அஞ்சறைப் பெட்டி என்கிற மருத்துவப் பெட்டி



கிச்சன் டாக்டர்

இல்லந்தோறும் அஞ்சறைப்பெட்டி என்கிற வழக்கத்தை நம் முன்னோர்கள் கடைபிடித்து வந்தார்கள். சுவையான சமையலுக்கான பொருட்களைக் கொண்ட பெட்டியாக மட்டுமே அல்லாமல், ஆரோக்கியத்தைத் தீர்மானிக்கும் திறன் கொண்ட பெட்டியாகவுமே அதை வடிவமைத்திருக்கிறார்கள். அதன் பாரம்பரியம் குறித்தும், அதில் உள்ள ஒவ்வொரு பொருளின் மருத்துவ குணங்களைப் பற்றியும் விளக்குகிறார் சித்த மருத்துவர் சதீஷ்.

அஞ்சறைப் பெட்டி - ஓர் அறிமுகம்

அஞ்சறைப் பெட்டி என்பது தமிழர்களின் சமையல் அறையை அலங்கரிக்கக்கூடிய ஒரு மருத்துவப் பெட்டி என்றே சொல்லலாம். இதன்மூலம் நோயில்லா வாழ்வியல் முறையை முன்னோர்கள் நமக்கு அளித்திருக்கிறார்கள்.

சீரகம், சோம்பு, மிளகு, மஞ்சள், வெந்தயம், கடுகு, தனியா, பெருங்காயம், லவங்கப்பட்டை, கிராம்பு ஆகியவற்றைக் கொண்ட அஞ்சறைப் பெட்டியின் மகிமை வார்த்தைகளில் அடங்காது. நாம் இதிலுள்ள மருத்துவ குணங்களையும், பயன்படுத்தும் முறைகளையும் பார்ப்போம்.

சீரகம்: சீரகத்தில் வைட்டமின்-பி, இரும்பு, பாஸ்பரஸ், துத்தநாகம் போன்ற சத்துகள் உள்ளன. சீரகம் என்பது சீர்+அகம் = சீரகம் அகத்தை சீர்படுத்துவதால் இதற்கு சீரகம் என்று பெயர் வந்தது. அதாவது நம் உடலில் வயிற்றில் உள்ள வாயுக்களை களைவதில் முக்கிய பங்கு சீரகத்துக்கு உண்டு. இதன் கார்ப்பு, இனிப்பு தன்மை உடம்பை குளிர்வித்து உடல் செரிமானத்துக்கு முக்கியப் பங்கு வகிக்கிறது.

சீரகத்தை நாட்டுச்சர்க்கரையுடன் கலந்து உண்டுவந்தால் தேகம் வன்மை பெறும். சீரகத்தை பொடித்து வெண்ணெயில் கலந்து கொடுக்க பெப்டிக் அல்ஸர் குணமடையும்.சோம்பு அல்லது பெருஞ்சீரகம்: பெருஞ்சீரகம் சீரகத்தைப் போன்று காணப்பட்டாலும் இதன் தன்மை அதனினும் மாறுபட்டது.

பெருஞ்சீரகத்தில்வைட்டமின் பி-6, காப்பர், பீட்டா கரோட்டீன் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இனிப்பான சுவையும் கார்ப்பும் கொண்ட பெருஞ்சீரகம் பெண்களின் கருப்பை சார்ந்த நோய்களுக்கு சிறந்த தீர்வு தரும் திறன் கொண்டது. ஈரல்நோய், குரல் கம்மல், செரியாமை போன்ற நோய்களையும் நீக்கும்.

மிளகு: வைட்டமின்- பி, ஈ மற்றும் பைப்பரின் போன்ற சத்துக்களைக் கொண்டது மிளகு. நம் உடலில் உள்ள வாத, பித்தம், கபம் என்று சொல்லக்கூடிய மூன்று கூறுகளையும் சமநிலையில் வைக்க உதவுகிறது. மிளகு உடலில் உள்ள நச்சுக்களை முறிப்பதில் சிறப்பாக செயல்படுகிறது. அறுகம்புல் + மிளகு  சேர்ந்த குடிநீர் தோல் ஒவ்வாமையைப் போக்கும். மிளகு நல்ல பசியை தூண்டக்கூடியதும் கூட.

மஞ்சள்: Curcumin என்ற ஆல்கலாய்டு மஞ்சளில் உள்ளது. இது ஒரு சிறந்த வைட்டமின் சி என்கிற ஆன்டி ஆக்ஸிடன்ட் உள்ள பொருளாகும். இதில் வைட்டமின் பி அதிகம் உள்ளது. மஞ்சள் இன்று உலகளவில் வைரஸுக்கு எதிராக செயல்படும் பொருளாக நிரூபணம் ஆகியுள்ளது. இதனில் உள்ள உட்பொருள் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது. சிறந்த நோய் எதிர்ப்பு ஆற்றலை உருவாக்கிடவும், நோய்களில் இருந்து பாதுகாக்கவும் மஞ்சள் உதவும்.

வெந்தயம்: வெந்தயம் என்பது வெந்த + அயம் என்பதே வெந்தயம் என்று மருவி வந்துள்ளது. தமிழில் அயம் என்ற சொல்லுக்கு இரும்பு என்ற ஒரு பொருள் உண்டு. அதாவது இயற்கையில் நன்கு பக்குவப்படுத்தப்பட்டுள்ள இரும்புச்சத்து வெந்தயத்தில் உள்ளது. நம் உடலில் உள்ள இரும்புச்சத்தின் அளவையும், ஹீமோகுளோபின் அளவையும் தக்கவைத்து, ரத்தத்தை சுத்திகரிக்கவும் செய்கிறது.

நன்கு முளைகட்டிய வெந்தயம் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும். பித்தத்தை தணிப்பதில் சிறந்தது. நம் உடற்சூட்டைக் குறைத்து நல்ல தூக்கத்தை உண்டாக்கும். நீரிழிவு நோயாளிகளுக்கு மிகச்சிறந்த பலனைத் தரும். இதனை கருணைக்கிழங்கோடு சேர்த்துசாப்பிட்டு வந்தால் உடல் வலிமையாகும்.

வெந்தயத்தை அரைத்து தலையில் வைத்து குளித்து வர முடி உதிர்வைத் தடுக்கலாம். கூந்தலும் நன்கு அடர்த்தியாக வளரும். கடுகு:   நம்முடைய சமையலில் தாளிப்பதற்கு முக்கியப் பொருளாகவும் அதனால் நச்சுகள் உடலில் பன்மடங்கு  குறைகிறது. ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. குடல் வாலைப் பாதுகாத்து குடல்வால் அழற்சி நோயிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.

கொத்தமல்லி: தனியா என்று சொல்லக்கூடிய கொத்தமல்லி பித்தத்தை குறைப்பதில் முக்கியமானதாகும். கல்லீரல் செயல்பாட்டுக்கு மிகவும் முக்கியமான பொருள். இதன் குடிநீ–்ர் தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் இவற்றுக்கு சிறந்த தீர்வை தரும்.

பெருங்காயம்: மூட்டுகளின் சந்துகளில் உள்ள வாயுக்களை வெளியேற்றுவதில் சிறப்பானது பெருங்காயம். இது ஒரு பிசின் வகையைச் சேர்ந்தது. நரம்புகளை பலப்படுத்துவதில் சிறப்புடையது. பெருங்காயத்தை நீர் விட்டரைத்து மார்பின் மீது பற்றுபோட குழந்தைகளுக்கு உண்டாகும் இருமல் குணமாகும்.

பல் தொடர்பான நோய்கள் வராமல் பாதுகாக்கப்படும். பெருங்காயத்துடன் உளுந்து சேர்த்து பொடித்து தீயிலிட்டு புகைத்து அதன் புகையை நாம் சுவாசித்தால் சுவாச நோய்கள் நீங்கும்.லவங்கப்பட்டை:  இதில் Cinnamic acid அதிக அளவில் உள்ளது.

இதிலுள்ள Tannin உடலில் உள்ள கெட்ட கொழுப்பான LDL எனப்படும் கொழுப்பை நீக்குகிறது. இதனால் இதயநோய்கள் வராமல் தடுக்க இயலும். மேலு்ம் லவங்கத்தை வாயிலிட்டு சுவைக்க தொண்டை கம்மல் தீரும். லவங்கம் மற்றும் நிலவேம்பு சமமாக எடுத்து குடிநீர் செய்து கொடுக்க ஜுரத்திற்கு பின் உண்டாகும் களைப்பு நீங்கும்.

லவங்க தைலம் பல் நோய்க்கு பயன்படுகிறது. பஞ்சில் நனைத்து பல்லில் வைக்கும்போது லவங்கத்தை வாயிலிட்டு சுவைக்க லவங்கத்தை நன்கு அரைத்து நெற்றி, மூக்குதண்டில் பற்றிட தலைவலி, மூக்கடைப்பு குணமாகும்.  லவங்கத்தில் anti spasmodic உள்ளது இதனை வெந்நீர் கலந்து அருந்தலாம் மிகுந்த பலனை தரும். இதுபோல் அஞ்சறைப் பெட்டியில் உள்ள ஒவ்வொரு பொருளும் மருத்துவ குணங்களைக் கொண்டதாக உள்ளது.

எல்லா நோய்களுக்கும் அடிப்படையான காரணம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதே! இந்த நோய் எதிர்ப்பு மண்டலத்தை சரியான முறையில் அஞ்சறைப்பெட்டியின் துணைகொண்டு பராமரித்தால் நோயில்லா வாழ்க்கை அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!

- க.இளஞ்சேரன்