சானிட்டரி நாப்கினை இலவசமாக வழங்கும் முதல் நாடு!



உலகளவில் சானிட்டரி நாப்கின்களின் சந்தை மதிப்பு பல ஆயிரம் கோடிகள். கடந்த வருடம் இந்தியாவின் சந்தை மதிப்பு மட்டுமே சுமார் 3,700 கோடி ரூபாய்.

இந்நிலையில் சானிட்டரி நாப்கின் சம்பந்தமாக ஸ்காட்லாந்தில் இயற்றப்பட்ட சட்டம் பெரும் வைரலாகிவிட்டது. ஆம்; உலகில் முதல் முறையாக தன் நாட்டுப் பெண்களுக்கு இலவசமாக சானிட்டரி நாப்கின்களை வழங்கும் நாடு என்ற பெருமையைத் தன்வசமாக்கியிருக்கிறது ஸ்காட்லாந்து. மருந்துக்கடைகள், கம்யூனிட்டி சென்டர், கிளப்களில் நாப்கின்கள் கிடைக்கும். 2018லேயே பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவிகளுக்கு இலவசமாக நாப்கினைத் தந்து அதிர்வை ஏற்படுத்தியிருந்தது.

ஓர் ஆண்டுக்கு நாப்கினை இலவசமாக வழங்க 250 கோடி ரூபாய் வரை செலவாகும். வரியின் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு இச்செலவை சமாளிக்கப்போகிறது ஸ்காட்லாந்து அரசு. அங்கே 10 சதவீத பெண்கள் சானிட்டரி நாப்கின் வாங்கமுடியாத நிலையில் இருப்பது
குறிப்பிடத்தக்கது.

த.சக்திவேல்