முத்தம் முத்தம் முத்தமா?



பிலிமாயணம்  14

எண்பதுகளின் பெல்பாட்டம் இளைஞர்கள் ஆரம்பத்தில் மாயா, ஜோதிலட்சுமி, ஜெயமாலினியின் அழகிலும், ஆட்டத்திலும் மயங்கிக் கிடந்தார்கள். இன்றைய சினிமாவில் குத்துப்பாட்டு போன்று அன்றைய சினிமாவில் ஒரு கிளப் டான்ஸ் இடம்பெறும்.

கவர்ச்சி ஆட்ட நடிகைகள் குட்டைப் பாவாடை அணிந்து கையில் மதுக் கோப்பைகளுடன் காம போதை ஏற்றினார்கள். இடுப்பை குளோஸ்அப்பில் ஆட்டினார்கள். தொப்புளை குளோஸ்அப்பில் காட்டினார்கள், பக்கவாட்டில் மார்புகளை அசைத்தார்கள். பாடலாசிரியர்கள் இதற்கென்றே பாடல்கள் எழுத ஆரம்பித்தார்கள்.

“நேத்துராத்திரி யம்மா...” என்றும் “சொர்க்கம் மதுவிலே சொக்கும் அழகிலே” என பாடல்களும் கூட சேர்ந்து போதையூட்டின. இதுதவிர ஹீரோயின்கள் உள்பாவாடையுடன் குளத்தில் இறங்கி குளிக்கிற காட்சியும், வீட்டு பாத்ரூமில் மஞ்சள் தேய்த்து குளித்த காட்சியும், வில்லன்கள் ஹீரோயினை பாலியல் பலாத்காரம் செய்யும்போது விலகும் ஆடைகளும் ரசிகர்களை சுண்டி இழுத்தன.

இந்த விஷயத்தில் பாரதிராஜா இரண்டு புரட்சிகளைச் செய்தார். ஒன்று, ‘டிக் டிக் டிக்’ படத்தில் மாதவி, ராதா, ஸ்வப்னாவை நீச்சல் உடையில் நீந்தவிட்டு ரசிகனுக்கு கவர்ச்சியில் புது பரிமாணம் கொடுத்தார்.

அடுத்து, ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் ராதாவும் கார்த்தியும் பூக்களுக்குள் பொட்டுத் துணியின்றி படுத்திருப்பது போன்று காட்டி மூச்சுத் திணற வைத்தார். இந்தக் காட்சி வரை படத்தை பார்த்துவிட்டு அதன்பிறகு ரசிகன் எழுந்து சென்ற நிகழ்வெல்லாம் அப்போது நடந்தேறியது.

பாலச்சந்தரும் தன் பங்கிற்கு ‘புன்னகை மன்னன்’ படத்தில் கமல், ரேகாவுக்கு லிப்லாக் முத்தம் கொடுக்கும் காட்சியை வைத்து புரட்சி செய்தார். அதுவரை காதல் இளவரசனாக இருந்த கமல், முத்தம் மொத்தத்தையும் குத்தகைக்கு எடுத்துக்கொண்டு முத்தப் பேரரசனாக மாறியது அப்போதுதான்.

ஆங்கிலப் படங்களில் மட்டுமே பார்த்த முத்தக் காட்சியை தமிழ்ப் படத்தில் பார்த்து ரசிகன் மிரண்டு போனான். அந்தக் காட்சியின் அழுத்தம் அந்த முத்தத்தை காமக் கண்ணோட்டத்திலிருந்து காப்பாற்றியது தனி.

இவைகளைத் தாண்டி தமிழ் ரசிகனைக் கிறங்க வைத்தது ஹாலிவுட் படங்களில் வரும் முத்தக்காட்சிகள்தான். குறிப்பாக ஜேம்ஸ்பாண்ட் படங்கள். ஜேம்ஸ்பாண்ட் ஆங்கிலம் மட்டுமே பேசிக் கொண்டிருந்த காலத்தில் ஜேம்ஸ்பாண்டின் வீரதீர சாகத்தை விட காமதீர சாகசத்தையே அதிகம் ரசித்தான்.

ஜேம்ஸ்பாண்ட் ஹீரோயின்களின் ஆடை அவிழ்ப்பும், படுக்கையறைக் காட்சியும், லிப்லாக் முத்தக் காட்சியும் தமிழ் ரசிகனின் காசை வாங்கி கல்லாவை நிரப்பியது. இதுதவிர பாலியல் கதைகளைக் ெகாண்ட சில சிறிய ஆங்கிலப் படங்களும் வெவ்வேறு பெயர்களில் வெளிவந்து சக்கை போடு போட்டன.

‘அவளோட ராவுகள்’, ‘ஓர் ராத்திரி’, ‘மாமனாரின் இன்பவெறி’, ‘பாவம் கொடூரன்’ என கேரள தேசத்திலிருந்து புறப்பட்டு வந்த மலையாளப் படங்களும் தமிழ் ரசிகர்களின் பாலியல் தாகத்தை தணித்தன.

மலையாளப் படங்களுக்கென்று தியேட்டர்கள் காலைக் காட்சிகளையும், நள்ளிரவுக் காட்சிகளையும் ஒதுக்கின. காலைக் காட்சி படங்களில் நடிப்பதற்கென்றே தனி நடிகைகளும் உருவானார்கள். இந்த மாதிரியான படங்களில் படுக்கையறைக் காட்சிகளை இலைமறை காயாகக் காட்டுவார்கள்.

காட்சிகள் நேரடியாக விரியா விட்டாலும் காட்சியின் வீரியத்தை உணர வைத்து விடுவார்கள். அதாவது மீதியை ரசிகனின் கற்பனைக்கு விட்டு விடுவார்கள். இந்தக் காட்சியும், கற்பனையும் கலந்த அனுபவம் ரசிகனுக்கு பிடித்திருந்தது. மற்ற காட்சிகளை விட காலைக் காட்சிகள் ஹவுஸ்புல்லாக தொடங்கியது.

ஷகிலாக்களும், ரேஷ்மாக்களும் வளரத் தொடங்கினார்கள். இப்படி ஒரு படத்தில் கமல்ஹாசனும் நடித்திருக்கிறார் என்று இப்போது சொன்னால் அவரது இன்றைய இமேஜுக்கு லேசான சேதாரம் ஏற்படலாம். இமேஜ் பற்றியெல்லாம் கவலைப்படுபவரா கமல்ஹாசன்?

(பிலிம் ஓட்டுவோம்)

பைம்பொழில் மீரான்