மேக்னாவை சைட் அடிக்க விரும்பும் பாக்யராஜ்!



‘அங்காடித்தெரு’ மகேஷ் நடித்துள்ள படம் ‘வீராபுரம் 220’. இதன் நாயகி மேக்னா. இந்தப் படத்துக்கு ரித்தேஷ்-ஸ்ரீதர் என்கிற இரட்டையர்கள் இசையமைத்துள்ளனர். சுந்தர்ராஜ் பொன்னுசாமி தயாரித்து செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வீராபுரம் 220.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

விழாவில் ஆரி பேசும்போது, “இதுபோன்ற பட விழாக்களில் இருக்கும் கலகலப்பு கூட தற்போது வரும் பல படங்களில் இருப்பதில்லை என்பதே உண்மை. ‘உங்கள போடணும் சார்’ என்கிற படம்மெல்லாம் வரும்போது, ‘வீராபுரம் 220’ என்கிற மண்ணின் பிரச்னையை, மக்கள் பிரச்னையை மையமாக வைத்து படம் எடுத்துள்ள இயக்குநரைப் பாராட்டியே ஆக வேண்டும்.

இங்கே படம் எடுப்பது பெரிய விஷயமில்லை. படத்திற்கு தியேட்டர்கள் கிடைப்பது, அதிலும் குறிப்பாக சின்ன படங்களுக்கு மாலைக்காட்சி கிடைப்பது என்றால் மிகவும் கஷ்டமான ஒன்று. பெரிய தயாரிப்பாளர்கள், பணம் இருப்பவர்களிடம் மட்டுமே பணம் சேரும்போது சினிமா நன்றாக இருக்காது. சிறிய தயாரிப்பாளர்களிடமும், உழைப்பவர்களிடமும் பணம் சென்று சேரும்போதுதான் இந்த இடத்தில் ஒரு வளர்ச்சி இருக்க முடியும்.

தமிழ்நாடு முழுவதும் ஆன்லைன் டிக்கெட்டிங் முறையைக் கொண்டு வருவதாக அரசு அறிவித்திருக்கிறது. அப்படிச் செய்யும்போதுதான் வியாபாரத்தில் வெளிப்படைத்தன்மை இருக்கும்.. நடிகர்கள் சம்பளம் பற்றி பல காலமாக பேசிக்கொண்டிருக்கிறோம்.

எல்லா நடிகர்களும் தங்களது சம்பளத்தை வெளிப்படையாகச் சொல்லி வாங்கிக்கொள்ள நினைக்கவேண்டும். நான் அப்படித்தான். என்னுடைய தயாரிப்பாளர்கள் என்னுடைய படத்திற்கு என்ன வியாபாரமோ அதற்கான சம்பளத்தைக் கொடுங்கள் என வெளிப்படையாகவே கூறிவிடுகிறேன்.

எனது நண்பருடன் பேசிக்கொண்டிருக்கும்போது அவர் சொன்னார், இன்னும் 5 வருடங்களில் இந்த சின்ன பட்ஜெட் படங்கள் எடுக்கும் முயற்சிகள் வெகுவாகக் குறைந்துவிடும். சினிமா இப்போது டிஜிட்டல் மயமாகி விட்டதால் வீட்டிலிருந்த படியே இணைய தளத்தின் மூலம் குறைந்த கட்டணத்தில் வீட்டிலேயே ஒரு தியேட்டர் உருவாகும் சூழல் வந்துவிட்டது.

இந்த மாதிரியான  வியாபார முறைகளால் சினிமா வளமாகத்தான் இருக்கும். ஆனாலும் அதன் பலன்கள் தயாரிப்பாளருக்கு கிடைக்கிறதா என்றால் இல்லை. அதனால் அடுத்து நல்ல கதையை, புதிய கதைக்களங்களை, இன்றைக்குள்ள பிரச்னைகளை மையப்படுத்தி படம் எடுக்க வேண்டும். வழக்கமான பார்முலாவிலேயே படமெடுத்தால் இனிவரும் நாட்களில் அது ஓடுமா என்பது கேள்விக்குறிதான். இப்போது வெப் சீரிஸ்கள் உருவாக ஆரம்பித்து விட்டன. பல இயக்குநர்கள் அதை தேடிச் செல்கின்றார்கள்.

அதனால் வரும் நாட்களில் தியேட்டர்கள் இருந்தாலும் தியேட்டர்களை மட்டுமே நம்பி படம் எடுக்கும் சூழல் மாறும். இதனை தியேட்டர் அதிபர்களும் உணரவேண்டும்” என்றார்.இயக்குநர் பேரரசு பேசும்போது, “படத்தின் ஆர்ட் டைரக்டர் டாஸ்மாக் போல தத்ரூபமாக செட் போட்டதாகவும், உண்மையிலேயே அதை டாஸ்மாக் கடை என நினைத்துக்கொண்டு சிலர் தண்ணியடிக்க வந்துவிட்டதாகவும் கூறினார்கள்.

இதற்கு இவ்வளவு செட் எல்லாம் போடத் தேவையில்லை. டாஸ்மாக் என்று ஒரு போர்டு வைத்தாலே போதும். உடனே உள்ளே வந்து விடுவார்கள்.. அந்த அளவிற்கு எங்கு பார்த்தாலும் மக்கள் க்யூவில் நின்று மதுவை வாங்கிக் குடிக்கிறார்கள்.

இந்தப்படத்தின் இசையமைப்பாளர்கள் ரித்தேஷ்,  தர் இருவரும் விஸ்வநாதன்-ராமமூர்த்தி, சங்கர்-கணேஷ் போல புகழ் பெறுவார்கள். இதில் விஸ்வநாதன் எப்போதும் பேசிக்கொண்டே இருப்பார். ராமமூர்த்தி பேசமாட்டார் என்று சொல்வார்கள்.. அதே பாணியை நீங்கள் இருவரும் கடைப்பிடிக்க வேண்டும். ‘வீராபுரம் 220’ என பின்கோடு சேர்த்து டைட்டில் வைத்துள்ளது பாராட்டுக்குரியது.

இயக்குனர் பாக்யராஜின் ‘முந்தானை முடிச்சு’ படம் வெளியானபோது அதில் இடம்பெற்ற முருங்கைக்காய் மேட்டரால், தியேட்டர்காரர்கள், தயாரிப்பாளர்கள் எல்லோரும் லாபம் பார்த்தனர். ஆனால் எனக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டது.. எங்களது தோட்டத்தில் விளைந்த முருங்கைக்காய்களைக் கொண்டு போய் விற்பதற்கு ரொம்ப சிரமப்பட்டோம்.

சந்திராயன்-2 விண்கலம் சமீபத்தில் விண்ணில் ஏவப்பட்டது.. அதில் தற்போது சிறிய பிழை மட்டும் நிகழ்ந்துவிட்டது.. அதற்காக அதை கிண்டல் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. சந்திராயன்-2 நம் இந்தியாவின் கெளரவம். பிரதமர் மோடி வெளிநாட்டிற்குச் செல்வதைக் கூட நீங்கள் கிண்டல் செய்து கொள்ளுங்கள். சந்திராயன் நிலவுக்குச் செல்வதை தயவுசெய்து விமர்சிக்காதீர்கள்” என்றார்.

இயக்குநர் பாக்யராஜ் பேசும்போது, “இந்தப்படத்தின் தயாரிப்பாளர் சுந்தர்ராஜ்,  ஏற்கனவே எடுக்கப்பட்டு கால்வாசியில் நின்ற படத்தை தைரியமாக முன்வந்து தனது கையில் எடுத்து முழுப்படத்தையும் முடித்துள்ளார்.

சினிமாவில் முதல் படத்தை எடுக்க வந்துள்ள இவர் சென்டிமென்ட் பாராமல் இப்படி ஒரு விஷயத்தை செய்ததற்காக அவருக்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் படம் மணல் கொள்ளையை மையமாகக் கொண்டது என்பது தெரிகிறது.

அதேசமயம் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் கிட்டத்தட்ட 200 லாரிகளுக்கு மேல் வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். ஒருவேளை இதெல்லாம் தெரிந்துதான் இந்தக் கதையை அவரிடம் இயக்குனர் செந்தில்குமார் சொன்னாரா..? இல்லை, அட.. இது நம்ம கதைபோல இருக்கிறதே என்று இந்தப் படத்திற்குள் தயாரிப்பாளர் தானாகவே வந்து விட்டாரா என்பது அவர்களுக்குத்தான் தெரியும்.

இந்தப் படத்தில் இரண்டு மெலடி பாடல்கள் எனக்கு பிடித்திருந்தன. இந்தப் படத்தின் கதாநாயகி மேக்னாவை திரையில் பார்க்கும்போது பக்கத்து வீட்டுப் பெண் போல,  சைட் அடிக்கலாம் போலவே இருந்தது.

அரசாங்கமே ஆன்லைனில் டிக்கெட் முறையைக் கொண்டு வந்தாலும் அதிலும் பலர் மொத்தமாக டிக்கெட்டுகளை புக்கிங் செய்து பின்னர் அதிக விலைக்கு விற்பார்கள். அதிலும் முறைகேடு கள் நடைபெறுவதைத் தடுக்க முடியாது. நல்ல படத்தை எடுக்க வேண்டும். அதை நல்ல வினியோகஸ்தர்களிடமும் திரையரங்குகளிலும் கொடுக்க வேண்டும்’’ என்றார்.

- ரா