படகில் பயணித்து பழங்குடிகளுக்கு உதவும் பெண்!



மகாராஷ்டிராவின் முதல்வர் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்களின் பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார் ரேலு.

நாசிக் நகரில் பிறந்த ரேலு, பால்வாடியில் வேலை செய்துவருகிறார். தாய் - சேயின் உடல்நிலையைக் கண்காணிப்பது அவரது முக்கியப்பணி. 
அலிகட் என்ற பழங்குடி கிராமத்தில் புதிதாகப் பிறந்த குழந்தைகளையும் அவர்களின் அம்மாக்களையும் மருத்துவப் பரிசோதனை செய்வதற்கு யாருமே முன் வரவில்லை. காரணம், கொரோனா பயம் மற்றும் அந்தக் கிராமத்துக்குப் படகு மூலமாகத்தான் செல்ல முடியும்.

இதைப்பற்றி கேள்விப்பட்ட ரேலு, தானே துடுப்பு போட்டு அலிகட்டுக்குச் சென்று குழந்தைகளுக்கும் அம்மாக்களுக்கும் தேவையான மருத்துவ உதவிகளைச் செய்திருக்கிறார். கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து தினமும் அவர் சென்று வருவதுதான் ஹைலைட்.

‘‘தினமும் 18 கிலோ மீட்டர் தூரத்துக்கு துடுப்பு போட வேண்டும். மாலையில் வீட்டுக்கு வந்தால் இரண்டு கைகளும் பயங்கரமாக வலிக்கும். ஆனாலும் குழந்தைகளுக்கும் அம்மாக்களுக்கும் சத்தான உணவைத் தந்து அவர்கள் உடலை ஆரோக்கியமாக காப்பது முக்கியமானது...’’ என்கிறார் ரேலு.

த.சக்திவேல்