இனி தொல்லையில்லை



வாட்ஸ் அப்பில் பெரிய தொல்லையே நமக்குத் தேவையில்லாத குரூப்களில் நம் அனுமதியின்றி நம்மை இணைத்துவிடுவதுதான். அப்படி இணைத்துவிடுவதால் 24 மணி நேரமும் மெசேஜ்கள் வந்து நம்மை தூங்கவிடாமல் செய்துவிடும். குரூப்பில் இருந்து வெளியானாலும் வேறு குரூப்பில் யாராவது நம்மை இணைத்துவிட்டு இதே தொல்லையைத் தருவார்கள். இனி அந்த தொல்லை இருக்காது.

ஆம்; நமக்கு விருப்பமில்லாத வாட்ஸ் அப் குரூப்களில்  இணைக்கப்படுவதைத் தடுக்க,  புதிய அப்டேட்டை வழங்கியுள்ளது வாட்ஸ் அப். இந்த வசதியைச் சிலருக்கு மட்டுமே வழங்கி சோதனை செய்து வருகிறது வாட்ஸ் அப். சோதனை முயற்சி வெற்றிபெற்றால் இந்த அப்டேட்டை எல்லோரும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த புதிய வசதியின்படி  வாட்ஸ் அப் குரூப்களில் நம்மை யாரெல்லாம் இணைக்கலாம் என்பதை நாமே தேர்வு செய்துகொள்ளலாம். இந்த அப்டேட்டைப் பயன்படுத்த முதலில் அக்கவுன்ட்  >பிரைவசி   > குரூப் என்ற பகுதிக்குச் செல்ல வேண்டும். அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் மூன்று (Nobody, My Contacts or Everyone) ஆப்ஷனில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்துகொள்ள வேண்டும். Nobody என்கிற ஆப்ஷனைத் தேர்வுசெய்தால், குழுவில் உங்களையும் இணைக்கட்டுமா என்ற  இன்வைட் மெசேஜ் வரும். விருப்பமிருந்தால் இணைந்துகொள்ளலாம். இல்லையெனில் தவிர்த்துவிடலாம்.

அந்த இன்வைட் மெசேஜ் மூன்று நாட்களில் காலாவதி ஆகிவிடும். My contacts என்கிற ஆப்ஷனைத் தேர்வுசெய்தால் மொபைலில் எண்ணைப் பதிவு செய்து contacts வைத்திருக்கும் நபர்கள் மட்டுமே நம்மை குரூப்களில் இணைக்க முடியும். Everyone என்கிற ஆப்ஷனைத் தேர்வுசெய்தால், யார் வேண்டுமானாலும் நம் அனுமதியின்றி குரூப்களில் இணைக்க முடியும்.

இதை தேர்வு செய்யும்போது கவனமாக இருத்தல் அவசியம். இப்போது ஆண்ட்ராய்டு மொபைலில் மட்டுமே இந்த புதிய அப்டேட் இயங்குகிறது. விரைவில் ஐபோன்களில் செயல்படும்.