துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு தரும் இறைவன்





பன்னிரெண்டு ராசிகளிலேயே துலா ராசிக்காரர்கள்தான் வியாபாரத்தைப் பற்றியும், சொந்தத் தொழில் செய்வதைப் பற்றியும் நிறைய யோசிப்பீர்கள். ராசியின் சின்னமே தராசாக இருப்பதால்தான் இப்படி போலிருக்கிறது. நீங்கள் அதிகாரிகளாக இருந்தால், உங்கள் கையெழுத்திட்ட சிபாரிசுக் கடிதங்கள் திரும்பியதே இல்லை எனலாம். அந்த அளவுக்கு செல்வாக்கோடு திகழ்வீர்கள். ‘‘எங்க ஓனரு ஒரு கையெழுத்து போட்டு கோடி ரூபா கேட்டார்னா கூட அவங்க மறுக்க மாட்டாங்க’’ என்றெல்லாம் கூட பேசுவார்கள். அந்த அளவுக்கு நாணயத்தை கைக்கொண்டிருப்பீர்கள். எத்தனை பெரிய வேலையில் இருந்தாலும் சரிதான்... திடீரென்று வேலையைத் துறந்துவிட்டு வியாபாரத்தில் குதிப்பீர்கள். ‘‘நம்மால நாலு குடும்பத்துக்கு வேலை கிடைக்கணும்’’ எனும் எண்ணம் எப்போதும் இருக்கும். மற்றவர்களுக்காகவே சில சமயம் இரண்டு மூன்று தொழில்களைத் தொடங்கி விட்டு அவஸ்தைப்படுவீர்கள். இதனாலேயே எப்போதும் வாழ்வில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். உங்களில் பல பேர் அலுவலக நேரம் போக ஓய்வு நேரங்களில் கமிஷன், புரோக்கரேஜ் என்று வெவ்வேறு தொழிலில் இறங்குவீர்கள். உங்களுக்கு உத்யோக ஸ்தானாதிபதியாக சந்திரன் வருவதால் ஆரம்ப காலகட்டத்தில் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். உங்கள் வேகத்துக்கு உடன் பணிபுரிபவர்களோ, அதிகாரிகளோ ஈடுகொடுக்க மாட்டார்கள். சமயங்களில் யார் யாரிடமோ வளைந்து கொடுத்துப் போக வேண்டியிருக்கும். தனிமையில் புலம்புவீர்கள்.

சந்திரன் உங்களை ரசனைக்குரியவராகவும் மாற்றுவார். கதை, கட்டுரைகள் எழுதுவதில் சில காலங்கள் நகரும். ஆனால் உங்கள் ராசியின் அதிபதியான சுக்கிரன், நிறைய பணம் எதில் வருகிறதோ அதை நோக்கித்தான் நகர்த்துவார். நிறைய சம்பாதிக்க வேண்டுமே என்று கைகட்டி வேலை பார்க்கும் சூழ்நிலைக்கு தயங்காமல் தள்ளுவார். சொந்த ஜாதகத்தில் பத்தாம் வீட்டிற்குரியவராக வளர்பிறைச் சந்திரன் வந்தால், பணத்தோடு புகழையும் சம்பாதிப்பீர்கள். இந்த ராசிக்காரர்களுக்கு பொதுவாகவே ஜாதகத்தில் சந்திரனோடு புதன் சேர்ந்தால் இந்திரனைப்போல வாழ்க்கை அமையும். வருபவர்களுக்கு வாரி வழங்குவீர்கள். ரெஸ்டாரன்ட், ஓட்டல் என்று தொழில் தொடங்கி வெற்றி பெறுவீர்கள். ஜாதகத்தில் உத்யோக ஸ்தானமான பத்தாம் இடத்தில் சந்திரனும் சனியும் இருந்தால் கடல் வணிகம், ஸ்டார் ஓட்டல் எனத் தொடங்குவீர்கள். தேய்பிறைச் சந்திரனாக இருந்தாலோ, ராகு அல்லது கேது, சூரியன், குரு சேர்க்கை பெற்றிருந்தாலோ குறுக்கு வழியில் சம்பாதிப்பீர்கள். நிறைய சரிவுகளையும் சந்திப்பீர்கள்.

துலாம் ராசியினருக்கு பொதுவாகவே ஆளுமைத்திறன் அதிகம்; அதோடு மனிதாபிமானமும் அதிகம். இதனாலேயே பல பேர் உங்களுக்கு நண்பர்களாக இருப்பார்கள். ஒரு நிறுவனத்தில் இத்தனை மனிதாபிமான சிந்தனைகளோடு இருப்பதாலேயே, உங்களின் பதவி உயர்வுக்கும் சம்பள உயர்வுக்கும் சிலர் வேட்டு வைத்தபடி இருப்பார்கள். யாரையும் புண்படுத்தக் கூடாது என்று நீங்கள் புண்பட்டுக் கொண்டே இருக்கக் கூடாது என்பதை மனதில் நிறுத்த வேண்டும். அலுவலகத்தில் ஒருவரை நம்பிவிட்டால், அவரே கதி என்றிருப்பது உங்களின் பலவீனமும் கூட.

நீதி கிரகமான சனி, உங்கள் ராசியில் உச்சமாவதால் நீதி, நேர்மைக்குக் கட்டுப்படுவீர்கள். சூரியன், உங்கள் ராசியில் நீசமாவதால் அலுவலக நிர்வாகம் தெரியும்; ஆனால், வீட்டில் எத்தனை ஜன்னல் என்று கேட்டால் விழிப்பீர்கள். நீங்கள் கொஞ்சம் தெரிந்தே ஏமாறுகிற கேரக்டரும் கூட. சுத்தமாக அனுபவமே இல்லாத வயதில் தொழில் தொடங்கும் தைரியம் இருக்கும். யாரையும் எதற்கும் சார்ந்திருக்கக் கூடாது என்கிற மனோபாவம் இருக்கும். உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்திற்கு உரியவராக சந்திரன் வருகிறார். சுக்கிரன் அதிபதியாக வருவதாலும், சந்திரன் பத்தாம் இடத்திற்குரியவராகவும் வருவதால் அழகு நிலையங்கள், பெரிய ஷாப்பிங் மால்கள், விளம்பர நிறுவனங்கள் என்று சில பொதுவான துறைகளில் ஈடுபடுவீர்கள். நீங்கள் எதில் இருந்தாலும் உங்கள் படைப்பாற்றலையும், கற்பனையும் கலந்து எல்லோரையும் வசீகரிக்கச் செய்தபடி இருப்பீர்கள்.

துலாம் ராசிக்குள் சித்திரை நட்சத்திரத்தின் 3, 4 பாதங்களும், சுவாதியும், விசாகத்தின் முதல் மூன்று பாதங்களும் இடம் பெறுகின்றன. சித்திரை 3, 4ம் பாதங்களில் பிறந்தவர்கள், மாங்கு மாங்கென்று எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்வீர்கள். தானே எல்லா வேலையையும் பார்க்க வேண்டுமென்று பிடிவாதமும் பிடிப்பீர்கள். சிந்தனையில் எப்போதும் நவீனத்துவம் இருக்கும். பூமிகாரகனான செவ்வாய் நட்சத்திரத்தில் பிறந்திருப்பதால், விவசாயத்தில் புரட்சியே செய்வீர்கள். உங்களில் பலருக்கு சினிமா, மருத்துவம், போலீஸ் போன்ற துறைகளில்தான் ஈடுபாடு கூடும். கொஞ்சம் வசீகரமும், மிடுக்கும் கலந்ததே இந்த துலாச் சித்திரை. வேலை கற்றுக் கொடுத்தவரே உங்களுக்கு எதிரியாகும் சூழலும் உருவாகும். பார்த்துக் கொள்ளுங்கள்.

சித்திரை 3ம் பாதத்தில் பிறந்தவர்கள் திரைத்துறையில் கேமரா மேன், வாகன ஷோரூம்களில் மேனேஜர், பரத நாட்டிய ஆசிரியர், சிவில் எஞ்சினியர், கால்நடை மருத்துவர், தோட்டக்கலை அதிகாரி, வானியல் ஆய்வாளர் என வேலைகள் ஏற்றவை. ரியல் எஸ்டேட், பல்பொருள் அங்காடி, பழக்கடை, கால்நடைப் பண்ணை, ஐஸ்க்ரீம் தயாரித்தல், ஆப்டிகல்ஸ், எவர்சில்வர் பாத்திரக்கடை என்று வியாபாரங்களைத் தொடங்கினால் சிறந்து விளங்குவீர்கள். 4ம் பாதத்தில் பிறந்தவர்கள் முடநீக்கியல் நிபுணர், எலெக்ட்ரிகல் எஞ்சினியர், ரத்த வங்கி, சுகாதார அலுவலர், தீயணைப்புத் துறை, கிராம நிர்வாக அதிகாரி, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி, நிகழ்ச்சித் தொகுப்பாளர் என சில பணிகளில் சிறந்து விளங்குவீர்கள். வெடி தொழில், பெட்ரோல் பங்க், அச்சுத் தொழில், ஸ்கேன் சென்டர், இறைச்சிக் கூடம், மரவாடி, சிமென்ட் வியாபாரம், உரக் கம்பெனி என தொழில்கள் ஏற்றவை.    

சுவாதி நட்சத்திரக்காரர்கள் அலுவலகத்தில் டென்ஷனே இல்லாமல் வேலை பார்ப்பீர்கள். மற்றவர்களை சரியாக எடை போட்டு, அவர்களுக்குரிய வேலையைக் கொடுத்து ஊக்கப்படுத்துவீர்கள். சபை அலங்காரப் பேச்சுகளில் வல்லவர்களாக விளங்குவீர்கள். முதல் பாதத்தில் பிறந்தவர்கள் ஆழ்துளைக் கிணறு அமைத்தல், சாலை, பாலம் கட்டும் பணி, கிரிமினல் வழக்கறிஞர், லாரி தொழில், விவசாய சாதனங்கள் விற்பவர், இசையமைப்பாளர், பொருளாதாரத்துறை பேராசிரியர், லெதர் ஃபேக்டரி, சாயப் பட்டறை, ஆரம்பப் பள்ளி நடத்துதல், புள்ளியியல் துறை என்று எதிர்காலத்தை அமைத்துக் கொள்ளலாம். 2ம் பாதத்தில் பிறந்தவர்கள் பெரிய ரெஸ்டாரன்ட், உல்லாச விடுதிகள். அறிவியலாளர், விலங்குகள் சரணாலயத்தில் வேலை, அரிசி, பருப்பு மண்டி, கடல் உணவகம், மேஜிக் நிபுணர், டர்னர், ஃபிட்டர், எலக்ட்ரானிக்ஸ் கடை என முயற்சிக்கலாம். 3ம் பாதத்தில் பிறந்தவர்கள் ஃபேன்ஸி ஸ்டோர், பியூட்டி பார்லர், கெமிக்கல் எஞ்சினியர், மெரைன், ரயில்வே துறை, நிலக்கரி, தங்கச் சுரங்கம், பதிப்பகம், வெடி மருந்து தயாரிப்பவர், எண்ணெய் நிறுவனம், ரியல் எஸ்டேட், வீணை, வயலின் கலைஞர், பஞ்சு மெத்தை தைப்பவர் என்று தொழில்களை நடத்தி லாபம் பெருக்குவீர்கள். 4ம் பாத்தில் பிறந்தவர்கள் டி.வி., வானொலி நிகழ்ச்சி தயாரித்தல், ஆரம்பக் கல்வி ஆசிரியர், மாவட்டக் கல்வி அதிகாரி, அரசியல் விமர்சனக் கட்டுரைகள் எழுதுபவர், ஹாஸ்டல், பேருந்து நடத்துனர், டிராபிக் போலீஸ், இறால் பண்ணை, கரும்பு அரவை ஆலை, சினிமாவில் எடிட்டிங் துறை என்று சிலவற்றில் நுழைந்து பெரிய அளவில் முன்னேறுவீர்கள்.

விசாகத்தில் பிறந்தவர்கள் சின்ன வேலையைக் கூட பார்த்துப் பார்த்து செய்வீர்கள். வளைந்து நெளிந்து பேசத் தெரியாது. முதலாளி நினைப்பதை உடனடியாக முடிக்க முடியாமல் திணறுவீர்கள். ‘‘எனக்குப் பின்னாடி வந்தவன் என்னவோ பேசி முன்னேறிட்டான்’’ என்று குமைவீர்கள். ‘‘நான் எது சொன்னாலும் குத்தங்குறை கண்டுபிடிக்கறாங்க’’ என்று நொந்து கொள்வீர்கள்.



விசாகம் 1ம் பாதத்தில் பிறந்தவர்கள் வழக்கறிஞர், நீதிபதி, ஆம்புலன்ஸ் பணி, மருத்துவமனை, மருந்து விற்பனை, யோகா, ஜிம் மாஸ்டர், சைனீஸ் ரெஸ்டாரன்ட், நர்சரி கார்டன் வைத்தல், அரசுப் பேருந்து ஓட்டுனர், நகை வியாபாரி, செங்கல் சூளை வைப்பவர், கேஸ் ஏஜென்சி, ரியல் எஸ்டேட், பில்டர் என்று உயர்வீர்கள். 2ம் பாதத்தில் பிறந்தவர்கள் சினிமா டைரக்டர், நடிகர், வழக்கறிஞர், வங்கிக் கடன் வசூலிப்பாளர், கார் கம்பெனி, லேத் பட்டறை, மளிகைக் கடை, ஜவுளிக் கடை, தியேட்டர், தொலைத்தொடர்பு என்று பல துறைகளில் கால் பதித்து வெற்றி பெறுவீர்கள். 3ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு சாஃப்ட்வேர் எஞ்சினியர், வங்கிப் பணியாளர், பல் மருத்துவர், இ.என்.டி. மருத்துவர், கூரியர் சர்வீஸ், அஞ்சல் துறை, ஏற்றுமதி - இறக்குமதி நிறுவனம், நகைச்சுவை பேச்சாளர், தனியார் கம்பெனி பி.ஆர்.ஓ. என்று துறைகள் நல்ல வருமானத்தைக் கொடுக்கும்.

துலாம் ராசிக்கு வேலை ஸ்தானத்திற்கு அதிபதியாக கடக ராசி வருகிறது. கடகத்திற்கு அதிபதி சந்திரன் என்பதால் வேலையைப் பொறுத்தவரையில் அம்பாள் தரிசனம் நல்லது. அதிலும் இருக்கன்குடி மாரியம்மனை வணங்கினால், வேலை நிச்சயம். சதுரகிரியில் வாழ்ந்த சிவயோகி ஞானசித்தர் என்பவர் பராசக்தியை நோக்கி தவமிருந்தார். தான் யோக நிஷ்டையாகும் இடத்தில் மாரியம்மனாக அருள்பாலிக்க வேண்டுமென வரம் கோரினார். அன்னையும் அவ்வாறே அருளினாள். பக்தர்கள் இன்றுவரை அவளின் அருட்சாரலில் சுகமாக வாழ்கின்றனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூரிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது இருக்கன்குடி.
(தீர்வுகளைத் தேடுவோம்...)