சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சூரியனும் சுக்கிரனும் தரும் யோகங்கள்



கிரகங்கள் தரும் யோகங்கள்

ஜோதிடரத்னா: கே.பி.வித்யாதரன்

ஓவியம்: மணியம் செல்வன்


கட்டற்ற வேகத்தில் பாய்ந்து செல்லும் ஆற்றல் பெற்ற குதிரையை லகான் போட்டு கட்டுக்குள் வைத்து நெறிப்படுத்துவது போன்ற கூட்டணி, சூரியனும் சுக்கிரனும் சேரும் இந்த அம்சம். இப்படி அமையப் பெற்றவர்கள், உலகத்தின் முரண்பாடுகளை ஏற்றுக்கொண்டு கடந்து செல்வதில் தயக்கமுள்ளவர்களாக இருப்பார்கள். சுக்கிரனின் சுகத்தை சூரியன் கட்டுப்படுத்துவார். எனவே, சுய கட்டுப்பாடுகளால் தவித்தபடி இருப்பார்கள். சோகமான விஷயங்களையே மனம் அசை போட்டபடி இருக்கும்.



எனவே, அதைக் கட்டுப்படுத்திக்கொள்வது நல்லது. மேல்தட்டு வாழ்க்கையை வாழ்ந்தாலும், சிறு குடிசையில் இருப்பவர்களுக்கு  உதவுவார்கள். எதிரிகளை இரண்டு சுற்று ஓட வைத்து, ஆதாரங்களைத் திரட்டி அதன்பின் அவர்களை ஒடுக்கி வைப்பார்கள். தன்னை தகுதியில்லாதவர்கள் என்று சொல்லிவிடுவார்களோ என பயந்தபடி இருப்பார்கள். இவர்கள் தேவையற்ற பாவனைகளையும், பவ்யமாக நடந்துகொள்வதையும் தவிர்ப்பது நல்லது.

இல்லையெனில் தகுதியான நேரத்தில் வரும் பொறுப்புகளை சுற்றியுள்ளோரே கெடுத்து விடுவார்கள். தன்னம்பிக்கையை அதிகரித்துக் கொள்ள வேண்டும். ஆரம்ப வாழ்க்கை இடையூறு நிறைந்ததாக இருந்தாலும் மத்திம வாழ்க்கை சிறப்பாக இருக்கும். மனசாட்சிப்படி நடப்பதில் இவர்களுக்கு இணை வேறு யாருமில்லை.

சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சூரியனும் சுக்கிரனும் இணைந்து தரும் பொதுவான யோகங்கள் இவை. இனி சொந்த ஜாதகத்தில் எந்தெந்த இடங்களில் சூரியனும் சுக்கிரனும் இணைந்திருந்தால் எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என பார்க்கலாம். சிம்மத்திலேயே - அதாவது லக்னத்திலேயே சூரியனும் சுக்கிரனும் ஒன்றாக இருந்தால், அமைதியான தோற்றமும், கண்களில் கூர்மையும் கொண்டிருப்பார்கள். எந்த விஷயமாக இருந்தாலும் பெருந்தன்மையோடு நடந்து கொள்வார்கள்.

விட்டுக் கொடுத்துச் செல்லும் குணமுண்டு. தந்தையோடு நேசமான உறவு இருந்து கொண்டே இருக்கும். எதற்கு எடுத்தாலும் ‘‘அப்பாகிட்ட கேட்டுட்டு சொல்லட்டுமா?’’ என்பார்கள். சிறு குழந்தையிடமும் மரியாதையோடு இருப்பார்கள். காடுகள், மலைகள் என்று பயணப்பட்டபடி இருப்பார்கள். ‘வாழ்க்கை என்பது அனுபவச் சேர்க்கைதான். அதை எதிர்கொண்டு வாழ்தலே சிறந்தது’ என்பார்கள்.

பத்துக்கும், மூன்றுக்கும் உரிய சுக்கிரன் ஒன்றாம் இடத்தில் இப்படிச் சேர்வதால், இளைய சகோதரர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு முக்கிய தூணாக இவர்கள் இருப்பார்கள். இந்த அமைப்பானது பிரபல யோகத்தையும் அளிக்கும். அடுத்ததாக இரண்டாம் இடமான கன்னி ராசியில் சூரியனும் சுக்கிரனும் சேர்ந்தால் அடிக்கடி கண்வலி மற்றும் பல்வலி வந்து போகும். எச்சரிக்கையோடு பார்த்துக் கொள்ள வேண்டும்.

வீணாக யாரிடமும் ‘அதைச் செய்து கொடுப்பேன், இதை நிறைவேற்றுவேன்’ என்று வெற்று சவடால்களை விடக்கூடாது. செல்வ நிலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்து கொண்டே இருக்கும். ஒரு கலையை எடுத்துக்கொண்டால் அதை முழுமையாகக் கற்றுக்கொள்வதுதான் சிறந்தது. ஆனால், ஆரம்ப ஜோரில் சில வகுப்புகளுக்கு சென்றுவிட்டு பின்னர் நின்று விடுவார்கள். வாய்த் துடுக்கால் நல்லோரை பகைத்துக்கொள்ளக் கூடாது. நிலமாக இவர்கள் பெயரில் வாங்கும்போது தாய்ப் பத்திரம் சரியாக உள்ளதா என்று சரிபார்த்துவிட்டு வாங்குவது நல்லது.

மூன்றாம் இடமான துலாம் ராசியில் சூரியன் நீசமாகிறார். ஆனால், இது சுக்கிரனின் ஆட்சி வீடாகும். எல்லாம் இருந்தும் ஏதோ நிம்மதியில்லை என்பார்களே... அதுபோல இருக்கும். கடைசி வரை முயற்சித்து விட்டு வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் தாழி உடைவதுபோல ஆகும். எனவே, அவநம்பிக்கையோடு எந்தக் காரியத்தையும் செய்ய வேண்டாம். நண்பர்களிடம் மிகுந்த அந்தரங்கமான விஷயங்களை சொல்லாமல் இருப்பது நல்லது.

வேலையாட்களிடம் வியாபார ரகசியங்களை சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். காதில் ஏதேனும் பிரச்னை வந்தால் பார்த்துக் கொள்ள வேண்டும். நான்காம் இடமான விருச்சிகத்தில் இந்த இரு கிரகங்களும் சேர்ந்திருக்கும்போது சுகமான வாழ்க்கையை வாழ்வதே லட்சியமாக வைத்திருப்பார்கள். சொந்த வீடு, தோட்டம், நிலம் என்று அடிப்படையாகவே வாழ்வியல் ஆதாரங்கள் சிறப்பாக அமைந்துவிடும். சொந்த பந்தங்களை ஆதரவோடு அரவணைப்பார்கள்.

மிகுந்த வாகனப் பிரியர்களாக இருப்பார்கள். இவர்கள் வீட்டுத் தோட்டத்தில் கிணறு இருப்பதை மிகவும் விரும்புவார்கள். வாசனைத் திரவியங்கள் ஏற்றுமதி செய்து வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்வார்கள். தாய் சொல்வதே வேதமென்று கேட்டு நடப்பார்கள். எந்தத் தொழிலில் ஈடுபட்டாலும் தன்னை மறந்து ஈடுபடுவதற்கு ஒரு கலையைக் கற்றுக் கொள்வார்கள். அது ஓவியமோ, சங்கீதமோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கும்.

ஐந்தாம் இடமான தனுசு ராசியில் சூரியனும் சுக்கிரனும் அமர்ந்திருந்தால் சொந்த ஊரை விட்டு வெளியூர் செல்வதே சிறந்தது. அதாவது பூர்வீகத்தை விட்டு கொஞ்சம் விலகியிருப்பது நல்லது. இயல்பிலேயே ஆன்மிகத்தில் நாட்டம் பெற்றிருப்பார்கள். உபாசனை, மந்திர உபதேசம் பெறுதல் என்றெல்லாம் இருப்பார்கள். குழந்தைகள் அறிவும் அழகுமாகத் திகழ்வார்கள். பொதுக் கல்வியோடு பாரம்பரிய, மரபு ரீதியான சில விஷயங்களையும் கற்றுக் கொடுப்பார்கள்.

தந்தையே குரு ஸ்தானத்திலிருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொடுப்பார். மூதாதையர் சொல்லுக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். அதனால் அவர்கள் எந்த வழியில் சென்றார்களோ அதே வழியில் இவர்களும் செல்வார்கள். இவர்கள் சம்பாதிக்கும் பணத்தில் சிறு பங்கை ஆலயப்பணிக்கும், அன்னதானத்திற்கும் அளிப்பார்கள். ஆறாம் இடமான மகரத்தில் சூரியனும் சுக்கிரனும் அமர்ந்தால் கணவன் - மனைவிக்குள் ‘நீயா? நானா?’ என்கிற ஈகோ மோதல் இருந்து கொண்டேயிருக்கும். கடன் வாங்குவதை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் கௌரவக் குறைவு ஏற்படும்.

கடுஞ்சொற்கள் பேசி இவர்களே இவர்களை பகையாளியாக சமூகத்தில் காட்டிக் கொள்வார்கள். எதிராளி எல்லா நல்ல விஷயத்தையும் மறந்துவிட்டு இதை மட்டுமே மனதில் வைத்திருப்பார். வாகனத்தில் வேகமாகப் பயணித்தல் கூடாது. ஆறுகள், நீர்நிலைகளில் குளிக்கும்போது எச்சரிக்கை தேவை. இரவு நேரப் பயணத்தின்போது உடைமைகளை எப்போதும் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். தாய்மாமன் வழி உறவுகளால் அவ்வப்போது பிரச்னைகள் வந்து சரியாகும்.

ஏழாம் இடமான கும்பத்தில் சூரியனும் சுக்கிரனும் அமர்வதால் திருமண முயற்சிகளில் தடை ஏற்பட்டு சரியாகும். மேலும், காலதாமதமாக திருமணம் ஆனால் கூட நல்லதுதான். சிறியதாக ஏதேனும் குறையுள்ளவராக வாழ்க்கைத்துணை இருந்தால்கூட நல்லதே. கூட்டு வியாபாரங்கள் செய்வதை பெரும்பாலும் தவிர்ப்பதே நல்லது. இவர்கள் கொஞ்ச நாட்கள் வெளிநாட்டில் இருந்துவிட்டு மீண்டும் இங்கு வருவார்கள். நிறைய புனித யாத்திரைகள் மேற்கொள்வார்கள்.

மர்ம ஸ்தானத்தில் ஏதேனும் பிரச்னை வந்தால் உடனே மருத்துவரைச் சந்திப்பது நல்லது. நல்லவர்களாக இருப்பது மட்டுமல்லாது வல்லவர்களாகவும் இருக்க வேண்டும். இல்லையெனில் ஏமாற்றம் கிடைக்கும். எட்டாம் இடமான மீனத்தில் சூரியனும் சுக்கிரனும் ஒன்றாக இருப்பதால் திருமணமான பிறகு நல்ல வாழ்க்கை அமையும். ஏதேனும் பயணம் செய்து கொண்டே இருப்பார்கள். மீனம் குருவினுடைய வீடாக இருப்பதால் தத்துவ ஞானம் மிக்கவர்களாக இருப்பார்கள்.

ஆனால், தேவையில்லாமல் இவர்கள் கோபம் கொள்ளக் கூடாது. சிலர் பூர்வ ஜென்ம நினைவுகள், மாந்த்ரீகம் போன்றவற்றில் மிகுந்த ஆர்வத்தோடு இருப்பார்கள். இவர்கள் கடன் என்றாலே காததூரம் ஓடுவார்கள். ஒன்பதாம் இடமான மேஷத்தில் குருவும் சுக்கிரனும் அமர்ந்தால் தந்தையின் தொழிலை தான் ஏற்று நடத்தி வெற்றியும் பெறுவார். காலத்திற்குத் தகுந்தாற்போல நவீனமாக வியாபாரத்தைப் பெருக்குவார். நியாய தர்மங்களுக்கு கட்டுப்படுவார்.

தன் பிள்ளையே ஆனாலும், தண்டிக்கத் தவற மாட்டார். பெரியோர்களின் புண்ணியத்தால்தான் தான் நன்றாக இருக்கிறோம் என்று திடமாக நம்புவார். இந்த அமைப்பைப் பெற்றவர்கள் சாதாரண வாழ்க்கையை உதறி பிரபலங்களாக வலம் வருதலையே விரும்புவார்கள். ஒருபோதும் மரபு, கலாசாரம், பாரம்பரியத்தை விட்டுக் கொடுக்கவே மாட்டார்கள். இவர்களில் பலரும் அரசியலில் ஈடுபடுவார்கள். பெரிய நிறுவனத்தை துணிவோடு தொடங்கி நடத்துவார்கள். 

பத்தாம் இடமான ரிஷபத்தில் சுக்கிரனும் சூரியனும் அமர்ந்தால் அரசுப்பணி கிடைக்கும். ஆனால், பின்னர் அதையும் விடவேண்டியது வரும். கெமிக்கல், மருந்து, தோல் தொழிற்சாலை, பல் மருத்துவமனை, மடங்கள் போன்ற இடங்களில் வேலை செய்வார்கள். எப்போதும் கையில் பணம் இருந்து கொண்டேயிருக்கும். பெரிய மனிதர்களின் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருப்பார்கள். பணமா பாசமா என்கிற குழப்பம் எப்போதும் இருக்கும். சிலர் சிறுவயதில் கொஞ்சம் தாமதமாகப் பேசுவார்கள். பாரம்பரியமான தொழிலை தொடர விரும்புவார்கள். புதுப்புது நகர்களை உருவாக்குவார்கள்.

சூரியனும் சுக்கிரனும் பதினோராம் இடமான மிதுனத்தில் அமர்ந்தால் மூத்த சகோதர, சகோதரிகள் மிகுந்த ஆதரவாக இருப்பார்கள். சம்பாதித்ததை மிகச் சரியான முறையில் சேமித்து வைப்பார்கள். ஒரே தொழிலை நம்பி எப்போதும் இவர்கள் இருக்க மாட்டார்கள். நிலமாக வாங்கிப் போடாமல், வீடு கட்டி விற்றால் மிகுந்த லாபத்தை பெறுவார்கள். ஏனெனில், சுக்கிரன் கட்டிடக்காரகனாக விளங்குகிறான். அதேபோல கமிஷன், ஏஜென்சி என்று தொடங்கினால் இன்னும் நல்லது.

கடக ராசியான பன்னிரெண்டாம் இடத்தில் இவ்விரு கிரகங்கள் ஒன்று சேர்ந்தால் சிற்றின்பத்திற்கும் ஆன்மிகத்திற்கும் இடையே போராடிக் கொண்டிருப்பார்கள். லௌகீகமா, ஆன்மிகமா என்று மனப்போராட்டத்தில் சிக்கிக் கொள்வார்கள். இவர் நல்லவரா? கெட்டவரா? என்று எதிராளிக்கு புரியவே புரியாது. சுற்றியிருப்போரால் கணிக்க முடியாத நபராக இவர் விளங்குவார். 

சூரியனும் சுக்கிரனும் மித மிஞ்சிய சுகத்தை அளிக்காமல் எல்லா விஷயத்திலும் அளவோடு ஈடுபட வைப்பார்கள். இவர்கள் பொதுவில் அனுபவச் சுரங்கமாக இருப்பார்கள். பலருக்கு ஆலோசனை சொல்லும் அளவுக்கு உயர்ந்திருப்பார்கள். ஆனாலும், கிரகங்கள் சில ராசிக் கட்டத்தில் பகை பெறும்போதோ, நீசமடையும்போதோ எதிர்மறைப் பலன்களை அளித்து விடும்.

சில கோயில்களுக்குச் செல்லும்போது எதிர்மறைப் பலன்கள் குறையும். அல்லது அதை எளிதாக எடுத்துக் கொள்ளும் மனோதிடத்தையும் அந்தத் தலமே கொடுத்துவிடும். இப்படிப்பட்ட சூழலை சீர் செய்ய இவர்கள் செல்ல வேண்டிய தலமே திருவாமாத்தூர் ஆகும். அபிராமேஸ்வரரையும், முத்தாம்பிகையையும் தரிசித்து வாருங்கள். இந்த அம்பாளை ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார். இத்தலம் விழுப்புரத்திலிருந்து செஞ்சி செல்லும் சாலையில் 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

(கிரகங்கள் சுழலும்...)