ராஜாவுக்கு செக் வைக்கும் ராணிகள்!



இயக்குநர்  சேரன் மீண்டும் நடிப்பு, இயக்கம் என சுறுசுறுப்பாக தனது அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார். ஒரு பக்கம் ‘திருமணம்’ படத்தை இயக்கி நடித்துக்கொண்டே, இன்னொரு பக்கம் ‘ராஜாவுக்கு செக்’ படத்திலும் நடித்து முடித்துவிட்டார். இதில் ‘ராஜாவுக்கு செக்’ படம் எமோஷனல் திரில்லராக புதுவிதமான சேரனை ரசிகர்களுக்கு காட்டும் படமாகத் தயாராகியுள்ளதாம்.

இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் சாய் ராஜ்குமார். இந்தப் பெயர் புதிய பெயர் போல் தோன்றினாலும், ஏற்கனவே ‘ஜெயம்’ ரவியை வைத்து ‘மழை’ படத்தை இயக்கிய அதே ராஜ்குமார்தான் இவர்.  கொஞ்ச காலம் தெலுங்கு திரையுலகம் பக்கம் சென்றுவிட்டு, தற்போது சாய் ராஜ்குமார் ஆக மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார். படத்தைப் பற்றி நம்மிடம் பகிர்ந்து கொண்டார்  இயக்குநர் சாய் ராஜ்குமார்.

‘‘இப்படத்துக்கான கதையை உருவாக்கி முடித்ததுமே இதில் யார் நடித்தால் சரியாக இருக்கும் என்கிற கேள்வி எழுந்தபோது முதல் ஆளாக என் மனதில் தோன்றியவர் சேரன். காரணம், சில விஷயங்களை சிலர் சொன்னால்தான் அது சேரவேண்டிய இடத்திற்கு சரியாகச் சென்று சேரும். இதில் சொல்லப்பட்டுள்ள ஒரு முக்கியப் பிரச்சனையை  மத்திம வயதில் உள்ள, அதேசமயம் மக்களுக்கு நன்கு அறிமுகமான சேரன் போன்ற ஒரு  நடிகர் சொன்னால் மட்டுமே அது பொதுமக்களிடம் சரியான விதத்தில் சென்று சேரும் என உறுதியாக நம்பினோம்.

அவ்வகையில் சேரன் ஒரு தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். எமோஷனல் த்ரில்லராக உருவாகியுள்ள இந்தப் படம் இதுவரை தமிழ் சினிமாவில் வந்திராத ஒரு ஜானரைச் சேர்ந்த படம் என தைரியமாகச் சொல்வேன். படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்து நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில்தான் சேரன் தனது ‘திருமணம்’ படத்தையும் ஒரே மூச்சில் உருவாக்கிக் கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் என்னுடைய படத்துக்காக சேரனுக்கு ஒரு கெட்டப் சேஞ்ச் மாற்ற வேண்டியிருந்தது. அதைக் கணக்கிட்டு, அவர் ‘திருமணம்’ படத்தில் நடித்து முடித்துவிட்டு வந்ததும், அவரது கெட்டப்பினை மாற்றி அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கினோம்.

ராஜாவுக்கு செக் வைக்கும் ராணிகளாக மலையாளத் திரையுலகைச் சேர்ந்த சரயூ மோகன், நந்தனா வர்மா மற்றும் ஒரு முக்கியவேடத்தில் சிருஷ்டி டாங்கே என மூன்று பேர் நடித்துள்ளனர். ‘சுண்டாட்டம்’ இர்பான் வில்லனாக நடித்திருக்கிறார்.

மலையாளத் திரையுலகின் பிரபல தயாரிப்பாளர்களான சோமன் பல்லாட் மற்றும் தாமஸ் கொக்காட் ஆகியோர் இந்தப் படத்தை பல்லாட் கொக்காட் பிலிம்ஸ் சார்பில் தயாரித்துள்ளார்கள். எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ‘குற்றம் கடிதல்’ பிரேம் படத்தொகுப்பைக் கவனிக்கிறார். தெலுங்கில் பிரபலமாக உள்ள வினோத் யஜமானியா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார்.

இது எமோஷனல் த்ரில்லர் என்றாலும் படத்தில் தேவையான அளவுக்கு ஆக்‌ஷன் காட்சிகளும் உண்டு. ஒட்டுமொத்த படத்தில் ஒரே ஒரு பாடல் மட்டுமே இடம் பெற்றுள்ளது. ஃபாஸ்ட்புட் காலத்துக்கு ஏற்ப படமும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கும்’’ என்றார்.

- எஸ்