கல்வி எனும் பணம் காய்க்கும் மரம்!



அலட்சிய அரசு அவதியில் மக்கள்

‘‘புள்ளைங்க கவர்மென்ட் ஸ்கூல்ல படிக்குதுன்னு சொன்னாலே, சொந்தக்காரங்கள்லாம் பதறிப் போய் துக்கம் விசாரிக்கறாங்க. அந்த லட்சணத்துல இருக்குது அரசுப்பள்ளிகள். வாத்தியார் இல்லே... கட்டிட வசதி இல்லே... மரத்தடியில பாடம் நடத்துறாங்க. இருக்கிற வாத்தியாருங்களும் துணைத்தொழில் மாதிரி ஸ்கூலுக்கு வந்து போறாங்க.

கணக்கெடுக்கிறதுல இருந்து எலெக்‌ஷன் நடத்தறவரைக்கும் எல்லாத்துக்கும் வாத்தியாருங்கதான்... அப்புறம் எப்படி புள்ளைங்களுக்கு சொல்லிக் கொடுக்கமுடியும்? தனியார் பள்ளியிலதான் சேத்தாகணும்... ஆனா சம்பாத்தியத்துல முக்கால்வாசி, புள்ளைங்க படிப்புக்கே போயிடுது...’’ - ஆதங்கமும் ஆவேசமுமாகப் பேசுகிற மாலதி தஞ்சாவூரைச் சேர்ந்தவர்.

பேராவூரணி நீலாவுக்கு 2 பிள்ளைகள். பையன் +2. பெண் 9ம் வகுப்பு. இருவருமே தனியார் பள்ளியில்தான் படிக்கிறார்கள். ‘‘அரசுப் பள்ளியில சில பாடங்களுக்கு ஆசிரியர்களே இல்லை. +2வைப் பொறுத்தவரை கால் மதிப்பெண்ல கூட வாய்ப்பு பறி போகலாம்.

முக்கியமான பாடங்களுக்கு வாத்தியாருங்க இல்லேன்னா எப்படி புள்ளைங்க படிச்சு மார்க் வாங்குவாங்க? உக்காரக்கூட நல்ல பெஞ்ச் இல்லே. அதனாலதான் தனியார் பள்ளியை நாடிப் போறாங்க. அரசுப்பள்ளிகளை சரியாப் பராமரிக்காத அரசு, தனியார் பள்ளிகளோட கட்டணத்தையும் சரிவர முறைப்படுத்துறதில்லை. அதனால பிள்ளைகளோட படிப்பு மிகப்பெரிய சுமையா மாறிடுச்சு...’’ - வருந்துகிறார் நீலா.

மாலதி, நீலாவின் குரல்கள் தமிழகத் தாய்மார்களின் ஒட்டுமொத்தக் குரலாக எதிரொலிக்கின்றன. ஒரு காலத்தில் பிள்ளைகளின் திருமணம்தான் பெற்றோருக்கு சுமையாக இருந்தது. இன்று அதைவிடவும் பெரிதாகியிருக்கிறது கல்வி. ‘அரசுப்பள்ளிகள், இல்லாதவர் வீட்டுப் பிள்ளைகளுக்கானவை; தனியார் பள்ளிகளில் படித்தால்தான் எதிர்காலம் நன்றாக இருக்கும்’ என்ற மாயை பெற்றோர்களிடம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டு விட்டது.

பிள்ளைகளின் எதிர்காலம் மீதான அக்கறையில், தகுதியை மீறி கடன்பட்டு தனியார் பள்ளிக்கு அனுப்புகிறார்கள் பெற்றோர். சூழலை சரியாகப் பயன்படுத்தி கல்வியை பணம் காய்ச்சி மரமாக மாற்றிவிட்டன தனியார் பள்ளிகள். பல அறிவாளித் தலைமுறைகளை உருவாக்கிய அரசுப்பள்ளிகள் மெல்லத் தேய்ந்து அழிந்து கொண்டிருக்கின்றன. இன்னொருபக்கம், ‘இணைப்பு’ என்ற பெயரில் பள்ளிகளை மூடிக்கொண்டிருக்கிறது தமிழக அரசு.

தமிழகத்தில் அடித்தட்டுக் குடும்பங்களைச் சேர்ந்த 70 லட்சம் மாணவர்கள் அரசுக் கல்விக்கூடங்களையே நம்பியிருக்கிறார்கள். சுமார் 16% மாணவர்கள் 5ம் வகுப்பு முடிப்பதற்குள்ளாகவே பள்ளியிலிருந்து நின்று விடுகிறார்கள். +2 முடிப்பதற்கு முன்பாக 50% பேர் படிப்பை நிறுத்தி விடுகிறார்கள். +2 முடித்த மாணவர்களில் 34% பேர் மட்டுமே உயர்கல்வியை எட்டிப் பிடிக்கிறார்கள். இதெல்லாம் அரசு தருகிற புள்ளிவிவரங்கள்.

அரசுப்பள்ளிகளின் தரத்தை உயர்த்தி, போதிய ஆசிரியர்களை நியமித்து, இடைநிற்கும் மாணவர்களை ஈர்த்து, வாய்ப்புகளை உருவாக்கித் தந்து, அவர்களின் எதிர்காலத்தை வளப்படுத்துவது அரசின் கடமை. ஆனால் தமிழக அரசு தன் கடமையில் இருந்து விலகி, தனியார் பள்ளிகளை ஊக்குவிக்கிறது. உரிய கண்காணிப்பும், போதிய நிதி ஒதுக்கீடும் இல்லாமல் அரசுப்பள்ளிகள் பொலிவிழந்து கொண்டிருக்கின்றன.

மதிப்பெண் கல்விமுறையில் தங்கள் பிள்ளைகள் பின்தங்கிவிடக்கூடாது என்ற பதைபதைப்பில் பெற்றோர் தனியார் பள்ளிகளை நாடுகிறார்கள். தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையைத் தடுத்து, அவற்றை முறைப்படுத்த வேண்டிய அரசு, நன்றாகப் படிக்கும் அரசுப்பள்ளி மாணவர்களை தன் செலவிலேயே தனியார் பள்ளிகளில் சேர்த்து தன் இயலாமையை வெளிப்படுத்துகிறது.

‘‘இங்கு கல்வித்தந்தையாக இருப்பவர்களில் 80% பேர் அரசியல்வாதிகள். அரசின் கொள்கை முடிவுகளுக்குப் பின்னால் அவர்கள்தான் இருக்கிறார்கள். தமிழகத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. உதவியாளர், காவலர் உள்பட பல பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.

இதனால், கற்றல்சூழல் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. கிராமத்துக் குழந்தைகள் வாகனத்தில் பயணித்து அருகாமை நகர தனியார் பள்ளிகளில் படிக்கின்றன. கிராமங்களில் இருக்கும் அரசுப் பள்ளிகள் காற்றாடுகின்றன. தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளிகள் உள்ளன.

ஒரு மாணவர், இரு மாணவர்களுக்கெல்லாம் ஒரு பள்ளி இயங்கும் அவலநிலை இருக்கிறது. மத்திய அரசு நடத்துகிற கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்கத் துடிக்கிற பெற்றோர், மாநில அரசு நடத்துகிற பள்ளிகளைக் கண்டு விலகிப் போகிறார்கள். காரணம், நிர்வாகக் குளறுபடி. முன்பெல்லாம் வருடத்திற்கு இரண்டுமுறை பள்ளியை ஆய்வு செய்ய அதிகாரிகள் வருவார்கள். இன்று தங்கள் அலுவலகத்தில் அமர்ந்துகொண்டே கணக்கு முடித்து விடுகிறார்கள்.

கும்பகோணம் பள்ளி விபத்துக்குப் பிறகு ஏராளமான புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. அதிகாரிகள் விழுந்து விழுந்து கூரைகளை மாற்றினார்கள். ஆனால் சூழல் மாறவில்லை. இன்றும் சுமார் 2000 பள்ளிகள் அனுமதி இல்லாமல் இங்கே இயங்கிக்கொண்டிருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. இது அதிகாரிகளுக்குத் தெரியாதா? மத்திய அரசு கொண்டு வந்த கல்வி உரிமைச் சட்டத்திற்கான விதிமுறைகளை வகுத்து நடைமுறைப்படுத்த 3 ஆண்டுகள் அவகாசம் தரப்பட்டது.

ஆனால் 5 வருடமாகியும் தமிழக அரசு அச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை. பள்ளிகளில் குழு அமைப்பது ஒரு சடங்காக மட்டுமே நடந்தேறியிருக்கிறது. கல்வி உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த 65% நிதியை மத்திய அரசும், 35% நிதியை மாநில அரசும் தரவேண்டும். இதுவரை அதற்கான நிதி ஒதுக்கப்படவில்லை.

குழந்தைகளின் கல்விக்கு செலவளிக்கும் நிதி என்பது நாட்டின் வருங்கால முன்னேற்றத்திற்கான முதலீடு. ஆனால், தமிழக அரசு கல்வியை சுமையாகக் கருதுகிறது. பிள்ளைகளை பள்ளியில் சேர்த்து கட்டாயக் கல்வி அளிக்க வேண்டிய அரசு, தனியார் பள்ளிகளில் 25%  இடத்துக்காக கையேந்தி நிற்க வைக்கிறது. பிள்ளைகளுக்காக பெற்றோர் சுயமரியாதையை இழக்க வேண்டியிருக்கிறது’’ என யதார்த்தம் பேசுகிறார் இந்திய மாணவர் சங்க மத்தியக்குழு உறுப்பினர் ராஜ்மோகன்.

 தனியார் பள்ளிகளில் 25% இடங்களில் நலிவுற்ற குடும்பத்து மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிற கல்வி உரிமைச் சட்டம், தனியார் பள்ளிகள் அவர்களுக்கு இலவசமாகக் கல்வி வழங்க வேண்டும் என்று நிர்ப்பந்திக்கவில்லை (பெரும்பாலான தனியார் பள்ளிகள் ஏழை மாணவர்களை சேர்ப்பதேயில்லை என்பது வேறு). அம்மாணவர்களுக்கான கட்டணத்தை மாநில அரசுகள் வழங்க வேண்டும்.

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 1 லட்சத்து 39 ஆயிரத்து 805 பேர் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவிக்கிறது. ஏற்கனவே, மாணவர்களை ஈர்க்காமல் தேய்ந்து வரும் அரசுப்பள்ளிகள் இதனால் மேலும் பாதிக்கப்படுகின்றன. தவிர, மக்களின் பணம் தனியார் பள்ளிகளுக்கு கொட்டிக் கொடுக்கப்படுவதையும் சுட்டிக்காட்டுகிறார்கள் கல்வியாளர்கள். இப்படி மடைமாற்றி விடப்படும் கோடிகளை அரசுப்பள்ளிகளில் விதைத்தால் மாணவர் எண்ணிக்கையை அதிகப்படுத்தலாம் என்றும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

‘‘அரசுப்பள்ளிகளை மூடிவிட்டு கல்வியை தனியார் கையில் தரும் முடிவில்தான் அரசு பயணித்துக் கொண்டிருக்கிறது. பெற்றோர் மத்தியில் அரசுப்பள்ளி பற்றி மோசமான மதிப்பீடுகள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளன. அதற்கு அரசும் துணை போகிறது. இது மக்களுக்கு பெரும் சுமையையும் பதற்றத்தையும் உருவாக்கியிருக்கிறது. தனியார் பள்ளிகளின் நிர்வாகக் குளறுபடிகள், சர்வாதி காரம், தகுதியற்ற ஆசிரியர்கள், கட்டணக்கொள்ளை பற்றியெல்லாம் கவலைப்படாமல் தங்கள் பிள்ளைகளைக் கொண்டுபோய் தள்ளுகிறார்கள். வருமானத்தில் பெரும் பங்கை கல்வி தின்கிறது.

பள்ளிகளை இணைக்கிறோம் என்ற பெயரில் மூடிக்கொண்டிருக்கிறார்கள். சென்னை மாநகராட்சியில் மட்டும் 56 பள்ளிகள் ‘இணைக்கப்பட்டதாகச்’ சொல்கிறார்கள். தமிழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் இப்படி இணைக்கப்பட்டிருக்கின்றன. அண்மையில் 2500 பள்ளிகளின் கட்டிடங்கள் தரமிழந்து விட்டதாகக் கூறி, இடிக்கும்படி தொடக்கக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டிருந்தார். அந்தப் பள்ளிகளில் படித்த குழந்தைகள் இப்போது எங்கே படிக்கிறார்கள் என்று தெரியவில்லை. பள்ளிகளில் துப்புரவுத் தொழிலாளர்கள் இல்லை. நிரந்தரமான காவலர்கள் இல்லை. போதிய ஆசிரியர்களும் இல்ைல. இருக்கும் ஆசிரியர்களுக்கும் ஏகப்பட்ட பணிச்சுமைகள்.

அரசுப்பள்ளிகளில் மழலையர் வகுப்புகளைத் தொடங்க நெடுங்காலமாக வலியுறுத்தப்படுகிறது. ஆனால் அரசு செவிசாய்க்கவில்லை. தங்கள் பிள்ளை தமிழையும், ஆங்கிலத்தையும் கற்று பேச வேண்டும் என்பது பெற்றோரின் விருப்பம். ஆனால் அரசு தொடக்கப்பள்ளிகளில் மொழி ஆசிரியர்களே இல்லை. +2 முடித்து, பட்டயப்பயிற்சி முடித்தவர்கள் ஆசிரியர்களாக வருகிறார்கள்.

அவர்களுக்கு ஆங்கிலத்தில் போதிய புலமை இருப்பதில்லை. இவர்களின் திறனை மேம்படுத்த வேண்டிய அரசு, அதைச் செய்யாமல், ஆங்கில வழி வகுப்புகளைத் தொடங்குகிறது. தமிழக அரசிடம் தெளிவான கல்விக்கொள்கை இல்லை. அதனால் நடவடிக்கைகளில் குழப்பங்களே மிஞ்சுகின்றன...’’ என்று வேதனைப்படுகிறார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

நல்ல தலைமுறையை உருவாக்க வேண்டியது அரசின் கடமை. ஆனால் அரசு இந்தக் கடமைகளில் இருந்து நழுவுகிறது. அதனால் கல்வித்தொழில், வளம் கொழிக்கும் தொழிலாக மாறிவிட்டது. இதன் விளைவை எதிர்காலத் தமிழகம் நிச்சயம் சுமக்கும்!பள்ளிகளை இணைக்கிறோம் என்ற பெயரில்  மூடிக்கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட  பள்ளிகள் இப்படி இணைக்கப்பட்டிருக்கின்றன.

- வெ.நீலகண்டன்