபாதி இருக்கிற பெண்களுக்கு வெறும் 33%தான். இதைவிட அநீதி உண்டா..? இன்னொரு கொடுமையும் உண்டு. தனியார் நடத்துகிற இந்த ‘மாதிரிப் பள்ளி’ சுற்று வட்டாரத்தில் இருக்கிற அனைத்துப் பள்ளிகளின் ஆசிரியர், தலைமையாசிரியர்களுக்கு பாடம் நடத்துவது பற்றியும், பள்ளியை நிர்வகிப்பது பற்றியும் பயிற்சி அளிக்குமாம்.


நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, ‘தமிழைக் கட்டாயப் பாடமாகப் படிக்கவேண்டும்’ என்ற விதி கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்த மாதிரிப் பள்ளிகள் மூலம் தமிழைப் படிக்காமலே பட்டம் வாங்கி விடலாம். இந்தியா, பன்முக பண்பாட்டை அடிப்படையாகக் கொண்ட நாடு. மாதிரிப் பள்ளிகள் மூலம் ஒற்றைக் கலாச்சாரத்தை திணிக்க முயல்கிறார்கள். இதனால் சமூகம் மேம்படாது. கல்விநிலை உயராது. கற்றல் திறன் அதிகரிக்காது. மாறாக, மாணவர்களிடம் தாழ்வு மனப்பான்மை, ஏமாற்றம், விரக்தி அதிகமாகும். அதன்மூலம் வன்முறை பெருகும். மத்திய அரசு அப்படியான சூழலைத்தான் உருவாக்குகிறது’’ என்கிறார் ‘பொதுப்பள்ளிக்கான மாநில மேடை’ அமைப்பாளர் பிரின்ஸ்
கஜேந்திரபாபு.
‘‘கல்விக்காக மக்களிடம் 3% வரி (நீமீss) வசூலிக்கிற மத்திய அரசு, நியாயப்படி அந்தந்த மாநிலத்திடம் அந்த நிதியைக் கொடுத்து கல்வியை மேம்படுத்த வலியுறுத்த வேண்டும். அல்லது மாநில அரசோடு இணைந்து அரசுப் பள்ளிகளை மேம்படுத்த வேண்டும். இதைச் செய்யாமல் மக்களின் வரிப் பணத்தை தனியாருக்கு அள்ளித் தருவது அநீதி’’ என்கிறார் கல்வியாளர் முனைவர் முருகையன்.

‘‘மாதிரிப் பள்ளிகளில் மாநில அரசின் எந்த சட்டமும் செல்லுபடியாகாது. தனி அரசாங்கமாக பள்ளிகள் செயல்படும். 5 மாநிலங்களுக்கு ஒரு சி.பி.எஸ்.இ இயக்குனர் இருக்கிறார். அவரால் ஒரு பள்ளியைக் கூட முழுமையாகக் கண்காணிக்க இயலாது. கல்வி என்பது, பொதுப்பட்டியலில் இருக்கிறது. மாநிலத்தை ஒதுக்கிவிட்டு முற்றிலும் தன் கைக்குள் கொண்டுவந்து தனியாருக்கு தாரை வார்க்க முனைகிறது மத்திய அரசு. அதற்கு வசதியாக சட்டங்களும் திருத்தப்படுகின்றன. 2002ல், ‘6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கல்வி அடிப்படை உரிமை என்றும், அரசு விரும்பும் வகையில் கல்வியை வழங்கலாம்’ என்றும் திருத்தம் கொண்டு வந்தார்கள். அடுத்து, ‘குழந்தைகளுக்கு கல்வி வாய்ப்பை உருவாக்குவது, பெற்றோர் அல்லது பாதுகாவலரின் கடமை’ என்று ஒரு பிரிவு சேர்க்கப்பட்டது. அதை கேடயமாக வைத்துக்கொண்டே அரசு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறது’’ என்கிறார் முருகையன்.

தனியார் பள்ளிகளில் பணியாற்றி நீண்ட அனுபவம் கொண்ட கல்வியாளர் டாக்டர் சி.சதீஷிடம் இதுபற்றிப் பேசினோம்.
‘‘கல்வியைப் பொறுத்தவரை தனியார் பங்களிப்பு தவிர்க்க முடியாதது. ஆனால், மாதிரிப் பள்ளிகள் அனைத்து தரப்புக்கும் பயன்பட வேண்டு மானால், நிச்சயமாக மாநில அரசின் பங்களிப்பு வேண்டும். இல்லாவிட்டால் முற்றிலும் வணிகமாகி விடும். இதற்கென்று மாநில அளவில் ஒரு கமிட்டி அமைக்க வேண்டும். அந்த கமிட்டி பள்ளியைக் கண்காணிக்க வேண்டும். விதிமுறைக்கு ஏற்ப கட்டணம் தீர்மானிக்கப்பட வேண்டும். அதேபோல, சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தையும் திணிக்கக்கூடாது. இந்தியாவில் 42 கல்வி வாரியங்களும், 2 தேசியக் கல்வி வாரியங்களும் உண்டு. ஒவ்வொன்றும் தனித்துவமானவை. மாதிரிப் பள்ளிகளில் மாநில பாடத் திட்டமே இருக்க வேண்டும். ஆனால், கணிதமும், அறிவியலும் உலகம் முழுவதும் ஒன்றுதான். இந்தப் பாடங்களுக்கு மட்டும் ஒரே பாடத்திட்டம் கொண்டு வரலாம்’’ என்கிறார் சதீஷ்.
மருத்துவம் தனியாரிடம். கல்வி தனியாரிடம். மிச்சமிருப்பது நாடு மட்டும்தான்..!
- வெ.நீலகண்டன்

‘மார்க்கெட் அடிப்படையிலான கட்டணம்’. உருளைக்கிழங்கு,
தக்காளியைப் போல அப்போதைக்கு சந்தையில் கல்வி என்ன விலை விற்கிறதோ அந்த விலையை மாணவர்களிடம் ‘சட்டப்படி’ வசூலிக்கலாம்.