போரும் பெண்களும்!



மகாபாரதக் கதையில் நடக்கும் போரில் லட்சக்கணக்கானோர் கொல்லப்படுகின்றனர். கர்ணனைப் பறிகொடுத்த வேதனையில் குந்தியும், தன் நூறு மகன்களையும் பறிகொடுத்த காந்தாரியும் போர்க்களத்துக்கு அவர்களின் உடல்களை தேடிச் செல்கின்றனர். குருதியின் வாசனை வீசும் இடத்தில் உடல்கள் சிதறி கிடக்கின்றன. உடல்களை தின்ன அலையும் கழுகுகளும், ஓநாய்களும் அவர்களை வரவேற்கின்றன.

பெரும் இழப்பிற்கு பின் மௌனத்தை உடைத்து குந்தியும், காந்தாரியும் பேசத் தொடங்குகின்றனர். ‘‘மனிதநேயம் இல்லாமல் ஈவிரக்கமின்றி கொல்ல வைத்து இந்தப் போரை நடத்தியது எது, அரசர்களுக்கு இடையே நடக்கும் அதிகார வேட்கை சண்டையில் குடிமக்கள் ஏன் சாக வேண்டும்? இத்தனை பேரைக் கொன்றுவிட்டு வென்றவர்கள் யாரை ஆளப்போகின்றனர்’’ என அந்தப் பெண்கள் கேட்கும் கேள்விக்கான கதை தான் ‘ஸ்தீரி பருவம்’ நாடகம்.

ஒவ்வொரு போர் முடிந்ததும் இறந்தவர்கள் ஆண்கள் என்றால் அவர்களின் அம்மாக்கள், உடன்பிறந்தவர்கள், மனைவிகள், குழந்தைகளுக்கு கிடைத்தது என்ன? போருக்குப் பின் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை பெண் மைய சிந்தனை நோக்கில் மிகவும் உயிரோட்டமான நாடகமாக கொண்டு வந்திருக்கிறார் பேராசிரியர் மங்கை. நாடகத்தை எழுதி இயக்கிய இவர் ‘மரப்பாச்சி’ என்கிற தன்னார்வக் குழுவை நடத்தி வருகிறார். இவர் தன் குழு மூலம் பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து
நாடகங்களை நடத்தி வருகிறார்.

 ‘‘40 வருடங்களாக பெண் மைய செயற்பாட்டாளராக இருக்கிறேன். இதுவரை 40 க்கும் மேற்பட்ட பெண்மை சார்ந்த நாடகங்களை நடத்தியிருக்கிறேன். தற்போது பாலஸ்தீனம், உக்ரைன் போன்ற நாடுகளில் நடை பெற்று வரும் போர்களை நாம் சாதாரணமாக கடந்து போகிறோம். அதில் தன்னுடைய குடும்பம் மற்றும் உடைமைகளை இழந்து, உணவில்லாமல் அகதிகளாகும் இவர்களை பார்த்து எப்படி நம்மால் சாதாரணமாக கடந்து போக முடிகிறது என்பதுதான் இந்த ‘ஸ்தீரி பர்வம்’.

பல்லாயிரக்கணக்கான மக்கள் இறந்து போவதை வெறும் எண்ணிக்கையாக மௌன சாட்சியாகத்தான் பார்க்கிறோம். அதிலும் முக்கியமாக போர் என்பது ஆதி காலத்தில் இருந்தே ஆண்களின் வீரமாக பார்க்கப்படுகிறது. அரசரின் அதிகாரத்திற்காக மக்கள் கொன்று குவிக்கப்படுகிறார்கள். 

இறந்தவர்களின் குடும்பத்தினர் பின்னாளில் எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்பதைத்தான் இந்த நாடகம் மூலமாக சொல்ல வருகிறோம். போர் ஒரு போதும் பெண்களுக்கு நன்மை செய்ததில்லை. இதை உணர்த்துவதற்காகத்தான்  பெண்மைய நோக்கில் ஒரு நாடகத்தை நடத்த வேண்டும் என்று திட்டமிட்டேன்’’ என்றவர் போரினால் பெண்கள் பட்ட துயரங்கள் குறித்து பேசத் தொடங்கினார்.

‘‘நாடகங்கள் ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் புதுவிதமான புரிதலை தரும். மேலை நாட்டு மக்கள் நாடகங்களை விரும்பி பார்ப்பார்கள். காரணம், இதில் நேரடியாக ஒரு விஷயத்தை கொண்டு செல்ல முடியும். அதாவது ரத்தமும் சதையுமாக நடிப்பதை பார்க்கலாம். அதனால்தான் இன்றும் நாடகங்கள் மக்களுக்கு நெருக்கமாக இருந்து வருகிறது. 

போர் சூழலும் பெண்கள் வாழ்க்கையும் என்றுமே ஒத்து வராதவையாகவே இருந்துள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட பெண்களை பற்றி சொல்ல வேண்டும் என நினைத்த போது மகாபாரதத்தில் இருந்த ஸ்தீரி பர்வத்தை பெண்மைய சிந்தனை கோணத்தில் எடுக்க வேண்டும் என தோன்றியது. இதில் காந்தாரி தன் மனவாட்டத்தை அரசபையில் பேசுவாள்.

அதனால் இந்தக் கதையை நாடகமாக்க வேண்டும் என நினைத்தேன். காந்தாரி மற்றும் குந்தி கதாபாத்திரத்தின் பார்வையிலிருந்து கதையை சொல்ல விரும்பினோம். அதே சமயம் உலகம் முழுவதும் நடக்கும் போர்களை பற்றியும் பேச வேண்டும் என நினைத்தோம். 

அதனால் உக்ரைன், பாலஸ்தீனம் ஆகிய பகுதிகளில் நடந்த போர்களை இணைத்து இந்த நாடகத்தை இயற்றினோம். போருக்கு முன்பும் பின்பும் வாழ்க்கையை சுமக்க வேண்டியவர்களாக பெண்கள்தான் இருக்கிறார்கள். எது வீரம், எது துணிவு என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அழிப்பதுதான் வீரம்என்றால் வாழ்வதற்கு என்ன பெயர்?

கடாரம் கொண்டான், கங்கை கொண்டான் என இன்னமும் பெருமை பேசுகிறோம். வீரம், தியாகம் என்கிற பெயரில் போர்களை ஆதரிக்கும் மனநிலையில் தான் இருக்கிறோம். முதலில் நடந்த போர்கள் எல்லாமே எல்லைகளுடன் தொடர்பு கொண்டவை. இன்று அணுசக்தி, குடி தண்ணீர், பெட்ரோல் என வணிகத்திற்காக போர் நடக்கிறது. இதனால் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் குழந்தைகளும் பெண்களும்தான்.

இந்த நிலையை நாம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லக்கூடாது. வருங்கால தலைமுறை போர்கள் இல்லாத அமைதியான சூழலில் வாழ வேண்டும் என நினைக்கிறேன். அந்தக் கனவினை இந்த நாடகங்களின் வழியாக சமூகத்தில் ஏதாவது ஒரு சலனத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலே இது போன்ற நாடகங்களை இயங்கி வருகிறேன்’’ என்கிறார் மங்கை.

மா.வினோத்குமார்