ரோஜா போன்ற இதழ்களுக்கு...



- பி.கமலா தவநிதி

முக அழகை சற்று உயர்த்திக் காட்டுவதில் உதட்டுக்கும் பங்கு உண்டு. உதடு மென்மையாக இருக்க வேண்டுமென்றால் அதன் மீதுள்ள இறந்த செல்களை அவ்வப்போது நீக்கி விடவேண்டும். மார்க்கெட்டில் கிடைக்கும் உதட்டு சாயங்களை, தனக்கு இது உகந்ததா இல்லையா என்று கூட ஆராயாமல் பயன்படுத்துவதின் விளைவாக உங்கள் உதடு வறண்டு, அதன்மீது தோல்கள் செதில் போன்று உரிந்து இருந்தால் உதட்டின் அழகே கெட்டுவிடும்.  

மென்மையான உதடுகள் பெற  உங்கள் வீட்டு சமையலறை அலமாரியில் இருந்து சில பொதுவான பொருட்கள் பயன்படுத்தி ஒரு தீர்வு காணலாம். முகத்தை போலவே உதடுகளிலும் இரண்டு செல்களை அகற்ற வேண்டும். அப்போதுதான் உதடுகள் மிருதுவாகவும், மென்மையாகவும் இருக்கும். வீட்டிலேயே எப்படி ஸ்க்ரப் தயாரிப்பதென்பதை பார்ப்போம். 

* ஒரு டீஸ்பூன் ரோஜா இதழ் பேஸ்ட் மற்றும் ஒரு டீஸ்பூன் பால் கிரீம் ஆகியவற்றை சேர்க்கவும். இந்த கலவையை உதட்டில் பூச வேண்டும். 5 நிமிடங்கள் காத்திருங்கள், பின் ஒரு மென்மையான ப்ரிஸ்டில் டூத்பிரஷ் அல்லது உங்கள் விரல்களைப் பயன்படுத்தி மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். இளஞ்சூடான தண்ணீரில் உதட்டை கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் இரண்டு முறை செய்து வந்தால் உங்கள் இருண்ட உதடுகள் இயற்கை இளஞ்சிவப்பு நிறமாக மாறுவதை கண்கூடாக பார்க்கலாம். 

* ஒரு ஸ்பூன் தேன், சிறிதளவு சர்க்கரை எடுத்துக் கொண்டு நன்கு கலக்கவும். இந்த கலவையை விரல் நுனியில் தொட்டு உதட்டில் வட்டவடிவில் நன்கு மசாஜ் செய்ய வேண்டும். 2 முதல் 3 நிமிடங்கள் வரை தினமும் காலை செய்து வரலாம்.

உங்கள் உதடுகளிலிருந்து இறந்த சரும செல்களை அகற்றவும், அவற்றை ஈரப்படுத்தவும், சர்க்கரை கலந்த தேன் சிறந்த மருந்துகளில் ஒன்றாகும். உதடுகள் இழந்த ஈரப்பதத்தை மீட்டெடுத்து தக்க வைக்கும் தன்மை தேனுக்கு உண்டு. மேலும் உதடுகளில் பிளவு ஏற்படுவதை தடுக்கிறது. சர்க்கரையும் தேனும் ரோஜா நிறத்தில் உதட்டை மெருகேற்றுகிறது.