மேஷ லக்னத்துக்கு செவ்வாயும் சுக்கிரனும் தரும் யோகங்கள்



கிரகங்கள் தரும் யோகங்கள் 8

நாம் மேஷ லக்னத்தின் அதிபதியான செவ்வாயோடு ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு ராசியில் சேர்க்கை பெறும்போது என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன என்று பார்த்துக் கொண்டே வருகின்றோம். அதுபோன்று செவ்வாயோடு சுக்கிரனின் சேர்க்கையால் ஏற்படப்போகும் மாற்றத்தையும் பார்ப்போம்.

பொதுவாகவே செவ்வாயும் சுக்கிரனும் சேர்ந்திருந்தால் ‘பிருகு மங்கள யோகம்’ என்று ஜோதிட நூல்கள் சொல்கின்றன. இந்த சேர்க்கை 4, 7, 10ம் இடங்களில் இருந்தால் பூரணமாக எல்லா வளங்களும் கிடைக்கும். ஆனால், இது அதீத உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் அமைப்பாகும்.

 காம இச்சை அதிகமாக இருக்கும். முறையற்ற தொடர்புகளை ஏற்படுத்தும்.  எல்லா விஷயங்களிலும் சிறியதாக ஒரு கள்ளத்தனம் இருந்து கொண்டேயிருக்கும். இந்த அமைப்பில் ஆண்கள் இருந்தால் போக ஸ்தானம் பலமாக இருக்கும் பெண்ணையே வாழ்க்கைத்துணையாக சேர்க்க வேண்டும். இல்லையெனில் தாம்பத்ய பிரச்னைகள் வந்து வாழ்க்கையையே திசை திருப்பிவிடும். திருமணப் பொருத்தங்கள் பார்க்கும்போது சரியான அமைப்பில் இருக்கின்றனவா என்று பார்க்கவேண்டும்.

 மேஷ லக்னத்தின் அதிபதியான செவ்வாய் சரியான குறிக்கோள்களைக் கொடுக்கக் கூடியவர். அதை நோக்கிய பயணத்தில், மனதிற்கு உற்சாகத்தை அளிக்கக் கூடியவர். ஆனால், சுக்கிரன் அதையெல்லாம் மாற்றி சிற்றின்பப் பாதையில் கொண்டு செல்வார். கூடாநட்புகளில் கொண்டு போய் தள்ளுவார். அதிலும் இந்த லக்னக்காரர்களுக்கு செவ்வாய் தசையோ அல்லது சுக்கிர தசையோ நடக்கும்போது தவறான நட்புகள் வந்துசேரும். இதுபோன்ற நட்புகளால்  ஏதேனும் வருமானம் கிடைக்கும். ஆனால், அந்த நட்புகள் முறிந்துபோகும்போது வருமானம் தடைபடும். அப்போது தேவையற்று மீண்டும் தவறான பாதையில் சென்று மாட்டிக்கொள்வீர்கள்.

செவ்வாய் - சுக்கிரன் சேர்க்கை கொஞ்சம் வித்தியாசமாக செயல்படும். செவ்வாயின் உணர்ச்சி வேகத்தை கையாளத் தெரியாமல் சுக்கிரன் கையாண்டு சிக்க வைக்கும். ‘‘ரெண்டேழாம் இடத்ததிபன் பாவியாகி உயிரைக் கொல்வான்’’ என்று ஜோதிட மொழிகள் சொல்கின்றன. சுக்கிர தசை நடக்கும்போது கவனமாக இருக்க வேண்டும். இன்னும் முக்கியமாக, வாழ்க்கைத் துணை சரியாக அமையவில்லையெனில் வாழ்க்கையே போராட்டமாகி விடும்.

மனோ வக்கிர எண்ணங்களுக்கு ஆட்பட நேரிடும். லக்னத்திலேயே - அதாவது மேஷத்திலேயே செவ்வாயும் சுக்கிரனும் இருக்கும்போது ஆடம்பரமான வீட்டிற்கு ஆசைப்பட்டு கட்டி முடிப்பார்கள். இங்கு செவ்வாய் தன்னுடைய முழு ஆதிக்கத்தை செலுத்துவார். திருமணமான பிறகு அதிர்ஷ்டங்கள் உருவாகும். தூய ஆடை உடுத்துபவர்களாகவும் ஆபரணப் பிரியர்களாகவும் விளங்குவார்கள். தலைமை தாங்கும் பண்பு மிகுந்திருக்கும். ஒரு குழுவையே வழிநடத்தும் திறமையோடு இருப்பார்கள். நில அளவையாளர், வி.ஏ.ஓ. என அரசுத்துறைகளில் வேலை அமையும். 

சுக்கிரனின் ஆட்சி வீடு, இரண்டாம் இடமான ரிஷபம். அதில் செவ்வாயும் சுக்கிரனும் சேர்ந்திருந்தால் சில வித்தியாசமான பலன்களை ஏற்படுத்தும். கணவனா, மனைவியா என்கிற போட்டியை ஏற்படுத்தும். செவ்வாய்தான் நீங்கள் எனில், சுக்கிரன்தான் உங்கள் வாழ்க்கைத் துணைவராக இருப்பார். அதாவது இந்த அமைப்பில் பிறந்தவர்கள் ‘நான் சொல்வதே சரி’ என்று வாதிட்டுக் கொண்டிருப்பார்கள். இதனால் இவர்களின் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள். ‘‘நான் வேற அப்பா அம்மாக்கு பொறந்திருக்கக் கூடாதா’’ என்றெல்லாம் நினைப்பார்கள். எனவே, இவர்கள் பிள்ளைகளுக்காக வாழ வேண்டும். இந்த கிரக அமைப்பை குரு பார்த்தால் வாழ்க்கைத்துணை வசதி வாய்ந்தவராக இருப்பார். விட்டுக்கொடுக்கும் குணத்தைக் கொண்டிருப்பார்.

மிதுனத்தில் சுக்கிரன் உட்காரும்போது படிப்பு கொஞ்சம் சுமாராக இருக்கும். வாக்காதிபதி மற்றும் கல்விக்குரிய சுக்கிரன் மூன்றில் மறையும்போது படிப்பு விஷயத்தில் ரொம்பவும் தொந்தரவு செய்யக்கூடாது. இவர்களிடம் எதையுமே திணிக்கக் கூடாது. அவர்கள் இஷ்டத்திற்கு விடவேண்டும். டாக்டர் படிப்பை முடிக்க முடியாமல் போவதைவிட, எம்.ஏ. படிப்பை முடித்துவிடுவது எவ்வளவோ பரவாயில்லை என்று நினைத்து அவருடைய இஷ்டத்திற்கு விட்டுவிடவேண்டும். இவர்களுடைய வாழ்க்கைத் துணைவர் கொஞ்சம் மாற்றுத் திறனாளியாக இருக்கும் வாய்ப்புண்டு.

கடக ராசியில் சுக்கிரன் அமரும்போது கேந்திராதிபத்ய தோஷம் அடைகிறார். தாயாரின் கட்டுப்பாட்டில் இருப்பார்கள். தாயாரின் அன்பான அரவணைப்பில் இருப்பது தவறில்லை. ஆனால், தாயாரின் முழுக் கட்டுப்பாட்டில் இருப்பது நியாயமில்லை. தாயாரைத் தாண்டி யோசிக்கத் தொடங்க வேண்டும். இது தவிர, சரியான ஜாதகத்தைப் பார்த்துச் சேர்க்கவில்லையெனில் அது தார தோஷத்தை உண்டாக்கிவிடும்.

இந்த அமைப்பை குரு பார்த்தால் கோயில், குளம் என்று போவார்கள். கும்பாபிஷேகம் போன்றவற்றை முன்னின்று நடத்துவார்கள். இந்த அமைப்பில் பிறந்தவர்கள் அரசியல்வாதிகளிடம் சென்று சிக்கிக் கொள்ளக் கூடாது. பங்குதாரர்களோடு சேர்ந்து ரியல் எஸ்டேட் போன்ற தொழில்கள் செய்யும்போது கவனத்தோடு இருக்க வேண்டும்.

சிம்ம ராசியில் செவ்வாயின் சீற்றம் அதிகமாகவும், சுக்கிரனின் தாக்கம் குறைவாகவும் இருக்கும். இந்த ஜாதகரின் வாழ்க்கைத்துணை மாதிரியே குழந்தைகள் பிறக்கும். எல்லாவித உணர்வுகளும் இங்கு அடங்கித்தான் இருக்கும். பூர்வீகச் சொத்து இருந்து கொண்டேயிருக்கும். அதன்மூலமாக ஏதேனும் சம்பாதித்தபடி இருப்பார்கள். ஆன்மிகத்தில் சாஸ்திர சம்பிரதாயங்களை மிகுந்த ஈடுபாடோடு கடைப்பிடிப்பார்கள். இவர்கள் வீர்ய விதைகளாக இருந்து சரியான காலத்தில் முளைத்
தெழுந்து வருவார்கள்.

கன்னியில் செவ்வாயும் சுக்கிரனும் தங்களின் பலத்தை இழக்கிறார்கள். மிக முக்கியமாக திருமண வாழ்க்கையை இந்த அமைப்பு பாதிக்கும். சுக்கிரன் இங்கு நீசமாகிறார். அதனாலேயே ‘நான் இருக்கிறேன்’ என்று காட்டிக் கொள்வதற்காக எடக்கு மடக்காக ஏதேனும் செய்தபடி இருப்பார்கள். தவறுகளைச் செய்து புகழ் பெறத் துடிப்பார்கள். பார்த்தாலே பற்றிக் கொள்ளும் பெட்ரோல் போல காதல் வயப்படுவார்கள்.

இரவு நேரத்திலோ அல்லது பொதுவாகவே இவர்கள் வெகுதூரம் சுயமாக வாகனத்தை இயக்குதல் கூடாது. மத்திம வயதில் கண் பார்வைக் கோளாறு வந்து நீங்கும். சீக்கிரமாக கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாவார்கள். நல்லவர்கள் மாதிரி தெரியும் கூடாநட்புகளோடு சேர்ந்து பாதிக்கப்படுவார்கள். முகத்தில் சில காய வடுக்கள் காணப்படும். வாழ்க்கைத்துணையைப் பிரிந்திருப்பவர்களின் நட்பால் இவர்களுடைய வாழ்க்கை பாதிக்கப்படும். எனவே, தங்களைச் சுற்றிலும் பின்னப்படும் வலைகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த கிரகச் சேர்க்கை அமைப்புள்ள பெண்களுக்கு கர்ப்பப்பை கோளாறு இருக்கும். எனவே, குழந்தை பாக்கியத்தை தள்ளிப் போடக் கூடாது.

துலாம் ராசியில் சுக்கிரன் ஆட்சி பெறுகிறான். இந்த வீடு மேஷ லக்னத்திற்கு களத்திர ஸ்தானமும் ஆகும். சுக்கிரனும் செவ்வாயும் களத்திர ஸ்தானத்தை முடிவு செய்கின்றனர். லக்னாதிபதியான செவ்வாய் ஏழாம் வீட்டில் அமர்ந்திருப்பதால் செவ்வாய் தோஷம் உண்டு. ஆனால், அதே செவ்வாய் அஷ்டமாதிபதியாகவும் - அதாவது விருச்சிக ராசிக்குரியவராகவும் இருப்பதால் தோஷத்தின் வீரியம் குறைகிறது. தோஷம் அப்படியே குறைந்து கால் பங்காக மாறுகிறது. இவர்கள் மிகுந்த வாகனப் பிரியர்களாக இருப்பார்கள். ஏதாவதொரு வாகனத்தை வாங்கியபடியும் விற்றபடியும் இருப்பார்கள்.

வாழ்க்கைத்துணையை ஆரம்பத்தில் நேசிப்பார்கள். இரண்டாவது குழந்தை பிறந்தவுடன் கணவன் - மனைவிக்குள் ஏதாவது பிரச்னை வரத் தொடங்கும். வாழ்க்கைத்துணைவர் சங்கீத ஞானம் உள்ளவராக இருப்பார்.  பெரும் பணம் சம்பாதிப்பவராகவும் இருப்பார். திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கைத்துணையின் சகோதர, சகோதரியோடு அவ்வப்போது பிரச்னைகள் வந்து நீங்கும்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் உயிரியல், பயோ டெக்னாலஜி என படித்தவர்களாக இருப்பார்கள். விருச்சிகத்தில் சுக்கிரனும் செவ்வாயும் அமர்ந்திருந்தால் வாழ்க்கையே மிகவும் சவாலாக இருக்கும். காதல் திருமணம் செய்து கொள்பவர்கள் இந்த அமைப்பில் நிறைய பேர் உண்டு. சிறிய வயதிலிருந்து ‘இதுதான் பொண்ணு... இதுதான் பையன்...’ என்று எதிர்காலம் நிர்ணயித்து வைத்திருந்தால், இவர்கள் அதைத் தவிடுபொடி ஆக்குவார்கள்.

அல்லது சூழ்நிலையால் அம்மாதிரி திருமணத்தை செய்துகொள்ள முடியாதபடி போகும். சிலருக்கு சகோதரர் எங்கு திருமணம் செய்து கொண்டாரோ, அங்கேயே சம்பந்தம் ஏற்பட்டு திருமணமாகும். தோட்டப் பயிர், தென்னந்தோப்புகள் அமைத்தலை மிக ஆர்வமாகச் செய்வார்கள். இவர்கள் விவசாயத் துறையில் பணிபுரிய மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். பறவைகள், விலங்குகள் நடமாட்டத்தைக் கண்டுபிடிக்கும் மதிநுட்பம் மிகுந்தவர்களாக இருப்பார்கள். ஏனெனில், விருச்சிகம் என்பதே காட்டைக் குறிக்கும் ராசியாகும்.

தனுசு ராசியில் சுக்கிரன் அமைவது என்பது மிகவும் விசேஷமாகும். திருமணத்திற்குப் பிறகு முன்னேற்றம் காட்டும் ஒரு அமைப்பு இது. சொந்த ஊரிலிருந்து அல்லது தந்தையிடமிருந்து விலகி தனித்துவம் பெற்று வளர்வார்கள். ரத்தினங்கள் அணிதல், ரத்தினங்களைக் குறித்த அறிவியலையும் அறிந்து வைத்திருப்பார்கள். ஜெம்மாலஜிஸ்ட் ஆக வரக்கூடிய வாய்ப்புகள் நிறைய உண்டு. அறுவை சிகிச்சை நிபுணர், உளவியல் அல்லது மனநல மருத்துவராகும் வாய்ப்புகளும் உள்ளன. மனைவி வழியில் சொத்து சேரும். பொதுவாகவே வசதி, வாய்ப்போடு இருப்பார்கள்.

அடுத்துவரும் மகரம், கும்பம் போன்ற இந்த இரண்டு கிரகங்களும் அமர்வது என்பது அவ்வளவு நல்லதல்ல. ‘மகரத்தில் செவ்வாய் உச்சமாயிற்றே’ என்று கேட்கலாம். ஆனால், சுக்கிரன் இங்கு செவ்வாயின் வீர்யத்தைக் குறைத்து விடுவார். செவ்வாயின் ஆக்கபூர்வமான விஷயங்களைக் குறைத்து, சுக்கிரன் சுகவாசியாக மாற்றுவதற்கு முயற்சிப்பார்.

கணவன், மனைவியிடையே கருத்து மோதல், விரும்பத்தகாத முறையில் திருமண வாழ்க்கை, கூடாப் பழக்கவழக்கங்கள் என்று இருக்கும். கும்பத்தில் சுக்கிரனும் செவ்வாயும் சேர்ந்திருந்தால் ‘‘அண்ணன் சொன்னா கேட்பாரு. ஆனா, நான் சொன்னா மறுத்து ஏட்டிக்குப் போட்டியா பேசுவாரு’’ என்று மனைவி கோபித்துக் கொள்வார்.

மீனத்தில் சுக்கிரன் உச்சமாவதால் தன் தகுதிக்கு மீறிய வாழ்க்கைத்துணைக்கு வாய்ப்பிருக்கிறது. இங்கு சுக்கிரன் மறைந்தாலும் செவ்வாயோடு சேரும்போது கலைத்துறையில் வீர்யமுள்ளவராக இருப்பார். சினிமாத்துறையில் கால்பதித்து வெற்றி பெறுவார். செவ்வாயும் சுக்கிரனும் சேர்ந்துள்ள அமைப்பில் பிறந்தவர்கள் முருகனோடு சேர்ந்துள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று வருவது நல்லது.

முருகனுக்கும் பெருமாளுக்கும் சேர்ந்தபடி முக்கியத்துவம் தரும் கோயில்களில் திருப்பரங்குன்றமும் ஒன்று. கோயிலின் மூலஸ்தானத்தில் கணபதி, முருகன், சிவன், துர்க்கை, சூரியன், விஷ்ணு என 6 தெய்வங்கள் இடம் பெற்றுள்ளனர். முருகன், தெய்வானையுடன் திருமணக்கோலத்தில் வடக்கு நோக்கி அமர்ந்து கலியுக வரதனாய் வேண்டுவோர்க்கு வேண்டுவன அளித்து வருகிறார்.

இவரைச் சுற்றி நாரதர், சந்திரன், சூரியன்-தேவியர் சிற்பங்களாகக் காணப்படுகிறார்கள். இவர்களையடுத்து பவளக்கனிவாய் பெருமாள், மகாலட்சுமியுடன் வீற்றிருக்கிறார். எனவே, இத்தலத்திற்குச் சென்று தரிசனம் செய்து வந்தால் நிச்சயம் செவ்வாய் - சுக்கிரனின் சேர்க்கையால் பெருகும் எதிர்மறை பலன்கள் குறையும். திருப்பரங்குன்றம் எனும் இத்தலம் மதுரையிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது.

(கிரகங்கள் சுழலும்...)

ஜோதிடரத்னா
கே.பி.வித்யாதரன்

ஓவியம்: மணியம் செல்வன்