எலும்பே நலம்தானா?!



புதிய எலும்பியல் தொடர்

ஆரோக்கியமான வாழ்க்கையின் அஸ்திவாரம் உடற்பயிற்சி.விளையாட்டுத் துறையிலோ, நடிப்புத்துறையிலோ இருப்பவர்களுக்கு மட்டும்தான் உடற்பயிற்சி அவசியம் என்றும், அதிக பருமன் கொண்டவர்கள்தான் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றும் பலருக்குள்ளும் தவறான எண்ணம் பதிந்திருக்கிறது. அப்படியில்லை.வாழ்நாளை நீட்டிக்க நினைக்கிற ஒவ்வொருவருக்கும் தினசரி உடற்பயிற்சிகள் என்பவை முக்கியம்.

தினமும் பல் துலக்குவது, காலைக்கடன்களைக் கழிப்பது, குளிப்பது, சாப்பிடுவது போன்றவற்றைப் போல உடற்பயிற்சியும் அன்றாடக் கடமைகளில் ஒன்றாகப் பின்பற்றப்பட வேண்டும். உடற்பயிற்சிகள் செய்வதால் கிடைக்கிற பலன்களைப் பற்றிப் பேசிக் கொண்டே இருக்கலாம். அவற்றில் முக்கியமானது நோயற்ற வாழ்வும், என்றும் இளமையும்.

இந்த இரண்டைத் தாண்டி ஏன் உடற்பயிற்சி செய்ய வேண்டும்?

உடற்பயிற்சி செய்தால்தான் உடலின் எலும்புகள் உறுதியாகும். எலும்புகள்தானே நம் உடலைத் தாங்கும் ஆதாரம்? அந்த ஆதாரம் ஆரோக்கிமாக இருந்தால்தானே நம் உருவமும் உடலும் சீராக இருக்கும்? தினமும் உடற்பயிற்சி செய்கிறவர்களுக்கு மனம் அமைதியாக இருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விண்வெளி வீரர்களுக்கு எலும்புகள் ஆரோக்கியமாக இருப்பதில்லை எனக் கண்டுபிடித்து இருக்கிறார்கள். காரணம் உடற்பயிற்சியே இல்லாத அவர்களது வாழ்வுமுறை. புவி ஈர்ப்பு விசை இல்லாத காரணத்தினால் அவர்கள் மிதந்த நிலையிலேயே இருக்கிறார்கள்.விண்வெளியில் இருப்போரின் எலும்புகளின் அடர்த்தியைப் பரிசோதித்துப் பார்த்திருக்கிறார்கள். அதில் அவர்களது எலும்புகள் மிகவும் பலவீனமாகவும், ஆஸ்டியோபொரோசிஸ் பாதிக்கப்பட்ட நிலையிலும் இருப்பது தெரிய வந்திருக்கிறது.

உடற்பயிற்சி செய்யாதவர்களுக்கு எலும்புகள் மட்டுமில்லை, எலும்புகளைப் பின்னிப் பிணைக்கும் தசைகளும் வலுவிழப்பது உறுதி. ஏதோ அடிபடுகிறது... உடல்நலமில்லை... படுத்த படுக்கையில் ஒருவர் இருக்கிறார் என வைத்துக்கொள்வோம். வெறும் 48 மணி நேரத்திலேயே அவரது தசைகள் 25 சதவிகித அளவுக்கு பலவீனமாவதை பார்க்கலாம்.எலும்புகள் என்பவை என்ன?

எலும்பு என்பது உடலின் மிக முக்கியத் திசு. கால்சியம் மற்றும் பாஸ்பரஸால் உருவாக்கப்பட்டதே எலும்பு.எலும்புதான் நமக்கு ஒரு உருவத்தைத் தருகிறது. எலும்புகளே இல்லாவிட்டால் நாம் வெறும் உருண்டையான சதைப்பிண்டமாகவே இருப்போம். எனவே நம்மை தலைநிமிர்ந்து கம்பீரமான தோரணையுடன் நடமாடச் செய்வதே எலும்பு அமைப்புதான். நமது அசைவுகளுக்கும் அவையே முக்கியக் காரணம்.

எலும்புகள்தான் நம் உடலின் உள் உறுப்புகளைக் காப்பாற்றுபவை. உடலுக்குள் நோய் எதிர்ப்பு சக்திக்கு காரணமான ரத்த செல்களையும் ஆன்ட்டிபாடிக்களையும் உருவாக்குவதில் எலும்புகளே காரணமாக இருக்கின்றன.

குழந்தை பிறக்கும்போது 306 எலும்புகள் இருக்கும்.  வாலிப வயதை நெருங்கும்போது அவை 206ஆகக் குறைகின்றன. எலும்புகளில்தான் தசைநார்கள் இணைக்கப்பட்டிருக்கின்றன. 2 எலும்புகள் சேருமிடத்தை ஜாயின்ட் என்கிறோம்.

அங்கே நிகழ்கிற உராய்வைத் தடுப்பதே குறுத்தெலும்புகளின் வேலை. இந்தக் குறுத்தெலும்புகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படும்போதுதான் பிற்காலத்தில் மூட்டுவலியாக அறியப்படுகிறது.

எலும்புகளுக்குக் குறிப்பிட்ட அளவு சுமை அவசியம். அப்போதுதான் அவற்றின் தன்மை மாறாமலிருக்கும். அதற்குத் தான் உடற்பயிற்சி வலியுறுத்தப்படுகிறது.உடற்பயிற்சி என்றதும் எடை தூக்க வேண்டும், உடல் வலிக்கவலிக்க உடற்பயிற்சி நிலையங்களுக்குச் சென்றுதான் செய்ய வேண்டும் என்றெல்லாம் அர்த்தமில்லை.

சாதாரண வாக்கிங், ஜாக்கிங் போன்றவையே எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளப் போதுமானவை.நம் அசைவுகளுக்கு அவசியமான சைனோவியல் திரவமானது கொஞ்சமாவது உடற்பயிற்சி இருந்தால்தான் சுரக்கும்.

உடற்பயிற்சி செய்யும்போது நம் இதயத்துடிப்பு அதிகமாகும்.நிறைய ரத்தம் பம்ப் செய்யப்படும். ரத்தத்தில் ஆக்சிஜன் சப்ளை அதிகரிக்கும். உடற்பயிற்சி செய்வதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். சாதாரண பாக்டீரியா, வைரஸ் தொற்றிலிருந்து புற்றுநோய் அபாயம் வரை தவிர்க்கப்படுவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடற்பயிற்சி செய்கிறபோது நம் மூளையிலிருந்து எண்டார்பின் என்கிற ரசாயனம் சுரக்கப்படும். அது நம் உணர்வுகளைக் கட்டுப்படுத்தி, மன அழுத்தத்தைக் குறைக்கும்.

உடற்பயிற்சிகள் செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை.

* எந்தப் பகுதிக்கு உடற்பயிற்சி செய்யும் முன்பும் வார்ம் அப் பயிற்சிகள் அவசியம். இதனால் சுளுக்கு, தசைப்பிடிப்பு போன்றவை தவிர்க்கப்படும்.

* உடற்பயிற்சிகளை முடிக்கும்போது திடீரென நிறுத்தக்கூடாது. மெள்ளமெள்ளக் குறைத்து நிறுத்த வேண்டும்.

* உங்கள் உடல் ஒத்துழைக்கிற அளவுக்கான பயிற்சிகளை மட்டும் செய்யவும்.

* கன்னாபின்னாவென உடலைத் திருப்புவது, முறுக்குவது போன்றவை வேண்டாம்.

* உடற்பயிற்சிகள் செய்கிறவர்கள் நிறைய தண்ணீரும், பழங்கள் மற்றும் பழச்சாறுகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

*  உடற்பயிற்சி செய்கிறபோது சரியான shoes அணிந்துகொள்ள வேண்டும்.

( விசாரிப்போம்... )

எழுத்து வடிவம்: எம்.ராஜலட்சுமி