பெண்களுக்கு முன்னுரிமை




வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதாவது வீட்டு வேலை செய்யும்  பெண்களின் மாதச் சம்பளத்தை உயர்த்தித்தர அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குறைத்துக் கொடுத்தால் சிறைத் தண்டணைதரவும்  உத்தரவிட்டுள்ளது.பெண்களாக பிறப்பெடுத்ததே ஒரு பெருமைதான். வாழும் காலத்தில் அவர்களின் வாழ்க்கையில் சந்திக்கும் சோதனைகள்  சொல்லி மாளாது. துன்பங்களையும், துயரங்களையும் தாண்டி பலபேர் இன்னும் சோதனையான வாழ்க்கையையே வாழ்கிறார்கள்.  வீட்டுவேலை, துப்புரவுப் பணி எனப் பல வேலைகளில் அவர்களைப் பார்க்க முடிகிறது. இதுபோன்ற வேலைகளில் ஈடுபடும் பெண்களின்  ஒரே குறையாக இருப்பது ஊதியப் பிரச்சனைதான். அதிகப்படியான வேலைகள் செய்தும், சரியான ஊதியம் இல்லாமல் கஷ்டப்படும்  இவர்களின் குறையைப் போக்குவதுபோல் கோவை தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் தலைமையிலான குழு ஆய்வு நடத்தியது.

இந்த ஆய்வுக்குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் வீட்டு வேலை செய்பவர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம்  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வீட்டு வேலை செய்பவர்கள் 8 மணி நேரம் பணிபுரிவதற்கு முறையே 8,050 ரூபாயும், 7,246 ரூபாயும் ஊதியமாக  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நகரங்களைப் பொறுத்தவரை சமையல், தோட்ட வேலை செய்பவர்களுக்கு மாத ஊதியமாக குறைந்தபட்சம் 7,823  ரூபாய் மற்றும் 7,041 ரூபாய் ஊதியமாகத் தர வேண்டும். துணி துவைப்பவர்கள், பாத்திரம் துலக்குபவர்களுக்கு மாநகராட்சிப் பகுதிகளில்  7,535 ரூபாயும், நகராட்சிப் பகுதிகளில் 6,836 ரூபாயும் ஊதியமாகத் தர தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வீட்டிலேயே தங்கி  வேலை பார்ப்பவர்களுக்கு இதைவிடக் கூடுதலாக 10 சதவிகிதம் ஊதியம் அளிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.

இதேபோல் வீட்டிற்குச் சென்று பணிபுரியும் செவிலியர், தினமும் ஒரு மணி நேரம் பணிபுரிந்தால் அவர்களுக்கு குறைந்தது மாநகராட்சிப்  பகுதிகளில் 39 ரூபாயும், நகராட்சிப் பகுதிகளில் 35 ரூபாயும் ஊதியமாகத் தர வேண்டும் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு நிர்ணயித்த  ஊதியத்தைவிடக் குறைவான ஊதியம் வழங்கினால் அது மனித உரிமை மீறலாகும். இதை அமல்படுத்த தவறினால் வேலை வழங்கும்  வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழக அரசின் இந்த  அறிவிப்பை வேலை வழங்கும் வீட்டின் உரிமையாளர்கள் கவனத்தில் எடுத்துக்கொண்டு அவர்களுக்கு அரசு நிர்ணயித்தபடி ஊதியம்  வழங்கினால் இதுபோன்ற பெண்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும். ஓடாய் உழைத்து மாடாய் தேய்ந்து போகும் வீட்டு வேலை செய்யும்  பெண்களின் கண்ணீர் துடைக்கப்படுமா?

- எம்.எஸ்.மணியன்